முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவர் - ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (4)



அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா. அடுத்து, புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா. கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார். அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான். அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான். ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது (இது அவனை பலவீனப்படுத்துகிறது). மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு, உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில், தடுமாறிப் போகிறான்.







அடுத்து வரும் காட்சிகள் ஆனந்தன் அவளுடன் பழகி அவளை தன்வயப்படுத்திய பின் வருபவை. இப்போது கல்பனா அவனை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறாள். ஒரு மலையுச்சியின் வியூ பகுதி. கல்பனா முதலில் கீழே அமர்ந்திருக்கிறாள். அவள் தனக்கு எதிரே நாற்காலியில் இருந்து மேக் அப் போடும் ஆனந்தனை நோக்கி பேசுகிறாள்.

 அவனது முதல் மனைவி புஷ்பாவுக்கும் தனக்குமுள்ள தோற்ற ஒற்றுமை பற்றி விசாரிக்கிறாள். ஆனந்தன் மெல்ல தடுமாறுகிறான். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆனந்தன் மேலேயும் அவள் கீழேயும் இருக்கிறாள்.





புஷ்பாவுக்கு தலைகீழாக ஒரு உருவம் இருந்தால் அது நீ தான்என ஆனந்தன் அவளுக்கும் தன் முதல் மனைவிக்குமான வேறுபாடுகளை பட்டியலிடுகிறான். புஷ்பாவை போலன்றி கல்பனா அகங்காரம் மிக்கவள், பெரியவர்களை மதிக்கத் தெரியாதவள், அனைவரையும் கட்டுப்படுத்த தவிப்பவள்அவன் இவ்வாறு பேச பேச கல்பனா கீழிறங்குகிறாள். கீழே வரும் காட்சிகளில் ஆனந்தன் திரும்பவும் தாழ் கோணத்தில் வருகிறான். ஆனால் முதல் காட்சியில் போல் அல்லாது அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். கல்பனா தன் தோற்ற ஒற்றுமையை, ஆனந்தனுக்கு தன் மீதுள்ள ஈர்ப்பை சுட்டிக் காட்டி பேசி உரையாடலின் போது தன் அதிகாரத்தை மீட்கிறாள். இப்போது இருவரும் சமமாகிறார்கள். அடுத்து மீண்டும் தன் மீது அவனுக்கு உள்ள காதல் நிலையற்றது, உறுதியற்றது எனத் தோன்ற அவள் மீண்டும் கீழே போகிறாள்.







 அவன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து அவளை நோக்குகிறான். ஆனாலும் அவளது கேள்விகள் அவனை அசைக்கின்றன. இதை உணர்ந்த அவள்இனி அவனுக்கு கீழே அமர வேண்டியதில்லை எனும் நம்பிக்கையுடன் - கம்பித் தடுப்பின் மீது அமர்ந்தும் சாய்ந்தபடியும் ஆனந்தனை கீழாக நோக்குகிறாள்.

 என்னைப் பார்த்தால் புஷ்பா போல உள்ளதா? என்னையும் காதலிக்க போறீங்களா?” என வினவுகிறாள். ஆனந்தன் பதறுகிறான். அவன் முழுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ளதை அவள் இப்போது உணர்கிறாள். ஆனால் இந்த அதிகார சமநிலை மீண்டும் மாறுகிறது.

இக்காட்சித் தொகுப்பு முழுக்க இருவரின் உறவில் உள்ள ஊசலாட்டத்தை மணிரத்னம் காட்சிமொழி மூலம் குறிப்புணர்த்தி இருப்பார்.
இதைப் போன்றே தமிழ்ச்செல்வனின் இரண்டாவது மனைவியான செந்தாமரைக்கும் இடையிலான காதல் காட்சியிலும் அதிகார ஊசலாட்டம் சித்தரிக்கப்பட்டிருக்கும். கீழே வரும் காட்சியில் செந்தாமரை தனக்கு போதுமான இடம் இல்லை என தமிழ்ச்செல்வனிடம் புகார் கூறுகிறாள் (அவனுக்கு ஏற்கனவே குடும்பம் உள்ளது). நான் உனக்கு யார், எனக்கு இங்கு என்ன இடம் என வினவுவாள். ஆக தமிழ்செல்வன் இப்போது தாழ்ந்து போக வேண்டும். அந்நிலையில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான கவித்துவமான வசனம் பேசி அவளை கண்ணீர் விட வைக்கிறான் தமிழ்ச்செல்வன். அடுத்து இருவரும் சமமாகிறார்கள். தாழ் கோணத்தில் இருந்து நேர் கோணத்தில் மிட் ஷாட்டுக்கு காட்சி மாறுகிறது.




கருத்துகள்

karthikkumar.karu இவ்வாறு கூறியுள்ளார்…
Super... Oru film parkirathula ivlo irukka

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...