Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சைவ உணவு உண்கிறவர்கள் யார்?



நான் அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு EPW கட்டுரை (“Deepening Divides” - Suraj Jacob and Balmurli Natrajan) ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பதிலை இக்கேள்விக்கு அளிக்கிறது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என கடந்த இரு பத்தாண்டுகளில் எங்கெல்லாம் இந்துத்துவா எழுச்சி பெற்றுள்ளதோ அங்கெல்லாம் சைவப் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. வழக்கம் போல தெற்கத்தி மாநிலங்களில் சைவப் பழக்கம் குறைவாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள் (பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாய் சைவ உணவை விரும்புகிறார்கள் என்றும் இது சொல்கிறது). ஆனால் ஒரு அரசியல் சித்தாந்த எழுச்சியையும் மக்களின் உணவுப் பழக்கங்களின் மாற்றங்களையும் நேரடியாக தொடர்புபடுத்தி விட முடியாது என்பதையும் ஏற்கிறேன். அதே நேரம் இந்த இந்துத்துவ-சைவ உணவு லிப்-லாக்கையும் மறுத்திட முடியாது.


 எனக்கு இதைப் படித்ததும் முதலில் நான் சென்னைக்கு 2000இல் வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி நினைவுக்கு வந்தது - மெஸ்ஸில், உணவகங்களில் எங்கும் பார்த்தாலும் மக்கள் பொரியல், சாம்பார், ரசம் என வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இந்த முழுநேர சைவ உணவை ஜனங்கள் எப்படி குமட்டாமல் சாப்பிடுகிறார்கள் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. எங்கள் ஊரில் (தக்கலை-நாகர்கோவில்) சைவ உணவுக்கென கௌரிசங்கர் என நெய் மணக்கும் ஒரு உணவகம் தான் இருக்கும். மற்றபடி எங்கு போனாலும் மதிய உணவுக்கு மீன்குழம்பு இல்லாமல் ஆகாது. எங்கள் குடும்பம் வறுமையில் இருந்த (அப்பாவின் ஊதியம் கணிசமாக வங்கிக்கடனைக் கழிப்பதற்கு சென்று விடும்) சில வருடங்களில் கூட அம்மா தினமும் முப்பது ரூபாய்க்கு மீன் வாங்கி குழம்பு வைக்காமல் சோறு போட மாட்டார். கடும் வறுமையில் இருப்பவர்களுக்குக் கூட மீன் வாசனை இல்லாமல் சோறு இறங்காது. எங்களுக்கு மீன் உணவு என்பது சொகுசு அல்ல; மீன் வாசனை எஙகளுக்கு சுவாசக் காற்று போல. இதனால் சென்னைக்கு வந்த புதிதில் இந்த ஊர் மக்களெல்லாம் ஐயமாருங்களோ என எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு; ஆனால் நான் கண்ட சைவ உணவாளர்கள் பெரும்பாலும் மத்திய சாதியை சேர்ந்தவர்களே. ஒருவேளை மீன் விலை இங்கு அதிகமோ என யோசித்தேன். ஆனால் நான் பிற்பாடு கண்டுபிடித்த தட்டுக்கடைகளில் மீன்குழம்பு கிடைத்தது. மீன் குழம்புடன் தோசை சாப்பிடுவதற்காக ஒரு சிறிய உணவகத்தைத் தேடி நான் வார இறுதிகளில் அப்போது ஈஸ்ட் தாம்பரம் வரை செல்வதுண்டு. அந்த கடையையும் சில நாட்களில் மூடி விட நான் மனம் உடைந்து போனேன்
சென்னையில் நான் கண்ட மற்றொரு விநோதம்: இடைநிலை உணவகங்கள் என்றால் 99% சைவம் தான். ஆனால் 2005க்குப் பிறகு நிறைய உயர்த்தட்டு அசைவ உணவகங்கள் தோன்ற ஆரம்பித்தன. சிக்கன் உணவு ஒரு வார இறுதிக் கொண்டாட்டமாகியது. சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன் எல்லாம் அங்கு தான் கண்டு (உண்டு) மயங்கினேன். நான் படிக்க சென்ற காலத்தில் சிக்கன் பிரியாணி ஒரு அரிய உணவு; எங்கள் கல்லூரிக்கு எதிரே இருந்த ஒரு பிரியாணிக் கடையில் 11:30க்கு முன்னால் சென்றால் 15 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். அதற்காக நாங்கள் காலை உணவை சாப்பிடாமல் சீக்கிரமே அங்கு சென்று காத்திருந்து உண்போம். (50 ரூ அன்று பெரிய தொகை.) ரெண்டாயிரத்தின் இறுதியில் நான் மக்கள் அதிகமாய் வெளீயே சென்று அசைவ உணவுகள் உண்பதைக் கண்டேன். கடந்த ஒரு பத்தாண்டில் சிக்கன் பிரியாணி என்பது பரவலாக மக்கள் உண்ணும் உணவாகியது. சொல்லப் போனால் ஒரு இடைநிலை சைவ ஓட்டலில் மதிய சாப்பாட்டை விட பிரியாணி சாப்பிடுவது குறைவாகவே கையைக் கடித்தது. மக்களின் சராசரி வருமானம் வளர்ந்ததும் இதற்கு மற்றொரு காரணம் (ஆனால் அப்போதும் சைவ சாப்பாட்டின் விலை உயர்ந்தது ஒரு வினோதம்).
 கே.எப்.ஸி போன்ற அமெரிக்க பிராண்டுகள் இங்கே கடை விரித்ததும் பொரித்த சிக்கன் பகோடா, வாழைக்காய் பஜ்ஜி போல ஆகியது. வார இறுதிகளில் மக்கள் மக்கள் ஸ்நாக்ஸ் போல பொரித்த சிக்கனை உள்ளே தள்ளும் விநோதம் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் அசைவ உணவு சைவ சாதிகளுக்கு சற்று நெருக்கமானது; சிக்கன் சற்றே மசாலா போட்டு பொரித்த உருளைக்கிழங்கு, காலி பிளவர் போன்ற ஒரு சங்கதி தானே என அவர்கள் நினைக்க கே.எப்.ஸி போன்ற பிராண்டுகள் காரணமாகின. சிக்கன் பீப், மட்டன் அளவுக்கு அசைவம் அல்ல என சைவர்கள் நம்பத் தொடங்கினர். வீட்டில் சைவமும் வெளியே அசைவமுமாய் மாறின பிராமண நண்பர்களை அறிவேன்.

இந்த சிக்கன் புரட்சியைப் பற்றி யோசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது - நான் ஊரில் இருக்கும் போது சிறுவயதில் வருடத்திற்கு இருமுறை சிக்கன் என்பதே வழக்கம். அது பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என மாறியது. கடந்த பத்தாண்டில் நிச்சயமாய் கிட்டத்தட்ட தினமும் அசைவம் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இதில் ஒரு பங்கிருக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல, இடைநிலை சாதிகளின் எழுச்சிக்கும் இதில் மிகப்பெரிய பங்குண்டு. ஒரு சமூகத்தில் எந்தெந்த சாதிகளின் தொகை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் உணவுப்பழக்கம் அங்கு பரவலாகும். கேரள ஜனங்களுக்கு மாட்டுக்கறி ருசி அதிகம். இங்கே பெங்களூரில் கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மலையாளிகள் அதிகமாய் வசிக்கிறார்கள் என்பதால் கணிசமான உணவகங்கள் அவர்களுடையதே. அதனாலே இங்கு மீனும் மாட்டுக்கறியும் கடைகளில் அதிகமாய் கிடைக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் சைவமே இப்பகுதியில் தலைதூக்கியிருக்கும். உணவு ஆதிக்கம் என்பது நுட்பமாக ஒரு சமூகக் கூட்டுமனத்தில் செயல்படும் விழைவு. இதை எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை வைத்து புரிந்து கொள்ளலாகாது. மேற்சொன்ன கட்டுரையில் அவர்கள் குறிப்பிடும் வட மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சில சைவ சமூகங்கள் எழுச்சி பெற்றது தான் சைவ உணவு மற்றும் இந்துத்துவா அதிகரித்துள்ளதன் காரணமாக இருக்குமோ என தலைகீழாக எனக்குத் தோன்றியது
  இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கடைகளை அரசு தடை பண்ணுகிறது, ஆனால் காய்கனிகளின் விற்பனையை அனுமதிக்கிறது, இதன் அரசியல் என்ன, இஸ்லாமியர்களை ஒடுக்கும்பொருட்டு இதை செய்கிறார்களா என மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவொன்றில் கேட்டிருந்தார். அரசுக்கு அப்படி ஒரு நோக்கம் இருந்தால் அது வெற்றி பெறாது. மக்களின் உணவுப்பழக்கங்களை அப்படி எந்த அரசும் சுலபத்தில் மேலிருந்து கீழாக கட்டுப்படுத்த முடியாது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...