Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கியமும் வாழ்வும் (1)


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு,
           விஷ்ணுபுரம் விழாவில் தங்களுடனான சந்திப்பிற்கு பிறகு எழுதும் கடிதம். உங்கள் வலைப்பூவில் வெளியான கட்டுரைகள் மகிழ்ச்சியாக இருப்பது, போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்ற இரண்டையும் வாசித்தேன். சமீபத்தில்"Zorba the Greek" வாசித்தேன். அதில் மைய பாத்திரங்களான ஜோர்பாவும்,பேசிலும் இணைந்து மலையிலிருந்து மரங்களை கப்பிகள் வழியே இறக்கி் பெரும் பொருளீட்ட நீண்ட நாட்களாக  திட்டமிட்டு ஒரு இறங்குதளத்தை உருவாக்குவார்கள் மரஙகளை அதன் வழியே இறக்கும் போது சரிந்து விழுந்து எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும். அப்போது Zorba அந்த துயரத்திலும் தன்னை கரைத்து மகிழ்ச்சியாய் இருப்பான்.
அதுபோன்று துயரத்தின் ஆழங்களுக்கு நம்மை ஒப்பு கொடுத்து மகிழ்வது
  சாத்தியமா?






இதை ஒட்டி மற்றொரு கேள்வி:
°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?
-          அன்புடன் ஜானகிராமன்
அன்புள்ள ஜானகிராமன்
நலம் என நம்புகிறேன்.
நீங்கள் எழுப்பிய இரு கேள்விகளும் முக்கியமானவை. செறிவானவை.
Zorba the Greek நாவலில் நீங்கள் குறிப்பிட்ட இடம் எனக்கு விசித்திரமாய் ஆல்பர்ட் காமுவின் “அந்நியனை” நினைவுபடுத்தியது. தன் மரணத்தை ஏற்கும் தருணத்தில் மெர்ஸால்ட் உணரும் புளகாங்கிதத்தை எப்படி புரிந்து கொள்வது? ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்” நாவலில் இறுதியில் முழுக்க தோற்றுப் போன பின்னரும் கிழவர் தோற்றுப் போகாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சொல்லப் போனால், அவர் அந்த மீனை பத்திரமாய் கரை சேர்த்திருந்தால் அந்நாவல் அப்படி ஒரு காவிய உணர்வை நமக்கு அளித்திருக்காது.
இந்த மாதிரி பெரிய வீழ்ச்சியில், இழப்பில், சிதைவில், தோல்வில் குதூலகமாய், புளகாங்கிதமாய், தடையற்று உணர்வது ஒரு குறிப்பிட்ட மனவெளிப்பாடு என நான் ஏற்கிறேன். அது சாத்தியமே. ஆனால் அது வாழ்க்கை அனுபவம் அல்ல. இரண்டும் வேறுவேறு. எப்படி என விளக்குகிறேன்.
 பஷீரின் “பூவன் பழம்” எனும் பிரசித்தமான கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் கணவன் தன் காதல் மனைவியை ஒரு குச்சியால் அடித்து துன்புறுத்துகிறான்; கத்தியை காட்டி மிரட்டுகிறான். ஆனால் அது உண்மையான வன்முறை அல்ல. ஒருவித விளையாட்டு. அந்த விளையாட்டில் இருவரும் ஒருவித காமக் கிளர்ச்சியை, காதல் மலர்ச்சியை உணர்கிறார்கள். இது எந்த ஆண்-பெண் உறவிலும் சாத்தியமாகும் ஒரு மனத்திளைப்பை சுட்டுகிறது தான்; எதிர்மறை அனுபவத்தில் நேர்மறையான கிளர்ச்சியான எதிர்வினையை பெறும் சாத்தியம் காம உறவில் உள்ளது தான். ஆனால் அது ஒரு மிக மிக நுணுக்கமான உணர்வு மட்டுமே. அது வெளிப்படையாக இராது. இதைக் கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் ஒரு கணவன் தன் அன்பையும் காமத்தையும் அதில் வெளிப்படுத்துகிறான் என நாம் கூறி விட இயலாது. பஷீரின் கதையில் கணவன் அடிப்பது ஒரு உருவகம் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட எல்லா படைப்பாளிகளும் மனித மனதின் சில விசித்திர உணர்வு நிலைகளை நாடகீயமாய் சித்தரிக்கிறார்கள். அக்காட்சிகள் குறியீடுகள் அல்லது உருவகங்களாய் வருகின்றன.
 நிஜவாழ்வில் அத்தகைய செயல்பாடுகளோ எதிர்வினைகளோ நிச்சயம் சாத்தியம் இல்லை. ஏனெனில் உணர்வும் அனுபவமும் இரு வேறு விசயங்கள். நாவல் உணர்வை பேசுகிறது. அனுபவத்தை அல்ல.
நாவல்கள் அனுபவத்தை முழுமையாக அல்ல, அதன் சாரமான ஒரு உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாய், நாடகீயமாய் சித்தரிக்கின்றன. அதனாலே இலக்கியத்தில் எப்போதும் ஒரு மிகை உள்ளது. அது எப்போதும் இயல்பு வாழ்வில் இருந்து விலகி நிற்கிறது. அப்படி நிற்பதே இலக்கியத்தின் சிறப்பும்.
உங்களது இரண்டாவது கேள்விக்கு ஒரு தனிப்பதிவில் அடுத்து பதிலளிக்கிறேன். நன்றி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...