முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (4)


 Related image
உன்னதம் இல்லையென்றால் நெருக்கடிக்கான தீர்வு தான் என்ன?
என் பெயர் ராமசேஷன்நாவலின் பிற்பகுதியில் ஆதவன் இதற்கு பதில் தேடுகிறார். ராமசேஷனின் உண்மையான பிரச்சனை அவனுக்கு எதிலும் பிடிப்பில்லை, நம்பிக்கையில்லை என்பதல்ல. அவன் எதையும் ஒரு தனிப்பெரும் உண்மையாய் பார்க்க முடிவதில்லை என்பதே அவனது பிரதான நெருக்கடி. வெளுப்பான, தளதளப்பான, தன்னம்பிக்கை மிகுந்த பணக்காரியான மாலாவுடன் இருக்கையில் அப்படி இல்லாத ஒரு பெண்ணுக்காக ஏங்கி அவன் மனம் எம்பித் தாவுகிறது. அப்படியானவளே பிரேமா. ராமசேஷனின் அதே மத்திய வர்க்கத்தை சேர்ந்த, பிராமணப் பெண். அழகற்றவள், மாநிற நிறத்தவள். இது குறித்த குற்றவுணர்வு கொண்டவள். இப்படி எல்லா விதங்களிலும் அவள் மாலாவுக்கு எதிர்சாரி. ஆனால் இந்த பிரேமாவை அடைந்து அவளுடன் படுக்கையில் உறவு கொள்ளும் போது ராமசேஷனின் மனதில் சட்டென மாலா வந்து நிறைகிறாள். அவள் மீதான இச்சை பெருகுகிறது.

மாலாவும் வேண்டாம், பிரேமாவும் வேண்டாம் என உதறி விட்டு அவன் தன் பால்ய காலத்து இச்சையின் உறைவிடமான பங்கஜம் மாமியிடம் செல்கிறான். அவளிடம் கிட்டத்தட்ட தன் காதலைச் சொல்கிறான். அவளை திருமணம் செய்யப் போவதாய் அறிவிக்கிறான். அவனது தேர்வு முடிந்த பின் இது குறித்து முடிவெடுக்குமாறு அவள் அவனிடம் கூறுகிறாள். மாமியை அடையப் போகிறோம் எனும் ஆவேசத்துடன் ராமசேஷன் படிக்கிறான். தேர்வுகளை முடிக்கிறான். மாமியை நாடிக் கிளம்புகிறான். ஆனால் அப்போது மூர்த்தி அவனது காதலி ஒருத்தியுடன் பேருந்தில் இருந்து இறங்குவதைக் காண்கிறான். ராமசேஷனின் மனம் அப்பெண்ணையும் மாமியையும் ஒப்பிடவில்லை என்றாலும் சட்டென அவன் தன் முடிவை மாற்றுகிறான். மாமியிடம் சென்று அவளை மணந்தால் தன் குடும்பத்தில் ஏற்படும் கொந்தளிப்புகளை காரணமாய் சொல்லி அவளை விட்டுப் பிரிகிறான். அவன் பிரச்சனை மாமி ஒரு இளம்பெண் போல் பூரிப்பாய், கட்டழகாய் இல்லை என்பதல்ல. ஆனால் மாமியை அவன் மனதில் உருப்பெறச் செய்ய அப்பெண் அவனது மனத்தராசின் இன்னொரு பக்கம் இருக்க தேவையிருக்கிறது. இந்த புரிதலே அவனை மனம் மாறச் செய்கிறது. யாருடனும் தொடர்புறுத்தாமல் மாமியை தன்னால் நேசிக்க முடியவில்லை எனும் எண்ணம் அவனுக்குள் ஏமாற்றத்தையும் கசப்பையும் பெருக்குகிறது. இது மாமியை வெறுக்கச் செய்கிறது.
 ராமசேஷனின் மனம் நிலைகொள்ளாமல் எப்போதும் தத்தளிக்கிறது என இதற்கு அர்த்தமில்லை. கறுப்பு இல்லாமல் அவனால் வெள்ளையை காண முடிவதில்லை. வெள்ளை இன்றி கறுப்பைக் காண முடிவதில்லை.
இந்நாவலின் இறுதியில் ஒரு அட்டகாசமான காட்சி: ராமசேஷனுக்கு கல்லூரியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கிறது. அவன் விடுதியில் இருந்து வெளியே வருகிறான். சாலை இரு பக்கங்களிலாய் பிரிந்து போகிறது. அவனது சக மாணவர்கள் இரு வழிகளிலும் கலைந்து போகிறார்கள். ராமசேஷனுக்கு மட்டும் எங்கு போவதென்று தெரியவில்லை. அவனது குழப்பம் எது சிறந்த வழி என்பதல்ல: இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் வலது பக்கம் தவறான வழி என முடிவெடுக்கிறோம் என அர்த்தம். அதுவே வலது பக்கப் பாதையை தேர்கையிலும் நடக்கிறது. இப்படி ஒன்றை மறுத்தே இன்னொன்று ஏற்பது ராமசேஷனுக்கு அபத்தமாக, சுய ஏமாற்றலாக தோன்றுகிறது.
இந்த முரண் எதிர்வே ராமசேஷனின் சிக்கல். நாம் எல்லாரும் இவ்வாறு தான் வாழ்க்கையை தரிசிக்கிறோம். ராமசேஷன் இது குறித்து கூர்மையான பிரக்ஞை கொண்டிருக்கிறான். அதனாலே மனிதனின் ஒவ்வொரு நிலைப்பாடும், உணர்வுநிலையும், கோரல்களும், பிரகடனங்களும் அவனுக்குப் போலியாய் தெரிகின்றன. அவன் ஒவ்வொருவரின் முகமூடியையும் கிழிக்கத் தலைப்படுகிறான். ஒரு கையால் உங்கள் முகமூடியை கிழிக்கையில் இன்னொரு கையால் தன் முகமூடியையும் பறித்து தரையில் வீசுகிறான். சரி, அவனுக்கு என்ன தான் வேண்டும்?

முகமூடிகளே இல்லாத ஒரு நிர்வாண நிலையை அவன் கனவு காண்கிறான். பட்டவர்த்தமான ஒரு உண்மையை இறைஞ்சுகிறான். இருமையற்ற ஒரு அத்வைத் உண்மையை தேடுகிறான். நவீன வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து ராமசேஷன் இந்த தத்துவ தரிசனத்தை வந்தடையும் இடம் நாவலில் மிக முக்கியமானது.
 ஆனால் ராமசேஷன் இதனால் ஞானியாகி விடுவதில்லை. இங்கு தான் ஆதவன் தன் வாழ்க்கைச் சித்தரிப்பை அன்றாடத்தின் சகதிக்கு இழுத்து வருகிறார். ராமசேஷன் என்னையும் உங்களையும் போன்றவன். அவனுக்கு உண்மையின் ஒற்றை ஒளிக்கீற்று சிலந்தி வலையிழை போல் கண்ணில் படும். அவன் அதைக் கையில் பற்றி விரலால் தொட்டு நோக்கியதும் அது அறுந்து விடும். அவனால் அதைக் கொண்டு தனக்காக ஒரு கூட்டை ஒரு போதும் கட்ட முடியாது.
நாவலின் ஒரு கட்டத்தில் ராமசேஷன் தான் இனி யாரையும் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை; அதுவே உண்மையான விடுதலை என முடிவெடுக்கிறான். ஆனால் அடுத்த நிமிடமே அவன் ஏதாவது ஒரு உணர்ச்சிகரமான உறவில் / பிரச்சனையில் போய் சிலந்தி வலையில் பூச்சி போல் மாட்டிக் கொள்கிறான். எதிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் இருப்பை அறிய அவனால் முடிவதில்லை.
இந்நாவலில் இந்த இருமையின் கண்ணாமூச்சியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு பாத்திரம் இயக்குநர் வி.எஸ்.வி மட்டுமே. அவர் எந்த கருத்தியலுடனும் வாழ்க்கைப் பார்வையுடனும் தன் படைப்பை பொருத்த மறுக்கிறார். தன் படைப்பு என்பது எதேச்சையாய் தான் கண்டடையும் ஒரு தரிசனம், அதற்கு தான் பொறுப்பல்ல, அதனுடன் தானே முழுக்க உடன்பட அவசியம் கூட இல்லை என ஒரு ஒட்டாமை நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளார். ராமசேஷனால் அவருடன் உடன்பட முடிவதில்லை; அவரை போலியானவர், ஒரு பச்சோந்தி என கருதுகிறான்.
ஆனால் என்றாவது ஒருநாள் அவன் வி.எஸ்.வியின் ஆற்றொழுக்கில் மிதக்கும் இலைச்சருகு மனநிலையை சென்றடைவான் என நாம் ஊகிக்க நாவலில் இடமுள்ளது.

அதுவரை ராமசேஷன் எந்த அடையாளத்துக்கும் பிடி கொடுக்காமல் மீனைப் போல் நழுவிக் கொண்டே இருப்பான். பொறுப்பின் சிலுவையில் ஏறாமல் இருப்பதும், தடைகளின்றி மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அனுபவிப்பதே வாழ்வின் இலக்கு என கூறுவான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...