முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2ஜி வழக்கு தீர்ப்பும் பேரறிவாளனும்


2ஜி அலைக்கற்றை தீர்ப்பு சம்மந்தமான இரு விதமான முகநூல் பதிவுகளைப் படித்தேன். ஒருவகை - இது கார்ப்பரேட் அரசியல் மோதல்களில் நம் கண்ணுக்குத் தெரியும் சிறு முடிக்கற்றை மட்டுமே. அவர்களுக்குள் அடித்துக் கொண்டு சமரசமாகி விட்டார்கள். பரஸ்பரம் மிரட்ட இந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வழக்கில் குற்றம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் ஒன்று ராஜாவும் கனிமொழியும் அல்ல, அல்லது அவர்கள் மட்டும் அல்ல. பெருந்தலைகள் பலர் எந்த தொல்லையும் இன்றி ஜாலியாக தப்பித்து விட்டார்கள்.



இன்னொரு வகை - இந்த ஊழலே நடக்கலைங்க. ஏனென்றால் அதற்கு ஆதாரமே இல்லைங்க. ஏனென்றால்... இப்படிப் போகிறது அவர்களின் வாதம். தீர்ப்பின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் சிலவற்றை தெளிவாக ஊன்றிப் படித்து ராஜன் குறை எழுதிய பதிவும் இவ்வாதங்களில் ஒன்று. குற்றம் நடந்ததாய் ஒரு மாயை உருவானதே அன்றி, அது நடந்ததாய் எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் இவ்வழக்கில் யாரையும் தண்டிக்க முடியாது. சொல்லப் போனால் நடந்த ஒரே குற்றம் குமாஸ்தாக்கள் 2ஜி சம்மந்தமான கோப்புகளை சரிவர தொகுத்து சேகரிக்காதது தான்.


ராஜன் குறையுடன் பல விசயங்களில் உடன்படும் என்னால் இவ்விசயத்தில் முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்றால் ராஜீவ் காந்தி வழக்கில் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனை ஏன் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள்? ராஜீவைக் கொல்ல சதியாலோசனை நடந்தது, இன்னின்னார் இங்கிங்கே வைத்து நடத்தினார்கள் என்பதற்கான தெளிவான தீர்க்கமான ஆதாரங்களை சி.பி.ஐ முன்வைக்கவில்லை. அவ்வழக்கில் காங்கிரசின் பெருந்தலைகளுக்கு இருந்த பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படவில்லை. சதியாலோசனை நிரூபிக்கப்படாத போது, ஆலோசனையை நடத்தினர்கள் பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத போது சதியாலோசனையே இல்லை என ஆகி விடாதா? அப்படி எனில் நிரூபிக்கப்படாத சதியாலோசனையை நிறைவேற்ற பேட்டரி வாங்கிக் கொடுத்த குற்றத்துக்காக எப்படி பேரறிவாளனை தண்டிக்க முடியும்? சதியாலோசனைக்கான ஆதாரம் இல்லை எனில் அதுவே ஒரு மாயை என கூற முடியாதா? அப்படி எனில் பேட்டரி மட்டும் எப்படி ஒரு ஆதாரம் ஆகும்?


இதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? ஆதாரங்களை தேவையான போது உருவாக்குவதும், மறைப்பதும், ஆதாரம் இல்லையென்றாலும் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கக் கூடியதே நம் நீதித்துறை என்றல்லவா?
உண்மையில் மன்னார்குடிக் கும்பலை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள் விசாரணை அதிகாரிகளும் நீதித்துறையினரும்.


ஆகையால், நண்பர்களே இவ்விசயத்தில் குற்றமே நடக்கவில்லை எனும் தேங்காய் மூடி கச்சேரிக்கு நான் செவிசாய்க்க மாட்டேன். நான் முதல் தரப்பினருடனே உடன்படுகிறேன். 2ஜி எனும் பரப்பிரம்மத்தின் கால் நகங்களை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். காணாதது நம் கற்பனையை மீறியது, ஆனாலும் அது அதே சமயம் நம் அனைவராலும் புரிந்து கொள்ளுமளவு எளிதானது. சட்டம், ஆதாரம் என யோசிப்பவர்கள் பிரம்மத்தின் கால் நகத்தைக் கண்டு வியந்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...