Skip to main content

எனக்கே என் கவிதைகள் பிடிக்கவில்லை!

Related image

எழுத்தாளர்களில் ரெண்டு வகை. 1) சதா கண்ணாடியில் தம்மை பார்த்துக் கொள்பவர்கள்; 2) தம்மைக் கண்டு லஜ்ஜை கொள்பவர்கள். நான் ரெண்டாவது வகை.
 எனக்கு நான் எழுதும் எதுவும் பெரிய ஈர்ப்பு தராது. என் புத்தகங்களை மீள வாசிக்கையில் எனக்குள் அதிருப்தியே எழும். என் கதைகள், நாவல், கட்டுரைகள் என எவையும் எனக்கு விருப்பமானவை அல்ல. எனில் அவற்றை ஏன் பிரசுரிக்கிறேன்?
நான் என்னை எனது சரியான விமர்சகனாய் கருதுவதில்லை. எனது மதிப்பீட்டில் எனக்கே முழுநம்பிக்கை இல்லை. நான் வெகுசாதாரணமாய் கருதும் என் எழுத்துக்களில் சிலவற்றை வெகுவாய் ரசிக்கும் வாசகர்கள் எனக்குண்டு. நான் முக்கியம் என தற்காலிகமாய் நம்பியவற்றை வாசகர்கள் நிராகரிப்பதும் உண்டு..இதனாலே ஒரு கட்டத்தில் நான் என் எழுத்தை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டேன், கழுதை எப்படியும் போகட்டும் என அவிழ்த்து விட்டு விட்டேன். புதிதாய், தெளிவாய், நளினமாய், நாணயமாய் பொய்யின்றி எழுதுகிறேனா என்பது மட்டுமே ஒரே அளவுகோல்.

இன்னொரு பக்கம், தன்னை நாடி வந்த ஒரு இளம் வாசகனை இருத்தி தன் முழு சிறுகதைத் தொகுப்பையும் வரிக்கு வரி வாசித்துக் கேட்பித்த எழுத்தாளரைப் பற்றி அறிவேன். சிலர் நாட்கணக்கில் களைப்பின்றி தம் படைப்புகளைப் பற்றியும் தமது மகத்துவங்கள், அதிரடிகள், படைடெடுப்புகள் பற்றி மட்டுமே தம்மிடம் சிக்கும் வாசகர்களிடம் சிலாகித்து பேசுவார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை.
 நான் இதற்கு நேர்மாறானவன். என்னை நாடி வருபவர்கள் என் எழுத்தைக் குறிப்பிட்டு எதையாவது கேட்டால் அவர்களின் பார்வை, அணுகுமுறை, உணர்வுகள் எப்படி உள்ளன என்பதை மட்டுமே அறிய முற்படுவேன். எப்படியெல்லாம் விநோதமான முறையில் என் எழுத்து சலனமேற்படுத்துகிறது என அறிவதில் எனக்கு ஒரு ரசனை உள்ளது. அது போக, என்னைப் பற்றி பேசுவதை அதிகம் ஊக்குவிக்க மாடேன். பேச்சை மடை மாற்றி அவர்களைப் பற்றியும் பொதுவாகவும் விவாதத்தை திருப்புவேன். என்னைப் பற்றி பேசுவதில் எனக்கு லஜ்ஜை அதிகம்.
இதன் நீட்சியாகத் தான், சமீபத்தில் விஷ்ண்புரம் இலக்கிய விழாவின் நான் கலந்து கொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடிய போது ஒருவர் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி கேள்வி கேட்டார். அந்நாவலை நான் பிரசுரிக்கும் நோக்கில் எழுதவில்லை, எழுதிய பின் அழிக்கலாம் என்றே கருதினேன்; ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்பட சரி போனால் போகட்டும் என பிரசுரித்தேன் எனக் கூறினேன். இதைக் கேட்டிருந்த கே.என் செந்தில் (வழக்கம் போல்) மிகவும் கசப்புற்று “இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் கூறலாமா? என்ன வகையான படைப்பாளி இவர்? இவருக்கே பிடிக்கவில்லை என்றால் பிறர் ஏன் படிக்க வேண்டும்? எழுத்தை இப்படியா ஒருவர் கையாள்வது?” என்றெல்லாம் பேஸ்புக்கில் பொருமியிருந்தார். அவர் தன் எழுத்தை தெய்வமாய் நினைப்பவர் எனத் தெரிகிறது. நான் ரொம்ப ரொம்ப சாமான்யமான மனிதன். எனக்கு எழுத்தில் மயக்கமும் ரசனையும் அதிகம். அது ஒரு போதை. அதனாலே எழுதுகிறேன். எழுத்து எனக்கு ஒரு LSD. மற்றபடி, நான் சு.ரா போல் எழுத்தை வைத்து சன்யாசிப்பதில்லை.
ஆனாலும் பிற எழுத்தாளர்கள் கொழுநன் தொழுதெழுவாள் போல் எழுத்தை தொழுதெழுந்து பெய்யென மழை பெய்யப் பார்த்திருக்க, நான் ஒருத்தன் மட்டும் இப்படி எழுத்துலகில் தான் எழுதுவதே பிடிக்காமல் பொறுக்கியாய் இருக்கிறேனோ என எண்ணி சற்றே குழம்பிப் போயிருந்தேன். சமீபத்தில் இந்த சிறு மனக்கலக்கத்துடன் மனுஷ்யபுத்திரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் சமீபத்தில் எழுதிக் குவித்த ஆயிரக்கணக்கான கவிதைகளைப் பற்றி உரையாடல் சென்றது. நான் சொன்னேன்: “நீங்கள் இப்படி நிறைய நல்ல கவிதைகளாய் எழுதிக் குவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்களது சிறந்த எழுத்து எது என யாராலும் தொகுக்க முடியாமல் போகும்.2008 வரை உங்கள் சிறந்த கவிதைகள் 50 என என்னால் பட்டியலிட முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் சிறந்த நூறு கவிதைகளை என்னால் என்ன யாராலும் பட்டியலிட முடியாது. உங்கள் சாரத்தை நீங்கள் எழுதி எழுதி மூடி மறைத்து விட்டது போல் இருக்கிறது. ஒரு சிறந்த கவிதை இன்னொரு சிறந்த கவிதை மேல் உட்கார்ந்து மறைத்துக் கொள்கிறது.”
மனுஷ்யபுத்திரன் சொன்னார், “நான் எழுதினவற்றில் சிறந்த கவிதைகள் உள்ளனவா என்று எனக்கே ஐயம் உள்ளது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் ஒரு நவீன கவிதைகளின் தொகுப்புக்காய் எனது சிறந்த கவிதைகள் சிலவற்றைக் கேட்டார். என்னால் சத்தியமாய் தேடி அவ்வாறு பத்து கவிதைகளைக் கூட தொகுக்க முடியவில்லை. மலை மலையாய் எழுதி இருக்கிறேன். எவை எனது ஆகச்சிறந்தவை என எப்படி கண்டுபிடிக்க? கடைசியில் கையில் கிடைத்தவற்றை போகிற போக்கில் எடுத்து அவரிடம் கொடுத்தேன்.”
இதை அடுத்து, அவர் ஒரு முக்கியமான விசயத்தைச் சொன்னார், “என் கவிதைகள் எவையும் எனக்கு பிடித்தமானவை அல்ல.”
இதைச் சொல்லும் அவர் தான் எழுதின கவிதைகள் பலவற்றை மிகுந்த விருப்பத்துடன் எனக்கு முன்பு படித்துக் காட்டியிருக்கிறார் தாம். ஆனாலும் ஒரு எழுத்தாளனுக்குள் தான் எழுதியவை மீது அதிருப்தியும் சமமாய் உள்ளது. அதுவே அவனை மீண்டும் மீண்டும் எழுதி தன்னை மீறிச் செல்ல தூண்டுகிறது. இல்லாவிட்டால் பத்து நல்ல கவிதைகளுடன் ஒருவன் நிறுத்திக் கொள்ளலாமே!

எப்படியோ தான் எழுதினவற்றின் மீது அதிருப்தி கொண்ட ஒரு மகாகவிஞனைக் கண்டதில் எனக்கு மகாதிருப்தி. நான் இனி அதிருப்தி மீது அதிருப்தி இன்றி, அசூயை இன்றி, தாராளமாய் என் மீது அதிருப்தி கொள்ளலாம். 

Comments

Anonymous said…
Sir,
Thanks for the article.
Boredom is a natural phenomenon but with results ( fruits of works in forms of remuneration, praise ) knocking at your doors, it may take a different turn.
What made Tagore write more even after winning the Noble ?
Mr.Abhilash's pursuit should have been to take his writing to the next level which is that of making money ...
You feel you are bored but you are not because you are not getting the real benefits of what you do excepting few praises ..Same goes for Mr.Abdul's writing (even Mr.Jeyamohan's) of poetry ,etc ...
Mainstream (now that controversy on Mr.Vairamuthu's checking on Gnanapith gaining momentum) writing is essential ...and when people really love you (like they did Sujatha who is not labelled as top writer by likes of Jeyamohan) , you will take develop wings to go farther and I would like Mr.Abhilash to go mainstream -be it via Cinema or thru some other instrumentality ..
We can talk about boredom thereafter .
Boredom is good if you are looking to assess yourself in and out ..

Regards

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...