விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சில நல்ல முடிவுகளை மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது. (பார்க்க: https://www.hindustantimes.com/india-news/summer-crop-prices-hiked-between-50-80-for-farmers-in-big-cabinet-decision/story-djDKt1eN44jXrR8H3ka7fO.html) இது பாராட்டத்தக்கது. ஆனாலும் மோடிஜியின் அரசு இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது, எத்தனையோ உயிர்கள் பசியிலும் களைப்பிலும் போகாமல் காத்திருக்கலாம். இந்த லாக் டவுனால் கொரோனா ஒழியவில்லை, அதன் பரவல் நிற்கவும் இல்லை. வேகம் மட்டும் குறைந்து இப்போது அதிகரித்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் மக்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து நோய்ப்பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தியது இப்போது லாக் டவுன் நீக்கப்படுவதால் வீணாகி விட்டது.
எந்த தெளிவான திட்டமும் இல்லாமல் நாடடங்கை கொண்டு வந்ததும் சரி இப்போது நீக்குவதும் சரி மோசமான விளைவுகளையே தந்திருக்கிறது. மோடிஜி நிர்வாகத்தை ஒரு பிரம்மாண்டமான மசாலா படமாகக் காண்பவர்; அப்போக்கின் மற்றொரு அத்தியாயம் இந்த கொரோனா நாடடங்கு.படம் முடிந்து விட்டது எல்லாரும் வெளியே வாருங்கள், வேலைக்கு செல்லுங்கள், கோயில்களில், மால்களில் குழுமுங்கள், பேருந்தில், ரயில்களில், விமானத்தில் பயணியுங்கள் என்கிறார்; கொரோனாவில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இதன் மறைமுக சேதி. பிக்பாஸ் நம்மை வைத்து நாடகமாடுவாரே தவிர நம்மைப் பாதுகாக்க மாட்டார் என மக்களில் ஒரு சிலருக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இதற்குப் பதிலாக அவர் கொரோனா நோய் கண்டறியும் கருவிகளை பரவலாக மருத்துவமனைகளில் கிடைக்க, பரிசோதனைகள் அதிகமாக நடக்க, அதைக் கொண்டு நோய்த்தொற்றியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அவர் சங்கரின் படத்தைப் போல பிரம்மாண்டமாக வண்ணமயமாக ஒரு ராணுவ அணிவகுப்பைப் போல இந்த “கொரோனா ஒழிப்பை” நிகழ்த்தினார். இப்போது படம் முடிந்து விட்டது, எல்லாரையும் அவர் வீட்டுக்கு அனுப்புகிறார்.
ஆனால் தற்சமயம் விவசாயிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் இந்த சலுகைகளை, நிவாரணங்களை நான் வரவேற்கிறேன். தன் பிம்பம் சற்றே அடிவாங்கியுள்ளதை அவர் உணர்ந்திருக்கிறார். பணத்தை அள்ளிக்கொடுத்து தற்காலிகமாக அவர்களை வயிற்றை நிறைய வைத்து பின்னர் கைவிட்டு விடுவார் என நினைக்கிறேன். ஏனென்றால் மோடியின் கொள்கை என்றுமே விவசாயிகளை முன்னெடுக்கிற ஒன்றல்ல; அது கார்ப்பரேட்டுகளை கால்பிடித்து விடும் கொள்கை.
இப்போது விவசாயிகளுக்கான நிவாரணத்துடன் அவர் அறிவித்துள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான சுமார் 70,000 கோடிப் பணமும் வெறும் கானல் நீராக முடியுமா, நிஜமாகவே வேலைவாய்ப்புகள் மோடிஜி சொல்வது போல அதிகரிக்குமா அல்லது வெறும் புள்ளிவிபரமாக பத்திரிகை அறிக்கையாக முடிந்து போகுமோ தெரியவில்லை. நம்பி வைப்போம். நமக்கு வேறு வழியில்லையே!

Comments