Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிக்பாஸ்: ஆண்-பெண் உறவு (1)



பிக்பாஸ் வீடு எப்படி இன்றைய கார்ப்பரேட் சமூகத்தை, அது கண்காணிக்கப்பட்டு ஒரு போட்டிக்களமாய் நடத்தப்படும் விதத்தை, வேலையிடத்தில் நிர்வாகம் தன் அதிகாரத்தை செலுத்தும் நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது என ஏற்கனவே விவாதித்திருக்கிறேன். இன்றைய வாழ்நிலையை ஒரு நிலைக் கண்ணாடியில் கண்டு புரிந்திட பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுகிறது என்றும் சொல்லி இருந்தேன். விவிலிய நீதிக்கதைகளைப் போல இதுவும் ஒரு நவீன நீதிக்கதை (அப்படி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தேசிக்கவில்லை என்றாலும்). இப்போது இன்றைய ஆண்-பெண் உறவுநிலைகளை, அதில் வந்துள்ள மாற்றங்களை, மாறாத அம்சங்களை, இதில் கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான மாறுபாட்டை கவனிப்போம்.


மலையாளம் மற்றும் தமிழில் எல்லா பதிப்புகளிலும் எப்படியாவது ஒரு காதல் வந்து விடுகிறது. இது திட்டமிடப்பட்டதா? தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிர்வாகம் இந்த ரொமான்ஸ் அம்சத்தை முக்கியமாய் நினைக்கிறது. இந்த ரொமான்ஸ் ஆச்சரியமாய் எப்போதும் ஒருவித ஏமாற்றத்தில் தான் முடிகிறது. மலையாளத்தில் சுரேஷுக்கு பெர்ளி மீது தோன்றிய விடலைக் காதல், பெர்ளிக்கு ஸ்ரீனிஷ் மீது இருந்த பரஸ்பர காதல், ரஞ்சனிக்கும் ஹீமாவுக்கும் ஷாபு மீது ஏற்பட்ட ஈர்ப்பு, தமிழில் முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது ஏற்பட்ட குழந்தைத்தனமான இச்சை, இரண்டாம் பருவத்தில் யஷிகா-மஹத்தின் வித்தேத்தியான காதல், பாலாஜி-நித்யாவின் வற்புத்தி திணிக்கப்பட இணக்கமும் அன்பும் என இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு ரொமான்ஸ் அத்தியாயம் சரியாய் வந்து விடுகிறது. இந்த ரொமான்ஸில் ஒரு தனித்துவம் உள்ளது.

இவர்களில் பெர்ளியும் ஶ்ரீனிஷும் நிகழ்ச்சி முடிந்த பின் திருமணம் செய்து கொண்டார்கள். மிச்ச பேரின் காதல்கள் உயிரே படத்தில் இடுப்பில் வெடிகுண்டைக் கட்டி அலையும் மனிஷா கொய்ராலாவின் காதலைப் போலத் தான். அவர் காதலை ஏற்கும் போது அவரோடு காதலனும் வெடித்து பரலோகம் போக வேண்டியது தான். பிக்பாஸின் ஒவ்வொரு காதலும் இப்படி பரலோகம் போய் விடும் என பார்வையாளர்களும் நிச்சயமாய் தெரியும். ஏன் இப்படி? நம் அலுவலகத்தில், தெருவில் யாராவது காதலித்தால் இந்த காதல் நிலைக்காது என நாம் நினைப்பதில்லையே? பிக்பாஸில் மட்டும் ஏன் இப்படி?

பிக்பாஸில் காதலிப்பது விக் அணிவது போல. என்னதான் அழகாய் பொருத்தமாய் அமைந்தாலும் கழற்றித் தான் ஆக வேண்டும். அது நம்முடையது அல்ல, நம் உடலின் பகுதியானது அல்ல. எப்படி பிக்பாஸ் வீட்டின் நாற்காலி, கட்டில், சமையலறை, கண்ணாடி, பட்டக்கருவிகள், மைக், படக்கருவி ஆகியவை பங்கேற்பாளர்களுக்கானது அல்லவோ அதே போலத் தான் அவர்களின் காதலும். உறவுகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் வீட்டுக்கு வெளியிலும் தொடர முடியும் தான். அப்படி வீட்டுக்குள் நண்பர்கள் ஆனவர்கள் வெளியிலும் தொடர்கிறார்கள் தான், ஆனால் காதலில் அது நடப்பதில்ல.

பேருந்திலும் ரயிலிலும் ஒருமுறை பார்த்தவர்கள் மீது நாம் ஆர்வம் கொள்வதுண்டு; நல்ல பொருத்தம் ஏற்படும் முன் காதல் கருக்கொள்வதுண்டு. இறங்கிய பின் அவர்களுடன் தொடர்பை தக்க வைக்க எவ்வளவோ வசதிகள் இன்று உண்டு; எனினும் அது அவ்வளவாய் நடப்பதில்லை. காரணம் காதல் உருக்கொள்ளும் இடம் நிரந்தரமற்ற ஒரு நதியொழுக்கு போன்ற வெளி பயணவெளி. அங்கு காதல் தோன்றுவதற்கே அந்த நதியொழுக்கின் இறுக்கமற்ற சூழலும் சுதந்திரமும் காரணங்கள். வெளியே இறுக்கமான படிநிலைகளும் நடைமுறை எதிர்பார்ப்புகளும் மிகுந்த உலகில் நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன, சாதி, மதம், சம்பளம், சொத்து என்ன மற்றும் எவ்வளவு ஆகிய கேள்விகள் முக்கியமாகும். ஆக பயணவெளியும் நிஜவெளியும் இருவேறு உலகங்கள். இருவேறு மன உலகங்கள். பண்பாட்டு உலகங்கள். பிக்பாஸ் வீடும் அப்படியான ரயில் காதல் தான். இறங்குமிடம் வந்ததும் உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது அது துவங்கும் போதே தெரிந்து போகிறது. அடுத்து, அப்படி முடித்துக் கொள்ள வேண்டும் எனும் சுதந்திரமே இந்த உறவு மலர பிரதான ஊக்கி ஆகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் காதலிப்பவர்கள் தமது உலகம் நிஜமானது என்றும் போலியானது என்றும் ஒரே சமயம் நினைக்கிறார்கள். இது அவர்களின் காதலை அனுதினமும் தவிப்புக்குள்ளாக்குகிறது. அவர்களில் பலருக்கு வெளியே காதலர்களும் கணவன் மனைவியும் காத்திருக்கிறார்கள். அவர்கள் நிகழ்ச்சியை, தம் ஜோடியின் காதலை தினமும் பார்க்கிறார்கள். ஆக, அவர்களின் பிக்பாஸ் வீட்டுக் காதல் ஏற்கப்பட முடியாத (தகாத) உறவும் தான். இது பார்க்கிறவர்களுக்கு ருசியைக் கூட்டுகிறது.
இப்படி தோல்வியை நோக்கி மலையுச்சியில் இருந்து தள்ளி விடப்படும் காதல் கதைகள் ஒரு தொன்மமாக தொண்ணூறுகள் மற்றும் ஓரளவுக்கு ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டது. இவை பெரும் வெற்றி பெற்றன. இதயம், அலைகள் ஓய்வதில்லை முதல் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 வரை ஏகப்பட்ட உதாரணங்கள். இப்படங்களில் சமூகப் பொருளாதார பொருத்தமற்ற ஆணும் பெண்ணும் நெருங்கும் போது இந்த உறவு ஏற்கப்படாது, காதலர்கள் துயருறப் போகிறார்கள் என பார்வையாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். காதலர்கள் பிரியும் துன்பத்தை காண்பதில் ரசிக்க என்ன இருக்கிறது? பார்வையாளர்கள் என்ன சாடிஸ்டுகளா? இல்லை.

இருவர் காதலாகும் போதே பிரிவை நோக்கியும் நிச்சயம் தம்மையறியாமல் தள்ளப்படுகிறார்கள் எனும் கதைக் கட்டமைப்பில் இருவரும் ஒருவித அபாரமான சுதந்திரத்தை, அலுப்படையாத மலர்ச்சியை அடைய முடியும். வாடாத மலரைப் போன்றது தோல்வியை நோக்கிச் செல்லும் காதல். கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் (விண்ணைத் தாண்டி...) காதலிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ஜெஸ்ஸியின் அப்பா உடனே காதலை ஏற்றுக் கொண்டு மணமுடித்து வைத்து விடுகிறார் என வைப்போம். இப்போது இந்த கதையில் எதாவது சுவாரஸ்யம் உண்டா? இல்லை. சவால்கள் இக்காதலில் இருக்காது என்று மட்டுமல்ல, முழுமையடையும் காதலில், இணையும் காதலர்களில் கட்டற்ற பரிமாணம் இல்லை; அவர்களின் உறவில் காலாகாலத்துக்குமான நீட்சி இல்லை; நடைமுறையில் திருப்தி வந்து விடும் போது காதல் பரிசுத்தம் இழக்கிறது. இதை நான் சொல்லவில்லை - சமூக மனத்தின் ஆழத்தில் உள்ள தொன்மம் இது.
இந்த கதையாடலுக்கான ஒரு நவீன வடிவம் தான் பிக்பாஸ் காதல். அங்கு தோன்றும் ஒவ்வொரு கார்த்திக் ஜெஸ்ஸியும் நம்மை ஈர்க்கிறார்கள், அதேநேரம் கலங்க, பதற வைக்கிறார்கள், அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரியக் கூடாதென்றும் இணையக் கூடாதென்றும் ஒரே சமயம் எண்ணுகிறோம்.
இது தான் பிக்பாஸ் காதல். இது தான் பின்நவீன காதலின் தொன்மம்.

அடுத்த பகுதியில், இருவேறு மாநிலங்களின் பிக்பாஸ் வீடுகளில் ஆண்-பெண் படிநிலை எப்படி வித்தியாசப்படுகிறது, இந்த சமூகங்களின் இன்றைய நிலை பற்றி இது சொல்வதென்ன எனப் பார்ப்போம்.

Comments

Anonymous said…
Very interesting details you have observed, regards
for putting up.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...