Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மணிரத்னத்தின் திரை மொழியை விவாதிக்கும் தொடர் - 1

“தளபதியின்” திரைக்கதை கச்சிதமானது. இதைப் பற்றி முதலில் பார்ப்போம்.
சிட்பீல்ட் தனது திரைக்கதை குறித்த நூலில் ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்துகிறார்: ஓர் இயக்குநர் தனது படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அந்தப் படத்தின் ஆதாரமான பிரச்சினை, தொனி, மனப்பாங்கை பார்வையாளனுக்குக் கடத்திவிட வேண்டும். அப்போதே பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்வார்கள்; கவனம் சிதறாமல் ரசிப்பார்கள். மணிரத்னம் ‘தளபதி’யின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அதன் மையக்கருவை உணர்த்திவிடுகிறார். அறியா வயதில் கர்ப்பிணியான ஒரு சிறுமி தன் பிள்ளையை வளர்க்கும் துணிவின்றி, சமூக விலக்கத்துக்குப் பயந்து ஒரு கூட்ஸ் தொடர்வண்டியில் விட்டுவிடுகிறாள்; ஆனால் அடுத்த நிமிடமே அதற்காக வருந்தி குழந்தையை மீட்க முயல்கிறாள்; குழந்தையைத் தொடர்வண்டி கொண்டு சென்றுவிடுகிறது. சேரியில் வசிக்கும் ஒரு பாட்டி அக்குழந்தையைத் தத்தெடுக்கிறாள். தன்னை ஏன் தன் அம்மா கைவிட்டாள் எனும் கேள்வி அப்பையனை அலைக்கழிக்கிறது. அவன் தன் தத்து அம்மாவிடம் “என்னை ஏன் கூட்ஸ் வண்டியில் போட்டுட்டாங்க?” என்ற கேள்வியை, எல்லா வேதனைகளையும் உள்ளே அழுத்தியபடி, கேட்கிறான். அந்தப் பாட்டி அவனை அரவணைத்துக்கொள்கிறாள். இந்தப் பத்து நிமிடக் காட்சிகளில் வரும் ஒரே வசனம் இது. ஆனால், இந்தப் படத்தின் அடிப்படையான வினா நமக்குப் புரிந்துவிட்டது: இந்தப் பையன் தன் தாயை அடையப் போகிறானா? தான் கைவிடப்பட்டவன் எனும் உணர்வு அவனது உளவியலை எப்படி அமைக்கப் போகிறது?

அவனது – அதாவது படத்தின் - பிரச்சினை என்ன? பற்றுறுதி, நாணயம், நம்பிக்கை. அவனது தாய் உறவில் பற்றுறுதியற்று, நாணயமற்று நடந்துகொண்டுவிட்டாள். அவள் தனது மகன் மீதான பாசத்தில் உறுதியாக இல்லை. அந்தப் பையன் வளர்ந்து சூர்யா ஆன பின் தன் வாழ்நாள் முழுக்க உறவில் உறுதியை, நாணயத்தை, நேர்கோட்டுப் பாதையை நாடப் போகிறான். தன் தாயைப் போல யாருக்கும் துரோகம் செய்யாமல் உருக்குப் போல இருக்கப் போகிறான். இந்தத் தடுமாற்றமின்மையே சூர்யா. அவன் தேவராஜ் எனும் டானிடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் அவனது ஆத்ம நண்பர் ஆகிறார். அவருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதற்குக் காரணம் தேவராஜ் அவனது உயிரை ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றினார் என்பது. தனக்கு யார் உறுதியான பற்றுதலைக் கொடுத்தாலும் சூர்யா அவர்களிடம் உயிரையே வைப்பான். இந்த உறுதிப்பாடு அவனைக் கொள்கைப் பிடிப்பான மனிதன் ஆக்குகிறது. உதவியென்று வருகிறவர்களுக்காக யோசிக்காமல் எதையும் தியாகம் செய்வதே அவனது நிலைப்பாடு. அவனது இந்தக் கொள்கைப் பிடிப்பையும் அறவுணர்வையும் கண்டு, அவன் ஒரு ரவுடியாக இருந்தாலும்கூட, சாதுவான ஒரு பிராமணப் பெண் - சுப்புலஷ்மி - அவனை நேசிக்கிறாள். சூர்யாவின் விதி என்னவென்றால் அவன் மிகவும் நேசிக்கிறவர்கள் - எந்தச் சமரசமும் அற்று அன்பு காட்டுகிறவர்கள் - அவனை விட்டுச் சென்றுவிடுவார்கள் (அவன் தாயைப் போன்றே). சுப்புலஷ்மி, தேவராஜ் இருவரும் படத்தின் இருவேறு கட்டங்களில் அவனைப் பிரிகிறார்கள். ஆனால், வானில் இருந்து தேவாமிர்தமே வந்து இறங்கியது போல அவன் அம்மா அவனுக்கு மீண்டும் கிடைக்கிறாள். இப்படி முதல் பத்து நிமிடங்களில் அறிமுகமான பிரச்சினைக்கு க்ளைமாக்ஸில் தீர்வு கிடைக்கிறது: அவன் ஒரு மதலையாய் தாயை விட்டுப் பிரிவது, தனியாக ஆற்றங்கரையில் சூரியோதயத்தைப் பார்த்து ஒரு சிறுவனாக அவன் நிற்பது முதல் பத்து நிமிடங்கள் என்றால் கடைசிக் காட்சியில் அவன் தன் தாயை அரவணைத்துக்கொள்கிறான். தான் தேடி அலைந்த ஒன்று - உறவில் உறுதிப்பாடு, பற்றுறுதி - தாயின் தடுமாற்றமற்ற பாசமாய் அவனுக்குக் கிடைக்கிறது. தனது இரண்டாவது மகனுடனும் கணவருடனும் வேறு ஊருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் அவள் தன் முதல் மகனுடன் இருக்க முடிவெடுக்கிறாள். சூர்யா இதைக் கண்டு மிகவும் நெகிழ்கிறான். வாழ்வில் எப்போதுமே அவனை அனைவரும் விட்டுச் செல்லவே செய்திருக்கிறார்கள், முதல் முறையாய் அவன் தாய் அவனுக்காகப் பிறரை கைவிட்டு வருகிறாள். உறவுகள் மீது அவனுக்குப் பிடிப்பு ஏற்படும் தருணம் இது; அவனது போதாமை இல்லாமல் ஆகும் இடம் இது.
ஆனால், இது சூர்யா தன் தாயைத் தேடி அடையும் ஓர் எளிய அம்மா - மகன் கதை அல்ல. முதலில் வெளிப்படும் பிரச்சினை படம் போகப் போகச் சிக்கலாகிறது. மனித உறவுகளில் உள்ள தடுமாற்றம், நாணயமின்மை, அழுத்தமான பந்தங்களில் (உள்முரணாக) மையமாக உள்ள நம்பகத்தன்மையற்ற இயல்பு சூர்யாவை உலகையே இருகூறாய், இருமையாய் பார்க்க செய்கிறது. நல்லவர் - கெட்டவர், நம்பத்தகுந்தவர் - நம்பத்தகாதவர், தன்னை நேசிப்பவர் - தன்னை வெறுப்பவர் என அவன் மனிதர்களைப் பிரித்துக் கொள்கிறான். ஆனால், தான் கடுமையாக வெறுக்கும் ஆட்சியாளர் அர்ஜுன் தன் தம்பி என அறிய வரும்போது, தான் கொன்ற ஒரு கெட்டவனுக்கு ஒரு அருமையான குடும்பம் உண்டு, ஒரு அழகான பாப்பா உண்டு என அறிந்து வேதனைப்பட்டு அக்குடும்பத்துக்கு அவன் பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கும்போது, தனக்குத் துரோகம் செய்து இன்னொருவனைத் திருமணம் செய்த சுப்புலஷ்மி தன் தம்பியின் மனைவி எனத் தெரிய வரும் போது அவனுக்கு முக்கியமான ஒரு புரிதல் கிடைக்கிறது - நன்மையும் தீமையும் இரண்டிரண்டாய் பிரிக்க முடியாதபடி வாழ்வில் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆக, படத்தின் முதல் பாதி சூர்யாவின் அடிப்படையான பிரச்சினை எப்படி அவனைச் சிக்கலான மனிதனாக்குகிறது எனச் சித்தரிக்கிறதென்றால் இரண்டாம் பாதி அச்சிக்கலிலிருந்து அவனுக்கு ஒரு தெளிவை அளிக்கிறது.
க்ளைமாக்ஸுக்கு முன்பான சில காட்சிகளில் பார்வையாளன் முன்னுள்ள கேள்விகள் இரண்டே: சூர்யா தன் நண்பன் தேவராஜை விட்டுக் கொடுத்து தன் அம்மா மற்றும் தம்பியுடன் சேர்வானா? இல்லை, அவர்கள் மூவரும் தனக்கு ஒரே சமயம் வேண்டும் என அவன் கோரினால் அது சாத்தியமாகுமா? அவன் இறுதியில் தனித்து விடப்படுவானா அல்லது அவனுக்குத் தன் தாயின் பாசம் கிடைக்குமா?
ஒரு பிரச்சினை, அது ஏற்படுத்தும் சிக்கல்கள், அச்சிக்கல்கள் தீவிரமாகி இறுதியில் அவிழ்க்கப்படுதல், அப்பிரச்சினையின் முடிவு எனத் திரைக்கதையை நான்கு பகுதிகளாய்ப் பிரித்துத் தெளிவாய் அமைத்திருக்கிறார் மணிரத்னம். ஆகையால் படம் முழுக்க விறுவிறுப்பு, வேகம் இருக்கிறது, குழப்பம் இல்லை, கவனச்சிதறல் இல்லை, “என்னய்யா நடக்குது?” எனப் பார்வையாளர் நெளிவதில்லை.

(மேலும் படிக்க...https://minnambalam.com/k/2019/02/11/6)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...