முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: ஆண்-பெண் உறவு (1)



பிக்பாஸ் வீடு எப்படி இன்றைய கார்ப்பரேட் சமூகத்தை, அது கண்காணிக்கப்பட்டு ஒரு போட்டிக்களமாய் நடத்தப்படும் விதத்தை, வேலையிடத்தில் நிர்வாகம் தன் அதிகாரத்தை செலுத்தும் நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது என ஏற்கனவே விவாதித்திருக்கிறேன். இன்றைய வாழ்நிலையை ஒரு நிலைக் கண்ணாடியில் கண்டு புரிந்திட பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுகிறது என்றும் சொல்லி இருந்தேன். விவிலிய நீதிக்கதைகளைப் போல இதுவும் ஒரு நவீன நீதிக்கதை (அப்படி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தேசிக்கவில்லை என்றாலும்). இப்போது இன்றைய ஆண்-பெண் உறவுநிலைகளை, அதில் வந்துள்ள மாற்றங்களை, மாறாத அம்சங்களை, இதில் கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான மாறுபாட்டை கவனிப்போம்.


மலையாளம் மற்றும் தமிழில் எல்லா பதிப்புகளிலும் எப்படியாவது ஒரு காதல் வந்து விடுகிறது. இது திட்டமிடப்பட்டதா? தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிர்வாகம் இந்த ரொமான்ஸ் அம்சத்தை முக்கியமாய் நினைக்கிறது. இந்த ரொமான்ஸ் ஆச்சரியமாய் எப்போதும் ஒருவித ஏமாற்றத்தில் தான் முடிகிறது. மலையாளத்தில் சுரேஷுக்கு பெர்ளி மீது தோன்றிய விடலைக் காதல், பெர்ளிக்கு ஸ்ரீனிஷ் மீது இருந்த பரஸ்பர காதல், ரஞ்சனிக்கும் ஹீமாவுக்கும் ஷாபு மீது ஏற்பட்ட ஈர்ப்பு, தமிழில் முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது ஏற்பட்ட குழந்தைத்தனமான இச்சை, இரண்டாம் பருவத்தில் யஷிகா-மஹத்தின் வித்தேத்தியான காதல், பாலாஜி-நித்யாவின் வற்புத்தி திணிக்கப்பட இணக்கமும் அன்பும் என இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு ரொமான்ஸ் அத்தியாயம் சரியாய் வந்து விடுகிறது. இந்த ரொமான்ஸில் ஒரு தனித்துவம் உள்ளது.

இவர்களில் பெர்ளியும் ஶ்ரீனிஷும் நிகழ்ச்சி முடிந்த பின் திருமணம் செய்து கொண்டார்கள். மிச்ச பேரின் காதல்கள் உயிரே படத்தில் இடுப்பில் வெடிகுண்டைக் கட்டி அலையும் மனிஷா கொய்ராலாவின் காதலைப் போலத் தான். அவர் காதலை ஏற்கும் போது அவரோடு காதலனும் வெடித்து பரலோகம் போக வேண்டியது தான். பிக்பாஸின் ஒவ்வொரு காதலும் இப்படி பரலோகம் போய் விடும் என பார்வையாளர்களும் நிச்சயமாய் தெரியும். ஏன் இப்படி? நம் அலுவலகத்தில், தெருவில் யாராவது காதலித்தால் இந்த காதல் நிலைக்காது என நாம் நினைப்பதில்லையே? பிக்பாஸில் மட்டும் ஏன் இப்படி?

பிக்பாஸில் காதலிப்பது விக் அணிவது போல. என்னதான் அழகாய் பொருத்தமாய் அமைந்தாலும் கழற்றித் தான் ஆக வேண்டும். அது நம்முடையது அல்ல, நம் உடலின் பகுதியானது அல்ல. எப்படி பிக்பாஸ் வீட்டின் நாற்காலி, கட்டில், சமையலறை, கண்ணாடி, பட்டக்கருவிகள், மைக், படக்கருவி ஆகியவை பங்கேற்பாளர்களுக்கானது அல்லவோ அதே போலத் தான் அவர்களின் காதலும். உறவுகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் வீட்டுக்கு வெளியிலும் தொடர முடியும் தான். அப்படி வீட்டுக்குள் நண்பர்கள் ஆனவர்கள் வெளியிலும் தொடர்கிறார்கள் தான், ஆனால் காதலில் அது நடப்பதில்ல.

பேருந்திலும் ரயிலிலும் ஒருமுறை பார்த்தவர்கள் மீது நாம் ஆர்வம் கொள்வதுண்டு; நல்ல பொருத்தம் ஏற்படும் முன் காதல் கருக்கொள்வதுண்டு. இறங்கிய பின் அவர்களுடன் தொடர்பை தக்க வைக்க எவ்வளவோ வசதிகள் இன்று உண்டு; எனினும் அது அவ்வளவாய் நடப்பதில்லை. காரணம் காதல் உருக்கொள்ளும் இடம் நிரந்தரமற்ற ஒரு நதியொழுக்கு போன்ற வெளி பயணவெளி. அங்கு காதல் தோன்றுவதற்கே அந்த நதியொழுக்கின் இறுக்கமற்ற சூழலும் சுதந்திரமும் காரணங்கள். வெளியே இறுக்கமான படிநிலைகளும் நடைமுறை எதிர்பார்ப்புகளும் மிகுந்த உலகில் நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன, சாதி, மதம், சம்பளம், சொத்து என்ன மற்றும் எவ்வளவு ஆகிய கேள்விகள் முக்கியமாகும். ஆக பயணவெளியும் நிஜவெளியும் இருவேறு உலகங்கள். இருவேறு மன உலகங்கள். பண்பாட்டு உலகங்கள். பிக்பாஸ் வீடும் அப்படியான ரயில் காதல் தான். இறங்குமிடம் வந்ததும் உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது அது துவங்கும் போதே தெரிந்து போகிறது. அடுத்து, அப்படி முடித்துக் கொள்ள வேண்டும் எனும் சுதந்திரமே இந்த உறவு மலர பிரதான ஊக்கி ஆகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் காதலிப்பவர்கள் தமது உலகம் நிஜமானது என்றும் போலியானது என்றும் ஒரே சமயம் நினைக்கிறார்கள். இது அவர்களின் காதலை அனுதினமும் தவிப்புக்குள்ளாக்குகிறது. அவர்களில் பலருக்கு வெளியே காதலர்களும் கணவன் மனைவியும் காத்திருக்கிறார்கள். அவர்கள் நிகழ்ச்சியை, தம் ஜோடியின் காதலை தினமும் பார்க்கிறார்கள். ஆக, அவர்களின் பிக்பாஸ் வீட்டுக் காதல் ஏற்கப்பட முடியாத (தகாத) உறவும் தான். இது பார்க்கிறவர்களுக்கு ருசியைக் கூட்டுகிறது.
இப்படி தோல்வியை நோக்கி மலையுச்சியில் இருந்து தள்ளி விடப்படும் காதல் கதைகள் ஒரு தொன்மமாக தொண்ணூறுகள் மற்றும் ஓரளவுக்கு ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டது. இவை பெரும் வெற்றி பெற்றன. இதயம், அலைகள் ஓய்வதில்லை முதல் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 வரை ஏகப்பட்ட உதாரணங்கள். இப்படங்களில் சமூகப் பொருளாதார பொருத்தமற்ற ஆணும் பெண்ணும் நெருங்கும் போது இந்த உறவு ஏற்கப்படாது, காதலர்கள் துயருறப் போகிறார்கள் என பார்வையாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். காதலர்கள் பிரியும் துன்பத்தை காண்பதில் ரசிக்க என்ன இருக்கிறது? பார்வையாளர்கள் என்ன சாடிஸ்டுகளா? இல்லை.

இருவர் காதலாகும் போதே பிரிவை நோக்கியும் நிச்சயம் தம்மையறியாமல் தள்ளப்படுகிறார்கள் எனும் கதைக் கட்டமைப்பில் இருவரும் ஒருவித அபாரமான சுதந்திரத்தை, அலுப்படையாத மலர்ச்சியை அடைய முடியும். வாடாத மலரைப் போன்றது தோல்வியை நோக்கிச் செல்லும் காதல். கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் (விண்ணைத் தாண்டி...) காதலிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ஜெஸ்ஸியின் அப்பா உடனே காதலை ஏற்றுக் கொண்டு மணமுடித்து வைத்து விடுகிறார் என வைப்போம். இப்போது இந்த கதையில் எதாவது சுவாரஸ்யம் உண்டா? இல்லை. சவால்கள் இக்காதலில் இருக்காது என்று மட்டுமல்ல, முழுமையடையும் காதலில், இணையும் காதலர்களில் கட்டற்ற பரிமாணம் இல்லை; அவர்களின் உறவில் காலாகாலத்துக்குமான நீட்சி இல்லை; நடைமுறையில் திருப்தி வந்து விடும் போது காதல் பரிசுத்தம் இழக்கிறது. இதை நான் சொல்லவில்லை - சமூக மனத்தின் ஆழத்தில் உள்ள தொன்மம் இது.
இந்த கதையாடலுக்கான ஒரு நவீன வடிவம் தான் பிக்பாஸ் காதல். அங்கு தோன்றும் ஒவ்வொரு கார்த்திக் ஜெஸ்ஸியும் நம்மை ஈர்க்கிறார்கள், அதேநேரம் கலங்க, பதற வைக்கிறார்கள், அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரியக் கூடாதென்றும் இணையக் கூடாதென்றும் ஒரே சமயம் எண்ணுகிறோம்.
இது தான் பிக்பாஸ் காதல். இது தான் பின்நவீன காதலின் தொன்மம்.

அடுத்த பகுதியில், இருவேறு மாநிலங்களின் பிக்பாஸ் வீடுகளில் ஆண்-பெண் படிநிலை எப்படி வித்தியாசப்படுகிறது, இந்த சமூகங்களின் இன்றைய நிலை பற்றி இது சொல்வதென்ன எனப் பார்ப்போம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Very interesting details you have observed, regards
for putting up.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...