முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைவ உணவு உண்கிறவர்கள் யார்?



நான் அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு EPW கட்டுரை (“Deepening Divides” - Suraj Jacob and Balmurli Natrajan) ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பதிலை இக்கேள்விக்கு அளிக்கிறது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என கடந்த இரு பத்தாண்டுகளில் எங்கெல்லாம் இந்துத்துவா எழுச்சி பெற்றுள்ளதோ அங்கெல்லாம் சைவப் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. வழக்கம் போல தெற்கத்தி மாநிலங்களில் சைவப் பழக்கம் குறைவாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள் (பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாய் சைவ உணவை விரும்புகிறார்கள் என்றும் இது சொல்கிறது). ஆனால் ஒரு அரசியல் சித்தாந்த எழுச்சியையும் மக்களின் உணவுப் பழக்கங்களின் மாற்றங்களையும் நேரடியாக தொடர்புபடுத்தி விட முடியாது என்பதையும் ஏற்கிறேன். அதே நேரம் இந்த இந்துத்துவ-சைவ உணவு லிப்-லாக்கையும் மறுத்திட முடியாது.


 எனக்கு இதைப் படித்ததும் முதலில் நான் சென்னைக்கு 2000இல் வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி நினைவுக்கு வந்தது - மெஸ்ஸில், உணவகங்களில் எங்கும் பார்த்தாலும் மக்கள் பொரியல், சாம்பார், ரசம் என வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இந்த முழுநேர சைவ உணவை ஜனங்கள் எப்படி குமட்டாமல் சாப்பிடுகிறார்கள் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. எங்கள் ஊரில் (தக்கலை-நாகர்கோவில்) சைவ உணவுக்கென கௌரிசங்கர் என நெய் மணக்கும் ஒரு உணவகம் தான் இருக்கும். மற்றபடி எங்கு போனாலும் மதிய உணவுக்கு மீன்குழம்பு இல்லாமல் ஆகாது. எங்கள் குடும்பம் வறுமையில் இருந்த (அப்பாவின் ஊதியம் கணிசமாக வங்கிக்கடனைக் கழிப்பதற்கு சென்று விடும்) சில வருடங்களில் கூட அம்மா தினமும் முப்பது ரூபாய்க்கு மீன் வாங்கி குழம்பு வைக்காமல் சோறு போட மாட்டார். கடும் வறுமையில் இருப்பவர்களுக்குக் கூட மீன் வாசனை இல்லாமல் சோறு இறங்காது. எங்களுக்கு மீன் உணவு என்பது சொகுசு அல்ல; மீன் வாசனை எஙகளுக்கு சுவாசக் காற்று போல. இதனால் சென்னைக்கு வந்த புதிதில் இந்த ஊர் மக்களெல்லாம் ஐயமாருங்களோ என எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு; ஆனால் நான் கண்ட சைவ உணவாளர்கள் பெரும்பாலும் மத்திய சாதியை சேர்ந்தவர்களே. ஒருவேளை மீன் விலை இங்கு அதிகமோ என யோசித்தேன். ஆனால் நான் பிற்பாடு கண்டுபிடித்த தட்டுக்கடைகளில் மீன்குழம்பு கிடைத்தது. மீன் குழம்புடன் தோசை சாப்பிடுவதற்காக ஒரு சிறிய உணவகத்தைத் தேடி நான் வார இறுதிகளில் அப்போது ஈஸ்ட் தாம்பரம் வரை செல்வதுண்டு. அந்த கடையையும் சில நாட்களில் மூடி விட நான் மனம் உடைந்து போனேன்
சென்னையில் நான் கண்ட மற்றொரு விநோதம்: இடைநிலை உணவகங்கள் என்றால் 99% சைவம் தான். ஆனால் 2005க்குப் பிறகு நிறைய உயர்த்தட்டு அசைவ உணவகங்கள் தோன்ற ஆரம்பித்தன. சிக்கன் உணவு ஒரு வார இறுதிக் கொண்டாட்டமாகியது. சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன் எல்லாம் அங்கு தான் கண்டு (உண்டு) மயங்கினேன். நான் படிக்க சென்ற காலத்தில் சிக்கன் பிரியாணி ஒரு அரிய உணவு; எங்கள் கல்லூரிக்கு எதிரே இருந்த ஒரு பிரியாணிக் கடையில் 11:30க்கு முன்னால் சென்றால் 15 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். அதற்காக நாங்கள் காலை உணவை சாப்பிடாமல் சீக்கிரமே அங்கு சென்று காத்திருந்து உண்போம். (50 ரூ அன்று பெரிய தொகை.) ரெண்டாயிரத்தின் இறுதியில் நான் மக்கள் அதிகமாய் வெளீயே சென்று அசைவ உணவுகள் உண்பதைக் கண்டேன். கடந்த ஒரு பத்தாண்டில் சிக்கன் பிரியாணி என்பது பரவலாக மக்கள் உண்ணும் உணவாகியது. சொல்லப் போனால் ஒரு இடைநிலை சைவ ஓட்டலில் மதிய சாப்பாட்டை விட பிரியாணி சாப்பிடுவது குறைவாகவே கையைக் கடித்தது. மக்களின் சராசரி வருமானம் வளர்ந்ததும் இதற்கு மற்றொரு காரணம் (ஆனால் அப்போதும் சைவ சாப்பாட்டின் விலை உயர்ந்தது ஒரு வினோதம்).
 கே.எப்.ஸி போன்ற அமெரிக்க பிராண்டுகள் இங்கே கடை விரித்ததும் பொரித்த சிக்கன் பகோடா, வாழைக்காய் பஜ்ஜி போல ஆகியது. வார இறுதிகளில் மக்கள் மக்கள் ஸ்நாக்ஸ் போல பொரித்த சிக்கனை உள்ளே தள்ளும் விநோதம் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் அசைவ உணவு சைவ சாதிகளுக்கு சற்று நெருக்கமானது; சிக்கன் சற்றே மசாலா போட்டு பொரித்த உருளைக்கிழங்கு, காலி பிளவர் போன்ற ஒரு சங்கதி தானே என அவர்கள் நினைக்க கே.எப்.ஸி போன்ற பிராண்டுகள் காரணமாகின. சிக்கன் பீப், மட்டன் அளவுக்கு அசைவம் அல்ல என சைவர்கள் நம்பத் தொடங்கினர். வீட்டில் சைவமும் வெளியே அசைவமுமாய் மாறின பிராமண நண்பர்களை அறிவேன்.

இந்த சிக்கன் புரட்சியைப் பற்றி யோசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது - நான் ஊரில் இருக்கும் போது சிறுவயதில் வருடத்திற்கு இருமுறை சிக்கன் என்பதே வழக்கம். அது பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என மாறியது. கடந்த பத்தாண்டில் நிச்சயமாய் கிட்டத்தட்ட தினமும் அசைவம் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இதில் ஒரு பங்கிருக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல, இடைநிலை சாதிகளின் எழுச்சிக்கும் இதில் மிகப்பெரிய பங்குண்டு. ஒரு சமூகத்தில் எந்தெந்த சாதிகளின் தொகை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் உணவுப்பழக்கம் அங்கு பரவலாகும். கேரள ஜனங்களுக்கு மாட்டுக்கறி ருசி அதிகம். இங்கே பெங்களூரில் கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மலையாளிகள் அதிகமாய் வசிக்கிறார்கள் என்பதால் கணிசமான உணவகங்கள் அவர்களுடையதே. அதனாலே இங்கு மீனும் மாட்டுக்கறியும் கடைகளில் அதிகமாய் கிடைக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் சைவமே இப்பகுதியில் தலைதூக்கியிருக்கும். உணவு ஆதிக்கம் என்பது நுட்பமாக ஒரு சமூகக் கூட்டுமனத்தில் செயல்படும் விழைவு. இதை எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை வைத்து புரிந்து கொள்ளலாகாது. மேற்சொன்ன கட்டுரையில் அவர்கள் குறிப்பிடும் வட மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சில சைவ சமூகங்கள் எழுச்சி பெற்றது தான் சைவ உணவு மற்றும் இந்துத்துவா அதிகரித்துள்ளதன் காரணமாக இருக்குமோ என தலைகீழாக எனக்குத் தோன்றியது
  இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கடைகளை அரசு தடை பண்ணுகிறது, ஆனால் காய்கனிகளின் விற்பனையை அனுமதிக்கிறது, இதன் அரசியல் என்ன, இஸ்லாமியர்களை ஒடுக்கும்பொருட்டு இதை செய்கிறார்களா என மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவொன்றில் கேட்டிருந்தார். அரசுக்கு அப்படி ஒரு நோக்கம் இருந்தால் அது வெற்றி பெறாது. மக்களின் உணவுப்பழக்கங்களை அப்படி எந்த அரசும் சுலபத்தில் மேலிருந்து கீழாக கட்டுப்படுத்த முடியாது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...