முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவாதமும் படுக்கையறையும்

Image result for argument cartoon
நான் சின்ன வயதில் இருந்தே சர்ச்சிப்பதில், மாற்றுக்கருத்தை முன்வைப்பதில், வாயாடுவதில் ஆர்வமுள்ளவன். சொல்லப் போனால் வெறுமனே ஒரு வாதத்துக்காகவே நான் வாய் வளர்ப்பதுண்டு. அதில் உணர்வுரீதியாய் ஈடுபட மாட்டேன். அதில் ஒரு திகைப்பு, பரபரப்பு, கிளர்ச்சி எல்லாம் உள்ளது.
ஆனால் சமீபமாய் நானிப்படி வாதிடுவதை குறைத்து வருகிறேன். என் நேசத்தை உரையாடல் வழி பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அது என்னை விரிவு கொள்ள வைக்கிறது. அதிக மகிழ்ச்சி தருகிறது என நினைக்கிறேன். இந்நிலையில் நான் சிலரிடம் மட்டும் “அதப்படி இல்லீங்க…” என ஆரம்பித்து கற்ற வித்தைகளை எல்லாம் இறக்குவதுண்டு.
தற்போது பணிபுரியும் இடத்தில் என்னுடன் அப்படி சமர் புரிய சில அற்புதமான நண்பர்கள் உண்டு. அதில் ஒருவர் ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியர். எனது பிரியத்துக்குரிய நண்பர். வாழ்க்கைப் பார்வையில், நம்பிக்கைகளில், அணுகுமுறையில் எங்களுக்குள் கைகுலுக்கும் புள்ளிகளே இல்லை. எல்லா விசயங்களிலும் எதிர் எதிர். சில நேரம் ஒரு சின்ன வரியை எடுத்துக் கொண்டு மணிக்கணக்காய் நாங்கள் கத்தி வீசுவதுண்டு. முடிவில் வீட்டுக்கு கிளம்பும் போது ராஜீவ் என் கையைப் பற்றிக் கொண்டு சொல்வார், “நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஆனாலும் நான் இப்படித் தான் எப்போதும் இருக்கிறேன். என்ன செய்வது…”. அல்லது நான் அவரிடம் சென்று குரல் தழுதழுக்க “ச்சே நான் எவ்வளவு அபத்தமாய் பேசினேன் இல்லையா? நான் சொன்னதையெல்லாம் மறந்து விடுங்களேன் ப்ளீஸ்” என்பேன்.
 ஒரு இனிய சுமூகமான உறவில் கசப்பை கலந்திடும் படியாய் ஏன் சொற்பாம்புகளை என் நண்பர்கள் மீது ஏவுகிறேன்? ஏன் அப்படி செய்து என்னையே நோகடிக்கிறேன்? சர்ச்சையை விட கூடுதல் இன்பம் தரும் மார்க்கம் இருக்கையில், ஏன் சொற்களால் யுத்தம் புரிகிறேன் என யோசித்தேன். எனக்கு ஒரு விசயம் புரிந்தது.
விவாத இச்சை அல்ல என்னை சில குறிப்பிட்ட நண்பர்களிடம் விவாதிக்க தூண்டுவது (நான் சுத்தமாய் விவாதிக்காத, பிரியத்தை மட்டும் பொழிகிற நண்பர்களும் உண்டு). அதன் காரணம் வேறு. சில நண்பர்கள் இயல்பிலேயே ஆளுமை மிக்கவர்கள். வலுவான கருத்துக்களும் அவற்றை திறமையாக நிறுவி என் மனதை சுண்டியிழுக்கும் தன்மை கொண்டவர்கள். எப்படி காந்தத்தினால் ஈர்க்கப்படும் இரும்புத் துகள் ஒரு கட்டத்தில் காந்த சக்தி பெற்று காந்தமாகவே மாறிடுமோ, அப்படியே இந்த நண்பர்களின் நண்பர்களுக்கும் நிகழும். இவர்களின் பேச்சு ஒரு அக்டோபஸாக நம் மனத்தைப் பிடித்து விழுங்கிடுமோ எனும் அச்சம் உங்களுக்கு - நீங்களும் தனித்துவமான கருத்துக்களும் அணுகுமுறையும் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் - ஏற்படும்.
மனித மனத்தின் அடிப்படையான உந்துதல் சுயமுரணானது – ஒரு பக்கம் நாம் நம்முடன் அழகாய் ஆர்வமூட்டும்படியாய் உரையாடுபவர்களிடம் நம்மை இழக்க விரும்புகிறோம். அதே நேரம் நம்மை நாம் முழுக்க இழந்து கரைந்து விடக் கூடாது என்றும் பதறுகிறோம்.
நமது உரையாடல்களை ரெண்டாய் பிரிக்கலாம். (1) உணர்வுரீதியானவை. (2) கருத்து உறவாடல்கள் (விவாத பரிமாற்றங்கள்).
உணர்வுரீதியான அணுகுமுறையில் நீங்கள் பேசத் துவங்கும் போதே எதிர்தரப்புடன் உங்களை முழுக்க இணைத்துக் கொள்ள, அதில் உங்களை இழந்து அழிந்து கரைந்து போக ஆசைப்படுகிறீர்கள். ஆகையால் எதிர் தரப்பில் உள்ளவர் என்ன சொன்னாலும் அது நமக்கு சரி என்றே தோன்றும். உங்களைத் திட்டி கரித்துக் கொட்டினால் கூட இன்பமாகவே அது இருக்கும். ஏனென்றால் அப்போது நீங்கள் உங்களை ஒரு கோப்பை நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போல் கரைத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் விவாத உரையாடல்களில் நீங்கள் உங்களை கைவிடத் தயாரில்லாத சமர் நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் தரப்பை வலுப்படுத்தவே போராடுகிறீர்கள். ஆகையால், அங்கு உங்கள் நோக்கம் நீங்கள் எதிர் தரப்பின் அபாரமான வசீகரத்தின் முன் மண்டியிட்டு விடக் கூடாதே என்பது தான். ஒரு துறவி தனக்குள் எழும் காமத்தை கட்டுக்குள் வைக்க போராடுவதைப் போன்றது இது. வார்த்தை சமர் மூலம் உங்களைச் சுற்றி அழுத்தமான எல்லைக் கோடு ஒன்றை வரைகிறீர்கள். “இது நான். நான் என் அடையாளத்தை அழித்துக் கொள்ள மாட்டேன்” என உங்களுக்குள் அறைகூவுகிறீர்கள்.
ராஜீவுக்கும் எனக்கும் உள்ள இந்த பரஸ்பர பதற்றமே வாக்குவாதங்களில் ஈடுபட எங்களைத் தூண்டுகிறது.
நான் இந்த அவதானிப்பையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு உதாரணம் சொன்னேன். நமது ஆடைகள் ஒருவிதத்தில் நமது தனி அடையாளம், சுயத்தின் தனித்துவம் போன்றவை. ஆடை களைகையில் நாம் எளிய அடிப்படை தேவைகள் கொண்ட உயிர்கள் ஆகிறோம். செக்ஸில் அது நிகழ்கிறது. ஒரு உடல் இன்னொன்றை விழுங்குகிறது. விழுங்கப்படுவதற்கு தயாராக நம்மை நெகிழ்வாய் அப்போது வைத்துக் கொள்கிறோம். பள்ளியறையில் ஒரு பெண்ணுடன் முயங்கும் போது ஒரு ஆண் தன் அகங்காரத்தை முதலில் கழற்றி வைக்க வேண்டும். தான் அற்றுப் போய் இருக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் உடல் வழி சுயம் அழிவது தற்காலிகமானது. அடுத்த நாள் காலை மீண்டும் ஆடைகள் அணிகையில் ஆணும் பெண்ணும் இரு தனிமனிதர்கள் ஆகிறார்கள்.
முயங்குவது உணர்ச்சிபூர்வ உரையாடல் என்றால், ஆடை அணிந்து அலுவலகம் கிளம்புவது விவாத உரையாடல்.
ஆனால் மொழியில் நிகழும் தன்னழிப்பில் இருந்து நீங்கள் அப்படி சுலபமாய் தப்பிக்க முடியாது. முந்தின இரவு கழற்றி வீசின ஆடைகளை பொறுக்கி எடுத்து அணிந்து தன்னுணர்வை, அகந்தையை மீட்டெடுத்து உருமாறிட முடியாது. மொழிக்குள் தன்னை இழக்கும் மனிதன் ஒரு மலைமுகட்டில் இருந்து குதித்து கீழே தலைகீழாய் விழுந்து கொண்டிருக்கும் ஒருவனைப் போன்றவன். அவனுக்கு பாதுகாப்பின்மையும், அச்சமும், தடுமாற்றமும் அதிகம். ஆகையால் தான் அவன் இரண்டு வகையான உரையாடல்களுக்கும் மாறி மாறி இருக்க நேர்கிறது.
 பரஸ்பரம் மிக மிகப் பிரியமாய் நடந்து கொள்ளும் இரு ஆளுமை மிக்க மனிதர்கள் இப்படித் தான் தமது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒன்று அவர்கள் வரவேற்பறையில் அமர்ந்து கருத்துக்களை பரிமாறி விட்டு படுக்கையறை சென்று கருத்துக்களை முழுக்க கழற்றி வைக்கிறார்கள். அல்லது படுக்கையறையில் இருந்து வரவேற்பறை நோக்கி செல்கிறார்கள்.

நான் இதை ராஜீவிடம் சொன்ன போது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “நீ சொன்ன விசயத்துடன் எனக்கு முழு உடன்பாடில்லை. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதையெல்லாம் இன்னொரு நாள் பேசுவோம். ஆனால் நீ சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன். நல்ல உதாரணம் அது!”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...