முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜன் குருக்கள்

Image result for rajan gurukkal



ராஜன் குருக்கள் ஒரு முக்கியமான வரலாற்றாசிரியர்; ஆய்வாளர்; சமூக விஞ்ஞானி.
ராஜன் குருக்கள் சன்னமாய் புன்னகைத்தபடி மிக மென்மையாய், அதிராமல் பேசும் பேச்சாளர். புதியவர்களுடன் சட்டென ஸ்நேகம் பாராட்டும் ஆசிரியரின் குணநலன் கொண்டவர். எங்கள் (கிறைஸ்ட்) பல்கலையில் பேராசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடல் மூன்று-நாள் நிகழ்ச்சி கடந்த வாரம் நிகழ்ந்தது. அதன் இறுதி நாள் சிறப்புரை வழங்கவே ராஜன் குருக்கள் வருகை புரிந்தார்.

ராஜன் குருக்களை போல் அவ்வளவு சுவாரஸ்யமாய், அறிவார்த்தமாய் பேசுகிற மற்றொருவரை நான் கல்விப்புலத்தில் இதுவரைக் கண்டதில்லை. காலை முதல் மாலை அவர் கிளம்பும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். பங்கேற்பாளர்கள் சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். இப்படி பேசும் இன்னொரு நபர் இருக்கிறார் என்றால் அது நமது எஸ். ராமகிருஷ்ணன் தான்.
இரண்டு விசயங்கள் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஒன்று, அசராது அவர் அளிக்கும் புதுப் புது தகவல்கள். ஒவ்வொரு விசயத்தைப் பற்றி பேசுகையிலும் அது சம்மந்தமாய் அவர் தன் மந்திரத் தொப்பியில் இருந்து எடுத்துக் காட்டும் ஒரு கதை, வரலாற்று நிகழ்வு ஒன்று பற்றின குறிப்பு, மேற்கோள்கள்.
நமது பெரும்பாலான எழுபதுகளின் அறிவுஜீவிகளைப் போல ராஜன் குருக்களும் ஒரு மார்க்ஸியவாதி. ஆனால் கட்சி அறிவுஜீவி அல்ல. எந்த கருத்தியல் ஹேங் ஓவரும் இல்லாத, சமூக வரலாற்று பிரச்சனைகளுக்கு கலந்தாய்வின் பொருட்டு தன் மனதுக்குள் உறைநிலையில் இருக்கும் கார்ல் மார்க்ஸை அவ்வப்போது தோளைத் தட்டி எழுப்பி உரையாடுபவர். மார்க்ஸியம் ஒரு நிறுவனமாய், கட்சியாய் மாறும் போதே அது உடனே படிநிலைகளைப் பெற்று, சமூகத்தின் பல ஆதிக்க சக்திகளின் சமரசக் களமாய் மாறி விடும்; கட்சியாக மாறின பின் கம்யூனிஸ்ட் கட்சியே கம்யூனிசத்துக்கு எதிராக செயல்படத் துவங்கும் என அன்று துணிச்சலாய் சாடினார். கேரளாவின் நில சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப் பட்ட போது நடந்த பேரங்களை, அநீதியை, அப்போது பாட்டாளி மக்கள் கைவிடப் பட்டதை குறிப்பிட்டார். யாருக்கும் எதற்கும் வக்காலத்து வாங்கும் அவசியம் அற்றவனே ஒரு சுதந்திர அறிவுஜீவி. ராஜன் குருக்கள் அப்படியானவர். இது என்னை மிகவும் கவர்ந்தது.
வரலாறு எவ்வளவு ஆர்வமூட்டும் துறை என அன்று நான் உணர்ந்தேன். வரலாற்றில் இருந்து நிகழ்வுகளை கோர்த்தெடுக்க தெரிந்த ஒரு பேச்சாளர் அதைக் கொண்டு மக்களை திகைக்க வைக்க முடியும். ராஜன் குருக்கள் கோட்பாடுகளிலும் தேர்ந்தவர். ஆகையால், அவர் அன்று நவீனத்துவத்தில் இருந்து பின்நவீனத்துவம் எப்படி உருப்பெற்று வந்தது எனப் பேசும் போது அதை கோட்பாட்டு விவாதமாக அன்றி ஒரு வரலாற்றுச் சித்திரமாய் மாற்றிக் காட்டினார்.
உலகம் தர்க்க ஒழுங்குக்குள் அடங்குவது என நவீனத்துவவாதிகள் நம்பினர்; ஆனால் பின்நவீனத்துவர்கள் அதை ஏற்பதில்லை. இக்கருத்தை அவர் இயல்பியலில் ஏற்பட்ட பல மாற்றங்களைச் சுட்டிக் காட்டி விளக்கினார். ஒரு சிக்கலான தத்துவக் கருத்தை இப்படி பௌதிகமான வடிவில் காண்பதும் புரிவதும் எளிதாக இருந்தது.
ராஜன் குருக்கள் அன்று துறையிடை (interdisciplinary) படிப்பு பற்றி பேச உத்தேசித்திருந்தார். ஒரு துறையில் மட்டும் விற்பன்னனாய் ஒருவர் இருப்பது ஒரு நவீனத்துவ வழமை. இன்று பின்நவீனத்துவம் வந்த பின் நாம் பல துறைகளில் ஆர்வம் கொண்டு அவற்றின் அரவணைப்பில் புது சிந்தனைகளை, ஆய்வுமுடிவுகளை, பார்வைகளை வந்தடைவதை இன்று முக்கியமாய் நினைக்கிறோம். இப்படி துறையிடை ஆய்வுகளை அவர் ஒரு பின்நவீனத்துவ பாய்ச்சலாய் காண்கிறார். இதைப் பற்றி பேசும் முன் நவீனத்துவ-பின்நவீனத்துவ வேறுபாடுகளை விளக்கவே வரலாற்று ரீதியான பல சம்பவங்களை அவர் சித்தரித்தார். ஆனால் பேச்சார்வத்தில் அவர் நேரம் கடந்ததையே உணரவில்லை. தன்னுரையின் சிறு பகுதியையே அவர் அன்று பேசினார் என நினைக்கிறேன். இப்படி ஒருவர் தன்னை மறந்து லயித்து பேசுவதே ஒரு அற்புத அனுபவம். ஒரு நல்ல உரை திட்டமிட்டபடி கராறாய் இருக்கலாம். அது ஒரு வகை. இது இன்னொரு பாணி. அரேபிய இரவுகள் மாதிரியான உரை. இதுவும் வெகு சுவாரஸ்யமே.
அன்றைய நாள் முடியும் போது, இப்படி ஒரு மனிதர் என் ஆசிரியராக இருக்கவில்லையே அல்லது இவர் என்னுடன் பணி புரியவில்லையே எனும் ஏக்கம் என்னைத் தழுவிக் கொண்டது. “தங்க மீன்கள்” படத்தில் நாயகன் வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்யும் பட்டறையில் வேலை செய்வான். அங்கு அவனுக்கு வருமானம் சொற்பமே. என்றாலும் வேலைநாள் முடியும் போது உடம்பெல்லாம் வெள்ளித் துகள்கள் ஒட்டிக் கொள்ள அவன் மினுமினுத்தபடி தெரிவான். ஒரு வெள்ளி மனிதனாய் மாறுவான். அப்போது தன்னை முழுக்க வேறொரு மகத்தான மனிதனாய் அவன் உணர்வான். ராஜன் குருக்களை (அல்லது ஜெ.மோ, எஸ்.ரா) மாதிரியான ஆளுமைகளுடன் ஒரு நாளை செலவிடும் போது நாமும் அப்படியே உணர்கிறோம்.
என்ன ஒரு அலாதியான நாள்!

கருத்துகள்

Nagendra Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...