முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: ஆண்-பெண் உறவு (1)



பிக்பாஸ் வீடு எப்படி இன்றைய கார்ப்பரேட் சமூகத்தை, அது கண்காணிக்கப்பட்டு ஒரு போட்டிக்களமாய் நடத்தப்படும் விதத்தை, வேலையிடத்தில் நிர்வாகம் தன் அதிகாரத்தை செலுத்தும் நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது என ஏற்கனவே விவாதித்திருக்கிறேன். இன்றைய வாழ்நிலையை ஒரு நிலைக் கண்ணாடியில் கண்டு புரிந்திட பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுகிறது என்றும் சொல்லி இருந்தேன். விவிலிய நீதிக்கதைகளைப் போல இதுவும் ஒரு நவீன நீதிக்கதை (அப்படி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தேசிக்கவில்லை என்றாலும்). இப்போது இன்றைய ஆண்-பெண் உறவுநிலைகளை, அதில் வந்துள்ள மாற்றங்களை, மாறாத அம்சங்களை, இதில் கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான மாறுபாட்டை கவனிப்போம்.


மலையாளம் மற்றும் தமிழில் எல்லா பதிப்புகளிலும் எப்படியாவது ஒரு காதல் வந்து விடுகிறது. இது திட்டமிடப்பட்டதா? தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிர்வாகம் இந்த ரொமான்ஸ் அம்சத்தை முக்கியமாய் நினைக்கிறது. இந்த ரொமான்ஸ் ஆச்சரியமாய் எப்போதும் ஒருவித ஏமாற்றத்தில் தான் முடிகிறது. மலையாளத்தில் சுரேஷுக்கு பெர்ளி மீது தோன்றிய விடலைக் காதல், பெர்ளிக்கு ஸ்ரீனிஷ் மீது இருந்த பரஸ்பர காதல், ரஞ்சனிக்கும் ஹீமாவுக்கும் ஷாபு மீது ஏற்பட்ட ஈர்ப்பு, தமிழில் முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது ஏற்பட்ட குழந்தைத்தனமான இச்சை, இரண்டாம் பருவத்தில் யஷிகா-மஹத்தின் வித்தேத்தியான காதல், பாலாஜி-நித்யாவின் வற்புத்தி திணிக்கப்பட இணக்கமும் அன்பும் என இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு ரொமான்ஸ் அத்தியாயம் சரியாய் வந்து விடுகிறது. இந்த ரொமான்ஸில் ஒரு தனித்துவம் உள்ளது.

இவர்களில் பெர்ளியும் ஶ்ரீனிஷும் நிகழ்ச்சி முடிந்த பின் திருமணம் செய்து கொண்டார்கள். மிச்ச பேரின் காதல்கள் உயிரே படத்தில் இடுப்பில் வெடிகுண்டைக் கட்டி அலையும் மனிஷா கொய்ராலாவின் காதலைப் போலத் தான். அவர் காதலை ஏற்கும் போது அவரோடு காதலனும் வெடித்து பரலோகம் போக வேண்டியது தான். பிக்பாஸின் ஒவ்வொரு காதலும் இப்படி பரலோகம் போய் விடும் என பார்வையாளர்களும் நிச்சயமாய் தெரியும். ஏன் இப்படி? நம் அலுவலகத்தில், தெருவில் யாராவது காதலித்தால் இந்த காதல் நிலைக்காது என நாம் நினைப்பதில்லையே? பிக்பாஸில் மட்டும் ஏன் இப்படி?

பிக்பாஸில் காதலிப்பது விக் அணிவது போல. என்னதான் அழகாய் பொருத்தமாய் அமைந்தாலும் கழற்றித் தான் ஆக வேண்டும். அது நம்முடையது அல்ல, நம் உடலின் பகுதியானது அல்ல. எப்படி பிக்பாஸ் வீட்டின் நாற்காலி, கட்டில், சமையலறை, கண்ணாடி, பட்டக்கருவிகள், மைக், படக்கருவி ஆகியவை பங்கேற்பாளர்களுக்கானது அல்லவோ அதே போலத் தான் அவர்களின் காதலும். உறவுகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் வீட்டுக்கு வெளியிலும் தொடர முடியும் தான். அப்படி வீட்டுக்குள் நண்பர்கள் ஆனவர்கள் வெளியிலும் தொடர்கிறார்கள் தான், ஆனால் காதலில் அது நடப்பதில்ல.

பேருந்திலும் ரயிலிலும் ஒருமுறை பார்த்தவர்கள் மீது நாம் ஆர்வம் கொள்வதுண்டு; நல்ல பொருத்தம் ஏற்படும் முன் காதல் கருக்கொள்வதுண்டு. இறங்கிய பின் அவர்களுடன் தொடர்பை தக்க வைக்க எவ்வளவோ வசதிகள் இன்று உண்டு; எனினும் அது அவ்வளவாய் நடப்பதில்லை. காரணம் காதல் உருக்கொள்ளும் இடம் நிரந்தரமற்ற ஒரு நதியொழுக்கு போன்ற வெளி பயணவெளி. அங்கு காதல் தோன்றுவதற்கே அந்த நதியொழுக்கின் இறுக்கமற்ற சூழலும் சுதந்திரமும் காரணங்கள். வெளியே இறுக்கமான படிநிலைகளும் நடைமுறை எதிர்பார்ப்புகளும் மிகுந்த உலகில் நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன, சாதி, மதம், சம்பளம், சொத்து என்ன மற்றும் எவ்வளவு ஆகிய கேள்விகள் முக்கியமாகும். ஆக பயணவெளியும் நிஜவெளியும் இருவேறு உலகங்கள். இருவேறு மன உலகங்கள். பண்பாட்டு உலகங்கள். பிக்பாஸ் வீடும் அப்படியான ரயில் காதல் தான். இறங்குமிடம் வந்ததும் உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது அது துவங்கும் போதே தெரிந்து போகிறது. அடுத்து, அப்படி முடித்துக் கொள்ள வேண்டும் எனும் சுதந்திரமே இந்த உறவு மலர பிரதான ஊக்கி ஆகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் காதலிப்பவர்கள் தமது உலகம் நிஜமானது என்றும் போலியானது என்றும் ஒரே சமயம் நினைக்கிறார்கள். இது அவர்களின் காதலை அனுதினமும் தவிப்புக்குள்ளாக்குகிறது. அவர்களில் பலருக்கு வெளியே காதலர்களும் கணவன் மனைவியும் காத்திருக்கிறார்கள். அவர்கள் நிகழ்ச்சியை, தம் ஜோடியின் காதலை தினமும் பார்க்கிறார்கள். ஆக, அவர்களின் பிக்பாஸ் வீட்டுக் காதல் ஏற்கப்பட முடியாத (தகாத) உறவும் தான். இது பார்க்கிறவர்களுக்கு ருசியைக் கூட்டுகிறது.
இப்படி தோல்வியை நோக்கி மலையுச்சியில் இருந்து தள்ளி விடப்படும் காதல் கதைகள் ஒரு தொன்மமாக தொண்ணூறுகள் மற்றும் ஓரளவுக்கு ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டது. இவை பெரும் வெற்றி பெற்றன. இதயம், அலைகள் ஓய்வதில்லை முதல் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 வரை ஏகப்பட்ட உதாரணங்கள். இப்படங்களில் சமூகப் பொருளாதார பொருத்தமற்ற ஆணும் பெண்ணும் நெருங்கும் போது இந்த உறவு ஏற்கப்படாது, காதலர்கள் துயருறப் போகிறார்கள் என பார்வையாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். காதலர்கள் பிரியும் துன்பத்தை காண்பதில் ரசிக்க என்ன இருக்கிறது? பார்வையாளர்கள் என்ன சாடிஸ்டுகளா? இல்லை.

இருவர் காதலாகும் போதே பிரிவை நோக்கியும் நிச்சயம் தம்மையறியாமல் தள்ளப்படுகிறார்கள் எனும் கதைக் கட்டமைப்பில் இருவரும் ஒருவித அபாரமான சுதந்திரத்தை, அலுப்படையாத மலர்ச்சியை அடைய முடியும். வாடாத மலரைப் போன்றது தோல்வியை நோக்கிச் செல்லும் காதல். கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் (விண்ணைத் தாண்டி...) காதலிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ஜெஸ்ஸியின் அப்பா உடனே காதலை ஏற்றுக் கொண்டு மணமுடித்து வைத்து விடுகிறார் என வைப்போம். இப்போது இந்த கதையில் எதாவது சுவாரஸ்யம் உண்டா? இல்லை. சவால்கள் இக்காதலில் இருக்காது என்று மட்டுமல்ல, முழுமையடையும் காதலில், இணையும் காதலர்களில் கட்டற்ற பரிமாணம் இல்லை; அவர்களின் உறவில் காலாகாலத்துக்குமான நீட்சி இல்லை; நடைமுறையில் திருப்தி வந்து விடும் போது காதல் பரிசுத்தம் இழக்கிறது. இதை நான் சொல்லவில்லை - சமூக மனத்தின் ஆழத்தில் உள்ள தொன்மம் இது.
இந்த கதையாடலுக்கான ஒரு நவீன வடிவம் தான் பிக்பாஸ் காதல். அங்கு தோன்றும் ஒவ்வொரு கார்த்திக் ஜெஸ்ஸியும் நம்மை ஈர்க்கிறார்கள், அதேநேரம் கலங்க, பதற வைக்கிறார்கள், அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரியக் கூடாதென்றும் இணையக் கூடாதென்றும் ஒரே சமயம் எண்ணுகிறோம்.
இது தான் பிக்பாஸ் காதல். இது தான் பின்நவீன காதலின் தொன்மம்.

அடுத்த பகுதியில், இருவேறு மாநிலங்களின் பிக்பாஸ் வீடுகளில் ஆண்-பெண் படிநிலை எப்படி வித்தியாசப்படுகிறது, இந்த சமூகங்களின் இன்றைய நிலை பற்றி இது சொல்வதென்ன எனப் பார்ப்போம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Very interesting details you have observed, regards
for putting up.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...