முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (1)



 90களின் தமிழ் சினிமா / 90galin Tamil Cinema (Tamil Edition) by [ஆர். அபிலாஷ் / R. Abilash]

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)
1.   ஒரு புனைகதை எழுத்தாளராக இருந்துகொண்டு சினிமாவைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது?

ஆர். அபிலாஷ்: நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. நான் ஆர்வம் கொள்ளும் பல்வேறு துறைகளில் சினிமாவும் உண்டு. ஒரு எழுத்தாளனாய் நான் மாறுபட்ட கோணங்களை, புதிய மொழி ஒன்றை, எனக்கான உணர்வுநிலையை சினிமா விமர்சனத்துக்குள் கொண்டு வருவதாய் நம்புகிறேன். உதாரணமாய், தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரையிலான படங்களில் ஒருவித ஒடுக்கப்பட்ட ஆண்மை சித்தரிக்கப்பட்டதை, புரொமேன்ஸ் பேசப்பட்டதை, சொல்ல முடியாத காதலின் அவஸ்தையை நம் சினிமா காட்சிப்படுத்தியதைப் பற்றி என் சினிமா கட்டுரைகளில் விவாதித்திருக்கிறேன். அதாவது, என் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகளில், புனைவுகளில் பேச முடியாத சில விசயங்களை சினிமாவை மையம் கொண்டு என்னால் பேச முடிந்திருக்கிறது.

 
2. ஏதோவொரு கலைவடிவம் மக்களிடையே பிரசித்தி பெற்றதாக இருந்து வந்துள்ளது. இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு கலையாகச் சினிமா இருப்பது பற்றிய உங்கள் கருத்து?

ஆர். அபிலாஷ்: இது சினிமா ஊடகத்தின் காலம். நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இயக்குநர் ராமை சந்தித்த போதுஇனிமேல் படைப்புச்செயல்கள் காட்சி ஊடகம் வழியாகவே நிகழும். எழுத்து பின்னுக்கு நகர்ந்து விடும்என்றார். ஓரளவுக்கு அவர் சொன்னதே இன்று நடந்து வருகிறது. என் கல்லூரியில் இளம் எழுத்தாளர்களை விட இளம் இயக்குநர்களை, இளம் புகைப்பட கலைஞர்களையே அதிகம் காண்கிறேன். மேலும் இன்றைய தலைமுறைக்கு காட்சிபூர்வமாய் சிந்திப்பது இயல்பாகவும் வருகிறது.
 இன்னொரு பக்கம், தமிழகம் என்றுமே சினிமாவை கொண்டாடிய மாநிலமே. இங்கு சினிமாவில் இருந்து அரசியல் ஆளுமைகள் மற்றும் தலைவர்கள் தோன்றுவது இன்றும் தொடரும் ஒரு பாணி. கமல், ரஜினி, விஜய், பாரதிராஜா, அமீர், ராம் என நிர்வாக அரசியல், தமிழ் தேசிய அரசியல் என பேசுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு சிறு சொல்லும் இங்கே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. சினிமாவில் வலுவான இடம்பெற்றிராத, இரண்டாம் நிலை நடிகையாய் சில காலம் தொடர்ந்த கஸ்தூரி அரசியல் பேசினால் கூட கோடிக்கணக்கானோர் காதுகொடுத்துக் கேட்டு முகநூலில் சர்ச்சிக்கிறார்கள்.
ஏன் இந்தளவு சினிமா மோகம் நம்மவர்களுக்கு என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இதன் ஒரு நல்விளைவு கடந்த பத்தாண்டுகளில் நம் சினிமா தொழில்நுட்ப ரீதியாய் பல முக்கிய திரை கலைஞர்களை, படைப்புகளை கொடுத்துள்ளது. மலையாளத்தில் ஒரு பி.ஸி ஸ்ரீ
ராமோ மணிரத்னமோ மிஷ்கினோ ராமோ இல்லை. அவர்களின் சந்தோஷ் சிவன் கூட அதிகமும் வெளிமாநிலங்களிலே வேலை செய்திருக்கிறார். நல்ல திரைமொழியை கொண்டிருந்த பத்மராஜனுக்கு கூட அங்கு வழித்தோன்றல்கள் இல்லை. நாடகத்தை வித்தியாசமான கதை அமைப்புடன் எடுப்பதே இன்றும் மலையாள சினிமா. அதில் உளவியல் நுணுக்கங்கள் உண்டு; வாழ்க்கைப் பார்வை உண்டு. ஆனால் சினிமா மொழி இல்லை. “மகேஷிண்டே பிரதிகாரம்ஆர்வமூட்டும் கதை ஆழம் கொண்ட படம் தான். ஆனால் அது சினிமா இல்லை. வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது.
ஆக, தமிழரின் சினிமா வெறி சில நல்ல விளைவுகளைத் தந்திருக்கிறது.



கருத்துகள்

நிதர்சனத்தின் நிழல் இவ்வாறு கூறியுள்ளார்…
சார், கேரள சினிமா தேங்கி இருப்பதாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் திரைமொழியில் நம்மை தாண்டி வெகுகாலம் ஆயிற்று.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...