Skip to main content

முன்பு நீங்கள் இப்படி விசாரிக்கவில்லை


 “உங்க படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்குமா?” அல்லது “கிடைப்பதில்லையா?” இக்கேள்வியை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் இருக்கும் இடம் ஒரு காரணம். இங்கு யார் தமிழில் படிக்கிறார்கள்? ஒருவிதத்தில் இப்படி ஓரிடத்தில் அந்நியமாய் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு இப்படி இருப்பதில் ஒரு அந்தரங்க உணர்வு உள்ளது. பரண் மீது சொகுசாக அமர்ந்து மீசையை நக்கும் பூனையைப் போல.

ஆனால் இக்கேள்விகள் நான் சென்னையில் இல்லை என்பதையும் நினைவுபடுத்தி விடுகின்றன. அங்கு ஒருவர் கூட இப்படிக் கேட்டதில்லை. அங்கு தமிழில் படிக்காத ஒருவருடன் கூட நான் உரையாட நேர்ந்ததில்லை என்பதை யோசிக்கவே வியப்பு தோன்றுகிறது.
நான் முன்பு பணி செய்த அலுவலகத்தில் “நீங்க எழுத்தாளரா?” என விசாரித்து யாராவது என் கணினி அருகே வந்து நிற்பார்கள்.
“எப்படித் தெரியும்? யார் சொன்னாங்க? எங்காவது படிச்சீங்களா?”
“நேத்து டிவியில சேனல் மாத்தும் போது உங்க முகம் பார்த்தேன். கொஞ்ச நேரம் கவனிச்சா “எழுத்தாளர்னு” போட்டிருந்தது.”
அதன் பிறகு “நீங்க என்ன எழுதியிருக்கீங்க” என்று கேட்கவா வேண்டாமா என நாணிக் கோணி விட்டு ஒரு அசட்டுப் புன்னகையை பதிலுக்கு தந்து விட்டு கிளம்பி விடுவார்.
ஒருவர் என்னை “நீங்க கவிஞரா?” என்று என்னிடம் வந்து விசாரித்தார். நான் “இல்லீங்க” என்றேன். ஆனாலும் எப்போது பார்த்தாலும் “வாங்க கவிஞரே” என்பார் வாஞ்சையாக. நானும் தலையாட்டி விட்டு ஏற்றுக் கொள்வேன்.
என்னைக் கண்டதுமே தூய தமிழில் பேசுபவர்கள், என்னிடம் கவிதை நோட்டு கொண்டு நீட்டுகிறவர்கள், குறுநாவல் எழுதி வந்து படித்து கருத்து கேட்பவர்கள் என பலரும் என்னை குறுக்கிட்டதுண்டு.
இங்கு “எழுத்தாளர்” என்ற சொல்லை கேட்டே நாளாகிறது. இங்கு என்னிடம் விசாரிப்பதெல்லாம் “உங்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லையா?” என்பதையே. (என்னை அப்படியே மொழிபெயர்த்தாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை என்பது வேறு விசயம்.) சென்னையின் அந்த விளியை, விசாரிப்புகளை, அன்பொழுகும் தமிழ்த்தன்மையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
 திரும்ப திரும்ப காலையும் மாலையும் அதே இடத்தில் அதே ஆட்களை பார்த்து சங்கடமாய் புன்னகைக்க நேரும் அந்த இலக்கிய கூட்டங்கள், டீக்கடை அரட்டைகள், ரெண்டு நிமிடம் பேசுவதற்காக நான்கு மணி நேரம் சேலவழித்து கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் என்னைத் தேடி வரும் இலக்கிய நண்பர்கள், மணிக்கணக்காய் போய் அமர்ந்து உரையாட மனுஷ்யபுத்திரனின் அலுவலக வீடு, அந்த புழுக்கம், எரித்துக் கொல்லும் வெயில், அரசியல் சுவரொட்டிகள், கூவி அலறும் ஸ்பீக்கர் பக்தி, கூழூத்தி சாலையை மறிக்கும் கோயில்கள், ஆயிரமாயிரம் நினைவுகள்.
ஒருநாள் திரும்ப ஓடி வந்து விடுவேன் என நினைக்கிறேன் என் இரண்டாம் வீட்டுக்கு.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...