முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் வரும்!




என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல். அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன். சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும், தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை. அது மட்டுமே காரணம். சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன. காலச்சுவடு, க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு, வேற்று மொழித் தொடர்புகள், தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் முக்கிய நூல்கள் இன்னும் தமிழுக்கு வெளியே அதிகம் கிடைக்கவில்லை. இது ஒரு அவலம் என்றே சொல்வேன். எழுத்தாளன் நிச்சயம் இதன் பின்னால் அலைய முடியாது.

 மனுஷ்யபுத்திரனின் இந்த நூல் மொழியாக்கம் கூட மிக எதேச்சையாக நடந்ததே. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்பது என் ஆசை. இப்போதே பிராந்திய மொழிகளை  கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டம் போடத் தொடங்கி விட்டன. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படும் நூல்களில் இருந்து கவனம் இனி பெருமளவு பிராந்திய மொழியாக்கங்களுக்கு மாறும் என நினைக்கிறேன். இப்போது கூட நம்முடைய எழுத்தாளர்களை ஆங்கிலப் பாடத்திட்டங்களில் பரிந்துரைப்பதற்கு பெரிய தடையாக மொழியாக்கமே உள்ளது. அசோகமித்திரனை பிற மொழியினருக்கு தெரிந்த அளவுக்கு ஏன் புதுமைப்பித்தனையோ நகுலனையோ தி.ஜா, ஜி.நாகராஜன், .சா.ராவையோ தெரியவில்லை என நான் வியந்ததுண்டு. ஈழ இலக்கியம் என ஒன்று இருப்பதே இங்கு கல்விப்புலத்தில் பலரும் அறிய மாட்டார்கள் (ஷோபா சக்தியின் சில நூல்கள் மொழியாக்கப்பட்டதாய் அறிகிறேன்). ஆங்கிலத்தில் இவர்களின் புத்தகங்கள் போய் சேராதது தான் மிகப்பெரிய காரணம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மொழியாக்கினால் கூட அது பெரிய கவனம் பெறும் என நினைக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்தொண்ணூறுகளின் இறுதியில் மொழியாக்கப்பட்டிருந்தால் அது அப்போது பிரசித்தமான பல ஆங்கில இந்திய நாவல்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கும் என கணிக்கிறேன் - அதற்கு ஏற்ற ஒரு அகில இந்தியத்தன்மை அந்நாவலுக்கு உண்டு; மேலும் சுதந்திரம் பெற்றதற்கு பின்பான இந்தியா குறித்தான ஒரு நீதிக்கதையாகவும் அந்நாவலைப் படிக்க முடியும்


நான் பெங்களூருக்கு வந்த பிறகு என்னுடையகால்கள்நாவல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா என அடிக்கடி யாராவது விசாரிப்பார்கள். அப்போது நான் என் முன்னோடிகளை நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு நிகழாதது எனக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். ஆனால் ஒருநாள் வரும். அன்று உலகம் முழுக்க நம் எழுத்துக்கள் பேசப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...