முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசக சாலை பெங்களூர் வரவு: முதல் கூட்டம்


Image may contain: 7 people, including Abilash Chandran, Kirthika Tharan and Tk Kalapria, people smiling, text
வாசக சாலையின் பெங்களூர் நுழைவு நல்ல விதமாய் சுவாரஸ்யமாய் அமைந்தது. இன்று மாலை கூட்டம் உல்சூரில் பெங்களூரு தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது.
வாசக சாலை அமைப்பு தோன்றின பின் தான் வாசக பேச்சாளர்கள் என ஒரு தனி உரையாடல்களாரர்களே தமிழில் தோன்றினார்கள். அதுவரை வாசகர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். கடிதம் எழுதுவார்கள், ஆனால் எப்போதும் நிழலில் நிழலாக மறைந்திருப்பார்கள். வாசக சாலை நம் சிறுபத்திரிகை உலகை, அதை ஒட்டி உருவாகி வரும் நடுநிலை வாசகப் பரப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளது. பெரிய அரசியல் உரசல், பிம்ப பெருக்கம், வெறுப்பரசியல் இல்லாத நட்பார்ந்த கூட்டங்கள் அவர்களுடையது.

 இன்னொரு விசயம் நேர்த்தி – தமிழ் இலக்கிய உலகில் எதுவும் தாமதமாய் குளறுபடியாய் திட்டத்திற்கு மாறாய் தான் நடக்கும். நூலைப் பற்றி பேச வரும் விமர்சகரே “இரவானால் என் மனைவிக்கு சிலர் போன் செய்து தொந்தரவு செய்யுறாங்க. இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.” என தனிப்பட்ட ஆதங்கங்களை மட்டுமே பதிவு செய்த சிறுபத்திரிகை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வாசக சாலை கூட்டங்களில் பேச்சாளர் மட்டுமல்ல அத்தனை பங்கேற்பாளர்களும் பிரதியை படித்து விட்டு தயாராக வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் பாவண்ணனின் கதை ஒன்று அவ்வளவு ஆர்வமாய் வாசகர்களால் விவாதிக்கப்பட்டது. பாவண்ணனுக்கு இது எப்படியான திருப்தியை கொடுத்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. இப்படியான ஒழுக்கத்தை நான் விஷ்ணுபுரம் வட்ட கூட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். பாராட்டத்தக்க அம்சம் இது.
இன்றைய கூட்டத்தில் பேசிய இரா வினோத், பா. கண்மணி, கிர்த்திகா தரண் மற்றும் கருத்து தெரிவித்த வாசகர்கள் ஆகியோரும் கவர்ந்தார்கள். குறிப்பாக ஈழத்து இளம் பெண் ஒருவர் ஒடுக்குமுறை பற்றி பேசிய போது என் கண்கள் பனித்துப் போயின. ஒரு ராணுவ சிப்பாயின் வாழ்வில் நேரும் ஒடுக்குமுறை துயரங்களை பாவண்ணன் எழுத அது ஒரு ஈழ வாசகருக்கு தன் வாழ்க்கை அனுபவங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இலக்கியத்தின் ஆற்றல் தான் என்ன என வியந்து போனேன்.
இன்னொரு வாசகர் பேசுகையில் இந்த கதையின் சிப்பாய் தன் உயரதிகாரியுடன் ஏற்படும் கசப்பான அனுவத்தால் பதவி இறக்கம் செய்யப்படுவதை குறிப்பிடுகையில் ஒரு படத்தில் வடிவேலு தான் செய்யும் தவறுகளால் பதவி இறங்கி உயரதிகாரி வீட்டு தரையை துடைக்கும் அளவுக்கு அவதிப்படும் காட்சியை ஒப்பிட்டார். அதற்கு பார்வையாளர்கள் சிரித்து ஆமோதிக்கவும் செய்தனர். ஒருவிதத்தில் இது பொருத்தமற்ற ஒப்பீடே. ஆனால் ஒரு பெரிய தவறு ஒன்றும் அல்ல. நானும் கூடத் தான் நகைத்தேன். இன்றைய காலத்தில் இயல்பு இது. நாம் ஒரு தீவிர உணர்வை சந்தித்து மனம் கலங்குகிறோம்; ஆனால் மறுநொடி ஒரு ஜாலியான பகடிக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிறோம். மீம்களை உருவாக்கி பகிர்கிறோம். நம் காலத்தின் துயரங்களை, அழுத்தங்களை வேறெப்படியும் நம்மால் எதிர்கொள்ள தெரியவில்லை. இதைப் பார்க்கையில் தொண்ணூறுகளில் நான் கண்ட இலக்கிய கூட்டங்கள் எப்படி இரங்கல் கூட்டம் போல இறுக்கமாய் இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. நாம் இன்று வேறொரு இடத்துக்கு வந்து விட்டோம்.
நான் பேசுகையில் மூன்று கதைகளையும் தனித்தனியாய் அலசினேன். பாவண்ணனின் கதையின் தலைப்பான “கண்காணிப்பு கோபுரம்” என்பது ஒரு முக்கியமான திறவுச்சொல் என்றேன். அதைக் கொண்டு அதிகாரமும் கண்காணிப்பும் கைகோர்க்கும் ஒரு தளத்தை அக்கதையில் எப்படி திறப்பது என விளக்கினேன்.
 ஆதவனின் “புகைச்சல்கள்” கதையை அவரது “காகித மலர்கள்” நாவலுடன் ஒப்பிட்டு பேசினேன். எழுபது, எண்பதுகளின் ஒரு தலைமுறை எப்படி லட்சியங்கள் ஏதுமற்று, வாழ்வின் அர்த்தமின்மையை எதிர்கொள்ள முடியாது தத்தளிப்பதை எப்படி ஆதவன் ஆண் பெண் உறவுகளின் பின்னணியில் எப்படி பேசுகிறார் என்பதை சுட்டினேன்.
 தமிழவனின் “புத்திஜீவி கேயின் வாழ்வும் பணியும்” கதையை சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளுடன்” மேலோட்டமாய் ஒப்பிட்டு விட்டு அக்கதை பேசும் புத்திஜீவியின் சமூகப் பிறழ்வுகள், மிகைகள் எப்படி தமிழில் ஆர்வமூட்டும் ஒரு கதையாடலாய் புழங்கி வருகின்றன என பேசினேன். கலக எழுத்தாளன், விசித்திர குணாதசியம் கொண்ட மேதை ஆகிய நம்பிக்கைகள் எதார்த்தத்தில் இருந்து தோன்றுகிறதா அல்லது அவை நாமாக கற்பிதம் பண்ணிக் கொள்ளும் விசயங்களா என வினவினேன். நமது அறிவுஜீவிகள், படைப்பாளிகளை ஒத்த சமூக கலகங்கள், விநோத செயல்களை நிகழ்த்தும் பொதுமக்களையும் அறிவேன். ஆனால் அறிவுஜீவி அளவுக்கு அவர்கள் தமது விநோதங்கள், பிசிறுகளை நாடகீயப்படுத்துவதில்லை; அவர்கள் மீது விழும் வெளிச்சம் குறைவு என்பதாலும் நாம் அதிகம் அதை கவனிப்பதில்லை.
உதாரணமாய், பாரில் வாஷ் பேஸின் மீது ஏறி நின்று அதில் ஒன்றுக்கு அடிப்பவர்களை கண்டிருக்கிறேன். இதை ஒரு அறிவுஜீவி செய்தால் அது கலகம் ஆகிறது; அது தொடர்ந்து கதையாடலாக உருப்பெற்று கல்வெட்டு அந்தஸ்தை பெற்று விடும். எங்கே போனாலும் யாராவது அதை வம்பாக பேசி ரசிப்பார்கள். பத்து வருடம் கழித்து அது ஒரு கட்டுரையில் இடம்பெறும் – ஒருவர் அதை வைத்து ஒரு கதை கூட எழுதலாம். இப்படி அறிவுஜீவி பிம்பங்கள் செயற்கையாய் தோன்றுவதை பகடி செய்யும் கதையே “புத்திஜீவி கேவின்…” எனத் தோன்றுகிறது. அதாவது, கலகக்காரன் எனும் புனைவில் இருந்து ஒரு சமூக பிம்பம் கட்டமைக்கப்பட அதில் ஒருவர் பொருந்திப் போகிறார்; அதைப் பற்றி பேசுவதில் நாம் அனைவரும் சுவாரஸ்யம் கொள்கிறோம்; பின்னர் அது ஒரு எழுத்தாளனின் பீடமாக உருப்பெற உதவுகிறது.
கூட்டம் முடிந்த பிறகு பாரதி மணியிடம் ஆதவன் பற்றியும் அருணிடம் “காலாவின்” படப்பிடிப்பில் ரஜினியின் நடிப்பை பழகும் பாணியைப் பற்றியும் உரையாடியது மிகவும் நிறைவளித்தது. ஊருக்கு போய் வந்த ஒரு உணர்வு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...