முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை


டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்கஎன கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாக கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம் சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பல கேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது:
1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே (70 வருடங்களாக) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே. இது நுரையீரலை பாதிக்கும்; அதனால் சளி, ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும். இதே காரணத்தாலே இது பரவுவது எளிது. கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய் பரவும் என்பது மட்டுமே. அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும் வைரல் தொற்று மட்டுமே.

 அதாவது கொரோனா பீதி தோன்றுவதற்கு முன்பும் நமக்கு சளித்தொல்லை ஏற்பட்டிருக்கும் இல்லையா, அதுவும் மூன்றில் ஒன்று கொரோனாவால் ஏற்பட்டது தான், ஆனால் என்ன அது கோவிட்-19 வகை கொரோனா இல்லை என்பது தான் வித்தியாசம். இப்போது பரவி வருவது சற்று வீரியம் கொண்ட ஒரு தூரத்து உறவு வைரஸ் மட்டுமே அன்றி அது உலகை அழிக்கக் கிளம்பி வந்த ஒரு படுபயங்கர கிருமி அல்ல. ஏற்கனவே நமக்குப் பரிச்சயமான ஒரு கிருமி தற்போது ஒரு முகமூடி போட்டுக்கொண்டு புதிய ஆயுதங்களுடன் வந்திருக்கிறது. அந்த ஆயுதங்களும் ஒன்றும் அணு ஆயுதம் அல்ல. இது தான் அடுத்த முக்கிய கருத்து.
2) மக்களில் 96.5% பேர்களை இந்த கொரோனா வைரஸ் கொல்லாது. 3.5% மக்கள் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். இந்த 3.5% கூட ஏற்கனவே ஆரோக்கியம் இல்லாதவர்கள் தாம். குறிப்பாக வயோதிகர்கள். வயோதிகர்களில் பல வியாதிகள் கொண்ட, சுலபத்தில் பல தொற்றுகள் பெறும் வாய்ப்புள்ள, தொற்று வியாதி வந்தால் அதை சமாளிக்கும் தற்காப்புத்திறன் அற்றவர்கள். அதாவது நூறு பேரில் மூன்று நான்கு பேர்கள் சாவார்கள் எனப் பொருளில்லை - இதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்; நூறு பேரில் ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் இருக்கிற 3.5% பேர் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். யோசித்தால், இத்தகைய பலவீன உடல்நிலை கொண்டவர்கள் எந்த ஒரு வைரல் தொற்று வந்தாலும் மரணிக்கக் கூடியவர்களே. நீங்களே கவனித்திருப்பீர்கள், மழைக்காலத்தில் வைரல் ஜுரம் பரவும். அப்போது வயதாகி பல பிரச்சனைகளுடன் போராடி படுக்கையில் ஓய்வெடுக்கும் ஆட்கள் திடீரென ஜுரம் வந்து இறந்து போவார்கள். மழை / பனிக்காலத்தில் வயசாளிகள் இறந்து போவது போலத் தான் கொரோனா காலத்தில் அவர்கள் இறக்கப் போகிறார்கள். இப்போது கொரோனா பீதியின் போது இத்தகைய மரணங்கள் காக்காய் அமர்ந்து பனம்பழம் விழுந்ததைப் போல ஆகி விடுகிறது.

கோவிட்-19 வழக்கமான ஒரு வைரஸ் தான் என்றால் ஏன் இப்படி பரபரப்படைகிறோம்? ஏன் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்?

இது ஒரு புதிய வைரஸ் என்பதால் இதற்கான மருந்தோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக, அரசாங்கங்கள் உலகம் முழுக்க பீதி அடைந்து மக்களைத் தனிமைப்படுத்தி வியாதி பரவுவதை தடுக்க முயல்கின்றன. ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி கொரோனா பயத்தை அதிகப்படுத்துகின்றன. வாட்ஸ்-ஆப் பார்வர்டுகள் இந்நிலையை இன்னும் மோசமாக்குறது. ஆக அரசின் நடவடிக்கைகளும் ஊடகங்களும் தாம் கொரோனா பீதிக்கு காரணமே ஒழிய பெருமளவு மக்கள் இதனால் பலியாகியுள்ளதால் அல்ல.

யார் கவலைப்பட வேண்டும்?
ஆஸ்துமா நோயாளிகள், புற்றுநோய் உள்ளவர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பண்ணிக் கொண்டவர்கள், கட்டுப்படுத்தாத ரத்த சர்க்கரை கொண்டவர்கள், வேறுபல தீவிர நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.

யார் அதிகம் கவலைப்பட வேண்டாம்?
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வந்தால் பெரிதும் பாதிக்காது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஏன் கொரோனா அவர்களிடம் மட்டும் கருணையுடன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

யார் கவலைப்பட வேண்டாம்?

நம்மில் ஆரோக்கியமானவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு சில நாட்கள் தும்மல், ஜுரம் என ஏற்பட்டு கொரோனா நம்மிடம் பிரியாவிடை பெற்று அடுத்தவர்களிடம் சென்று விடும்.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்-ஆப்பை அடுத்து வரும் சில வாரங்களுக்கு படித்து மண்டை குழம்ப வேண்டாம்.


ஏப்ரல் மாதத்தில் இருந்து நாம் வேலைக்குத் திரும்புவது நல்லது. இல்லாவிட்டால்  ஏற்கனவே நிர்மலா சீத்தாராமன் அழித்து முடித்த இடத்தில் இருந்து கொரோனா பீதி நம் பொருளாதாரத்தை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி விடும்

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தேவையற்ற பதட்டம் ஓரளவு தணிந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...