முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (6)



(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for தேவர் மகன்

11. "அன்பு, விசுவாசம் ஆகியவைக்கு இன்னொரு கூர் முனை உள்ளது. அதுதான் துரோகம்" என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் துரோகத்தின் காரணமாக அன்றாடம் நிறைய குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சமூகம், துரோகத்தை மனித இயல்புகளில் ஒன்றாகப் புரிந்து கொள்ள தவறிவிட்டதா?


ஆர். அபிலாஷ்: அன்பு, விசுவாசம் ஆகியவற்றின் மறுபக்கமே துரோகம் என்பது ஒரு தத்துவார்த்தமான அவதானிப்பு மட்டுமே. நாம் மிகவும் நேசிக்கிறவர்களின் பால் ஏதோ கண்காணா வெறுப்பையும் வளர்க்கிறோம். இதற்கு விளக்கமே இல்லை. மனித மனம் இது போன்ற புதிர்களால் நிரம்பியது. நமக்கு பிரியமான ஒருவர் துரோகம் இழைக்கும் போது நமக்கு அவர் பால் கொலைவெறி தோன்றுகிறது. நமது அளப்பரிய அன்பு ஒரு நொடியில் அளப்பரிய குரோதமாய் மாற்றமுறுகிறது.
 உண்மையான அன்பு எப்படி குருதி நாடும் பசியாக மாற முடியும்? எப்போதும் நம் வரலாற்றில், நம் அன்றாட சமூக நிகழ்வுகளில் இதுவே நடக்கிறது. நடப்புலகில் ஒருவர் நமக்கு துரோகம் இழைக்கும் போது அது மனித மனத்தின் இருண்மை புதிர்களில் ஒன்று என சுலபத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. சில எளிய சந்தர்பங்களில் நாம் அப்படி எண்ணி மன்னித்து விடலாம். ஆனால் பெரும்பாலும் நானோ நீங்களோ அங்கு இருந்தால் துரோகியின் கழுத்தை நெரித்து கொல்லவே தோன்றும். ஒரு எழுத்தாளனாய் என்னால் விலகி நின்று இதை அவதானிக்க முடியும். ஆனால் நடப்பில் ஒரு சமூகம் இப்பிரச்சனையில் விலகி நின்று நிதானமாய் நோக்க முடியாது.

12. தேவர்மகன், ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் திரைக்கதை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் மூலமாக நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுத்துவிட்டு, தவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆர். அபிலாஷ்: ஒரு படைப்புதவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைக்கும்எனும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. சினிமா இரு தரப்புகள் பங்கேற்கும் ஒரு உரையாடல், அவ்வளவு தான். அது ஒரு குத்துச்சண்டை போட்டி; அது ஒரு ஜோடி நடனம். சண்டையில் மூக்கு உடைந்தாலோ நடனத்தின் இடையே உதடுகள் கவ்வப்பட்டாலோ ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதைப் பற்றி துவக்க பதில் ஒன்றில் விரிவாக பேசி விட்டதால் இங்கே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
13. "எம்.ஜி.ஆர்-சிவாஜி" , "ரஜினி-கமல்" வரிசையில் தொண்ணூறுகளில் கோலோச்சத் தொடங்கிய அஜித், விஜய் ஆகியோர் கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்களே?
ஆர். அபிலாஷ்: இது ஒரு பிரச்சனை என நான் பார்க்கவில்லை. வணிக சினிமாவுக்கு இந்த நட்சத்திர வரிசை அவசியமே. சினிமாவை விற்பது இவர்களால் சுலபமாகிறது.
சினிமா என்பது பல்லாயிரம் பேர் பங்கேற்கும் ஒரு பெரிய துறை. தியாகராஜன் குமாரராஜா போன்ற ஒருவர் எப்போதாவது தான் படம் எடுக்க முடியும். அதை நாம் கண்டு விவாதித்து பாராட்டலாம். நலன் குமாரசாமி போன்ற ஒருவர் பரீட்சார்த்தமான படங்களைத் தந்து அதை வெற்றிகரமாய் ஓட வைக்கவும் முடியலாம். ஆனால் தொடர்ந்து இந்த பாணி மாற்றுப் படங்களை தொழிற்சாலை பண்டங்களை போல் உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்க இயலாது.
நமது சினிமா துறை ஒரு தொழிற்சாலை. அதற்கு எம்.ஜி.ஆர் சிவாஜியில் இருந்து விஜய் அஜித் வரை அவசியம் தேவை. பெரிய ரிஸ்க் இல்லாத, மக்களுக்கு எளிய ஆறுதல் அளிக்கும் படங்களை உற்பத்தி பண்ணிக் கொண்டிருந்தால் மட்டுமே ஆயிரமாயிரம் குடும்பங்களில் அடுப்பெரியும்.

நமக்கு உண்மையில் அவசியம் நட்சத்திரங்கள் அற்ற சினிமா அல்ல. இந்த பிரம்மாண்ட சினிமாக்களுடன் ஒரு மாற்று சினிமா இயக்கமும் நடைபெறுவதே. வழக்கமான திரையரங்குகளை நம்பி மாற்று சினிமா ஜீவிக்க முடியாது. அதை குறைந்த செலவில் எடுத்து வெளியிட்டு விற்பதற்கு இணையம், டிவி சேனல் போன்ற புதிய பாதைகள் திறந்து வருகின்றன. எண்பதுகளில் மலையாள சினிமாவின் பொற்காலத்தின் போது மம்முட்டி, மோகன் லால் போன்ற வணிக நாயகர்கள் மாற்றுப் படங்களிலும் ஊக்கத்துடன் நடித்தார்கள். இது மாற்று சினிமா இயக்கத்தை பாதுகாக்கவும் வெற்றிபெறச் செய்யவும் உதவியது. இது தமிழிலும் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...