முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (3): தனியர்களின் அவசியம்


தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது.” (ஜெயமோகன்)
இந்த கூற்றை நுணுக்கமாய் நோக்கினால் சில சுவாரஸ்யமான விசயங்கள் புலப்படுகின்றன. ஒன்று நட்பார்ந்த கூட்டு செயல்பாடுகள் முக்கியம் என ஜெயமோகன் சொல்வது இந்த காலத்துக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது என்பது.

ஜெயமோகனின் இந்த வாக்கியத்தை படித்த போது எனக்கு உடனடியாய் நினைவு வந்தவை இரு காட்சிகள்: 1) சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளில்” ஜெ.ஜெ இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் பல இடங்களுக்கு அலையும் போதும் அவன் எப்படி யாருடனும் கலந்திடாமல் தனியனாகவே இருக்கிறான் என்பது.
2) தமிழக இடதுசாரி அமைப்புகளில் உள்ள படைப்பாளிகள் மற்றும் அறிவுஜீவிகள். குறிப்பாய் பொன்னீலனும் லஷ்மி மணிவண்ணனும். தனிப்பட்ட முறையில் எனக்கு அண்ணாச்சி மீது மிகுந்த மரியாதை உண்டு; அதே மரியாதை லஷ்மி மணிவண்ணன் மீது இல்லை. ஆனால், அதே நேரம், இருவரில் நவீன இலக்கிய படைப்பாளி யார் என்றால் அது லஷ்மி மணிவண்ணன் தான். (அண்ணாச்சி எழுதியது மார்க்ஸிய அமைப்பின் இயக்க சிறப்பை, லட்சியவாதத்தின் எழுச்சியை பேசிய இடைநிலை இலக்கியம்.) நான் நாளை ஒரு இலக்கிய கூட்டத்துக்கு உரையற்ற பேச்சாளர் வேண்டுமெனில் அண்ணாச்சியை அழைப்பேன். அவருக்கு பேச்சாற்றலும் தேர்ந்த இலக்கிய வாசிப்பும் உண்டு. அவர் என்ன பேசுவார் என ஓரளவு நாம் ஊகித்து தயார் செய்து கொள்ள முடியும். ஆனால் லஷ்மி மணிவண்ணன் எதிர்பாராமைகளால் செய்யப்பட்ட ஒரு அணுகுண்டு. நான் அவர் பேச்சை ரசிப்பேன் என்றால் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பவன் என்றால் அவரைக் கண்டு, அவர் ஏற்படுத்தக் கூடிய குழப்பங்களைக் கண்டு, அஞ்சுவேன்.
தமிழின் இரு முக்கிய இடதுசாரி இலக்கிய அமைப்புகள் எனில் அவை கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இரண்டிலும், நவீன கோட்பாடுகள் மற்றும் இலக்கியத்துக்கு அதிக வரவேற்பை அளித்தது கலை இலக்கிய பெருமன்றமே. அங்கே தனியர்களும் அதிகம். அங்கிருந்தே முக்கிய தீவிர படைப்பாளிகள் ஒப்பீட்டளவில் அதிகம் வந்திருக்கிறார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தளவு உள்மோதல்கள் அதிகம் இல்லை. ஏனெனில் அது ஒரு கராறான வலிமையான அமைப்பு. அடிபணிதலை, ஒருமையை, இயக்க ஒழுக்கத்தை கோரும் அமைப்பு. கலை இலக்கிய பெருமன்றம் அளவுக்கு அவர்கள் பிறழ்வுகளை அனுமதிப்பார்களா என்பது ஐயமே!
தனியர்கள் ஏன் முக்கியம் என்பதற்கு என்.டி ராஜ்குமார் ஒரு நல்ல உதாரணம். கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்து வந்த கவிஞர்களில் அவரே முதன்மையானவர். அவர் மன்றத்துள் இருந்தபடி அதிகம் செயல்பட்ட அளவு அதனுடன் அதிகம் முரண்பட்டு மோதக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
ஒரு அமைப்பின், நிறுவனத்தின் பொதுமையான போக்குகளுடன், நம்பிக்கைகளுடன், ஒழுங்குடன், சமூகமாக்கல் செயல்பாடுகளுடன் ஒத்துப் போக முடியாதவர்களாகவே கணிசமான படைப்பாளிகள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படி இருந்தால் தான் எழுத்தாளன் என நான் கோரவில்லை. ஆனால் தனியனாய் இருப்பதே படைப்பாளியின் இயல்பாக உள்ளது. நீங்கள் தமிழின் எந்த ஒரு சிறந்த படைப்பாளியையும் எடுத்துப் பாருங்கள். அவர்கள் தனித்து நின்று வாள் வீசுகிறவர்களாகவே இருக்கிறார்கள். படைப்பாளிகள் பேசும் போது அதிக சர்ச்சை தோன்றுவதும், அவர்கள் அதிகம் தனிமையில் உழல்வதும், அவர்கள் புறக்கணிப்பு உணர்வுடன் வாழ்வதும் இதனால் தான். இது அவர்களின் வாழ்வில் இருந்து பிரித்தெடுக்க இயலாத அம்சம்.
இதற்கு ஜெயமோகனே ஒரு நல்ல உதாரணம். அவர் ஆரம்பத்தில் தொழிற்சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார். ஆனால் இயக்கம் கோரும் எந்திர ஒழுங்குடன் உடன்பட முடியாமல் அதில் இருந்து விலகினார். அந்த கசப்பான கொந்தளிப்பான அனுபவம் கொண்டு அவர் எழுதியதே “பின் தொடரும் நிழலின் குரல்”. அதில் மைய பாத்திரம் அருணாச்சலம் ஒரு இடதுசாரி. அமைப்புடன் முரண்பட்டுப் பிரிந்த ஒரு ஆளுமையினால் (வீரபத்ர பிள்ளை) ஈர்க்கப்பட்டு அவர் அதைப் பற்றி படிக்கத் துவங்கி மெல்ல மெல்ல அமைப்புடன் தானும் முரண்படுகிறார். ஆனால் இந்த முரண்பாடும் அதனால் நிகழும் இயக்கத்துடனான விரிசலும் அவரது மனத்தை சிதைக்கின்றன. அவர் இந்த உளச்சிக்கலில் இருந்து எப்படி அன்பின் வழி மீள்கிறார் என்பதே நாவலின் சுருக்கம். அருணாச்சலம் வீரபத்ர பிள்ளை பற்றி நூலெழுத நினைக்கையில் இயக்கம் அதை எதிர்க்கிறது; அவரை இயக்கத்துக்கு எதிராய் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஆனால் இயக்கமா உண்மையா எனும் கேள்வி வரும் போது அவர் உண்மையின் பக்கம் சாய்கிறார். அதாவது “தனியன்” ஆகிறார்.
எனக்கு இப்போது எழும் கேள்வி ஏன் ஜெயமோகன் தான் நாவலில் சித்தரித்த ஒன்றிற்கு நேர் எதிராக இப்போது பேசுகிறார் என்பது; இயக்கமா புகாரினா எனும் போது அவர் புகாரினை இப்போதைக்கு ஓரமாய் தூக்கிப் போடுவோம் என்கிறாரா? “இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம்.” – இது தோழர்கள் அருணாச்சலத்திடம் சொல்வது போன்றே உள்ளது. (இலக்கிய சர்ச்சைகளும் பல்லாயிரம் பேர் ரஷ்யாவில் கொல்லப்பட்ட அரசியல் உண்மையைப் பற்றி துணிந்து பேசுவதும் ஒன்று அல்ல என்றாலும் கூட!)
ஒருவேளை ஜெயமோகனே இரண்டு மனிதர்களாக இருக்கலாம்: 1) எழுத்தாளனாய் தனியனாய் இருக்கும் ஜெயமோகன்; 2) தன் வாசக அமைப்புக்காய் இணக்கத்தை கோரும், தனியர்களை களைய கோரும் ஜெயமோகன்.
தனியர்கள் எனும் போது நாம் லஷ்மி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் என மட்டும் கருதக் கூடாது; சு.ராவும் அசோகமித்திரனும் கூட கூட தனியர்கள் தாம். அசோகமித்திரனை ஐந்து நிமிடம் பேசக் கேட்டால் அது நிச்சயம் சர்ச்சையில் போய் முடியும், அவர் மிக அமைதியாய் பவ்யமாய் பேசுவதாய் தொனித்தாலும். சு.ரா அடிப்படையில் மென் இடதுசாரி என்றாலும் வாழ்நாளெல்லாம் இடது அமைப்புகளுடன் ஓயாது போரிட்டபடி இருந்தார்; அதனால் அவர்களால் தொடர்ந்து பழிக்கப்பட்டார். அமைப்புகளில் சதா புன்னகைத்து கைகட்டி இருந்தபடி எழுதும் ஒரு முக்கிய படைப்பாளியை சொல்லுங்களேன். எனக்கு சத்தியமாய் தெரியவில்லை.
தமிழ் எழுத்தாளர்களில் மிக ஸ்நேகமான மனிதர்கள் (வண்ணதாசன், பாவண்ணன்) கூட அவர்கள் அளவில் தனியர்களே. மனுஷ்யபுத்திரன் திமுகவில் இருந்தாலும் தன் இலக்கிய செயல்பாடுகளை தனித்து வைத்திருக்கிறார். அரசியல் களத்தில் திமுகவினருடன் முரண்பட மாட்டார்; ஆனால் இலக்கிய களத்தில் முரண்பட்டபடியே தான் இருக்கிறார்.
ஒரு வாசகனின் இலக்கு என்பது நான் மேலே குறிப்பிட்ட ஆளுமைகளின் அளவிற்கு தம்மை உயர்த்துவதும், தன் சிந்தனை மற்றும் படைப்புத் திறன்களை மெருகேற்றுவதும். அதற்கு வாசகன் தனியனாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் தேனீக் கூட்டை உருவாக்கும் தேனியாய் இருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு இலக்கியத்தில் என்ன இடம்? ஒன்றுமில்லை. நீங்கள் தனித்து வேட்டையாடும் புலி என்றால் உங்களுக்கு ஓரிடம் உண்டு. 
நீங்கள் வெறும் அடிமைத் தேனீக்களா எனும் கேள்வியை நான் இந்த வாசகர்களை நோக்கி எழுப்ப விரும்புகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...