Skip to main content

ஜோசப் விஜய்யும் நிஜ விஜய்யும்: எச். ராஜாவின் முட்டாள் வியூகங்கள்

 Image result for h raja

அரசியல் என்பது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை ஒன்று திரட்டுவது தான். ஆனால் அதை செய்ய நீங்கள் மக்களுக்கு நெருக்கமாய் நின்று அவர்களை ஆழமாய் பாதிக்கும் உணர்ச்சிகள் என்ன என தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த எளிய சூத்திரம் புரியவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தம்மை கோமாளியாக்கிக் கொள்கிறார்கள்.
 விஜய் ஒரு கிறித்துவர் என எச்.ராஜா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. தன் பெயர் ஜோசப் தான் என்பதை அவரே துணிச்சலாய் சொல்வார். தன் லெட்டர் பேடில் அப்பெயருடன் தான் அவர் குமுதத்துக்கு நன்றிக் கடிதம் அனுப்புகிறார். அவரது தாய் இதைப் பற்றி முன்பு ஒரு பத்திரிகைத் தொடரில் எழுதியுள்ளார். விஜய்யின் தாய் இந்து. அப்பா கிறித்துவர். விஜய் கிறித்துவராகவே வளர்ந்துள்ளார். இது தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்பது எச்.ராஜாவுக்கு புரியவில்லை என்பது தான் பிரச்சனையே.

சினிமாவில் வரும் விஜய்யும் நிஜ விஜய்யும் வேறு வேறு என மக்களுக்குத் தெரியும். மிக மிகச் சில நடிகர்கள் விசயத்தில் தான் நிஜ பிம்பமும் திரை பிம்பமும் ஒன்றாய் தோன்றும். ஷாருக்கானை வடக்கத்தியர்கள் முஸ்லீமாக காண்பதில்லை. அவர் பெயர் மட்டுமே அவரை முஸ்லீமாக்குவது இல்லை. ரஜினியை தமிழர்கள் கன்னடியர் என நினைப்பதில்லை. காவிரி நதி நீர் பிரச்சனையின் போது அவர் வெளிப்படையாக தமிழர் பக்கம் நிற்கவில்லை என்ற போதும் கூட தமிழர்கள் அவரை நோக்கி துரோகியே என கூவவில்லை. அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இதனால் குறையவில்லை. ஒருவர் பல பரிமாணங்கள் கொண்டவராய் நிஜத்திலும் நிழலிலும் இருப்பதை நாம் ஏற்கிறோம். அதன் முரண்பாடுகள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
ஏனெனில் தமிழர்கள் உணர்ச்சிக் கொழுந்துகள். அந்தந்த நேரத்தில் எது உண்மையாகப் படுகிறதோ, யார் நேர்மையாய், பாசாங்கின்றித் தெரிகிறார்களோ அவர்களை அள்ளி அரவணைப்பது தாம் தமிழர்களின் இயல்பு.
நாம் யாரையும் சுலபத்தில் சந்தேகப்பட்டு ஓரக்கண்ணால் பதற்றத்துடன் கண்காணிப்பவர்கள் அல்ல. அதனாலே இங்கு எந்தவிதமான பிரிவினைவாதமும் எடுபடுவதில்லை.
எம்.ஜி.ஆர் தமிழர் அல்ல, மலையாளி என நம் மக்களுக்குத் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவரை நெஞ்சார நேசித்ததால் அவர் ஜெர்மானியர் என தெரிய வந்தாலும் தமிழர்கள் பொருட்படுத்தி இருக்க மாட்டார்கள்.
தமிழர்களுக்கு இன உணர்வு உண்டு. ஆனால் இன்னொரு இனம் மீதான வெறுப்பு இருப்பதில்லை. இது ஒரு வித்தியாசமான மனநிலை. எச்.ராஜா போன்றோருக்கு இது புரிவதில்லை.
இங்கு பிராமணர்களுக்கு எதிரான அரசியல் கோட்பாடு செல்வாக்காய் உள்ளது என சில ஆங்கில ஊடகவியலாளர்கள் எழுதுவார்கள். அதனாலே தமிழக பிராமணர்கள் இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றதாய் கூட கூறுவார்கள். பிராமணர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசினார் அசோகமித்திரன். அத்தனையும் மிகை. ஜெயலலிதா பிராமணர் இல்லையா? தனது சாதியை அவர் மறைத்தாரா? இல்லையே. அவரை எம்.ஜி.ஆர் அளவுக்கு தமிழர்கள் நேசித்தார்களே.
இங்கு பிராமணர்களுக்கு எதிராய் மத்திய சாதிகள் திரண்டனர் தாம். இங்கே வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது எனும் கோஷம் எழுந்தது தான். ஆனால் அது அதிகாரத்துக்கான ஒன்று திரளல் மட்டுமே அன்றி வெறுப்பரசியலாய் என்றுமே இருந்ததில்லை. நான் அறிந்து இங்கே பிராமணர்கள் அவமதிக்கப்பட்டதில்லை. அவர்கள் மாறாக மிக அதிகமாய் மதிக்கப்படுகிறார்கள். இங்கே வடக்கத்தியர்கள் தாக்கப்பட்டதில்லை. மற்றமையை வெறுக்க நமக்குத் தெரியாது என்பதே உண்மை.
இதனால் தான் அண்ணாவில் இருந்து கலைஞர் வரை கடந்த நாற்பதாண்டுகளில் இங்கே இந்து மதத்தை பழித்து அரசியல் தலைவர்கள் பேசியதில்லை. கோயில்களை இடித்ததில்லை. வெளிப்படையாக ஆதரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்து மதம் தழைப்பதை அவர்கள் தடுத்ததில்லை. அவர்களின் அரசியல் கோட்பாடு மதத்தையும் மரபான நம்பிக்கைகளையும் மறுப்பதே. ஆனால் மக்கள் அவர்களின் நாத்திகத்துக்காக என்றும் வாக்குகளை அளித்ததில்லை. பிராமணர்களை வெளியேற்று எனும் கோரிக்கையுடன் மக்கள் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வாக்களித்ததில்லை.
இதை பாசாங்கு என நான் ஒரு காலத்தில் எண்ணினதுண்டு. ஆனால் அப்படி அல்ல என பின்னால் புரிந்து கொண்டேன். ஒரு கம்யூனிஸ்ட் தான் நம்புவதையே பேசுவான். அதையே பின்பற்ற முனைவான். கோட்பாட்டில் இருந்து வாழ்க்கை உருப்பெறுகிறது என அவன் நம்புவான். ஆனால் ஒரு திராவிட இயக்க சிந்தனையாளன் அப்படி அல்ல. கோட்பாடுகள் மக்களை உணர்வுரீதியாய் ஒன்றிணைக்கத்தானே அன்றி, அவற்றை அப்படியே வாழ்க்கையில் தேட வேண்டியதில்லை என அவன் அறிவான். ”பாம்பைக் கண்டால் விட்டு விடு, பார்ப்பானைக் கண்டால் அடி” எனும் தத்துவத்தை எந்த தமிழனும், எந்த திராவிட மரபில் வந்த அரசியல்வாதியும் பின்பற்ற மாட்டான். அது வெறும் அரசியல் பஞ்ச் வசனம் என அவன் அறிவான்.
திராவிடக் கொள்கை வேறு, தமிழ் உளவியல் வேறு. இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.
அதனால் தான் பா.ஜ.கவினர் தமிழ் தேசியவாதத்தை அப்படியே இந்து தேசியவாதமாக மாற்ற முடியாது என நினைக்கிறேன். இன்னொருத்தனை எதிரியாய் காட்டி, அவனை அடி என தூண்டி விடும் அரசியல் உ.பியிலோ மும்பையிலோ எடுபடும். இங்கே எடுபடாது.
இங்கே திராவிட கொள்கை பலமாய் உள்ளதால் மதவாதம் வளராது எனும் வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகம் கோயில்களின் மாநிலம். இங்கே எச்.ராஜா இந்து மதப் பெருமைகளைப் பற்றி உரையாற்றலாம். மக்கள் கேட்பார்கள். ரசிப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் படையெடுப்பினால் நாம் அழிகிறோம் எனும் வெறுப்புவாதத்தை ரசிக்க மாட்டார்கள். கிறுத்துவர்களால் நமக்கு ஆபத்து என உரையாற்றினால் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் தமிழனுக்கு மாற்றானை வெறுக்கத் தெரியாது. அது தான் உண்மையான காரணம்.
கமலஹாசன் பிராமணர் என்பதால் அவரை முதல்வர் ஆக்க அனுமதிக்க மாட்டார்கள் என சாருஹாசன் சொன்னதையும் நான் ஏற்க மாட்டேன். நாம் கமலை அப்படிப் பார்க்க சாத்தியமே இல்லை. கமல் தன்னை ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரதிநிதியாய் காட்டிக் கொண்டால் ஒழிய அவரை மக்கள் அப்படி முத்திரை குத்த மாட்டார்கள்.
பா.ஜ.கவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து இங்கே ஒரு பிரிவினைவாத வெறுப்பை நுழைத்து விடலாம் என எதிர்பார்க்கிறார்கள். சமீபமாய் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது தமக்கு எதிராய் உரையாடுகிறவர்களின் மத அடையாளத்தை முன்னிறுத்தி பேச முயல்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியின் போது மனுஷ்யபுத்திரனை அப்துல் ஹமீது என திரும்பத் திரும்ப அழைத்துப் பேசினார் ஒரு பா.ஜ.க பேச்சாளர். மக்கள் இம்மாதிரி தந்திரங்களை எல்லாம் தூ என துப்பி கடந்து விடுவார்கள்.
 நீங்கள் என்றுமே ஒரு மாநில மக்களின் அடிப்படை இயல்புக்கு மாறான எந்த பிரச்சாரத்தையும் பயன்படுத்தக் கூடாது. அது தோல்வி காணுமே அன்றி வெல்லாது.

இதை உணராத வரையில் தமிழக பா.ஜ.கவுக்கு முதல் எதிரி எச்.ராஜா போன்றோர் தாம். அவர்கள் ஒரு புற்றுநோய் போல் பா.ஜ.கவை உள்ளிருந்தே தின்று அழித்து விடப் போகிறார்கள்!

Comments

Janakiraman said…
திராவிட அரசியலை பற்றிய நுட்பமான அவதானிப்பு.
saru.manivillan said…
சரியான தலைப்பு.... சரியான பார்வை....
பா.ஜ.க. என்ற கட்சியே புற்று நோய்க் கிருமிகளால் ஆனது தான். அதை எங்கே நிலைபெற விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பகுதியை அழித்து விடும். இந்தியாவிற்கு அதுதான் நேர்ந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் அந்தக் கிருமிகளை அப்புறப் படுத்தாவிட்டால் நிச்சயமாய் அது இந்தியாவை தின்று செரித்துவிட்டுப் போய்விடும்.
சிறப்பான பார்வை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...