முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிகனோர் பார்ரா: அர்த்தங்களைக் கொண்டு சூதாடியவன்

   
Image result for nicanor parra
தமிழின் சிறந்த பத்து கவிகளை ஒரு பட்டியல் இட்டோமானால் ஒவ்வொருவரின் கவிதை மொழி, அணுகுமுறை, தொனி, நிலைப்பாடு ஆகியவை தனித்துவமாய், ஒரு தனியான பாதையாய், உறைய மறுக்கும் ஒரு சொட்டு ரத்தமாய் இருப்பதைக் காணலாம். இங்கு உன்னதமான கவியாய் அறிகிற ஒவ்வொருவரும் கூட்டத்துடன் இணையாது ஒலிக்கும் தனிக்குரல்.

 இந்த சுபாவத்தை ஓரளவு சிறுகதையிலும், அதிலும் மிகக் குறைவாக நாவலிலும், மிக மிகக் குறைவாக கட்டுரையிலும் பார்க்கலாம். கவிதையில் ஒருவரின் முக்கிய சாதனை ஒரு மொழியை கண்டுபிடிப்பதே. கவிஞர்கள் இருளில் உறங்கும் காதலியின் அங்கங்களில் வருடி எதையோ தேடி உணர்ந்து அவஸ்தை கொள்வதைப் போன்றே சொற்களை கையாள்வதைக் காணலாம். கவிஞன் எப்போதும் தன் சொற்களில் திருப்தி கொள்வதில்லை. அவனளவு மொழியில் அக்கறை கொள்கிறவர் இல்லை. லத்தீன் அமெரிக்காவின் கவிதை மரபின் உன்னத சாதனையாளனான நிகனோர் பார்ராவின் சிறப்பும் அவர் தனக்கான ஒரு புது மொழியை கண்டடைந்தது தான்அதில் ஒரு தனிச்சிறப்பு அவர் ஒரு மொழியற்ற மொழியை, ஒரு அழுக்குச் சிறுவனை குளிப்பாட்டி பளிச்சென அழைத்து வருவது போல், நம்மிடம் கொணர்ந்தார் என்பது.
அது என்ன மொழியற்ற மொழி?
மொழி அடிப்படையில் உருவகங்களால் ஆனது. பேக்கிலர்ட் கேஸ்டன் வெளிவருதல் (emerge) எனும் சொல்லைப் பற்றி தனது Poetics of Space நூலில் பேசும் போது அச்சொல்லைக் கூறிய அடுத்த நொடி நம் மனதுக்குள் ஒரு நத்தை தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்க்கும் சித்திரம் பூடகமாய் தோன்றுகிறது என்கிறார். ஆதிமனிதன் இந்த நத்தையை கண்டிராவிடில் இச்சொல்லே சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் அவர். ஒருவர் ஆதுரமாய் நம் கைகளைப் பற்றி என்னாச்சுப்பா?” என விசாரிக்கும் போது அந்தஆச்சுஎனும் ஆகுதல் ஒரு உருவகம் தான். உருவகம் இன்றி நம்மால் பேசவே முடியாதென்றால் கவிதையை எப்படி எழுதுவது? ஆகையால் கவிஞர்கள் உவமையில் இருந்து உருவகம், அதில் இருந்து குறியீடு, அதில் இருந்து படிமம், இப்போது மீண்டும் உவமை என ஒவ்வொரு தலைமுறையிலும் தம் பயன்பாட்டை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் மொழியை முழுக்க விடுதலையாக்க நம்மால் முடிந்ததில்லை. ஏனென்றால் கவிதை ஒரே சமயம் அர்த்தத்தில் இருந்து தப்பிக்கவும், புது அர்த்தத்தை தோற்றுவிக்கவும் முயல்கிறது. இது ஒரு சட்டையை கழற்றி புது சட்டை அணிவது போல. கவிதைக்குள் திறப்பு என்பது இரண்டுக்கும் இடையில் கவிதை சட்டை அணியாது ஒரு சின்ன நாணத்துடன் அது நம்மை நோக்கும் தருணம் தான். இந்த நிர்வாணம் ஒரு வித சூனிய நிலை. இந்த நிர்வாண நிலையை நீட்டிப்பது எப்படி? நிகனோர் பார்ரா இக்கேள்விக்கு விடை கண்டார்.
நிகனோர் பார்ராவின் கீழ்வரும் கவிதையை பாருங்கள்:
என் இறுதி மதுக்கோப்பையை உயர்த்துகிறேன்

உங்களுக்கு வசதிப்படுமோ இல்லையோ
மூன்று தேர்வுகள் தாம் உள்ளன:
நேற்று, இன்று, நாளை

அட, மூன்று கூட இல்லை
ஏனென்றால் தத்துவஞானிகள் சொல்வது போல
நேற்று என்பது நேற்று மட்டுமே
அது நம் நினைவில் மட்டுமே உள்ளது:
இதழ்கள் கவரப்பட்ட ரோஜாவில் இருந்து
இனி எடுக்க ஒன்றுமில்லை.

நாம் கையிலுள்ள சீட்டுகள் ரெண்டே:
இன்று மற்றும் நாளை.

அட, ரெண்டு கூட இல்லை.
நம்மை அது அவசரமாய் கடந்து செல்லும் போதும்,
அதை நாம் - இளமையைப் போல் - பருகும் போதும்
மட்டுமே அது இன்றாக உள்ளது
என்பதை நாம் அறிவோம் அல்லவா.

கடைசியில் எஞ்சுவது
 நாளை மட்டுமே
நான் உயர்த்துவேன் என் இறுதிக் கோப்பையை
ஒருபோதும் வராத அந்த நாளுக்காக.

ஆனால்
நம் வசம் உள்ளது
அவ்வளவு தான்.
(தமிழில் ஆர். அபிலாஷ்)

பார்ரா உருவக, உவமைகளுடன் போராடுவதில்லை. அவற்றை முறியடிக்க முனைவதில்லை. அவற்றை தாராளமாகவே பயன்படுத்துகிறார் (ரோஜா, சீட்டு). ஆனாலும் அபாரமான எடையின்மை ஒன்று அவரது கவிதையில் உள்ளதை நீங்கள் கவனிக்கலாம். எப்படி அது சாத்தியமாகிறது?
பார்ரா இக்கவிதையை ஒரு தலைப்பின்னல் போல் உள்முரண்களால் இக்கவிதையை பின்னியிருப்பதை கவனியுங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் அடுத்தடுத்த வாக்கியங்களால் முறியடிக்கிறார். முதலில் மூன்று வாய்ப்புகள் என்றவர் இறுதியில் ஒன்றுமே இல்லை என்கிறார். இதன் மூலம் அர்த்தங்களின் பாரம் மொத்தத்தையும் கவிதையில் இருந்து இறக்கி வைக்கிறார். இதன் விளையாட்டு தொனி, அதிர்ச்சியூட்டும் அடாவடியான பாணி அவருக்கே உரித்தானது. ஒரு பெரிய கேள்வியை கேட்கும் பாவனையில் ஆரம்பித்துஅட சும்மனாச்சும் சொன்னேங்கஎன கலாய்த்து முடிக்கிறார். அவரது நிலைப்பாடு என்னவென உறுதியாய் சொல்வது மிக மிக சிரமம் என்கிறார்கள் அவரது விமர்சகர்கள்.
இக்கவிதை என்ன தான் சொல்ல வருகிறது எனக் கேட்காமல் எப்படி எதையும் சொல்லாமல், அர்த்தங்களில் இருந்து தப்பிக்கிறது என்பதே அதன் சிறப்பு. மற்றொரு லத்தீன் அமெரிக்க மேதையான நெருடாவின் கவிதைகளிலும் இந்த சுயமுரண் பாணியை, சூனியத்தைக் காணலாம். பார்ரா இதை அர்த்தங்களின் தளத்தில் செய்ய நெருடாவோ உணர்ச்சிகளின் தளத்தில் நிகழ்த்தினார்.

நிகனோர் பார்ரா ஜனவரி 23, 2018இல் தன் 103வது வயதில் காலமானார். அவருக்கு அஞ்சலி!

நன்றி: உயிர்மை, பிப்ரவரி, 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...