Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாசக சாலை பெங்களூர் வரவு: முதல் கூட்டம்


Image may contain: 7 people, including Abilash Chandran, Kirthika Tharan and Tk Kalapria, people smiling, text
வாசக சாலையின் பெங்களூர் நுழைவு நல்ல விதமாய் சுவாரஸ்யமாய் அமைந்தது. இன்று மாலை கூட்டம் உல்சூரில் பெங்களூரு தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது.
வாசக சாலை அமைப்பு தோன்றின பின் தான் வாசக பேச்சாளர்கள் என ஒரு தனி உரையாடல்களாரர்களே தமிழில் தோன்றினார்கள். அதுவரை வாசகர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். கடிதம் எழுதுவார்கள், ஆனால் எப்போதும் நிழலில் நிழலாக மறைந்திருப்பார்கள். வாசக சாலை நம் சிறுபத்திரிகை உலகை, அதை ஒட்டி உருவாகி வரும் நடுநிலை வாசகப் பரப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளது. பெரிய அரசியல் உரசல், பிம்ப பெருக்கம், வெறுப்பரசியல் இல்லாத நட்பார்ந்த கூட்டங்கள் அவர்களுடையது.

 இன்னொரு விசயம் நேர்த்தி – தமிழ் இலக்கிய உலகில் எதுவும் தாமதமாய் குளறுபடியாய் திட்டத்திற்கு மாறாய் தான் நடக்கும். நூலைப் பற்றி பேச வரும் விமர்சகரே “இரவானால் என் மனைவிக்கு சிலர் போன் செய்து தொந்தரவு செய்யுறாங்க. இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.” என தனிப்பட்ட ஆதங்கங்களை மட்டுமே பதிவு செய்த சிறுபத்திரிகை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வாசக சாலை கூட்டங்களில் பேச்சாளர் மட்டுமல்ல அத்தனை பங்கேற்பாளர்களும் பிரதியை படித்து விட்டு தயாராக வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் பாவண்ணனின் கதை ஒன்று அவ்வளவு ஆர்வமாய் வாசகர்களால் விவாதிக்கப்பட்டது. பாவண்ணனுக்கு இது எப்படியான திருப்தியை கொடுத்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. இப்படியான ஒழுக்கத்தை நான் விஷ்ணுபுரம் வட்ட கூட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். பாராட்டத்தக்க அம்சம் இது.
இன்றைய கூட்டத்தில் பேசிய இரா வினோத், பா. கண்மணி, கிர்த்திகா தரண் மற்றும் கருத்து தெரிவித்த வாசகர்கள் ஆகியோரும் கவர்ந்தார்கள். குறிப்பாக ஈழத்து இளம் பெண் ஒருவர் ஒடுக்குமுறை பற்றி பேசிய போது என் கண்கள் பனித்துப் போயின. ஒரு ராணுவ சிப்பாயின் வாழ்வில் நேரும் ஒடுக்குமுறை துயரங்களை பாவண்ணன் எழுத அது ஒரு ஈழ வாசகருக்கு தன் வாழ்க்கை அனுபவங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இலக்கியத்தின் ஆற்றல் தான் என்ன என வியந்து போனேன்.
இன்னொரு வாசகர் பேசுகையில் இந்த கதையின் சிப்பாய் தன் உயரதிகாரியுடன் ஏற்படும் கசப்பான அனுவத்தால் பதவி இறக்கம் செய்யப்படுவதை குறிப்பிடுகையில் ஒரு படத்தில் வடிவேலு தான் செய்யும் தவறுகளால் பதவி இறங்கி உயரதிகாரி வீட்டு தரையை துடைக்கும் அளவுக்கு அவதிப்படும் காட்சியை ஒப்பிட்டார். அதற்கு பார்வையாளர்கள் சிரித்து ஆமோதிக்கவும் செய்தனர். ஒருவிதத்தில் இது பொருத்தமற்ற ஒப்பீடே. ஆனால் ஒரு பெரிய தவறு ஒன்றும் அல்ல. நானும் கூடத் தான் நகைத்தேன். இன்றைய காலத்தில் இயல்பு இது. நாம் ஒரு தீவிர உணர்வை சந்தித்து மனம் கலங்குகிறோம்; ஆனால் மறுநொடி ஒரு ஜாலியான பகடிக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிறோம். மீம்களை உருவாக்கி பகிர்கிறோம். நம் காலத்தின் துயரங்களை, அழுத்தங்களை வேறெப்படியும் நம்மால் எதிர்கொள்ள தெரியவில்லை. இதைப் பார்க்கையில் தொண்ணூறுகளில் நான் கண்ட இலக்கிய கூட்டங்கள் எப்படி இரங்கல் கூட்டம் போல இறுக்கமாய் இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. நாம் இன்று வேறொரு இடத்துக்கு வந்து விட்டோம்.
நான் பேசுகையில் மூன்று கதைகளையும் தனித்தனியாய் அலசினேன். பாவண்ணனின் கதையின் தலைப்பான “கண்காணிப்பு கோபுரம்” என்பது ஒரு முக்கியமான திறவுச்சொல் என்றேன். அதைக் கொண்டு அதிகாரமும் கண்காணிப்பும் கைகோர்க்கும் ஒரு தளத்தை அக்கதையில் எப்படி திறப்பது என விளக்கினேன்.
 ஆதவனின் “புகைச்சல்கள்” கதையை அவரது “காகித மலர்கள்” நாவலுடன் ஒப்பிட்டு பேசினேன். எழுபது, எண்பதுகளின் ஒரு தலைமுறை எப்படி லட்சியங்கள் ஏதுமற்று, வாழ்வின் அர்த்தமின்மையை எதிர்கொள்ள முடியாது தத்தளிப்பதை எப்படி ஆதவன் ஆண் பெண் உறவுகளின் பின்னணியில் எப்படி பேசுகிறார் என்பதை சுட்டினேன்.
 தமிழவனின் “புத்திஜீவி கேயின் வாழ்வும் பணியும்” கதையை சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளுடன்” மேலோட்டமாய் ஒப்பிட்டு விட்டு அக்கதை பேசும் புத்திஜீவியின் சமூகப் பிறழ்வுகள், மிகைகள் எப்படி தமிழில் ஆர்வமூட்டும் ஒரு கதையாடலாய் புழங்கி வருகின்றன என பேசினேன். கலக எழுத்தாளன், விசித்திர குணாதசியம் கொண்ட மேதை ஆகிய நம்பிக்கைகள் எதார்த்தத்தில் இருந்து தோன்றுகிறதா அல்லது அவை நாமாக கற்பிதம் பண்ணிக் கொள்ளும் விசயங்களா என வினவினேன். நமது அறிவுஜீவிகள், படைப்பாளிகளை ஒத்த சமூக கலகங்கள், விநோத செயல்களை நிகழ்த்தும் பொதுமக்களையும் அறிவேன். ஆனால் அறிவுஜீவி அளவுக்கு அவர்கள் தமது விநோதங்கள், பிசிறுகளை நாடகீயப்படுத்துவதில்லை; அவர்கள் மீது விழும் வெளிச்சம் குறைவு என்பதாலும் நாம் அதிகம் அதை கவனிப்பதில்லை.
உதாரணமாய், பாரில் வாஷ் பேஸின் மீது ஏறி நின்று அதில் ஒன்றுக்கு அடிப்பவர்களை கண்டிருக்கிறேன். இதை ஒரு அறிவுஜீவி செய்தால் அது கலகம் ஆகிறது; அது தொடர்ந்து கதையாடலாக உருப்பெற்று கல்வெட்டு அந்தஸ்தை பெற்று விடும். எங்கே போனாலும் யாராவது அதை வம்பாக பேசி ரசிப்பார்கள். பத்து வருடம் கழித்து அது ஒரு கட்டுரையில் இடம்பெறும் – ஒருவர் அதை வைத்து ஒரு கதை கூட எழுதலாம். இப்படி அறிவுஜீவி பிம்பங்கள் செயற்கையாய் தோன்றுவதை பகடி செய்யும் கதையே “புத்திஜீவி கேவின்…” எனத் தோன்றுகிறது. அதாவது, கலகக்காரன் எனும் புனைவில் இருந்து ஒரு சமூக பிம்பம் கட்டமைக்கப்பட அதில் ஒருவர் பொருந்திப் போகிறார்; அதைப் பற்றி பேசுவதில் நாம் அனைவரும் சுவாரஸ்யம் கொள்கிறோம்; பின்னர் அது ஒரு எழுத்தாளனின் பீடமாக உருப்பெற உதவுகிறது.
கூட்டம் முடிந்த பிறகு பாரதி மணியிடம் ஆதவன் பற்றியும் அருணிடம் “காலாவின்” படப்பிடிப்பில் ரஜினியின் நடிப்பை பழகும் பாணியைப் பற்றியும் உரையாடியது மிகவும் நிறைவளித்தது. ஊருக்கு போய் வந்த ஒரு உணர்வு!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...