Skip to main content

என் வாழ்வின் சிறந்த ஐந்து நூல்கள் சவால்






போரும் அமைதியும் – தல்ஸ்தாய்
தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல். இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல தோன்றுவதை தவிர்க்க முடியாது.


நார்வேஜியன் வுட் – முராகாமி
இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும் ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.



விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
தமிழின் ஆகச்சிறந்த நாவல் இது என்பதில் எனக்கு ஐயமில்லை. புதுவிதமான மொழிகளை கையாள்வது, முழுக்க ஒன்றோறொண்டு முரண்கொள்ளும் உணர்வுநிலைகளுக்குள் விளையாடுவது, காட்சிபூர்வமான சித்தரிப்புகளால் நம்மை திகைக்கவும் பதறவும் வைப்பது, சுயதேடல் எனும் உன்மத்தத்தை உரைநடையிலும் கையாள முடியும் என நிரூபித்தது, கற்பனையிலும் அறிவார்ந்தும் இது மேற்கொள்ளும் விரிவு ஆகியவை மேற்சொன்ன தகுதியை இதற்கு அளிக்கிறது. இதை செவ்வியல் / வரலாற்று நாவல் என்பதை விட இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பான லட்சியத்தின் அந்த பொற்காலம், அதன் சீரழிவு, மார்க்ஸியவாதிகளும் காந்தியவாதிகளும் கொண்டாடிய நம்பிக்கைகளின் தத்தளிப்பு, அறம் பற்றின விவாதங்கள், அவற்றின் இறுதி வீழ்ச்சி ஆகியவை பற்றின ஒரு நீதிக்கதை (parable) எனச் சொல்லலாம்.


நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன்
கால ஓட்டம் மிகத் தனியானது. அது ஒரு சக்கரவியூகம். அதில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடைக்க முடியாது. அதன் போக்கை தீர்மானிக்கவும் முடியாது. இதை உணரும் மனிதர்களின் தீவிரமான தனிமையை தொட்டுக் காட்டும் தமிழ் நாவல்களில் இது முதன்மையானது. எஸ்.ராவை லத்தீன் அமெரிக்க இலக்கியம் பாதித்ததன் உன்னதமான விளைவு என இந்நாவலை சொல்லலாம். ரெண்டு நாட்கள் விடுப்பெடுத்து இந்நாவலை படித்து லயித்த நாட்களை மறக்க முடியாது. படித்ததுமே நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இதோ தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. இதை இவராலே இனி மீற முடியுமா?”.


Fear of Freedom – எரிக் புரோம்
கட்டுரை நூல்களில் இதை தேர்ந்தெடுக்கக் காரணம் தனிப்பட்டது. நான் மன அழுத்தத்தில் இருந்த சந்தர்பத்தில் இந்நூலை எதேச்சையாய் படித்தேன். இது அளித்த தர்க்கம், அவதானிப்புகள், மனித சுபாவம் பற்றின ஆழமான பார்வை என்னை அழுத்திய துக்கத்தை துடைத்து அகற்றின. துக்கம் என்பது அச்சம், அச்சம் என்பது பிழையான பார்வையில் இருந்து வருவது, சிந்தனை சீரானால் துக்கம் போம் என்று நான் அன்று இதை வாசித்து கண்டு கொண்டேன். நான் 2007இல் எழுதின முதல் கட்டுரை முதல் எரிக் புரோமை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறேன். ஒரு புத்தகம் உங்களுக்கு மனநலம் அளிக்கும் என யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஆனால் எனக்கு அப்படி ஒன்று நடந்தது – ஆகையால் நம்ப வேண்டி இருக்கிறது. முக்கியமான நூல்.




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...