Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாசக சாலை பெங்களூர் வரவு: முதல் கூட்டம்


Image may contain: 7 people, including Abilash Chandran, Kirthika Tharan and Tk Kalapria, people smiling, text
வாசக சாலையின் பெங்களூர் நுழைவு நல்ல விதமாய் சுவாரஸ்யமாய் அமைந்தது. இன்று மாலை கூட்டம் உல்சூரில் பெங்களூரு தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது.
வாசக சாலை அமைப்பு தோன்றின பின் தான் வாசக பேச்சாளர்கள் என ஒரு தனி உரையாடல்களாரர்களே தமிழில் தோன்றினார்கள். அதுவரை வாசகர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். கடிதம் எழுதுவார்கள், ஆனால் எப்போதும் நிழலில் நிழலாக மறைந்திருப்பார்கள். வாசக சாலை நம் சிறுபத்திரிகை உலகை, அதை ஒட்டி உருவாகி வரும் நடுநிலை வாசகப் பரப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளது. பெரிய அரசியல் உரசல், பிம்ப பெருக்கம், வெறுப்பரசியல் இல்லாத நட்பார்ந்த கூட்டங்கள் அவர்களுடையது.

 இன்னொரு விசயம் நேர்த்தி – தமிழ் இலக்கிய உலகில் எதுவும் தாமதமாய் குளறுபடியாய் திட்டத்திற்கு மாறாய் தான் நடக்கும். நூலைப் பற்றி பேச வரும் விமர்சகரே “இரவானால் என் மனைவிக்கு சிலர் போன் செய்து தொந்தரவு செய்யுறாங்க. இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.” என தனிப்பட்ட ஆதங்கங்களை மட்டுமே பதிவு செய்த சிறுபத்திரிகை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வாசக சாலை கூட்டங்களில் பேச்சாளர் மட்டுமல்ல அத்தனை பங்கேற்பாளர்களும் பிரதியை படித்து விட்டு தயாராக வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் பாவண்ணனின் கதை ஒன்று அவ்வளவு ஆர்வமாய் வாசகர்களால் விவாதிக்கப்பட்டது. பாவண்ணனுக்கு இது எப்படியான திருப்தியை கொடுத்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. இப்படியான ஒழுக்கத்தை நான் விஷ்ணுபுரம் வட்ட கூட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். பாராட்டத்தக்க அம்சம் இது.
இன்றைய கூட்டத்தில் பேசிய இரா வினோத், பா. கண்மணி, கிர்த்திகா தரண் மற்றும் கருத்து தெரிவித்த வாசகர்கள் ஆகியோரும் கவர்ந்தார்கள். குறிப்பாக ஈழத்து இளம் பெண் ஒருவர் ஒடுக்குமுறை பற்றி பேசிய போது என் கண்கள் பனித்துப் போயின. ஒரு ராணுவ சிப்பாயின் வாழ்வில் நேரும் ஒடுக்குமுறை துயரங்களை பாவண்ணன் எழுத அது ஒரு ஈழ வாசகருக்கு தன் வாழ்க்கை அனுபவங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இலக்கியத்தின் ஆற்றல் தான் என்ன என வியந்து போனேன்.
இன்னொரு வாசகர் பேசுகையில் இந்த கதையின் சிப்பாய் தன் உயரதிகாரியுடன் ஏற்படும் கசப்பான அனுவத்தால் பதவி இறக்கம் செய்யப்படுவதை குறிப்பிடுகையில் ஒரு படத்தில் வடிவேலு தான் செய்யும் தவறுகளால் பதவி இறங்கி உயரதிகாரி வீட்டு தரையை துடைக்கும் அளவுக்கு அவதிப்படும் காட்சியை ஒப்பிட்டார். அதற்கு பார்வையாளர்கள் சிரித்து ஆமோதிக்கவும் செய்தனர். ஒருவிதத்தில் இது பொருத்தமற்ற ஒப்பீடே. ஆனால் ஒரு பெரிய தவறு ஒன்றும் அல்ல. நானும் கூடத் தான் நகைத்தேன். இன்றைய காலத்தில் இயல்பு இது. நாம் ஒரு தீவிர உணர்வை சந்தித்து மனம் கலங்குகிறோம்; ஆனால் மறுநொடி ஒரு ஜாலியான பகடிக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிறோம். மீம்களை உருவாக்கி பகிர்கிறோம். நம் காலத்தின் துயரங்களை, அழுத்தங்களை வேறெப்படியும் நம்மால் எதிர்கொள்ள தெரியவில்லை. இதைப் பார்க்கையில் தொண்ணூறுகளில் நான் கண்ட இலக்கிய கூட்டங்கள் எப்படி இரங்கல் கூட்டம் போல இறுக்கமாய் இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. நாம் இன்று வேறொரு இடத்துக்கு வந்து விட்டோம்.
நான் பேசுகையில் மூன்று கதைகளையும் தனித்தனியாய் அலசினேன். பாவண்ணனின் கதையின் தலைப்பான “கண்காணிப்பு கோபுரம்” என்பது ஒரு முக்கியமான திறவுச்சொல் என்றேன். அதைக் கொண்டு அதிகாரமும் கண்காணிப்பும் கைகோர்க்கும் ஒரு தளத்தை அக்கதையில் எப்படி திறப்பது என விளக்கினேன்.
 ஆதவனின் “புகைச்சல்கள்” கதையை அவரது “காகித மலர்கள்” நாவலுடன் ஒப்பிட்டு பேசினேன். எழுபது, எண்பதுகளின் ஒரு தலைமுறை எப்படி லட்சியங்கள் ஏதுமற்று, வாழ்வின் அர்த்தமின்மையை எதிர்கொள்ள முடியாது தத்தளிப்பதை எப்படி ஆதவன் ஆண் பெண் உறவுகளின் பின்னணியில் எப்படி பேசுகிறார் என்பதை சுட்டினேன்.
 தமிழவனின் “புத்திஜீவி கேயின் வாழ்வும் பணியும்” கதையை சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளுடன்” மேலோட்டமாய் ஒப்பிட்டு விட்டு அக்கதை பேசும் புத்திஜீவியின் சமூகப் பிறழ்வுகள், மிகைகள் எப்படி தமிழில் ஆர்வமூட்டும் ஒரு கதையாடலாய் புழங்கி வருகின்றன என பேசினேன். கலக எழுத்தாளன், விசித்திர குணாதசியம் கொண்ட மேதை ஆகிய நம்பிக்கைகள் எதார்த்தத்தில் இருந்து தோன்றுகிறதா அல்லது அவை நாமாக கற்பிதம் பண்ணிக் கொள்ளும் விசயங்களா என வினவினேன். நமது அறிவுஜீவிகள், படைப்பாளிகளை ஒத்த சமூக கலகங்கள், விநோத செயல்களை நிகழ்த்தும் பொதுமக்களையும் அறிவேன். ஆனால் அறிவுஜீவி அளவுக்கு அவர்கள் தமது விநோதங்கள், பிசிறுகளை நாடகீயப்படுத்துவதில்லை; அவர்கள் மீது விழும் வெளிச்சம் குறைவு என்பதாலும் நாம் அதிகம் அதை கவனிப்பதில்லை.
உதாரணமாய், பாரில் வாஷ் பேஸின் மீது ஏறி நின்று அதில் ஒன்றுக்கு அடிப்பவர்களை கண்டிருக்கிறேன். இதை ஒரு அறிவுஜீவி செய்தால் அது கலகம் ஆகிறது; அது தொடர்ந்து கதையாடலாக உருப்பெற்று கல்வெட்டு அந்தஸ்தை பெற்று விடும். எங்கே போனாலும் யாராவது அதை வம்பாக பேசி ரசிப்பார்கள். பத்து வருடம் கழித்து அது ஒரு கட்டுரையில் இடம்பெறும் – ஒருவர் அதை வைத்து ஒரு கதை கூட எழுதலாம். இப்படி அறிவுஜீவி பிம்பங்கள் செயற்கையாய் தோன்றுவதை பகடி செய்யும் கதையே “புத்திஜீவி கேவின்…” எனத் தோன்றுகிறது. அதாவது, கலகக்காரன் எனும் புனைவில் இருந்து ஒரு சமூக பிம்பம் கட்டமைக்கப்பட அதில் ஒருவர் பொருந்திப் போகிறார்; அதைப் பற்றி பேசுவதில் நாம் அனைவரும் சுவாரஸ்யம் கொள்கிறோம்; பின்னர் அது ஒரு எழுத்தாளனின் பீடமாக உருப்பெற உதவுகிறது.
கூட்டம் முடிந்த பிறகு பாரதி மணியிடம் ஆதவன் பற்றியும் அருணிடம் “காலாவின்” படப்பிடிப்பில் ரஜினியின் நடிப்பை பழகும் பாணியைப் பற்றியும் உரையாடியது மிகவும் நிறைவளித்தது. ஊருக்கு போய் வந்த ஒரு உணர்வு!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...