முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பியோட்டம்


Related image
என் வாழ்வின் கணிசமான பகுதியை நான் பிரியமானவர்களுக்காக செலவழித்திருக்கிறேன். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்? உறவுகளின் அழகு அதன் நிரந்தரமின்மை எனத் தோன்றுகிறது.

எத்தனை எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறேன். அந்த வேலைகளில் இருந்தும் ஒன்றும் பெற்று விடவில்லை. சம்பாதித்த பணமும் தங்கவில்லை. இனிய, கசப்பான நினைவுகள் மட்டுமே எஞ்சுகின்றன. கடந்த 11 ஆண்டுகளாய் நான் எழுதியவை மட்டுமே அவ்வளவு விசுவாசமாய் என்னுடன் ஒரு நிழலைப் போல வருகின்றன.
 இதுவே எல்லா படைப்பாளிகளுக்கும் நேர்வது. எழுத்து நிரந்தரமானது. நிரந்தரமான ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வே தனிமையை ஏற்படுத்துகிறது. இந்த தனிமையின் அழுத்தம் நம்மை நிரந்தரமற்ற துர்பலமான உறவுகள், அனுபவங்களை நோக்கி தள்ளுகின்றன. நிரந்தரத்தின் அழுத்தத்தில் இருந்து, தனிமையில் இருந்து விடுபட மீண்டும் உறவுகள், வேலைகள் என ஒரு சுழற்சிக்குள் போய் விழுகிறோம். அவை எதுவுமே இறுதியில் எஞ்சாது என அறிந்து கொண்டே தான் செய்கிறோம்.
கலை வாழ்வுடன் அணுக்கம் வரும் போதெல்லாம் ஒருவன் மிக மிக சாதாரணமான கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், சூது, காமம், மது, பணம், அதிகாரம், புகழுக்காக அதிகமாய் அலைகழிகிறான். இவை அவன் அழியக் கூடியவன் என அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதுவே அவனுக்கு வேண்டும். அது அவனுக்கு நிம்மதி கொடுக்கிறது.
கணிசமான கலைஞர்கள் தேவையற்ற சர்ச்சைகளில், சிக்கல்களில் மாட்டி அழிகிறார்கள். மதுவில், நோய்மையில், அன்பில் அழிகிறார்கள். கலை உலகில் ஒரு இடம் பெறுவதை விடவும் இந்த அன்றாட உலகில் தம் இடத்தை அழிப்பதே அவர்களுக்கு உவப்பாக உள்ளது.
ஒரு எழுத்தாளன் எதிர்பாராமல் மரிக்கும் போது அவன் தன் எழுத்து உருவாக்கிய நித்தியத்துடன் இணைகிறான். அவன் அதற்கு மேல் எதையும் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அப்போது அவனது வாசகர்கள் பரிதவிக்கிறார்கள். அவன் எழுத்துலகம் அழியாத இடத்தில் இருப்பது அவர்களை பதற்றப்படுத்துகிறது. அவர்கள் அஞ்சலிக் கூட்டங்களுக்கு குவிகிறார்கள். அவனைப் பற்றின நினைவுகளை தொகுக்கிறார்கள். சக எழுத்தாளர்கள் அஞ்சலிக் குறிப்புகளாக எழுதித் தள்ளுகிறார்கள். மீண்டும் அவனை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கி இழுத்துப் போடுகிறார்கள். அவனை கையைப் பற்றி தம் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்த்தி, மாலை சார்த்தி, மூக்கில் பஞ்சு வைத்து, அவன் தம்முடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நமது இந்த சின்ன வாழ்க்கை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கிய தப்பியோட்டமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...