முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (1)


 Image result for ramya bigg boss
பிக்பாஸை நான் இந்த இரண்டாம் பருவத்தில் கூடுதல் ஆர்வமாய் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு: நான் இதுவரை எதிர்கொண்டுள்ள பல கார்ப்பரேட் அனுபவங்களுக்கு அது நெருக்கமாக உள்ளது.
 இன்று நம் வாழ்வே கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் நம்மை எப்படியெல்லாம் படுத்துவார்கள், எப்படியெல்லாம் கண்காணிப்பார்கள், நாம் எந்தமாதிரி அபத்தங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த ஷோ சித்தரிக்கிறது. இது விளையாட்டு தான்; ஆனால் நம் கார்ப்பரேட் போட்டி உலகை அணுக்கமாய் பிரதிபலிக்கும் விளையாட்டு. வரும் பதிவுகளில் இதைப் பற்றி கூடுதலாய் எழுதுகிறேன். முதலில் இவ்வாரம் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு விசயம்: ரம்யாவின் வெளியேற்றம்!

பிக்பாஸில் நான் முதலில் நம்பிய ஒன்று ஒரு வன்மமான, மோதல்கள் நிறைந்த சூழலில் ஒருவர் அதிக பாதிப்பில்லாமல் தாக்குப்பிடித்தால் வெளியேறாமல் இறுதி வாரம் வரை நகர முடியும் என்பது. பரஸ்பரம் ஒத்துப் போகாதவர்கள் அதிகம் குற்றம் சாட்டப்படுகிறார்கள்; அவர்களை அதிகம் மற்றவர் பழிக்கிறார்கள். பிக்பாஸ் அவர்களை குறுக்குவிசாரணை செய்கிறார். பொன்னம்பலம் போன்றவர்கள் ஐஷ்வர்யாவை ஒழுக்க விமர்சனம் செய்ததற்கு (வரம்பு மீற்யதற்காக) சிறையில் அடைக்கப்படுகிறார். கெட்டவார்த்தை பேசுவதற்காக பாலாஜி கண்டிக்கப்படுகிறார். அதிகம் புறம் பேசுவதாய் விமர்சிக்கப்படும் வைஷ்ணவின் அதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகம் வெறுக்கப்படுபவராய் இருக்கிறார். நான் நினைத்தேன்: வைஷ்ணவி நிச்சயம் ரெண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார். ஆனால் நடந்ததோ வேறு: வெளியேறும் நிலையில் அவர் தக்க வைக்கப்பட்டார். இப்போதோ வீட்டுக்குள் மிக அதிகமாய் வெறுக்கப்படுபவராய் இருந்தும், மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இன்றியும், வைஷ்ணவி வெளியேறும் ஆபத்தில் இல்லை; பாலாஜியும் பொன்னம்பலமும் தொடர்ந்து பல வாரங்களாய் காப்பாற்றப்படுகிறார்கள்; ஆனால் அனைவராலும் மிக அதிகமாய் நேசிக்கப்படும், யாராலும் எந்த புகாரும் தெரிவிக்கப்படாத ரம்யாவோ இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார். இது என்ன நகைமுரண்! அபத்தம்!
 இதைப் பார்த்த போது தான் எனக்கு ஒரு விசயம் விளங்கியது: பிக்பாஸ் வீட்டுக்குள் நிலைக்க தேவைப்படுவது அனைவரோடும் சுமூகமாய் செல்லும் சுபாவம் அல்ல.
ரம்யாவுடன் இறுதியாய் உரையாடும் போதும் கமல் ஒன்று சொல்கிறார்: உங்களது பட்டும்படாத குணம் வாழ்க்கையில் உங்களை சிறக்க உதவும்; ஆனால் இந்த போட்டியில் அது எடுபடாது. இதை எளிமையாக இப்படி புரிந்து கொள்ளலாம் – ரம்யாவின் தவறு அவர் யாருடனும் முரண்பட்டு வம்புக்கிழுத்து குடுமிப்பிடி சண்டை போடாதது. வம்படிக்கு போகும் ஆட்கள் இந்த ஷோவை சுவாரஸ்யமாக்குகிறார்கள். ஒருவித பரபரப்பு, நாடகீயம், உணர்ச்சி வேகம் மோதல்களினால் மட்டுமே வருகிறது. இதுவரை இப்படி ரத்தம் கொட்டி, கண்ணீர் சிந்தி, வசைமாரி பொழிந்து, யாருக்கும் கேட்காதபடி உச்சஸ்தாயில் கத்தி இந்த ஷோவை குழாயடி ஜாலி பொழுதுபோக்காக மாற்றியவர்கள் பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, மஹத், செண்டிராயன், மும்தாஜ் ஆகியோர்.
 இவர்களில் நித்யா மட்டுமே ஒரே சண்டையை திரும்ப திரும்ப போட்டவர். அவர் அலுப்பூட்டவே வெளியேற்றப்பட்டார். யாஷிகா, ஐஷ்வர்யா போன்றோர் தம் குழுக்குள்ளே கும்மியடித்தாலும் அவர்களால் எதிர்குழுவினருக்கு எரிச்சல் ஏற்பட்டது; அவர்களின் உற்சாகம், அத்துமீறல், ஆட்டம் பாட்டம் போன்றவை ஒரு பக்கம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது; அவர்களை வைத்து பொன்னம்பலம் அடிக்கும் கூத்தும், வைக்கும் ஒழுக்கமீறல் ஒப்பாரிகளும் ஷோவின் ரேட்டிங் ஏற நிச்சயம் உதவியிருக்கும்.
இவர்களில் ரம்யாவுக்கு அடுத்தபடியாய் அஹிம்சைவாதிகள் என்றால் ரித்விகா, ஜனனி ஆகியோர். ஜனனி ஒரு திரை பிரபலம் என்பதால் சில வாரங்கள் தப்பித்து விடுவார். (மும்தாஜையும் அவரது திரை புகழும் பிம்பமுமே காப்பாற்றுகிறது.) அனைவரையும் சமாளித்துப் போகும் சாமர்த்தியசாலி டானியல் இந்த ஷோவின் தேவையை உணர்ந்து அடிக்கடி வம்புகளிலும் ஈடுபடுகிறார். அவரும் இறுதி இரு வாரங்கள் வரை இருப்பார் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.