Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினி: நீ நடந்தால் நடை அழகு! -


Image result for அண்ணாமலை + ஒரு பெண் புறா

கடந்த ஐம்பதாண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை பொறுத்த மட்டில் இரு தெளிவான பாணிகள் வெற்றி கண்டுள்ளன. ஒன்று ஆரவாரமான நாடகீயமான நடிப்பு. நமது கூத்து மற்றும் மேடை நாடக மரபில் இருந்து முகிழ்த்த சிவாஜி துவங்கி, அவர் பாணியில் கமல்ஹாசன், பின் அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ், விக்ரம், சூர்யா ஆகியோர் இத்தடத்தில் வருகிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி இதே மரபை சேர்ந்தவர். (இப்பாணி நடிகர்களுக்கு உடம்பை வருத்தி மாறுவேடங்களில் தோன்றவும் புதுப்புது விதங்களில் பேசவும் விருப்பம் இருக்கும்.)

 எம்.ஆர். ராதா சிவாஜியின் காலத்தவர், மேடை நடிகர் என்றாலும் அவர் சினிமா மொழியை நன்கு உணர்ந்தவர். குளோசப், மிட் ஷாட் மூலம் படக்கருவியால் மிக அருகில் சென்று நம் சிறு முகபாவங்களை, இமை அசைவை, உதட்டு நடுக்கத்தை, உடல் மொழியின் சிறு நுணுக்கங்களை பெரிய திரையில் இன்னும் பிரம்மாண்டமாய் பார்வையாளனுக்கு காட்ட முடியும். இதனோடு பின்னணி இசை, பிற நடிகர்களின் பங்களிப்பு ஆகியவையும் சேர ஒரு திரை நடிகன் கால் ஸ்பூன் நடித்தாலே அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எம்.ஆர் ராதா அறிந்திருந்தார். “ரத்தக் கண்ணீர்படத்தின் பல காட்சிகளை அவரது மிகையற்ற, சன்னமான, அடங்கின தொனியிலான நடிப்புக்கு உதாரணமாக காண முடியும். இதை ஒரு ஹாலிவுட் பாணி நடிப்பு எனலாம்.
இந்த பாணியில் இன்று வருபவர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் பகத் பாஸில்.
முதல் பாணியை பின்பற்றியவர்கள் பெரும் நட்சத்திரங்களாக ஆனார்கள். இரண்டாவது பாணியை சேர்ந்தவர்கள் பாராட்டப்படும் நடிகர்கள் மட்டுமே ஆனார்கள். தமிழில் விஜய், அஜித் இடத்தை விஜய் சேதுபதி மற்றும் தனுஷால் சுலபத்தில் பிடிக்க முடியாது. (மோகன்லால் கூட தன் வணிகப் படங்களுக்கு வேறு மாதிரியாக நடிக்க வேண்டி வந்தது.)
ஆனால் இந்த ரெண்டு பாணிகளையும் ஒன்றிணைத்து ஆகப்பெரிய நட்சத்திரமாய் உச்சத்தை அடைய முடியும் என நிரூபித்தவர் ஒருவர் மட்டுமே: ரஜினி. ஒரே படத்தில் அவர் நாடகீயமாகவும் நாடகத்தன்மை இன்றி ஹாலிவுட் பாணியிலும் நடிப்பார். இரண்டும் தனித்தனியாய் தெரியாத வண்ணம் நுணுக்கமாய் அதை செய்வார். ஆட்டம், பாட்டம், அடிதடி உள்ளிட்ட ஹீரோயிச காட்சிகளில் நீங்கள் காணும் ரஜினிக்கு முழுக்க மாறுபட்ட ஒரு ரஜினியை உணர்ச்சிகரமான காட்சிகளில் காண முடியும். ஒரு நிமிடம் விஜய் சேதுபதியாகவும் மறுநிமிடம் ரஜினியாகவும் அவரால் ஒரே படத்தில் இயங்க முடியும்.
 ரஜினியின் நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் அலச இது இடம் அல்ல என்பதால் அவர் நடையின் சிறப்பு, அது எப்படி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் உளவியல் போக்குகளை, மனநிலை மாற்றங்களை உணர்த்த ஒரு கருவியாக ரஜினிக்கு பயன்பட்டது என அடுத்து சொல்கிறேன். ரஜினியின் நடை - அதன் ஸ்டைல்ரஜினியின் ஹீரோயிசத்தின் அடிப்படை. ஆனால் அதே நடையின் ஸ்டைல் கொண்டு தான் அவர் தானேற்ற பாத்திரங்களின் மனநிலை மாற்றங்களையும் நுணுக்கமாய் பிரதிபலித்திருக்கிறார். இது தான் அவரது தனிச்சிறப்பு. அஜித், விஜய் போன்ற நட்சத்திரங்களுக்கு இன்னும் வாய்க்காத தனித்திறன்.
அடுத்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.
விதிவசத்தில் ஜென்ம விரோதிகளாய் மாற நேர்கிற அண்ணாமலை, அசோக் எனும் இரு நண்பர்களின் கதை அண்ணாமலை”. ஆரம்பத்தில் பால்க்கார அண்ணாமலையாக இருக்கும் ரஜினியின் எளிமை, ஆக்ரோசம், வெகுளித்தனம், துடுக்குத்தனம் பிற்பாடு பெரும்பணக்கார அண்ணாமலையாக மாறும் ரஜினியிடம் இருக்காது. அவன் கோபத்தையும் துயரத்தையும் தனக்குள் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்துகிறவனாய், அழுத்தமான் ஆளாய் இருப்பான். இதை மிக நுட்பமாய் அழகாய் ரஜினி தன் உடல்மொழி மற்றும் நடை மூலம் காட்டி இருப்பார். ஆரம்பத்தில் வருகிற அண்ணாமலை நடக்கும் போது ஒரு கார்டூன் பாத்திரம் போல் கைகால்களை உதறிக் கொண்டு, துள்ளும் பந்து போல் கிட்டத்தட்ட இருப்பான். அவன் பேச்சும் படபடவென இருக்கும். ஆனால் பணக்கார அண்ணாமலை நிதானமாய் நடப்பான். அவன் கைகள் உடம்போடு ஒட்டி ஒரு எந்திரத்தின் பாகம் போல் கச்சிதமாய் இருக்கும். இது அவன் கண்ணியத்தையோ கம்பீரத்தையோ காட்டவில்லை. மாறாக அவனுக்குள் பொருமும் இறுக்கத்தை காட்டுகிறது.
 தன் நண்பனை தோற்கடித்து அவனது சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் எனும் தவிப்பில் வெறித்தனமாய் உழைத்து அசுர வளர்ச்சி பெறும் அண்ணாமலை மகிழ்ச்சியாய் இல்லை. ஏனெனில் அவன் மனதை வெறுப்பு சூழ்ந்திருக்கிறது. தன் மகள் அசோக்கின் மகனை நேசிக்கிறாள் என அறிய வரும் போது அவன் நொறுங்கிப் போகிறான். அந்த விரக்தியில் அவன் பாடும் பாடற்காட்சி தான்ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…”.
படத்தளம் அண்ணாமலையின் பங்களா. மகள் சோபாவில் கண்கலங்கி அமர்ந்திருக்க, மனைவியும் அம்மாவின் தனித்தனியே நிற்கிறார்கள். ஒவ்வொருவரிடம் சென்று பாடல் வரிகளை பாடும் போதும் ரஜினியின் உடல்மொழி மிக நுணுக்கமாய் மாறும். மகளிடம் செல்லும் போது நெகிழ்ந்து நாணலாய் வளைவார். அடுத்த நொடியில் மனைவியருகே செல்லும் போது ஸ்டைலாய் உடல் விரைப்பு கொண்டு தலைதூக்கிஎன் தன் நிம்மதி போனதேஎன்பார். அம்மாவிடம் சென்றதும் சட்டென தலைகுனிந்து ஒரு குழந்தையாக உடலை குறுக்கிமனம் வாடுதே”. முதல் பார்வையில் இது உங்களுக்கு தென்படாது. ஏனெனில் மூஞ்சியில் அடிக்கும் படி (சிவாஜி பாணியில்) ரஜினி இதை நடித்திருக்க மாட்டார். ஒரு மனிதன் தன் குடும்பத்துடன் நான்கு சுவர்களுக்குள் இருக்கையில் ஒவ்வொருவர் முன்னிலையிலும் ஒவ்வொரு பாத்திரத்தை வகிக்கிறான் என்பதை ரஜினி தத்ரூபமாய் ஒரு வணிக சினிமாவில் செண்டிமெண்டான பாடலில் காட்டி இருப்பார்.
அதிசயப் பிறவிஎம்.ஜி.ஆரின்எங்க வீட்டுப் பிள்ளைடெம்பிளேட்டில் உருவான படம். ஒரே தோற்றம் கொண்ட வெகுளியான பாலுவாகவும் முரட்டுத்தனமான காளையாகவும் ரஜினி வருவார், பாலுவை அவனது சித்தப்பாவின் குடும்பத்தினர் கொன்று விட, ஏற்கனவே தவறுதலாய் எமனால் உயிர் பறிக்கப்பட்ட காளை அவ்வுடலில் புகுந்து சித்தப்பாவையும் குடும்பத்தினரை பழிவாங்குகிறான். இப்படி பாலுவின் உடலில் புகுந்த காளை சுபாவத்தில் யாராக இருப்பான் என சித்திரகுப்தன் கேட்க எமன் சொல்கிறார்: “அவன் அடிப்படையான சுபாவம் பாலுவுடையது. ஆனால் வீரம் காளையுடையது.” இந்த இரட்டை ஆளுமையை ரஜினி அனாயசமாய் நடித்து வெளிப்படுத்துவார். பாலுவைப் போன்று மெல்ல ஆடியபடியே நடந்து வரும் ரஜினி நொடியில்காளையாகஆக்ரோசமானவனாய் மாறுவார். அதுவும் சின்ன ஜெயந்தை மிரட்டும் ஒரு இடத்தில் இடுப்பை ஆட்டியபடியேஉடனே தோட்டத்துக்கு போய் தேங்காயை எல்லாம் உரிச்சு இங்க கொண்டு வாரேஎன கட்டளையிடும் போது அதில் விளையாட்டும் இருக்கும், முரட்டுத்தனமும் தென்படும். அடுத்து தன் காதலி கௌரியை பார்க்க தோட்டத்துக்கு செல்கிறார். அங்கே அவரது கம்பீர நடையும் கூலிங்கிளாஸ் அணிந்த ஸ்டைலும் மிடுக்கான கை அசைவுகளும் காளையுடையதாக இருக்கும். ஆனால் கௌரியைக் கண்டதும் சட்டென ரெண்டு கைகளையும் அடைப்புக்குறி போல் மெல்ல வளைத்து பாலுவாய் கிராமிய வெகுளித்தன்மையை காட்டுவார் ரஜினி. இந்த மாற்றமெல்லாம் கால்நொடி அவகாசத்தில், சுலபத்தில் புலப்படாதபடி வெகு நுண்மையாய் நிகழ்த்தியிருப்பார் ரஜினி.
சிகரெட் தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைல், கோபத்தில் முறைப்பது உட்பட்ட பல மேனரிசம்களில், பின்னணி இசை, அறிமுகப்பாடல், சண்டைக்காட்சி, பஞ்ச் வசனம் என ஒரு புறம் ரஜினியிடம் ஆக்ரோசமான நாடகீயம் தெரியும். இது தான் ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு சென்றது. ஆனால் திரைச்சட்டகத்துக்கு தோதான உடல்மொழியை கச்சிதமாய் பயன்படுத்தும் ரஜினியும் இன்னொரு பக்கம் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.
 இப்படி இரண்டு எதிரெதிர் நடிப்பு பாணிகளை ஒன்று சேர்த்த சாமர்த்தியம் ரஜினியின் வெற்றியின் மூல காரணங்களில் ஒன்று எனலாம்.

நன்றி: குமுதம்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...