முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே போச்சு சர்ச்சைகள்?

Image result for சாரு ஜெயமோகன்
இப்போதெல்லாம் ஏன் முன்பு போல் அதிகம் சர்ச்சைகள் நடப்பதில்லை, ஏன் எழுத்தாளர்களை சட்டையை கிழித்துக் கொண்டு மண்ணில் புரள்வதில்லை என ஒரு நண்பர் கேட்டார். எனக்குத் தோன்றின சில எளிய பதில்கள் இவை:

1)   இன்று இலக்கிய உலகம் கார்ப்பரேட்மயமாகி விட்டது. யாரையும் அதிகம் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாய் போவது, உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியே ஒரு புன்னகை ஸ்மைலியை சுமந்து செல்வது, சின்ன சின்ன சச்சரவுகள் வந்தாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது, முடிந்தளவு கசப்புகளை மறந்து உடனுக்குடன் கைகுலுக்குவது ஆகியவை கார்ப்பரேட் சுபாவங்கள். நீங்கள் எந்த எம்.என்.ஸி அல்லது உள்ளூர் கார்ப்பரே நிறுவனம் போய் பாருங்கள். யாவரும் கேளிர் எனும் ரீதியில் அவ்வளவு இனிமையாய் பரஸ்பரம் பழகுவார்கள். இதில் ஒரு ஆழம் இராது. பிளாஸ்டிக் தன்மை இருக்கும்.

 உறவில் ஆழம் வந்தால் உடனே மனம் காயப்படும்; கசப்பில் கடிந்து கொள்வோம்; பிரிவோம், மீண்டும் இணைவோம், கண்ணீர் விட்டு கட்டியணைப்போம். இதெல்லாம் கார்ப்பரேட் பந்தளங்களில் இராது. பிளாஸ்டிக் கைகுலுக்கல், பிளாஸ்டிக் புன்னகை, பிளாஸ்டிக் வழிதல், பிளாஸ்டிக் கிளுகிளுப்பு, பிளாஸ்டிக் கோபம். உறவை விட வேலைக்கு உதவும் தொடர்புகளே அவசியம் என கார்ப்பரேட் முதலாளித்துவம் நமக்கு உணர்த்துகிறது. அதனாலே இந்த பிளாஸ்டிக் தோரண பந்தங்கள் தழைக்கின்றன.

 கார்ப்பரேட்டில் வேலை செய்யாதவர்களும் கூட பேஸ்புக்கில் புழங்குகையில் பாதி கார்ப்பரேட் ஆகி விடுகிறார்கள். ரத்தமும் சதையுமான அன்பை விட தொடர்புகளே முக்கியம் என மெல்ல மெல்ல நமக்கு பேஸ்புக் உணர்த்துகிறது. லைக், வாழ்த்துக்கள் கிராபிக்ஸ், நண்பர்களுக்கு இடையிலான friendaniversary கொண்டாட்டம், பிறந்தநாள் நினைவுபடுத்தல்கள் என பேஸ்புக் மெல்ல மெல்ல எதிர்மறையான காரியங்களை நம் உறவுகளில் இருந்து களைகிறது. நமக்கு சலிக்கும் அளவு நண்பர்களின் உலகம் ஒரு சொர்க்கபுரி என தித்திப்புகளால் நம்மை திணறடிக்கிறது. விளைவாக, பிறரை அது துன்புறுத்துமெனில் ஒரு உண்மையை கூட மறைப்பதே சாலச்சிறந்தது என நம்புகிறோம். எழுத்தாளர்களும் இன்று இந்த இடத்துக்கு வந்து விட்டார்கள்.

 பேஸ்புக் பயன்படுத்தாத படைப்பாளிகள் கூட ஏதோ ஒரு விதத்தில் அதிக தொடர்பு வலைகள் கொண்டவர்களாய் மாறி இருக்கிறார்கள். அதன் சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஊரோடு ஒத்துப் போவோமே என அவர்களும் கட்சி மாறி விட்டார்கள். பரஸ்பரம் இலக்கிய விழாக்களுக்கு போய் வாழ்த்துகிறார்கள். எல்லா எழுத்தும் நல்ல எழுத்தே என அரவணைக்கிறார்கள். ஒரு பெரிய அனாதை இல்லத்தின் உறுப்பினரும் நிர்வாகியும் நாமே எனும் உணர்வு நமக்கு வந்து விட்டது. என் பக்கத்தில் இருப்பவரை நான் அணைக்காவிட்டால் நான் ஒரு அனாதை எனும் உணர்வு என்னை சாப்பிட்டு விடும் என அஞ்சுகிறேன் இன்று. ஆக, இனி இலக்கிய உலகில் பாரதப் போர் நிகழவே நிகழாது. அப்படியே யாராவது அஸ்திரத்தை எடுத்தாலும் அடுத்தவர்கள் அவரை ஒரு காமிடி பீஸாக்கி விட்டு சிரித்து கலைந்து விடுவார்கள்.
2)   சர்ச்சை தரும் புகழ் எதிர்மறையான புகழ். அதனால் எந்த பயனும் இல்லை. வாசகர்கள் கூட மாட்டார்கள். புத்தகம் கூடுதல் பிரதிகள் விற்காது. இதை இன்று எழுத்தாளர்கள் உணர்ந்து விட்டார்கள். நான் இதை அனுபவரீதியாகவே உணர்ந்திருக்கிறேன். சர்ச்சை சார்ந்து நீங்கள் எழுதுபவதை படிக்கிறவர்கள் உங்களது வேறு எழுத்துக்களை பொருட்படுத்த மாட்டார்கள். உங்களது எழுத்துக்களை படிப்பவர்கள் சர்ச்சைகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டு உங்களை தொடர்ந்து அக்கறையாய் படிப்பார்கள். சர்ச்சைகள் உங்களுக்கு ஒரு வெளிச்சத்தை அளிக்கும் தான். ஆனால் அது இரவல் வெளிச்சம்.
3)   இலக்கிய அடிதடிகளுக்குப் பின்னால் கொள்கை உறுதிப்பாடு இருந்தது. இது என் நிலைப்பாடு எனும் நம்பிக்கையே உங்களை சண்டை போட வைத்தது. இன்று அந்த மாதிரி நிலைப்பாடு யாருக்கும் எதற்கும் இல்லை.

4)    இலக்கிய சர்ச்சைகளின் இன்னொரு காரணம் தத்தமது இலக்கிய இடம் என்ன எனும் உறுத்தல்கள், குழப்பங்கள், நெருக்கடி. இப்போது எழுத்தாளர் தம் நூல்களை தாமே பிரசுரிக்கிறார்கள். தம் மேடையை தாமே உருவாக்குகிறார்கள். எல்லாமே தனித்தனி என்றாகி விட்டது. ஆக முரண்படுகிறவர்களுடன் சேர்ந்து செயல்படும் நெருக்கடி இனி இராது. ஜெயமோகனின் நூலை மனுஷ் பிரசுரிக்க, அதில் அவர் மனுஷை சற்றே விமர்சிக்க, அது பொறுக்காமல் அதை சாரு மேடையில் கிழிக்க, அதற்காக ஜெ.மோ உயிர்மையுடனான உறவை முறிக்கஇப்படியான சம்பவங்கள் இனி சாத்தியமில்லை. கூட்டுக்குடும்பம் பிரிந்து விட்டது

கருத்துகள்

Ponmahes இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை யான பாத்து அண்ணா ..வாழ்த்துகள் ....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...