Skip to main content

எல்லா ஆண்களும் தகாத உறவில் ஈடுபடுகிறவர்களா?


Image result for சில நேரங்களில் சில மனிதர்கள் + சிறுகதை

பெருந்தேவியின் பாலியியல் துன்புறுத்தல்...” என தலைப்பிட்ட, மின்னம்பலத்தில் வெளியான, இந்த கட்டுரை ஒரே மட்டையடி தடாலடியாக உள்ளது.
https://minnambalam.com/k/2018/10/23/20?fbclid=IwAR3PC_b5uM56vF2hCRz9Z1U-2SuKtp2rSovzjnpDt7OUxj1dL1NVw7qheVg

உதாரணமாக அவர் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை விவாதிக்கும் இந்த இடத்தைப் பாருங்கள்:
//"எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா, ரொம்ப யோக்கியன்தான். …



இந்த மாதிரி பஸ்ஸில வரும்போது அவனையும் பஸ்ஸில பார்த்திருக்கேன். - இதோ என் மேல சாயறானே அவன் எவ்வளவோ யோக்கியன் - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ?”

ஊறுபடத்தக்க நிலையில் இருக்கும் பெண்ணின் தன்னிலை இந்த வரிகளில் காட்டப்படுகிறது. ஊறு உண்டாக்கக்கூடியவர்களில் சொந்தம் / அந்நியம், வீடு / வெளி என்ற பேதமேயில்லை.//

ஒரு அப்பா தன் மகளிடமும் அண்ணன் தன் தங்கையிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடலாம். ஏனென்றால் அதுவே ஆணின் அடிப்படை இயல்பாம்.
இதை மேலும் நீட்டிக்கொண்டு போனால் எல்லாம் தகப்பன்களும் அண்ணன்களும் potential abusers என ஆகிறது. சரி உண்மை எனில் இதற்கு ஒரே தீர்வு தான்: ஹிட்லர் பாணியில் நம்மூரின் எல்லா ஆண்களையும் கேஸ் சேம்பரில் வைத்து கொன்று விடலாம். ஒரு வருடத்துக்கு ஒரு கோடி ஆண்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் விரைவில் ஆணினத்தையே அழித்து விடலாம். அதோடு பெண்களும் சுதந்திரம் அடைந்து விடுவார்கள்.
நம் பெண்ணியவாதிகளின் எதிர்மறை மனோபாவத்தை, tunneled visionஐப் பார்த்தால் எனக்கு இதைத் தவிர வேறொன்றுமே தோன்றவில்லை.
ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலில் தன்னை பலாத்காரம் செய்தவனை நோக்கி அப்பெண் ஈர்க்கப்படுவதைப் பற்றி, இதை ஒத்த மற்றொரு கதையான “அக்னி பிரவேசத்தில்” அவள் தாய் அந்த குற்ற நிகழ்வைப் பற்றி விசாரிக்கும் போது அவள் பபிள் கம் மெல்லுவதைப் பற்றி ஏன் பெருந்தேவி எழுதவில்லை?

பெண் தன்னிலை என்பது ஒற்றை பட்டையானது தானா? பெண் என்பவள் தொடர்ந்து உருமாறும் தன்னிலை இல்லையா? ஆண்-பெண் எனும் பால்நிலைகளை உடலாக மட்டுமே காண வேண்டுமா?
இக்கேள்விகள் இன்றைய பின்நவீன சுழலில் முக்கியமானவை. தன் பிரச்சார வசதிக்காக பெருந்தேவி காலாவதியான ஆரம்ப கால பெண்ணியத்தின் ஆண்-பெண் இருமை கதையாடலை இன்று பயன்படுத்தலாமா? பெண்ணாய் பிறந்தவள் ஒடுக்கப்படுபவள், ஆணாய் பிறந்தவன் என்றால் அவன் நிச்சயம் அப்பெண்ணை ஒடுக்குவான் என யோசிப்பது ஒரு தட்டையான பிற்போக்கு சிந்தனை அல்லவா?
தன் metoo பிரச்சார தேவைக்காக பெருந்தேவி ஆரம்பகால பெண்ணியவாதிகளின் பாணியை கையில் எடுப்பது வருந்தத்தக்கது. ஆண்-பெண் உறவாடல்கள் நுணுக்கங்களும் சிக்கல்களும் நிறைந்தவை, தொடர்ந்து உருமாறுபவை, ஒரு துன்புறுத்தலான உறவில் கூட துன்புறுத்துபவனும் பாதிக்கப்படுபவரும் ஒரே தன்னிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. இதையே ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலும் காட்டுகிறது. ஆனால் அந்நாவலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை இவ்வளவு தட்டையாக பெருந்தேவி தன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது நியாயமல்ல.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...