முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்பு நீங்கள் இப்படி விசாரிக்கவில்லை


 “உங்க படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்குமா?” அல்லது “கிடைப்பதில்லையா?” இக்கேள்வியை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் இருக்கும் இடம் ஒரு காரணம். இங்கு யார் தமிழில் படிக்கிறார்கள்? ஒருவிதத்தில் இப்படி ஓரிடத்தில் அந்நியமாய் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு இப்படி இருப்பதில் ஒரு அந்தரங்க உணர்வு உள்ளது. பரண் மீது சொகுசாக அமர்ந்து மீசையை நக்கும் பூனையைப் போல.

ஆனால் இக்கேள்விகள் நான் சென்னையில் இல்லை என்பதையும் நினைவுபடுத்தி விடுகின்றன. அங்கு ஒருவர் கூட இப்படிக் கேட்டதில்லை. அங்கு தமிழில் படிக்காத ஒருவருடன் கூட நான் உரையாட நேர்ந்ததில்லை என்பதை யோசிக்கவே வியப்பு தோன்றுகிறது.
நான் முன்பு பணி செய்த அலுவலகத்தில் “நீங்க எழுத்தாளரா?” என விசாரித்து யாராவது என் கணினி அருகே வந்து நிற்பார்கள்.
“எப்படித் தெரியும்? யார் சொன்னாங்க? எங்காவது படிச்சீங்களா?”
“நேத்து டிவியில சேனல் மாத்தும் போது உங்க முகம் பார்த்தேன். கொஞ்ச நேரம் கவனிச்சா “எழுத்தாளர்னு” போட்டிருந்தது.”
அதன் பிறகு “நீங்க என்ன எழுதியிருக்கீங்க” என்று கேட்கவா வேண்டாமா என நாணிக் கோணி விட்டு ஒரு அசட்டுப் புன்னகையை பதிலுக்கு தந்து விட்டு கிளம்பி விடுவார்.
ஒருவர் என்னை “நீங்க கவிஞரா?” என்று என்னிடம் வந்து விசாரித்தார். நான் “இல்லீங்க” என்றேன். ஆனாலும் எப்போது பார்த்தாலும் “வாங்க கவிஞரே” என்பார் வாஞ்சையாக. நானும் தலையாட்டி விட்டு ஏற்றுக் கொள்வேன்.
என்னைக் கண்டதுமே தூய தமிழில் பேசுபவர்கள், என்னிடம் கவிதை நோட்டு கொண்டு நீட்டுகிறவர்கள், குறுநாவல் எழுதி வந்து படித்து கருத்து கேட்பவர்கள் என பலரும் என்னை குறுக்கிட்டதுண்டு.
இங்கு “எழுத்தாளர்” என்ற சொல்லை கேட்டே நாளாகிறது. இங்கு என்னிடம் விசாரிப்பதெல்லாம் “உங்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லையா?” என்பதையே. (என்னை அப்படியே மொழிபெயர்த்தாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை என்பது வேறு விசயம்.) சென்னையின் அந்த விளியை, விசாரிப்புகளை, அன்பொழுகும் தமிழ்த்தன்மையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
 திரும்ப திரும்ப காலையும் மாலையும் அதே இடத்தில் அதே ஆட்களை பார்த்து சங்கடமாய் புன்னகைக்க நேரும் அந்த இலக்கிய கூட்டங்கள், டீக்கடை அரட்டைகள், ரெண்டு நிமிடம் பேசுவதற்காக நான்கு மணி நேரம் சேலவழித்து கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் என்னைத் தேடி வரும் இலக்கிய நண்பர்கள், மணிக்கணக்காய் போய் அமர்ந்து உரையாட மனுஷ்யபுத்திரனின் அலுவலக வீடு, அந்த புழுக்கம், எரித்துக் கொல்லும் வெயில், அரசியல் சுவரொட்டிகள், கூவி அலறும் ஸ்பீக்கர் பக்தி, கூழூத்தி சாலையை மறிக்கும் கோயில்கள், ஆயிரமாயிரம் நினைவுகள்.
ஒருநாள் திரும்ப ஓடி வந்து விடுவேன் என நினைக்கிறேன் என் இரண்டாம் வீட்டுக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...