முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கியமும் வாழ்வும் (1)


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு,
           விஷ்ணுபுரம் விழாவில் தங்களுடனான சந்திப்பிற்கு பிறகு எழுதும் கடிதம். உங்கள் வலைப்பூவில் வெளியான கட்டுரைகள் மகிழ்ச்சியாக இருப்பது, போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்ற இரண்டையும் வாசித்தேன். சமீபத்தில்"Zorba the Greek" வாசித்தேன். அதில் மைய பாத்திரங்களான ஜோர்பாவும்,பேசிலும் இணைந்து மலையிலிருந்து மரங்களை கப்பிகள் வழியே இறக்கி் பெரும் பொருளீட்ட நீண்ட நாட்களாக  திட்டமிட்டு ஒரு இறங்குதளத்தை உருவாக்குவார்கள் மரஙகளை அதன் வழியே இறக்கும் போது சரிந்து விழுந்து எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும். அப்போது Zorba அந்த துயரத்திலும் தன்னை கரைத்து மகிழ்ச்சியாய் இருப்பான்.
அதுபோன்று துயரத்தின் ஆழங்களுக்கு நம்மை ஒப்பு கொடுத்து மகிழ்வது
  சாத்தியமா?






இதை ஒட்டி மற்றொரு கேள்வி:
°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?
-          அன்புடன் ஜானகிராமன்
அன்புள்ள ஜானகிராமன்
நலம் என நம்புகிறேன்.
நீங்கள் எழுப்பிய இரு கேள்விகளும் முக்கியமானவை. செறிவானவை.
Zorba the Greek நாவலில் நீங்கள் குறிப்பிட்ட இடம் எனக்கு விசித்திரமாய் ஆல்பர்ட் காமுவின் “அந்நியனை” நினைவுபடுத்தியது. தன் மரணத்தை ஏற்கும் தருணத்தில் மெர்ஸால்ட் உணரும் புளகாங்கிதத்தை எப்படி புரிந்து கொள்வது? ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்” நாவலில் இறுதியில் முழுக்க தோற்றுப் போன பின்னரும் கிழவர் தோற்றுப் போகாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சொல்லப் போனால், அவர் அந்த மீனை பத்திரமாய் கரை சேர்த்திருந்தால் அந்நாவல் அப்படி ஒரு காவிய உணர்வை நமக்கு அளித்திருக்காது.
இந்த மாதிரி பெரிய வீழ்ச்சியில், இழப்பில், சிதைவில், தோல்வில் குதூலகமாய், புளகாங்கிதமாய், தடையற்று உணர்வது ஒரு குறிப்பிட்ட மனவெளிப்பாடு என நான் ஏற்கிறேன். அது சாத்தியமே. ஆனால் அது வாழ்க்கை அனுபவம் அல்ல. இரண்டும் வேறுவேறு. எப்படி என விளக்குகிறேன்.
 பஷீரின் “பூவன் பழம்” எனும் பிரசித்தமான கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் கணவன் தன் காதல் மனைவியை ஒரு குச்சியால் அடித்து துன்புறுத்துகிறான்; கத்தியை காட்டி மிரட்டுகிறான். ஆனால் அது உண்மையான வன்முறை அல்ல. ஒருவித விளையாட்டு. அந்த விளையாட்டில் இருவரும் ஒருவித காமக் கிளர்ச்சியை, காதல் மலர்ச்சியை உணர்கிறார்கள். இது எந்த ஆண்-பெண் உறவிலும் சாத்தியமாகும் ஒரு மனத்திளைப்பை சுட்டுகிறது தான்; எதிர்மறை அனுபவத்தில் நேர்மறையான கிளர்ச்சியான எதிர்வினையை பெறும் சாத்தியம் காம உறவில் உள்ளது தான். ஆனால் அது ஒரு மிக மிக நுணுக்கமான உணர்வு மட்டுமே. அது வெளிப்படையாக இராது. இதைக் கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் ஒரு கணவன் தன் அன்பையும் காமத்தையும் அதில் வெளிப்படுத்துகிறான் என நாம் கூறி விட இயலாது. பஷீரின் கதையில் கணவன் அடிப்பது ஒரு உருவகம் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட எல்லா படைப்பாளிகளும் மனித மனதின் சில விசித்திர உணர்வு நிலைகளை நாடகீயமாய் சித்தரிக்கிறார்கள். அக்காட்சிகள் குறியீடுகள் அல்லது உருவகங்களாய் வருகின்றன.
 நிஜவாழ்வில் அத்தகைய செயல்பாடுகளோ எதிர்வினைகளோ நிச்சயம் சாத்தியம் இல்லை. ஏனெனில் உணர்வும் அனுபவமும் இரு வேறு விசயங்கள். நாவல் உணர்வை பேசுகிறது. அனுபவத்தை அல்ல.
நாவல்கள் அனுபவத்தை முழுமையாக அல்ல, அதன் சாரமான ஒரு உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாய், நாடகீயமாய் சித்தரிக்கின்றன. அதனாலே இலக்கியத்தில் எப்போதும் ஒரு மிகை உள்ளது. அது எப்போதும் இயல்பு வாழ்வில் இருந்து விலகி நிற்கிறது. அப்படி நிற்பதே இலக்கியத்தின் சிறப்பும்.
உங்களது இரண்டாவது கேள்விக்கு ஒரு தனிப்பதிவில் அடுத்து பதிலளிக்கிறேன். நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...