Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)

 Related image
ஆதவனும் சாரு நிவேதிதாவும்: நெருங்கி விலகும் புள்ளிகள்
சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்கள் ஆதவனுக்கு வெகு நெருக்கமாய் அவரை கொண்டு செல்கின்றன. பெண்ணுடலை மனமழிந்த நிலையில் அணுக முடியாமல், பல்வேறு சிக்கல்களில் மாட்டி பரிதவிக்கும் ஆண்களுக்கு அவர் பரிந்துரைக்கும் தீர்வும் மேற்சொன்ன கொண்டாட்டமும் கட்டற்ற நிலையுமே. எதையும் மிகையாக, உக்கிரமாக, தீவிர எதிர்நிலையில் இருந்து எதிர்கொள் என்கிறார் சாரு. சாருவின் பாத்திரங்களுக்கு ராமசேஷனைப் போல் தத்துவச் சரடுகளுக்கு இடையில் கால் தடுக்கும் பிரச்சனைகள் இல்லை. தர்க்க ரீதியாய் முடிவெடுக்கத் தத்தளிக்கும் நெருக்கடியை நவீன உளவியல் cognitive dissonance என்கிறது. சாருவிடம் இது இல்லை. அவரது பாத்திரங்கள் பகுத்தறிவு ஜென்மங்கள் அல்ல. அவர்கள் சிந்தனா தளத்தில் இருந்து விலகி ஆற்றொழுக்கு போன்ற உணர்வுத்தளத்தில் இயங்குகிறார்கள். இதுவே ஆதவனுக்கும் சாருவுக்குமான ஒரு முக்கிய வித்தியாசம்.

இன்னொரு வித்தியாசமும் உண்டு: இதுவும் முக்கியம். ஆதவனிடம் (தி.ஜாவிடமும் கூட) நாம் ஒரு தெளிவான பிராயிடிய அடுக்குமுறையை காண்கிறோம். ஒருவன் தன் தாய் மீது மோகம் கொள்கிறான். இவ்வுணர்வு அவனது குழந்தைப்பருவத்தில் முகிழ்த்து, அவனது பிரக்ஞை மனதுக்கே தெரியாமல் உள்ளொழுக்கை போல் ஓடுகிறது. அவன் பால்யத்தில் தன் தாயின் பதிலியாக முதிர் இளம் பெண்களை (மாமிகள், உறவுக்கார அக்காக்கள்) தேர்ந்து அவர்களிடம் இச்சையை வெளிப்படுத்துகிறான். அவன் பால்யம் கடந்து இளைஞனான பின் தன்னை விட வயது குறைவான பெண்களை அல்லது சமவயது பெண்களை நாடுகிறான். அப்போது அவர்களுடன் பொருந்திப் போக முடியாமல் முதிர்ந்த பெண்ணுடல் அவனுக்குள் உளவியல் இடையூறாக தடுக்கிறது. நெருக்கடி அவன் மென்னியை நெரிக்கிறது. அவன் சமவயதிலான னது காதலிக்கும் தன்னை விட மூத்த காதலிக்கும் இடையில் மாட்டித் தவிக்கிறான்.
இந்த அடுக்குமுறையை (தாய்-மாமி-அக்கா-இளங்காதலி-மாமி) நீங்கள்மோகமுள்ளிலும்” “என் பெயர் ராமசேஷனிலும்தெளிவாக காணலாம். அங்கு ஜமுனா என்றால் இங்கு பங்கஜம் மாமியும் மாலாவின் தாயும்; அங்கு தங்கம் என்றால் இங்கு மாலாவும் பிரேமாவும். இரு சாரார் இடையிலும் மாட்டி ஊசலாடுகிறார்கள் பாபுவும் ராமசேஷனும். இரு நாவல்களிலும் இவர்கள் எந்தவொரு தீர்வையும் சென்றடைவதில்லை. தடுமாற்றமே அவர்களின் விதியாக இருக்கிறது.
ஆனால் சாருவிடம் இந்த தெளிவான அடுக்குமுறையை நாம் காண்பதில்லை. அவர் பிராயிடியத்தைக் கடந்து இப்பிரச்சனையை பார்க்கிறார். பிராயிடின் காலத்தில் மனிதனை ஒரு முழுமையான ஒருங்கிணைவாக பார்த்தாரக்ள். அவனுக்குள் பல முரண்பாடான விசைகள் செயல்பட்டாலும் அவனது பகுத்தறிவு அவனை மையப்படுத்தி, தெளிவான முடிவெடுக்க உதவுகிறது என்றார் பிராயிட். அப்படி ஆனவனே இயல்பான ஆரோக்கியமான மனிதன் என்றார். இதையே தி.ஜாவும் ஆதவனும் பிரதிபலித்தார்கள். ஆனால் சாரு (கவிதையில் நகுலனை செய்வதைப் போன்று) ஒரு உடைபட்ட மனிதனை சித்தரிக்கிறார். சதா சிதறிக் கொண்டே இருக்கும் மனிதன் அவன். அவனது நெருக்கடி தாயுடலில் இருந்து படிநிலையாக ஆரம்பிப்பதில்லை. அவனுடைய சிக்கல் பெண்கள் சார்ந்ததாக மட்டுமே இல்லை. பெண்ணுடன் முழுமையான சுலபமான (அல்லது தொடர்ச்சியான முழுமையான) சம்போகம் சாத்தியமாகாம்ல் போவது சாருவின் பெரும்பாலான பாத்திரங்களின் அடிப்படை பிரச்சனை. “புதிய எக்ஸைலின்துவக்கக் காட்சிகளே இதை அடிக்கோடிட்டு விடுகின்றன.
Image result for புதிய எக்ஸைல்
இந்நாவலின் கதைசொல்லியின் முதல் சல்லாபத்திலேயே ஒரு பொருத்தமின்மை இருக்கிறது. அவன் அப்போது கல்லூரி மாணவன். பெண்ணோ 13 வயதினள். அவளுடனான உறவைப் பற்றி பேசுகையில் சாரு ஒவ்வொரு வரியும் இன்னொன்றுடன் முரண்படுமாறு எழுதியிருப்பார். (இதை உணர்த்த ஒவ்வொரு வரிக்கும் “() × ()” என எண்ணிட்டிருக்கிறேன்.):
 () “நான் தஞ்சாவூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு மேகலாவுடன்அவ்வப்போது செக்ஸ் பண்ணுவதுண்டு. × () பதின்மூன்று வயதுப் பெண்ணுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.
() எனக்கும் அப்போது செக்ஸ் என்றால் அவ்வளவாக ஒன்றும் தெரியாது. × () அவளிடம் என்னைக் கவர்ந்தது அவளுடைய இந்தா பிடி இந்தா பிடி முலைகள் தான். ×  () தனிமை கிடைக்கும் போதெல்லாம் நானும் அவளும் வெறுமனே உராய்ந்து கொள்வோம்.”
முரண்பாட்டை கவனித்தீர்களா? செக்ஸ் பண்ணுவோம் என்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்து எனக்கு அப்போது செக்ஸ் பற்றி ஒன்றும் பெரிதாய் தெரியாது என்கிறார். அப்படி என்றால் இருவரும் என்ன தான் பண்ணினார்கள்? அடுத்து அவளது முலைகள் பற்றி வருட லகுவானவை என்கிறார். நமக்கு இருவரும் தனிமையில் நிர்வாணமாய் படுத்து பரஸ்பரம் மேலுடலை வருடி முத்தமிடும் சித்திரம் கிடைக்கிறது. ஆனால் சாரு அடுத்த வரியிலேயே நாங்கள்வெறுமனே உராய்ந்து கொள்வோம்என்கிறார். இந்த முரண்பட்ட தகவல்களை இணைத்தால் அவர்கள் முழுமையற்ற, செக்ஸ் போன்ற, ஆனால் செக்ஸ் அல்லாத ஒரு உறவைக் கொண்டிருந்தார்கள் என புரியலாம். இதில் அவர் முழுத் திருப்தி கொண்டதாய் சொல்லவில்லை. அடுத்து, கதைசொல்லி தன் மனைவியுடன் படுக்கையில் இருக்கையில் மேகலா எனும் மற்றொரு பெண் அவனது கனவில் நுழைய சம்போகம் நிகழ்கிறது. ஆக, கதைசொல்லியின் தாம்பத்யத்திலும் பூரண செக்ஸ் இல்லை.
 தில்லி இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் ஒரு கவிதை வாசிப்பு. கதைசொல்லி ஒரு புல்வெளியில் அமர்ந்திருக்கிறான். அப்போது அங்கு ஒரு கறுப்புப் பூனை வருகிறது. இந்நாவலில் பூனை செக்ஸின் குறியீடு. கதைசொல்லியின் வீட்டுக் கிணற்றுக்குள் ஒரு பூனை விழுகிறது. அது வெளியே ஏறவும் தெரியாமல் நீச்சலடித்து நீருக்குள்ளே இருக்கவும் முடியாது தத்தளிக்கிறது. இதை அடுத்து அவனது மனைவி ஒரு வாளியை இறக்கி பூனையை மேலே தூக்கி விடுகிறார். இந்தக் கிணற்றை பெண்குறியின் உருவகமாய் நீங்கள் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.
ஆனால் பூனை என்பது வெறும் செக்ஸ் குறியீடு அல்ல. எதிலும் முழுமையாய் ஆழத்தில் குதிக்க முடியாத, ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு தாவும் செக்ஸ் மனநிலையின் குறியீடு. தில்லி கூட்டத்தின் போது வரும் பூனை முதலில் கதைசொல்லியின் மடியில் போய் அமர்கிறது. அவன் அதன் மென்மையான மயிர்களை வருடி விடுகிறான். “வருடுவதை நிறுத்தி விட்டால் தலையைத் தூக்கி என்னைப் பார்க்கும். ஏன் நிறுத்தி விட்டாய் என்று அர்த்தம்.” (இது சுயமைதுனம் போன்றே இருக்கிறது பாருங்கள்.) கூட்டத்திற்கு ஒரு அழகிய அல்ஜீரிய பெண் கவி வருகிறாள். அவள் அப்பூனையைக் கண்டு சொக்கிப் போகிறாள். தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். பூனை வர மறுக்கிறது. ரொம்ப நேர பிரயத்தனத்துக்குப் பிறகு பூனை அவள் மடியில் போய் படுத்துக் கொள்கிறது. ஆனால் விரைவில் கதைசொல்லியின் மடிக்கே திரும்பி விடுகிறது. இறுதியில் கூட்டம் முடிந்து பிரிகையில் அவனை அப்பெண் தழுவி முத்தமிடுகிறாள்.
 மஹாமுத்திரா எனும் ஓட்டலில் கதைசொல்லி சந்திக்கும் அபிராமி எனும் பெண்ணிடம் அவனுக்குக் கிடைப்பதும் இப்படியான தொட்டும் தொடாத இச்சை வெளிப்பாடு தான். இப்படி மடியில் இருந்து மடிக்குத் தாவும் பூனைக் காதல் தான் சாருவின் பாத்திரங்களுக்கு தொடர்ந்து சாத்தியமாகிறது. உடலுறவு நிகழும் போதும் அது முழுமையின்மையிலே தொக்கி நிற்கிறது.

ஆனால் இப்பிரச்சனை அவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து விசயங்களை நோக்கியும் இருக்கிறது. ”புதிய எக்ஸைலில்ஒரு சுவாரஸ்யமான சின்ன சம்பவம் வருகிறது. சாருவுக்கு மிருதுவான கோழிக்கறி வெகுபிரியம். ஆனால் சென்னையில் நார்நாரான கோழிக்கறியே அதிகம் கிடைக்கிறது. அவருக்கு கோழியே வெறுத்து விடுகிறது. இன்னொரு பக்கம் அவரது தோழி அஞ்சலி பிராயிலர் கோழிகள் அனுபவிக்கும் துன்பத்தைப் பற்றி அவரிடம் பேசுகிறார். அஞ்சலி ஆரம்பத்தில் ஒரு கோழி ரசிகை. ஆனால் ஒரு இரவில் அவள் தூங்கிக் கொண்டிருக்கையில் கோழிகள் கூட்டமாய் எழுப்பும் அழுகை ஒலி அவளை எழுப்பி விடுகிறது. வெளியே சென்று பார்த்தால் அங்கே அருகில் உள்ள கறிக்கடைக்கு கோழிகளை ஒரு வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கோழியாய் காலைப் பற்றி தூக்கி வீசுகிறார்கள். உயிராபத்தில் அவை பரிதாபமாய் ஒலியெழுப்புகின்றன. ஒரு கூட்டுப்பிரார்த்தனை போன்ற ஆரவாரம். அஞ்சலியால் அன்றில் இருந்து கோழி சாப்பிட முடியவில்லை. கோழியைப் பார்த்தாலே அன்று கேட்ட கூட்டு அபயக்குரல்கள் அவள் காதில் ஒலிக்கின்றன. அவள் ஜீவகாருண்யவாதி ஆகிறாள். சாருவிடமும் அஞ்சலி இதைச் சொல்ல சாருவுக்கும் கோழி சாப்பிடுவது சிக்கலாகிறது.
ஆனால் அஞ்சலிக்கும் சாருவுக்கும் ஒரு வித்தியாசம்: அஞ்சலி ஜீவகாருண்யத்தை சீரியஸாய் எடுத்துக் கொள்கிறாள்; சாருவோ அதை விளையாட்டாய் எடுத்துக் கொள்கிறார். அவர் கோழி சாப்பிடாததற்கு ஜீவகாருண்யம் மட்டுமல்ல கோழிக்கறி நார்நாராய் இருக்கிறது எனும் காரணமும் உள்ளதே! அப்படியென்றால் மிருதுவான சுவையான கோழிக் கால் கிடைத்தால் ஒரு கை பார்ப்பாரா? சாருவால் முடிவெடுக்க முடியவில்லை. இங்கு மற்றொரு உள்முரணும், உள்போராட்டமும் சாருவுக்குள் ஆரம்பிக்கிறது (ராமசேஷனுக்குள் பிரேமாவா பங்கஜம் மாமியா என நடப்பது போல்).
 ஒருநாள் சாரு தன் நண்பர் ரமேஷுடன் ஈரோடு செல்ல, அங்கு இருவரும் மது அருந்துகிறார்கள். அப்போது அவர் ரமேஷிடம் தமிழகத்தில் கிடைக்கும் கோழிக்கறி நார்நாராக இருப்பதைப் பற்றி புலம்புகிறார். ரமேஷ் அவரை இந்தியாவிலேயே சிறந்த கோழிக்கறி கிடைக்கும் இடத்துக்கு தான் அழைத்துப் போக உள்ளதாய் சொல்கிறார். சாருவுக்குள் உள்மனப் போராட்டம் துவங்குகிறது: ஜீவகாருண்யமா சுவையான மென்மையான இந்தியாவிலேயே சிறந்த கோழிக்கறியா? ஆனால் ராமசேஷனைப் போல் சாரு இரு தரப்பிலுமான நியாய அநியாய வாதங்களை சிந்திக்கவில்லை. அவர் சொல்கிறார்: “மற்ற நேரமாக இருந்தால் மைலாப்பூர் கோழிக்கடையில் கேட்ட கோழியின் கதறல் சப்தம் ஞாபகம் வந்து, வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அவர் கேட்டபோது போதையில் இருந்ததால் சரி என்று சொல்லி விட்டேன்.”
சாருவின் பாலியல்: உலகமே தாயின் உடல்
ஆதவன், தி.ஜாவுக்கு நிகழ்வது போல் சாருவுக்கு தாயுடல் ஒரு தனி இருப்பு அல்ல. உலகமே அவருக்கு தாயின் தேகம் தான். தொடர்ந்து உலகில் அனைத்துடனும் பல்வேறு முரண்பட்ட நிலைகளில் மாட்டிக் கொண்டு, விளையாட்டுத்தனமாய் அதில் இருந்து எஸ்கேப் ஆவது சாருவின் பாணி. சாருவின் பாத்திரங்கள் உருகின ஐஸ்கிரீம் போன்றவர்கள். அவர்கள் பரந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்று மையமான, திடமான நம்பிக்கையோ கொள்கையோ இல்லை. ஆக, அவர்களுக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது எடுக்கிற நிலைப்பாட்டை ஒட்டி ஒரு முரண்பாடு அவர்களுக்குள் நிகழ்கிறது. ஆனால் நிலைப்பாட்டை ஒரு சட்டை போல் உதறினதும் அந்த முரண்பாடு தீர்ந்து விடுகிறது (தற்காலிகமாகத் தான்).
இப்படித் தான் சாருவின் பாத்திரங்கள் ஈடிபல் சிக்கலை தாண்டி வந்து விடுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? ஏனென்றால், சாரு சமகால தலைமுறையை பிரதிபலிக்கும் கண்ணாடி! இன்றைய தலைமுறையே அப்படித் தான் எல்லா நெருக்கடிகளையும் பொழுதுபோக்காய், விட்டேந்தியாய் கையாண்டு அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தையே பொது இடங்களை ஆக்கிரமிக்கும் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றினவர்கள் அல்லவா அவர்கள். “விழாமுடிந்ததும் அதை மறந்து விட்டார்கள். புதுப் பிரச்சனையை நோக்கித் தாவி விட்டார்கள். இதுவே சாருவின் உலகம்!





Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...