முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் சினிமாவில் மெக்கபின் [MacGuffin] (2)

ஹிட்ச்காக்

நான் மேலே சொல்லி உள்ளவை படத்தின் முக்கிய சம்பவங்கள் மற்றும் திருப்புமுனைகள். இதைக் காதல் கதையென்றோ, துப்பறியும் கதையென்றோ ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதைச் சொல்லும் படம் என்றோ நீங்கள் சொல்லலாம். ஆனால் அது இப்படத்தின் வகைமை மட்டுமே. கதை அல்ல. இப்படம் இப்படி ஆரம்பித்து இப்படி முடிகிறது என நீங்கள் விவரிக்கலாம். ஆனால் நிஜத்தில் காட்சிபூர்வமாக இந்த படம் நம்மை அவ்வாறு ஒரு கதையாக வந்து சேர்வதில்லை. ஒரு பெண்ணிடம் எப்படி நாயகன் ஏமாறுகிறான், அவளை எப்படி மனதார நேசித்து மீண்டும் அவளை அடைந்து, இறுதியில் எப்படி இழக்கிறான், எப்படி நீதியை நிலைநாட்டுகிறான் என்பது கதையின் களமாக இருக்கலாம், ஆனால் அதுவும் இப்படம் அல்ல. இந்த படம் எதைப்பற்றியது?
வெர்ட்டிகோ எனும் பிரச்சனையை எப்படி நாயகன் கடந்து நலமாகிறான் என நீங்கள் சொன்னால் அது அபத்தமாகத் தோன்றினாலும் அதுவே ஓரளவுக்கு துல்லியமான ஒற்றை வரியாக இருக்கும். ஆனால் யாருமே அதற்காக இப்படத்தைப் பார்க்கவில்லை என்பதால் அந்த பதிலையும் நிராகரித்தே ஆக வேண்டும். வெர்ட்டிகோ மிகப்பெரிய சாதனைப் படைப்பானதற்கு (அதைப் பற்றி ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன; 2012இல் Sight and Sound விமர்சகர் கருத்துக்கணிப்பில் இது சிட்டிசன் கேனையும் முறியடித்து உலகின் தலைசிறந்த படம் எனும் பெயரைப் பெற்றது) காரணம் வேறு: இந்தப் படம் எதைப் பற்றியானது என்பதே இந்தப் படம் எதைப் பற்றியானது என்பதற்கான பதில். ஆம், நான் தவறுதலாக இந்த வரியை எழுதவில்லை; இதுவே உண்மை:

 இந்த படம் ஆரம்பித்து ஒவ்வொரு 10-15 நிமிடமும் நாம் இந்த கேள்வியை கேட்டுக் கொள்கிறோம்; ஒவ்வொரு முறையும் ஹிட்ச்காக் ஒரு பதிலை நமக்கு அளிக்கிறார். முதலில் இது வெர்ட்டிகோ வந்த போலீஸ் துப்பறிவாளனுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றியதாகிறது; அடுத்து இது அவன் ஒரு விசித்திரமான வழக்கை தயக்கத்துடன் விசாரிக்கப் புறப்படும் போது என்னவாகும் என்றாகிறது; அடுத்து இது இந்தப் பெண்ணிடத்து அவன் காதல் வயப்பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியாகிறது; இதை அடுத்து இப்பெண்ணை அவரால் காப்பாற்ற முடியுமா, முடியாவிடில் அதற்கும் வெர்ட்டிகோ காரணமானால் அவன் அந்த ஏமாற்றத்தை எப்படித் தாங்கப் போகிறான், ஒருவேளை இதுவரையிலான மொத்த கதையுமே ஒரு கட்டுக்கதை, இனிமேல் தான் உண்மைக் கதையை நாயகன் துப்பறிந்து அறியப் போகிறான் எனச் சொன்னால் என்னவாகும் என ஆகிறது, அடுத்து உண்மை தெரிய வந்த பின் அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றியதாகிறது, இறுதியில் தனது இயலாமையால் அவள் சாகவில்லை, அவள் தன்னை ஏமாற்றவில்லை, நிஜமாகவே நேசித்தாள், ஆனால் தான் அவளை நிஜத்தில் நேசிக்கவில்லை, அவளது கற்பனைப் பாத்திரத்தையே நேசித்தோம் என ஸ்காட்டி உணர்கிறான், இந்த இடத்தில் அவள் இறந்து விட படம் துவங்கும் போது இருந்த இடத்தில் படம் வந்து முடிகிறது - ஒரே மாறுபாடு ஸ்காட்டிக்கு இப்போது வெர்ட்டிகோ குண்மாகி விட்டது என்பது. அதாவது பூஜ்யத்தில் ஆரம்பித்த கதை பூஜ்யத்தில் வந்து முடிகிறது.  

இதையே ஹிட்ச்காக் சினிமா மொழிக்கு கச்சிதமான கதையம்சமாகக் கருதுகிறார் - சரி அது என்ன? பூஜ்யம். இந்த பூஜ்யத்துக்கு ஹிட்ச்காக் அளிக்கும் பெயர் MacGuffin.  அதென்ன மெக்கபின்?
ஒரு கதையின்அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?” என ஒரு சாக்கை வைத்து கதையை மேற்கொண்டு தொடர்கிறோம் அல்லவா அது தான் மெக்கபின். இப்படி பல trigger points திரைக்கதையில் இருக்கும். திரைக்கதை மேலாக ஒரு கோபுரம் போல ஒரு முக்கியமான கதைக்கரு அல்லது விசயம் இருக்க வேண்டும் என நம்புகிறோம். ஆனால் அது தவறான ஒரு நம்பிக்கை. தேசப்பிரிவினையின் போதான வன்முறைகளையும் காந்தியின் படுகொலையையும் சித்தரிக்கும் படமாஹே ராம்என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. இவை அப்படத்தை ஆரம்பித்து நடத்தி முடிப்பதற்கான சாக்கு மட்டுமே. அப்படம் முழுக்க ஒரு நிலையற்ற சூழலில் மனித உணர்ச்சிகள் கொள்ளும் மோதல்கள், அபத்தங்கள், நீதியுணர்ச்சியின் வெளிப்பாடும் அதன் மறைவும் வருகிறதா என்றால் ஆமாம், ஆனால் அவற்றையும் ஒவ்வொரு அரைமணி நேரமும் அப்படம் கடந்து என்று நம்மை வேறெதிலோ ஈடுபட்டு சிந்திக்க செய்கிறது, வியக்க வைக்கிறது. (“ஹே ராம்இந்திய வரலாற்றை சித்தரிக்கிறது என்பதும் அதில் இந்துத்துவா முன்னெடுக்கப்படுகிறது என்பதும் இதனாலே சினிமா மொழியை அறியாதவர்களின் வெற்றரவங்களாக இருக்கிறது). “அசுரன்படம் பற்றி அண்மையில் வெற்றிமாறன் பேசும் போது அசுரன் என்றால் கெட்டவர்கள், அழிக்க வேண்டியவர்கள் எனப் பொருள் இல்லை, அசுரர்கள் என்றால் ஒடுக்கப்பட்டவர்கள், வடக்கத்தியர்களுக்கு தமிழர்கள் அவ்வாறு அசுரர்கள் ஆவார்கள், தாழ்த்தப்பவர்கள் மேல்சாதியினருக்கு அசுரர்கள், அவர்கள் உக்கிரமாக தமக்கான போராட்டத்தை எடுத்துச் செல்லும் போது என்னவாகும் எனச் சொல்வதேஅசுரன்எனும் பொருள்பட விளக்கி இருந்தார். ஆனால் அது கூட மேல்பூச்சான ஒரு பாவனை தான். இந்த பாவனையை நம்பும்படியாய் ஆக்குவதற்கே படத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள், பஞ்சமி நிலப்பிரச்சனை ஆகியவை படத்தில் குறிப்புணர்த்தப்படுகின்றன. ஆனால் நிஜத்தில் இதையெல்லாம் பேசினால் படம் ஒரு கருத்துரையாகவோ, ஆவணப்படமாகவோ மாறி விடும்; யாரும் பார்க்காமல் வெளியான நாளே படுத்து விடும். விவரமான இயக்குநர்கள் இதை உணர்வர். அவர்கள் ஒரு தலித் சினிமா எடுக்கும் போது அதன் வழிதலித் வாழ்வியலைப்பேச முயல மாட்டார்கள். (அதற்கு அவர்கள் ஒரு ஆவணப்படம் எடுக்கவே செய்வர்.) நீங்கள் ஒரு படமாக அதை எடுக்கும் போது அந்த வடிவம் இயல்பாகவே தான் சொல்ல வந்த ஒன்றை ஒரு trigger ஆக பயன்படுத்தி கடந்து போய் விடும் (ரஞ்சித்தின்காலாவில்நிகழ்வது போல). அதுவே நம்மை உள்ளார்ந்து கிளரவும் அக்காட்சிகளை மீளமீளப் பார்க்கவும் செய்கிறது. திரைக்கதையில் ஒரு துப்பாக்கியின் விசைவில்லாக (trigger) இந்தவாழ்வியல்பயன்படும்; கதை எனும் ரவை அதை அழுத்திய அடுத்த நிமிடம் பாய்ந்து மறைந்து விடும்.

மெக்கபினை ஹிட்ச்காக் விளக்குவதற்காக ஒரு சுவாரஸ்யமான கதையை பயன்படுத்தினார்:

ஒரு ரயிலில் ஒரு பெட்டியில் இரண்டு பிரயாணிகள் சம்பாஷிக்கிறார்கள். ஒருவரது தலைக்கு மேல் பரணில் அவரது பயணப்பெட்டி பெரிதாக வித்தியாசமாக இருக்கிறது. அதைக் கண்டு துணுக்குற்று மற்றவர் கேட்கிறார்: “அது என்ன?”
 இவர் சொல்கிறார்: “ அதுவா? அது ஒரு மெக்கபின்.”
 “அது என்ன மெக்கபின்? எனக்குத் தெரியாதே!”
அதுவா, அது ஒரு பொறி.”
பொறியா? எதற்கான பொறி?”
ஸ்காட்லாந்தின் மலைப்பகுதியில் உள்ள சிங்கங்களைப் பிடிப்பதற்கான பிரத்யேகமான பொறி.”
... ஆனால் ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளில் தான் சிங்கமே இல்லையே?”
ஆமாம் ... அப்படியென்றால் மெக்கப்பினே இல்லை”.

(இது செந்தில்-கௌண்டமணியின் வாழைப்பழ ஜோக்கை நினைவுபடுத்தினால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல.)    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...