Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுதும் முன்பான அந்த தயக்கம்…


 Image result for What I Talk about When I Talk about Running

இருப்பதிலேயே ரொம்ப எளிதான காரியம் எழுதுவதே. இருப்பதிலேயே ரொம்ப கடினமான விசயமும் அது தான். காரணம் நம் மனம்.
நான் என்ன எழுதப் போகிறோம் என்பது முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாய் நீங்கள் புனைவு எழுதும் போது. அதுவும் நாவல் எழுதும் போது.
எழுதும் நம் விரல்களை அது நடுங்க செய்கின்றது. எழுத ஆரம்பிக்கும் முன்னரே மனதை இருளில் பதுங்கச் செய்கிறது. அல்லது எழுதுவதை ஒத்திப் போட வைக்கிறது.

சிறுகதையில் நாம் செல்லும் திசை என்ன, இலக்கு என்ன என்பது குறித்த தெளிவு உள்ளது. மொழியும் உத்வேகமும் அகப்பாய்ச்சலுமே அப்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மற்றபடி சிறுகதையின் போது கடிவாளம் நம் கையில் தான். குதிரை என்னதான் எகிறி வானுக்கும் பூமிக்குமாய் குதித்து பறந்தாலும் அதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
கட்டுரை ஒரு காளை வண்டி ஓட்டுவது போல. இன்னும் பாதுகாப்பான பயணம்.
நாவலை எழுதும் போது தினம் தினம் ஏதாவது ஒரு ஆச்சரியம் நம்மை காத்திருக்கும். நிறைய சிறு சிறு தருணங்களை விரித்து எழுத வேண்டி வரும். அப்போது என்ன தான் உண்மையில் நிகழும் என்பதை நாம் அறியோம்.
 நாவலில் சுலபத்தில் விடுவிக்க முடியாத சிக்கல்கள், நாடகீய மோதல்கள், வாழ்க்கையின் தப்புத் தாளங்கள், அடர்ந்து கொண்டே செல்லும் இருட்டான பாதைகள் அதிகம் அடுத்தடுத்து வந்தபடி இருக்கும். எழுத்தாளன் தன்னை ஒவ்வொரு சிக்கலிலும், பிரச்சனையிலும், நெருக்கடியிலும் செலுத்தி மெல்ல மெல்ல மீண்டு வர வேண்டி வரும்.
 நாவல் உங்களை மனதளவில் கடுமையாய் உருக்குலைக்கும் அனுபவம். ஒவ்வொரு முறையும் நாவல் எழுதி முடிக்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தளர்ந்து போவதாய் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருமுறை குறிப்பிட்டார். நாவலின் ஆலகால விஷத்தை ஜீரணிப்பது எப்படி என ஹரூக்கி முராகாமி தனது What I Talk about When I Talk about Running எனும் நூலில் பேசுகிறார்.
 நாவல் எழுதுகையில் ஒருவர் நிச்சயம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்; அது கசடுகள், இடர்பாடுகள், பித்துநிலைகளில் மாட்டித் தவிக்கும் மனத்தை விடுவிக்க உதவும் என்கிறார் முராகாமி. அகத்தை இயக்குவது ஒருவித உடல் ஆற்றல் என்பது முராகாமியின் பார்வை. இந்த உடல் ஆற்றல் பயன்படுத்தப்படாமல் மனதுக்குள் திரண்டு விடும். அதிகமாய் கற்பனையிலும் சிந்தனையிலும் உழலும் புனைவெழுத்தாளன் நமது ஆழ் மனத்தில் புதைக்கப்பட்ட அதர்க்கமான, சமூகத்தால் ஏற்கப்படாத எண்ணங்களை (நாவலின் ஊடே) நேரில் கையாள்பவன். இது ஆபத்தானது. வெளிப்படாமல் தேங்கும் உடலாற்றல் இப்போது அவனைத் தாக்கி அழித்து விடும். மிதமிஞ்சிய காமம், தியானம், விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடுகிறவர்கள் சட்டென மன சமநிலை இழந்து தடுமாறுவதற்கு இதுவே காரணம்.
இதனால் தான் எழுதுவது இருப்பதிலேயே அதிக கடினமான காரியம் என்கிறேன். பயிற்சியும் ஒழுக்கமும் உண்டெனில் தினமும் உட்கார்ந்து எழுதி விடலாம். ஆனால் எழுதுகையில் எழுந்து வரும் பைசாசங்களை எதிர்கொள்வது எளிதல்ல.
நான் நாவல் எழுதும் காலகட்டத்தில் தினமும் எழுதுவேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதை ஆரம்பிக்க திணறுவேன். காலையில் பத்து மணிக்கு எழுத திட்டமிடுவேன்; ஆனால் அந்நேரத்துக்கு ஆரம்பிக்க மாட்டேன். பல்வேறு விசயங்களை படித்தும் எழுதியும் நாவலை தள்ளிப் போட்டபடியே இருப்பேன். இனிமேல் தள்ளிப் போட முடியாது எனும் நிலை வரும் போது சட்டென கோப்பைத் திறந்து அத்தியாயத்தை முந்தின நாள் விட்டதில் இருந்து தொடர்ந்து எழுதுவேன். கொஞ்ச நேரத்தில் எழுதும் செயலையே மறந்து எழுதத் துவங்கி விடுவேன். களைந்து ஓயும் வரை எழுதுவேன்.
இதற்காகவே இவ்வளவு நேரம் தயங்கினோம் என அப்போது எனக்கு லஜ்ஜை ஏற்படும். ஆனால் இந்த எண்ணமெல்லாம் எழுதி முடித்து கொஞ்ச நேரம் தான். அடுத்து பகலிலும் இரவு தூங்கும் வரையிலும் பதற்றம் ஒரு நிழலைப் போல் என்னைத் தொடர்ந்து வரும். அடுத்த நாள் மீண்டும் என் நாவல் பிரதியை திறக்க தயங்குவேன், அஞ்சுவேன், அதைக் கடந்து வேறு வேலைகளில் ஈடுபடத் துவங்குவேன். மனதை மீண்டும் கட்டுப்படுத்தி, ஆறுதல் செய்து, நிதானப்படுத்தி எழுத்தில் ஈடுபட போராடுவேன். இது ஒரு சுழற்சி. நாவலின் இறுதி அத்தியாயத்தை முடித்து முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதே சுவரில் திரும்பத் திரும்ப தலையை மோதியபடி இருப்பேன்.
துவங்கும் வரை நாவல் எழுதுவது தான் உலகிலேயே கடினமான சவால். ஆனால் எழுதத் துவங்கிய பின் காதலியை அரவணைத்து உடலோடு உடல் பின்னி முத்தமிடுவது போல் இயல்பான சுகமான சுலபமான லகுவான ஒன்று. ஒரே சிக்கல் ஆரம்பித்த எதையும் தற்காலிகமாய் நிறுத்திய பின் அடுத்த நாள் ஆரம்பிக்க வேண்டும் என்பது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...