முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (3)



பெண்கள் எந்த சூழலையும் பளிச்சென்று, துடிப்பானதாக மாற்றி விடுவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் ஆளூமை மட்டுமல்ல, அவர்களுக்கு இந்த சமூகம் அனுமதித்துள்ள கலக உடல்மொழியும் தான்
பெண்களின் சமூக இயக்கம் என்பது தொடர்ந்து பல பிரச்சனைகள், விமர்சனங்கள், கண்டனங்கள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்களுக்கு நடுவில் தான் சாத்தியாகிறது; இதற்குக் காரணமும் அவர்களுக்கு இதே சமூகம் அனுமதிக்கும் கலக உடல்மொழி தான்; கலகம் செய்யும் அவர்களின் உடம்புக்கு சமூகம் அளிக்கிற தனியான வெளியும் தான்.

இதைப் புரிந்து கொள்ள நாம் இப்பெண்களை கன்னியாஸ்திரிகளுடன் ஒப்பிட வேண்டும். ஆர்ப்பாட்டமான, கண்ணைப் பறிக்கும் தோற்றத்துடன் செல்லும் ஏராளமான பெண்களுக்கு நடுவே ஒதுக்கமான, சுய-ஒடுக்கமான உடல்மொழியுடன் செல்லும் கன்னியாஸ்திரிகளை நான் கவனிப்பதுண்டு. அவர்களில் அழகிகள் உண்டு, ஆனால் அந்த அழகு யாருக்கும் பாதகமற்ற மழுங்கடிக்கப்பட்ட கத்தி. அந்த கத்தியினால் அவர்களுக்கும் சாதகம் இல்லை, பிறருக்கும் பாதகமில்லை; அவர்களின் உடம்பென்னும் கத்தியினால் அவர்களுக்கும் பாதகமில்லை; சமூகத்துக்கும் சாதகமில்லை. சமூகப் பண்பாடு அளிக்கும் பல குறியீடுகளை ஒரு பெண் எடுத்து பயன்படுத்துவதே அவளை அதிகாரத்தை நொறுக்கும் உடல்மொழி கொண்டவளாக்குகிறது. தன்னளவில் ஒரு பெண்ணுக்கு எந்த ஆற்றல் இல்லை. கலாச்சாரக் குறியீடுகளை கைவிடுகிறவளே ஒரு கன்னியாஸ்திரி - அவள் வெறுமனே பாலியலையோ உடைமைகளின் மீதான உரிமையையோ துறப்பவள் மட்டும் அல்ல. தன் அடியாழத்தில் ஒரு கன்னியாஸ்திரி பிறந்து வளர்ந்த குழந்தையைப் போன்றவள். ‘வெறுமனேதன் உடம்பை வைத்து என்ன பண்ணுவது எனப் புரியாமல் அவள் திகைக்கிறாள்; பிறகு மதத்துக்குள், அதன் சடங்குகளுக்குள் (ஒரு ஆண் சமூக இருப்பிடம் தன் உடம்பை ஒப்படைப்பதைப் போல) போய் ஒடுங்கிக் கொள்கிறாள். இதனாலே அவர்களிடம் சுலபமாக ஆண்மொழி தோன்றி விடுகிறது. இந்த இடத்துக்கு வந்து சேரும் கன்னியாஸ்திரி தேவாலயமும் மடமுமே தன் மொழி என நம்ப தலைப்படுகிறாள். இப்போது அவளுக்கு ஒரு விசயத்தில் ஆறுதல் கிடைக்கிறது - லௌகீக வாழ்வில் இருக்கும் பெண்களை விட தான் அதிக சுதந்திரம் கொண்டளாக உள்ளதை அவள் அறிகிறாள். உடம்பின் மீதுள்ள உரிமையினால், அது தரும் தனித்துவத்தினால் ஒரு பெண் இழக்கும் சுதந்திரத்தை மற்றொரு பெண் முன்னதை இழந்து பெறுகிறாள்
ஒரு கன்னியாஸ்திரி தன் அங்கியை அணிந்து சிலுவையை மாரில் அணியும் போது பெறும் அந்த பாலியலற்ற தேகத்தின் சுதந்திரத்தையே ஆணும் சிறுவயது முதலே அனுபவிக்கிறான். அவனால் தெருவில் ஒன்றுக்கு போக முடியும்; நடைபாதையில் முழுபோதையில் லுங்கி விலகியது கூடத் தெரியாமல் படுத்து தூங்க முடியும். ஆனால் அதைக் கடந்து நோக்கினால் அவனுக்கு இந்த சமூகத்துடன் உறவாட ஒரு மொழி இல்லை, பண்பாட்டு குறியீடுகளை எடுத்தாள ஒரு பயிற்சியோ சாத்தியமோ வெளியோ இல்லை. இதனாலே ஒரு ஆணும் கன்னியாஸ்திரியும் ஒரே உடல்மொழியை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சூழலுக்குப் பொருந்துகிற உடல்வெளிப்பாடு என்பதையே நவீன அதிகாரம் நம்மிடம் கோருகிறது. இதை வலியுறுத்துகிற அதே சமயம் ஒரு சூழலுக்கு பொருந்தாத உடல் வெளிப்பாட்டை அது பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கிறது (ஜிம்முக்கு இறுக்கமான டிராக்பேண்ட், டிஷர்ட் அணிந்து வரும், கோயிலுக்கு பளீரென பட்டுச்சேலையில் வரும் பெண்களை நினைவில் கொள்ளுங்கள்). பெண்களின் உடல் இயல்பாகவே எந்த ஒரு தர்க்க ஒழுங்குக்குள்ளும் ஒடுங்காத பேரொழுக்கு (அதுவே அவர்களின் மொழியாக இலக்கியத்திலும் உள்ளது), ஆனால் ஆண்களின் உடல்மொழியும், சமூக மொழியும் இருமைகளுக்குள் சிறைப்பட்ட இறுக்கமான ஒன்று என ஹெலன் சிக்ஸூ எனும் பெண்ணியவாதி தனது The Laugh of the Medusa எனும் கட்டுரையில் சொல்கிறார். அதாவது கலகம் என்பது பெண் இருப்பின் அடிப்படையாக இயல்பாகவே உள்ளது. அதனால் தான், ஆண்களைப் போன்றே, formal attire அணியும் சந்தர்ப்பம் வரும் போது அவர்கள் சேலை அணிந்து வந்து அதிகாரத்தின் நோக்கத்தை முறியடிக்கிறார்கள்; கார்ப்பரேட் அலுவலகங்களில் சட்டை, கால்சராய் அணிந்து வரும் பெண்களும் தமது லிப்ஸ்டிக், கூந்தலின் ஸ்டைல், ஆளை அடிக்கிற ஒப்பனை, வாசனை திரவிய, உள்ளாடை மூலம் மாரை மேலெடுத்துக் காட்டுவது என அலுவலக வேலை கோரும் தர்க்கத்துக்கு நேரெதிரான அரசியலை தம் உடல்மொழியால் நிகழ்த்துகிறார்கள். கராறான ஆவணங்கள், பி.பி.டியுடன் ஆண்கள் முறுக்கான எந்திரத்தனத்துடன் நடத்தும் அலுவலக கூட்டங்களில் வந்து விடும் இப்பெண்கள், அக்கூட்டங்களில் தம் சீரான பங்களிப்பை வழங்கியபடியேஒரு நொடியில் அதன் அரசியலை நேர்கீழாக மாற்றி விடுகிறார்கள்.

பகுதி நான்கைப் படிக்க:

https://thiruttusavi.blogspot.com/2019/11/4.html


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.