முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (2)


Image result for bigg boss sendrayan
பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க சதா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி ஷோவுக்கு ஒரு பொழுதுபோக்கு சாத்தியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், யாரையும் அதிகம் துன்புறுத்தவோ புண்படுத்தவோ செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டுக்குள் யாருடனும் இசைவாக இருப்பது நிலைப்புக்கு உதவாது. ரேட்டிங் ஏற உதவினால் மட்டுமே நீங்கள் நீடிக்க இயலும்.


கார்ப்பரேட்டில் இன்றுள்ள சூழலும் இதுவே: அனைவருக்கும் இணக்கமான, நட்பார்ந்தவர்களிடம் அனைவருமே அன்பாக இருப்பார்கள். ஆனால் அது ஒரு போட்டிக் களம் என்பதை உணர்ந்து, தன்னை தக்க வைத்துக் கொள்ள, யாரையும் காலை வாரி விட துணிந்து செயல்பட வேண்டும். போட்டியுணர்வே இணக்க சுபாவத்தை விட முக்கியம். ரம்யா வெளியேற்றப்பட வைஷ்ணவியும் மும்தாஜும் காப்பாற்றப்படுவது இதனால் தான்.
நான் முன்பு ஒரு நிறுவனத்தில் ஒரு பைலட் புரோஜெக்டில் வேலை செய்தேன். மூன்று மாதங்களில் புரோஜக்ட் சொதப்ப, எங்களை ஒவ்வொருவராக வீட்டுக்கு அனுப்பினார்கள். வெளியேற்றத்தின் போதான நேர்முகத்தின் போது புரோஜெக்டை காப்பாற்ற இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள். எனக்கு அது என் இறுதி நாள் எனத் தெரியாது. நான் என் சக ஊழியர் ஒருவரை பாராட்டிப் பேசினேன்: அவருக்கு அத்துறையில் சில நல்ல தொடர்புகள் உண்டென்றும், அதைக் கொண்டு நிச்சயம் புரோஜெக்டின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் சொன்னேன். என் நோக்கம் உண்மையில் எப்படியாவது புரோஜக்டை இறுதி சுவாசம் அளித்து தேற்ற வேண்டும் என்பது. மனித வள மேலாளர் மிகுந்த கரிசனத்தோடு என்னை கவனித்துக் கேட்டார். என் கருத்துக்களை பாராட்டி கைகுலுக்கினார். ஒரு மாதத்தில் என்னை வெளியேறக் கேட்டு அடுத்த நாள் மின்னஞ்சல் வந்தது. என் நண்பர் மட்டும் கூடுதலாய் மூன்று மாதங்கள் தங்கினார். நல்ல நண்பனாய் இருக்க முயன்றதாய் நான் தோற்றேன். என் நண்பரோ அடுத்த நாள் நடந்த அவரது நேர்முகத்தின் போது தன் நண்பனான என்னைப் பற்றி மேலாய் பேச வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனப்படவில்லை. மாறாக, நான் அவரைப் பற்றி உயர்வாக சொன்னதை வைத்து அவர் தன் பிம்பத்தை கூடுதலாய் ஊதிப் பெருக்கி மேதாவித்தனமாய் பேசி தப்பித்தார்.
பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன் எல்லாம் என் நண்பரைப் போன்று ஷோவில் தம் இடத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதிலே ஆவேசமாய் இருப்பவர்கள்; அதற்காய் அற்ப சண்டைகளில் ஈடுபட, தன்னிரக்கம் தொனிக்க பேச தயங்காதவர்கள்.
ஷோவில் இன்றைய அத்தியாயத்தில் (23 ஜூலை) செண்டிராயன் தனக்கு ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை என்றும், அதனால் தத்தெடுக்கப் போவதாயும் பேசியது பச்சை நாடகத்தனம் மற்றும் அயோக்கியத்தனம். இதனால் தன் மனைவியின் மனம் புண்பட்டிருக்கும் என்பதைப் பற்றி அவர் கவலை கொண்டாரா? எப்படியாவது தன்னிரக்கத்தை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிம்பத்தை பெருக்கவே அவர் விரும்புகிறார். (அவர் நிச்சயம் தத்தெடுப்பார் என எனக்குத் தோன்றவில்லை.) ரம்யா சொல்வது போல் அந்த வீட்டில் ரொம்ப அப்பாவியாய் நாடகம் போடும் வேஷதாரி செண்டிராயன் தான்.
நாம் வாழும் கார்ப்பரேட் உலகம் பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன்களின் உலகம்! இங்கு நாம் அனைவரிடம் நட்பார்ந்து, சமூகமாக்கல் செய்து இணக்கமாய் இருக்க வேண்டும் என ஆரம்பத்தில் கோருவார்கள்; நாமும் அப்படி இருந்தால் நம்மை அனைவரும் பாராட்டுவார்கள்; ஆனால் ஒருநாள் “உங்க வேலைத்திறன் போதாதுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்; ஒரு அணியில் பிறரை விட உங்களை மேதாவி என்றும், அதிக திறமையானவர் என்றும் நீங்கள் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அணியில் அதிகம் நேசிக்கப்படாதவராய் இருந்தாலும் நீங்கள் உங்களைப் பற்றி உருவாக்கும் போட்டி பிம்பத்தினாலே நீண்ட காலம் நீடித்து பதவி உயர்வும் பெறுவீர்கள். பிக்பாஸும் இதே பண்பாட்டைத் தான் பிரதிபலிக்கிறது.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யோ பாவம் நீங்கள். பிக்பாஸையெல்லாம் கர்ம சிரத்தையுடன் பார்த்து நுட்பமாக விமர்சனம் எழுத தலைப்பட்டீர்கள். நேரமும் ஆற்றலும் வீண்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிக்கவும் நான் அப்படி நினைக்கவில்லை. மனித நடவடிக்கைகள், மனித மனத்தின் நுணுக்கங்களை ஆகியவற்றை அறிய முயல்கிறேன் இங்கு. எதைப் பார்க்கிறோம் என்பதல்ல எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...