முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

நான் முன்பு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்து பிரிவில், ஒரு சின்ன வேலையில், இருந்தேன். எந்திர பாகங்கள், மின்னணு கருவிகள் குறித்த விவரணைகளே புரியாமலே புரிந்த மாதிரி எழுதுவது என் பணி. என் அயலில் மற்றொரு துறை இயங்கியது. முழுக்க மென்பொருள் கோடிங் சார்ந்த ஒரு புரோஜெக்ட். அதில் சிறு சிறு பிரிவாக ஏகப்பட்ட பேர் இயங்கினர். அவர்களில் ஒருவர் - ஒரு வங்காளி - எனக்கு கேண்டீனில் வைத்து நட்பானார். நான் அவரை இறுதியாக சந்தித்ததும் கேண்டீனில் தான். அன்று எதையோ தொலைத்தது போல தனியாக அமர்ந்திருந்தார்
என்ன ஆச்சு?” என வழக்கம் போல கேட்டேன். வழக்கம் போல அவர் தன் சின்ன சின்ன பிரச்சனைகளை, தனிமையைப் பற்றி புலம்புவார். நான் இத்தகைய புலம்பல்களை ரசிப்பேன். “I am fine” என் சிரித்தபடி தோள் உலுக்குகிறவர்களை விட இத்தகையோர் நேர்மையானவர்கள் என நினைப்பேன். அவர் அன்று விச்சிராந்தியாக பதில் சொன்னார், “எனக்கு வேலை போயிடுச்சு!” ஏன், எப்படி என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. ஆறுதல் சொல்லவில்லை. அருகில் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தேன். டீ வாங்கி வந்து இருவரும் அருந்தினேன். “இனிமே இந்த டீயை குடிக்க தேவையில்லைஎன புன்னகைத்தார். அந்த டீயில் எப்போதும் கருகிய பாலின் வாடை இருக்கும். அவர் சொன்னார், “வேலை போனது கூட பரவாயில்ல. இது போனா இன்னொன்னு. ஆனால்...”
என்ன?”

இந்த நட்பார்ந்த சிரிப்பு, கூலான கைகுலுக்கல்கள் தாம் என்னை பயமுறுத்துகின்றன.”
அவர் அன்று காலை வந்ததும் அவரது அடையாள அட்டையை காண்பித்ததும் கதவு இசைந்து திறக்கவில்லை. ஏதோ தவறு என கூறியது. அவர் காவலாளியை விசாரிக்க அவரோ ஒரு கார்போர்ட் பெட்டியை காண்பித்தார். அதில் இவரது பொருட்கள் - கோப்பு, பேனா, சின்ன பிளாஸ்டிக் பூச்செடி, காகிதங்கள், புத்தகங்கள், சின்ன மேஜைக்கடிகாரம் எல்லாம். அவ்வளவு தான், வேலையில் இருந்து அனுப்பி விட்டார்கள்
இவர் எல்லாவற்றையும் பொறுக்கிக் கொண்டு கிளம்ப தயாரான போது மனிதவளத் துறையின் அதிகாரி வந்து உள்ளே அழைத்தார். அவருடன் உள்ளே போனார். அங்கே இறுதி கட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டுவாழ்த்துக்கள்சொல்லி அனுப்பி விட்டார். அவரது புரோஜெக்ட்டை தோல்வி அடைந்த நிலையில் அதற்கு இனி முதலீடு பண்ண நிர்வாகம் தயாரில்லை. அணியில் சிலரை வேறு இடங்களில் அனுப்பி விட்டு பலரை அனுப்பி விட்டார்கள். எல்லாம் ஒரே நாளில், ஒருசில மணிநேரங்களில், ஒரு சில நிமிடங்களில் முடிந்து போயிற்று. தன்னை அப்படி அனுப்பியது பரவாயில்லை, ஆனால் தன்னை வேலைநீக்கம் செய்தது அறிய வந்த பின்னரும் கூட சக நண்பர்கள், மனிதளத் துறையினர், மேலாளர், அணித்த்தலைவர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன்ஹலோ ஹவ் ஆர் யூஎனக் கேட்டு தன்னிடம் தொடர்ந்து கைகுலுக்கியதைத் தான் பொறுக்க முடியவில்லை என்றார். வேலை இனி இல்லை எனக் கூறியவரிடமும் அதே ஜில்லிட வைக்கும் பளிச்சென்ற இனிமையான புன்னகை. அதீதமான நட்பார்ந்த உடல் மொழி, கனிவு, உலகமே அற்புதமாய் இயங்குவதைப் போன்ற பாவனை, ரேடியோ ஜாக்கிகளைப் போல மிகையான தித்திப்பு பேச்சு. இவர்களுக்கு அணுக்கமான ஒருவர் இறந்து போனால் கூட பிணத்தின் கையைப் பற்றிஹலோ ஹவ் ஆர் யூகேட்பார்களோ என அவர் வினவினார். நான் சொன்னேன், “அப்படி பண்ண மாட்டாங்க. ஆனால் இரு நொடிகள் பெருமூச்சு விட்டு விட்டு பிளாஸ்டிக் சிரிப்புகள், பிளாஸ்டிக் உடல்மொழியுடன் பரஸ்பரம் அளவளாவ ஆரம்பிப்பார்கள். மதிய உணவுக்கு திட்டமிடுவார்கள். போனில் வீடியோ பார்ப்பார்கள். செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடலாமா என யோசிப்பார்கள். இறந்தவரின் மகனையோ மகளையோ கண்டால் I am so sorry for you என பாதி மறைத்த புன்னகையுடன் தீர்மானமாக சொல்வார்கள்.”
இது தான் எனக்கு பயமாக இருக்கிறது. என்னைப் பார்த்து கடிந்து எதையாவது சொல்லி வேலைநீக்கம் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்என்றார் நண்பர்.
அதன் பிறகு நாங்கள் சோகமாய் புன்னகைத்து கைகுலுக்கி பிரிந்தோம்.

அன்று என் மேஜைக்கு திரும்பியதும் அலுவலகத்தில் என்னைச் சுற்றி மிகுந்த நட்புணர்வுடன் புழங்குகிறவர்களை கவனித்தேன். “இவர்கள் யார்? ஏனிப்ப்படி இருக்கிறார்கள்? இவர்கள் இப்படி போலியாக இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கே புரியவில்லையா?”

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தோழியுடன் புன்னகையைப் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்பு ராஜ்டிவியில் அடிக்கடி வெளிவரும் பாலு ஜுவல்லர்ஸ் விளம்பரம் பற்றி குறிப்பிட்டார். அழகான பால் சிரிப்பு. பாசாங்கற்ற சிரிப்பு. அந்த விளம்பரம் பார்க்கும் போதெல்லாம் அவர் நம்மை தனது வீட்டுக்கு விருந்துக்கு அன்பாய் அழைப்பது போல இருக்கும் என்றார். அதன் பிறகு பாலு ஜுவல்லர்ஸ் அரசியல்வாதிகள் சிலரது சூழ்ச்சியால் வியாபாரம் குலைந்து நலிவுற்றதை குறிப்பிட்டு வருந்தினார் தோழி. இன்று அவரைப் போல குழந்தைத்தனமான சிரிப்பு கொண்டோரை விளம்பரங்களில் பார்க்க முடிவதில்லை என்றார். இன்று அத்தகைய திறந்த, ஆத்மார்த்த சிரிப்புகளுக்கு இடமில்லை, அதற்கு மதிப்பும் நமது கார்ப்பரேட் உலகில் இடமில்லை என்று பேசினோம். இந்த உரையாடல் என்னை இது குறித்து மேலும் சிந்திக்க வைத்தது. நாம் இன்றைய தலைமுறையினரை குற்றம் சொல்ல முடியாது, பிளாஸ்டிக்தன்மை அவர்கள் மீது திணிக்கப்படுகிறது, அதுவே இன்று செல்லுபடியாகிறது, அதுவே இன்று சௌகர்யமாய் உள்ளது. புன்னகையை நாம் இன்று ஒரு கவசமாய் பயன்படுத்திக் கொள்கிறோம் எனத் தோன்றியது. இன்று நாம் திரு. பாலுவிடம் இருந்து laughing therapy பயிலும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்து பிரகாஷ்ராஜ்களிடம் வந்து சேர்ந்திருக்கிறோம். கோபத்தில் இருந்து தப்பிக்க சிரியுங்கள் எனும் அவரது உச்சபட்ச அணுகுமுறை நாம் எடுப்பதில்லை என்றாலும் கோபம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து தப்பிக்க மென்மையாக அனைவரையும் கண்டு புன்னகைத்து விலகிச் செல்பவர்களாக மாறி இருக்கிறோம்


கடந்த சில பத்தாண்டுகளில் positive psychology எனும் உளவியல் வகைமை தோன்றியுள்ளது. இதன் கொள்கை பரப்புச் செயலாளர்களேவெற்றி உங்கள் வாசலில் காலிங் பெல்லை அடித்தபடி நிற்கிறது...” என்பது போன்ற புத்தகங்களை எழுதுவார்கள். இவர்கள் இடையே சிக்ஸென்மிகாய், ஆண்டெனி ராபின்ஸ், பிரையன் டிரேஸி போன்ற முக்கிய சிந்தனையாளர்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இவர்களை வாழ்க்கை பயிற்சியாளர்கள் (life coaches) என அழைக்கிறார்கள். வாழ்க்கையை வாழ எதற்கு பயிற்சி? ஆம், இன்றைய கார்ப்பரேட் உலகம் நமது வாழ்க்கை அணுகுமுறையை முழுக்க மாற்றி அமைக்க விரும்புகிறது. மனித உணர்வுகளில் நுகர்வுத் தகுதி கொண்டவை எவை என கார்ப்பரேட்டுகள் சிந்திக்க தொடங்கிய போது இயல்பாகவே மகிழ்ச்சியையே மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் நாடுகிறார்கள் என புரிந்து கொண்டது. குடும்பம், சாதி சனம் போன்ற சமூக கட்டமைப்புகள் தகர்ந்த உலகப்போர்களுக்கு பின்பான ஐரோப்பாவில் தனித்த மனிதர்கள் அதிகமாய் உளநோய்களுக்கு ஆட்பட்டார்கள் என எரிக் புரோம் தனது Fear of Freedom நூலில் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட்டுகள் இப்போது மகிழ்ச்சியை ஒரு பண்டமாக உருமாற்றி விற்க முடியும் என புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சி கைக்கொள்ளத்தக்க ஒரு பொருள் அல்லவே! அதனால் அவர்கள் பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு மகிழ்ச்சி சந்தையையே உருவாக்குகிறார்கள். சினிமா, டி.வி, உணவகம், பயணம், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றில் இருந்து சமூக உறவாடல்கள் வரை இந்த மகிழ்ச்சி சந்தை இன்று விரிவடைந்துள்ளது. நீங்கள் சிரித்தபடி ஒரு உற்சாகமான சூழலில் ஒரு செல்பியை பேஸ்புக்கில் வெளியிடுகிறீர்கள். அதற்கு பலர் உடனடி விருப்பக்குறிகளை அளிக்கிறார்கள். நீங்கள் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு கசப்பான ஒரு வாக்கியத்துடன் மற்றொரு செல்பியை பதிவேற்றுகிறீர்கள். அதற்கு மிகச்சிலர் விருப்பக்குறிகளை அளிக்கிறார்கள். சிலர்என்னாச்சு?” என விசாரிக்கிறார்கள். பலரும் துயரத்தை சீண்ட விரும்பாமல் கடந்து போகிறார்கள். முன்புஇது நான் எனது கடைசி நாள். நான் செத்து விடப் போகிறேன்.” என சிலர் பேஸ்புக்கில் அறிவித்து விட்டு offlineக்கு போய் விடுவாரக்ள். அவரது நண்பர்கள் என்னாச்சோ ஏதாச்சோ என பதறுவார்கள். அடுத்த நாள் அவர் திரும்ப வந்துசும்மா விளையாடினேன்என சிரிப்பார்கள். வேறு சிலர் தன்னை யாரும் சாவின் விளிம்பில் கூட பொருட்படுத்தவில்லையே என கூடுதலாய் துயரத்தில் ஆழ்வார்கள். சமீபத்தில் ஒரு நண்பர் தன் தோழி ஒருத்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய போதுநான் தற்கொலை முடிவெடுத்த போது இவர் மட்டுமே என்னை அக்கறையாய் போன் செய்து விசாரித்தார்என குறிப்பிட்டிருந்தார். இன்று இத்தகைய பொதுவெளி தற்கொலை மிரட்டல்களுக்கு மதிப்பு குறைந்து விட்டது. “சாவு, தற்கொலைபோன்ற சொற்களைக் கண்டாலே இரண்டு அடி தள்ளிப் போய் விடுகிறோம். இந்த விலகலுக்கும் மகிழ்ச்சி சந்தைக்கும் ஒரு நுட்பமான தொடர்பு உள்ளது.


மேலும் படிக்க “பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

https://www.minnambalam.com/k/2019/07/29/8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...