Skip to main content

எழுதும் முன்பான அந்த தயக்கம்…


 Image result for What I Talk about When I Talk about Running

இருப்பதிலேயே ரொம்ப எளிதான காரியம் எழுதுவதே. இருப்பதிலேயே ரொம்ப கடினமான விசயமும் அது தான். காரணம் நம் மனம்.
நான் என்ன எழுதப் போகிறோம் என்பது முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாய் நீங்கள் புனைவு எழுதும் போது. அதுவும் நாவல் எழுதும் போது.
எழுதும் நம் விரல்களை அது நடுங்க செய்கின்றது. எழுத ஆரம்பிக்கும் முன்னரே மனதை இருளில் பதுங்கச் செய்கிறது. அல்லது எழுதுவதை ஒத்திப் போட வைக்கிறது.

சிறுகதையில் நாம் செல்லும் திசை என்ன, இலக்கு என்ன என்பது குறித்த தெளிவு உள்ளது. மொழியும் உத்வேகமும் அகப்பாய்ச்சலுமே அப்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மற்றபடி சிறுகதையின் போது கடிவாளம் நம் கையில் தான். குதிரை என்னதான் எகிறி வானுக்கும் பூமிக்குமாய் குதித்து பறந்தாலும் அதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
கட்டுரை ஒரு காளை வண்டி ஓட்டுவது போல. இன்னும் பாதுகாப்பான பயணம்.
நாவலை எழுதும் போது தினம் தினம் ஏதாவது ஒரு ஆச்சரியம் நம்மை காத்திருக்கும். நிறைய சிறு சிறு தருணங்களை விரித்து எழுத வேண்டி வரும். அப்போது என்ன தான் உண்மையில் நிகழும் என்பதை நாம் அறியோம்.
 நாவலில் சுலபத்தில் விடுவிக்க முடியாத சிக்கல்கள், நாடகீய மோதல்கள், வாழ்க்கையின் தப்புத் தாளங்கள், அடர்ந்து கொண்டே செல்லும் இருட்டான பாதைகள் அதிகம் அடுத்தடுத்து வந்தபடி இருக்கும். எழுத்தாளன் தன்னை ஒவ்வொரு சிக்கலிலும், பிரச்சனையிலும், நெருக்கடியிலும் செலுத்தி மெல்ல மெல்ல மீண்டு வர வேண்டி வரும்.
 நாவல் உங்களை மனதளவில் கடுமையாய் உருக்குலைக்கும் அனுபவம். ஒவ்வொரு முறையும் நாவல் எழுதி முடிக்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தளர்ந்து போவதாய் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருமுறை குறிப்பிட்டார். நாவலின் ஆலகால விஷத்தை ஜீரணிப்பது எப்படி என ஹரூக்கி முராகாமி தனது What I Talk about When I Talk about Running எனும் நூலில் பேசுகிறார்.
 நாவல் எழுதுகையில் ஒருவர் நிச்சயம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்; அது கசடுகள், இடர்பாடுகள், பித்துநிலைகளில் மாட்டித் தவிக்கும் மனத்தை விடுவிக்க உதவும் என்கிறார் முராகாமி. அகத்தை இயக்குவது ஒருவித உடல் ஆற்றல் என்பது முராகாமியின் பார்வை. இந்த உடல் ஆற்றல் பயன்படுத்தப்படாமல் மனதுக்குள் திரண்டு விடும். அதிகமாய் கற்பனையிலும் சிந்தனையிலும் உழலும் புனைவெழுத்தாளன் நமது ஆழ் மனத்தில் புதைக்கப்பட்ட அதர்க்கமான, சமூகத்தால் ஏற்கப்படாத எண்ணங்களை (நாவலின் ஊடே) நேரில் கையாள்பவன். இது ஆபத்தானது. வெளிப்படாமல் தேங்கும் உடலாற்றல் இப்போது அவனைத் தாக்கி அழித்து விடும். மிதமிஞ்சிய காமம், தியானம், விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடுகிறவர்கள் சட்டென மன சமநிலை இழந்து தடுமாறுவதற்கு இதுவே காரணம்.
இதனால் தான் எழுதுவது இருப்பதிலேயே அதிக கடினமான காரியம் என்கிறேன். பயிற்சியும் ஒழுக்கமும் உண்டெனில் தினமும் உட்கார்ந்து எழுதி விடலாம். ஆனால் எழுதுகையில் எழுந்து வரும் பைசாசங்களை எதிர்கொள்வது எளிதல்ல.
நான் நாவல் எழுதும் காலகட்டத்தில் தினமும் எழுதுவேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதை ஆரம்பிக்க திணறுவேன். காலையில் பத்து மணிக்கு எழுத திட்டமிடுவேன்; ஆனால் அந்நேரத்துக்கு ஆரம்பிக்க மாட்டேன். பல்வேறு விசயங்களை படித்தும் எழுதியும் நாவலை தள்ளிப் போட்டபடியே இருப்பேன். இனிமேல் தள்ளிப் போட முடியாது எனும் நிலை வரும் போது சட்டென கோப்பைத் திறந்து அத்தியாயத்தை முந்தின நாள் விட்டதில் இருந்து தொடர்ந்து எழுதுவேன். கொஞ்ச நேரத்தில் எழுதும் செயலையே மறந்து எழுதத் துவங்கி விடுவேன். களைந்து ஓயும் வரை எழுதுவேன்.
இதற்காகவே இவ்வளவு நேரம் தயங்கினோம் என அப்போது எனக்கு லஜ்ஜை ஏற்படும். ஆனால் இந்த எண்ணமெல்லாம் எழுதி முடித்து கொஞ்ச நேரம் தான். அடுத்து பகலிலும் இரவு தூங்கும் வரையிலும் பதற்றம் ஒரு நிழலைப் போல் என்னைத் தொடர்ந்து வரும். அடுத்த நாள் மீண்டும் என் நாவல் பிரதியை திறக்க தயங்குவேன், அஞ்சுவேன், அதைக் கடந்து வேறு வேலைகளில் ஈடுபடத் துவங்குவேன். மனதை மீண்டும் கட்டுப்படுத்தி, ஆறுதல் செய்து, நிதானப்படுத்தி எழுத்தில் ஈடுபட போராடுவேன். இது ஒரு சுழற்சி. நாவலின் இறுதி அத்தியாயத்தை முடித்து முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதே சுவரில் திரும்பத் திரும்ப தலையை மோதியபடி இருப்பேன்.
துவங்கும் வரை நாவல் எழுதுவது தான் உலகிலேயே கடினமான சவால். ஆனால் எழுதத் துவங்கிய பின் காதலியை அரவணைத்து உடலோடு உடல் பின்னி முத்தமிடுவது போல் இயல்பான சுகமான சுலபமான லகுவான ஒன்று. ஒரே சிக்கல் ஆரம்பித்த எதையும் தற்காலிகமாய் நிறுத்திய பின் அடுத்த நாள் ஆரம்பிக்க வேண்டும் என்பது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...