முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிகனோர் பார்ரா: அர்த்தங்களைக் கொண்டு சூதாடியவன்

   
Image result for nicanor parra
தமிழின் சிறந்த பத்து கவிகளை ஒரு பட்டியல் இட்டோமானால் ஒவ்வொருவரின் கவிதை மொழி, அணுகுமுறை, தொனி, நிலைப்பாடு ஆகியவை தனித்துவமாய், ஒரு தனியான பாதையாய், உறைய மறுக்கும் ஒரு சொட்டு ரத்தமாய் இருப்பதைக் காணலாம். இங்கு உன்னதமான கவியாய் அறிகிற ஒவ்வொருவரும் கூட்டத்துடன் இணையாது ஒலிக்கும் தனிக்குரல்.

 இந்த சுபாவத்தை ஓரளவு சிறுகதையிலும், அதிலும் மிகக் குறைவாக நாவலிலும், மிக மிகக் குறைவாக கட்டுரையிலும் பார்க்கலாம். கவிதையில் ஒருவரின் முக்கிய சாதனை ஒரு மொழியை கண்டுபிடிப்பதே. கவிஞர்கள் இருளில் உறங்கும் காதலியின் அங்கங்களில் வருடி எதையோ தேடி உணர்ந்து அவஸ்தை கொள்வதைப் போன்றே சொற்களை கையாள்வதைக் காணலாம். கவிஞன் எப்போதும் தன் சொற்களில் திருப்தி கொள்வதில்லை. அவனளவு மொழியில் அக்கறை கொள்கிறவர் இல்லை. லத்தீன் அமெரிக்காவின் கவிதை மரபின் உன்னத சாதனையாளனான நிகனோர் பார்ராவின் சிறப்பும் அவர் தனக்கான ஒரு புது மொழியை கண்டடைந்தது தான்அதில் ஒரு தனிச்சிறப்பு அவர் ஒரு மொழியற்ற மொழியை, ஒரு அழுக்குச் சிறுவனை குளிப்பாட்டி பளிச்சென அழைத்து வருவது போல், நம்மிடம் கொணர்ந்தார் என்பது.
அது என்ன மொழியற்ற மொழி?
மொழி அடிப்படையில் உருவகங்களால் ஆனது. பேக்கிலர்ட் கேஸ்டன் வெளிவருதல் (emerge) எனும் சொல்லைப் பற்றி தனது Poetics of Space நூலில் பேசும் போது அச்சொல்லைக் கூறிய அடுத்த நொடி நம் மனதுக்குள் ஒரு நத்தை தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்க்கும் சித்திரம் பூடகமாய் தோன்றுகிறது என்கிறார். ஆதிமனிதன் இந்த நத்தையை கண்டிராவிடில் இச்சொல்லே சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் அவர். ஒருவர் ஆதுரமாய் நம் கைகளைப் பற்றி என்னாச்சுப்பா?” என விசாரிக்கும் போது அந்தஆச்சுஎனும் ஆகுதல் ஒரு உருவகம் தான். உருவகம் இன்றி நம்மால் பேசவே முடியாதென்றால் கவிதையை எப்படி எழுதுவது? ஆகையால் கவிஞர்கள் உவமையில் இருந்து உருவகம், அதில் இருந்து குறியீடு, அதில் இருந்து படிமம், இப்போது மீண்டும் உவமை என ஒவ்வொரு தலைமுறையிலும் தம் பயன்பாட்டை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் மொழியை முழுக்க விடுதலையாக்க நம்மால் முடிந்ததில்லை. ஏனென்றால் கவிதை ஒரே சமயம் அர்த்தத்தில் இருந்து தப்பிக்கவும், புது அர்த்தத்தை தோற்றுவிக்கவும் முயல்கிறது. இது ஒரு சட்டையை கழற்றி புது சட்டை அணிவது போல. கவிதைக்குள் திறப்பு என்பது இரண்டுக்கும் இடையில் கவிதை சட்டை அணியாது ஒரு சின்ன நாணத்துடன் அது நம்மை நோக்கும் தருணம் தான். இந்த நிர்வாணம் ஒரு வித சூனிய நிலை. இந்த நிர்வாண நிலையை நீட்டிப்பது எப்படி? நிகனோர் பார்ரா இக்கேள்விக்கு விடை கண்டார்.
நிகனோர் பார்ராவின் கீழ்வரும் கவிதையை பாருங்கள்:
என் இறுதி மதுக்கோப்பையை உயர்த்துகிறேன்

உங்களுக்கு வசதிப்படுமோ இல்லையோ
மூன்று தேர்வுகள் தாம் உள்ளன:
நேற்று, இன்று, நாளை

அட, மூன்று கூட இல்லை
ஏனென்றால் தத்துவஞானிகள் சொல்வது போல
நேற்று என்பது நேற்று மட்டுமே
அது நம் நினைவில் மட்டுமே உள்ளது:
இதழ்கள் கவரப்பட்ட ரோஜாவில் இருந்து
இனி எடுக்க ஒன்றுமில்லை.

நாம் கையிலுள்ள சீட்டுகள் ரெண்டே:
இன்று மற்றும் நாளை.

அட, ரெண்டு கூட இல்லை.
நம்மை அது அவசரமாய் கடந்து செல்லும் போதும்,
அதை நாம் - இளமையைப் போல் - பருகும் போதும்
மட்டுமே அது இன்றாக உள்ளது
என்பதை நாம் அறிவோம் அல்லவா.

கடைசியில் எஞ்சுவது
 நாளை மட்டுமே
நான் உயர்த்துவேன் என் இறுதிக் கோப்பையை
ஒருபோதும் வராத அந்த நாளுக்காக.

ஆனால்
நம் வசம் உள்ளது
அவ்வளவு தான்.
(தமிழில் ஆர். அபிலாஷ்)

பார்ரா உருவக, உவமைகளுடன் போராடுவதில்லை. அவற்றை முறியடிக்க முனைவதில்லை. அவற்றை தாராளமாகவே பயன்படுத்துகிறார் (ரோஜா, சீட்டு). ஆனாலும் அபாரமான எடையின்மை ஒன்று அவரது கவிதையில் உள்ளதை நீங்கள் கவனிக்கலாம். எப்படி அது சாத்தியமாகிறது?
பார்ரா இக்கவிதையை ஒரு தலைப்பின்னல் போல் உள்முரண்களால் இக்கவிதையை பின்னியிருப்பதை கவனியுங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் அடுத்தடுத்த வாக்கியங்களால் முறியடிக்கிறார். முதலில் மூன்று வாய்ப்புகள் என்றவர் இறுதியில் ஒன்றுமே இல்லை என்கிறார். இதன் மூலம் அர்த்தங்களின் பாரம் மொத்தத்தையும் கவிதையில் இருந்து இறக்கி வைக்கிறார். இதன் விளையாட்டு தொனி, அதிர்ச்சியூட்டும் அடாவடியான பாணி அவருக்கே உரித்தானது. ஒரு பெரிய கேள்வியை கேட்கும் பாவனையில் ஆரம்பித்துஅட சும்மனாச்சும் சொன்னேங்கஎன கலாய்த்து முடிக்கிறார். அவரது நிலைப்பாடு என்னவென உறுதியாய் சொல்வது மிக மிக சிரமம் என்கிறார்கள் அவரது விமர்சகர்கள்.
இக்கவிதை என்ன தான் சொல்ல வருகிறது எனக் கேட்காமல் எப்படி எதையும் சொல்லாமல், அர்த்தங்களில் இருந்து தப்பிக்கிறது என்பதே அதன் சிறப்பு. மற்றொரு லத்தீன் அமெரிக்க மேதையான நெருடாவின் கவிதைகளிலும் இந்த சுயமுரண் பாணியை, சூனியத்தைக் காணலாம். பார்ரா இதை அர்த்தங்களின் தளத்தில் செய்ய நெருடாவோ உணர்ச்சிகளின் தளத்தில் நிகழ்த்தினார்.

நிகனோர் பார்ரா ஜனவரி 23, 2018இல் தன் 103வது வயதில் காலமானார். அவருக்கு அஞ்சலி!

நன்றி: உயிர்மை, பிப்ரவரி, 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.