முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் வாழ்வின் சிறந்த ஐந்து நூல்கள் சவால்






போரும் அமைதியும் – தல்ஸ்தாய்
தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல். இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல தோன்றுவதை தவிர்க்க முடியாது.


நார்வேஜியன் வுட் – முராகாமி
இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும் ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.



விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
தமிழின் ஆகச்சிறந்த நாவல் இது என்பதில் எனக்கு ஐயமில்லை. புதுவிதமான மொழிகளை கையாள்வது, முழுக்க ஒன்றோறொண்டு முரண்கொள்ளும் உணர்வுநிலைகளுக்குள் விளையாடுவது, காட்சிபூர்வமான சித்தரிப்புகளால் நம்மை திகைக்கவும் பதறவும் வைப்பது, சுயதேடல் எனும் உன்மத்தத்தை உரைநடையிலும் கையாள முடியும் என நிரூபித்தது, கற்பனையிலும் அறிவார்ந்தும் இது மேற்கொள்ளும் விரிவு ஆகியவை மேற்சொன்ன தகுதியை இதற்கு அளிக்கிறது. இதை செவ்வியல் / வரலாற்று நாவல் என்பதை விட இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பான லட்சியத்தின் அந்த பொற்காலம், அதன் சீரழிவு, மார்க்ஸியவாதிகளும் காந்தியவாதிகளும் கொண்டாடிய நம்பிக்கைகளின் தத்தளிப்பு, அறம் பற்றின விவாதங்கள், அவற்றின் இறுதி வீழ்ச்சி ஆகியவை பற்றின ஒரு நீதிக்கதை (parable) எனச் சொல்லலாம்.


நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன்
கால ஓட்டம் மிகத் தனியானது. அது ஒரு சக்கரவியூகம். அதில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடைக்க முடியாது. அதன் போக்கை தீர்மானிக்கவும் முடியாது. இதை உணரும் மனிதர்களின் தீவிரமான தனிமையை தொட்டுக் காட்டும் தமிழ் நாவல்களில் இது முதன்மையானது. எஸ்.ராவை லத்தீன் அமெரிக்க இலக்கியம் பாதித்ததன் உன்னதமான விளைவு என இந்நாவலை சொல்லலாம். ரெண்டு நாட்கள் விடுப்பெடுத்து இந்நாவலை படித்து லயித்த நாட்களை மறக்க முடியாது. படித்ததுமே நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இதோ தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. இதை இவராலே இனி மீற முடியுமா?”.


Fear of Freedom – எரிக் புரோம்
கட்டுரை நூல்களில் இதை தேர்ந்தெடுக்கக் காரணம் தனிப்பட்டது. நான் மன அழுத்தத்தில் இருந்த சந்தர்பத்தில் இந்நூலை எதேச்சையாய் படித்தேன். இது அளித்த தர்க்கம், அவதானிப்புகள், மனித சுபாவம் பற்றின ஆழமான பார்வை என்னை அழுத்திய துக்கத்தை துடைத்து அகற்றின. துக்கம் என்பது அச்சம், அச்சம் என்பது பிழையான பார்வையில் இருந்து வருவது, சிந்தனை சீரானால் துக்கம் போம் என்று நான் அன்று இதை வாசித்து கண்டு கொண்டேன். நான் 2007இல் எழுதின முதல் கட்டுரை முதல் எரிக் புரோமை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறேன். ஒரு புத்தகம் உங்களுக்கு மனநலம் அளிக்கும் என யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஆனால் எனக்கு அப்படி ஒன்று நடந்தது – ஆகையால் நம்ப வேண்டி இருக்கிறது. முக்கியமான நூல்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...