முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனது நண்பன் எனது நண்பன் அல்ல



தெரிதா தனது The Politics of Friendship (நட்பின் அரசியல்) என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில்  கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலின் ஒரு மேற்கோளைப் பற்றி வெகுசுவாரஸ்யமாக பேசுகிறார்: அரிஸ்டாட்டில் தன் நண்பர்களிடத்து இவ்வாறு ஒருமுறை சொல்லுகிறார்: “ நண்பர்களே, நண்பர்கள் என யாருமே இல்லை”. இந்த மேற்கோளின் சுயமுரண் வெளிப்படையானது - நண்பர்களே இல்லையென்றால் அரிஸ்டாட்டில் இங்குநண்பர்களேஎன அழைத்து பகிர்ந்து கொள்ளும் அந்த நபர்கள் எல்லாம் யார்? அரிஸ்டாட்டில் என்னதான் சொல்ல வருகிறார்? தெரிதா இவ்வாறு விளக்குகிறார் - நட்பு என்பது யாரெல்லாம் நமது நண்பர் அல்ல என நாம் வகுத்துக் கொண்ட பின்னர் தோன்றுகிறது. நீ எனது நண்பன், ஏனெனில் அவன் எனது விரோதி, அவன் எனது விரோதி எனில் அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு நண்பன், அவன் எனக்கு நண்பன் எனில் என் விரோதிக்கு அவனும் விரோதி, அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு விரோதி, ஏனெனில் அவன் என் நண்பனுக்கு நண்பன் அல்ல, இன்னும் ஒருவன் எனக்கு நண்பனோ விரோதியோ அல்ல, அவனை இரண்டு வகைமைக்குள்ளும் அடைக்க முடியவில்லை, அவன்துரோகியாகஇருக்க வேண்டும், அவனுக்கு எதிர் இருக்கையில் இருப்பவன் அவனுக்கு விரோதி என அறிவேன், ஆனால் அதற்காக அவன் எனக்கு நண்பன் ஆக முடியாது, ஏனெனில் ஒரு துரோகியின் விரோதியும் விரோதியின் விரோதியும் ஒன்றல்லன்.


 நீங்கள் கேட்கலாம், நமது நண்பர்களை எல்லாம் இவ்வாறான இருமைக்குள்ளா வகுத்து கொண்டிருக்கிறோம் என. “நண்பன்எனும் கோரல் எப்போதும் இருமையை வலியுறுத்துகிறது, ஆனால் நட்பனுபவத்தில் இருமை இருப்பதில்லை. (அதற்கு பின்னால் வருகிறேன்.) நட்பு மிக அந்தரங்கமான உறவு - நீங்கள் உங்களுக்கு பரிச்சயமானவர்களின் வட்டத்தில் இருக்கும் போது ஒருவரை மட்டும் கட்டி அணைத்துஇவன் என் நண்பன்எனச் சொல்வது பரவலான சங்கடத்தை ஏற்படுத்தும்; மற்றவர்கள் தாம் புறக்கணிப்படுவதாய் ஒரு கணம் உணர்வர். ஆகையால் நாம் இப்படி அடையாள்பபடுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்த அப்போது முயல்வோம். நமது நட்பு இவ்விடத்தில் அதுவரை நாம் நினைத்திருந்ததைப் போலசாதாரணமானதுஅல்ல, அது அசாதாரணமானது என உள்ளுணர்வில் அறிந்து கொள்வோம். பரிச்சயக்காரர்களின் அசௌகர்யத்தின் மௌனத்தில் தான் அந்த மனத்திறப்பு நமக்குக் கிட்டும். ஒருவர் தனது நட்பை பிரகடனம் செய்யும் போதெல்லாம் அது ஒரு அந்தரங்க ஒளிவட்டத்தைப் பெற்று விடுவது இதனாலே - இப்படியான பிரகடன நிலையை நட்பின் சமூகமாக்கம் எனலாம். ஆனால் பிரகடனம் செய்யத் தேவையிராமல் நண்பர்கள் பரஸ்பரம் சந்தித்து மனங்கள் ஒன்றுடன் ஒன்றுசெம்புலப்பெயல் நீர்போல் கலக்கையில் அங்கு சங்கடங்கள், அந்தரங்கம், அது குறித்த பிரக்ஞை ஏதும் இராது. நட்பனுபவம் என அதை நாம் வரையறுத்துக் கொள்வோம்.  

நட்பனுவத்தில் நண்பன் என்பவன் நண்பன் அல்லாமல் ஆகிறான் என்கிறார் தெரிதா (அதுவே அரிஸ்டாட்டிலின்  மேற்கோளின் பொருள்). அப்போது நண்பன்-விரோதி எனும் இருமை பனிப்புகை போல மறைந்து விடுகிறது. அதனால் தான் அரிஸ்டாட்டில் நண்பர்களே நண்பர்கள் யாருமில்லை என்கிறார், நண்பர்களே நண்பர்கள் அனைவரும் எதிரிகள் என அவர் சொல்லவில்லை. இந்த நுணுக்கமான வித்தியாசம் முக்கியமானது. ஒருவன் நமது விரோதி அல்லாமல் ஆகும் போதே நண்பன் ஆகிறான், ஆனால் அவன் நண்பன் ஆன பின் அவன் நமது நண்பனும் அல்லாமல் ஆகிறான், அவன் நாமாகவே ஆகிறான், நாம் அவனாகவே ஆகிறோம். இதை நட்பின் பூரண நிலை எனலாம். (நட்பின் சம்போகம்!)

அரிஸ்டாட்டில் நண்பர்களை பொதுவாக மூன்றாக பிரித்துக் கொள்கிறார் - 1) ஒரு நோக்கத்தின், ஒரு பொதுவான தேவையின் பொருட்டு சேர்ந்திருக்கும் நண்பர்கள் (ஒரே துறையில் பணியாற்றுபவர்கள், சக படைப்பாளிகள், ஒரே கட்சிக்காரர்கள், ஒரே லட்சியம் கொண்டவர்கள்); 2) பரஸ்பரம் அளிக்கும் இன்பத்தின் பொருட்டு நட்பாகிறவர்கள் (சுவாரஸ்யமாகப் பேசுகிறவர்கள், பணம் செலவழிக்கிறவர்கள், இனிமையான சுபாவம் கொண்டவர்கள், வசீகரமான ஆளுமை கொண்டவர்கள்) - இலக்கியத்தில் நாம் காணும் குரு-சிஷ்ய நண்பர்களையும் இவ்வகைமையில் சேர்க்கலாம் என நினைக்கிறேன். 3) நண்பனின் நலனில் மகிழ்ச்சியியும் நிறைவும் காண்கிறவர்கள் - இவர்கள் தான் வள்ளுவர் சொல்லும்உடுக்கை இழந்தவன் கைவகையினர். தான் எப்படி இருக்க முடியாதோ, எப்படி இருக்க விரும்பவில்லையோ அப்படி தன் நண்பன் இருப்பதால் அதை ஊக்கப்படுத்துவார்கள்; நண்பனின் மகிழ்ச்சியும் எழுச்சியும் தன்னுடையது என நம்பத் தலைப்படுகிறவர்கள்; நண்பனும் இவர்களை அப்படியே காண்பதால் இவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்வார்கள் - ஒருவனுக்கு இரு வாழ்க்கைகள் என கற்பனை பண்ணிப் பாருங்கள். இது பாரமாக அல்ல தனி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே கவனிக்கத்தக்கது. இந்த நிலை படைப்பாக்கத்துக்கு இணையானது - நண்பனுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனை வருகிறது, கடும் துன்பத்தில் விழுகிறான், நீங்கள் அவனுக்காக வருந்துகிறீர்கள், ஆனால் அந்த வருத்தம் நீங்கள் உங்களுக்காக வருந்துவதைப் போன்றதல்ல. இந்த வருத்தத்தில் ஒரு மனவிடுதலை இருக்கிறது. நீங்கள் களைத்துப் போகிறீர்கள், மனம் புண்படுகிறீர்கள், கண்ணீர் சிந்துகிறீர்கள், ஆனால் அதன் முடிவில் உங்களை ஒரு சிறிய பரவசம் வந்து ஆட்கொள்கிறது. நண்பனின் வெற்றியைக் கொண்டாடுவதும் இப்படியே. சொல்லப் போனால் நண்பனின் வாழ்வில் ஒரு துன்பம் நேர்கையில் நீங்கள் நண்பனை விட அதிகமாய் அல்லல்படுகிறீர்கள், அவன் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி வருகையில் அவனை விட அதிகமாய் அதைக் கொண்டாடுகிறீர்கள், இரண்டின் போது உங்களுடையது அல்லாத ஒன்றில் மனம் தோய்கிறீர்கள். அது ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம் அழுவதைப் போன்றது, சிரித்து ஆட்டம் போடுவதைப் போன்றது, ஆனால் உங்கள் உணர்ச்சிகள் நடிப்பல்ல. இந்த மூன்றாவது வகை நண்பர்களையே அரிஸ்டாட்டில் உன்னதமானவர்கள், ஆனால் இவர்கள் அரிதானவர்கள் என்றார்.

நன்றி: உயிர்மை.காம், அங்கே என்ன சத்தம் (6)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.