//கோவை ஞானி: ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந் திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர்.//
கோவை ஞானியின் இந்த வாக்கியத்தில் நாம் கவனிக்க வேண்டியது “இந்திய உடல்”. இதைப் பற்றியே நான் பேசப் போகிறேன்.
அம்பேத்கர் தன் கட்டுரைகளில் எங்குமே “இந்திய உடல்” எனச் சொல்வதில்லை. ‘இந்து’ சமூகம் பற்றியே, இந்து உடல் பற்றியே அதன் நோய்க்கூறான சாதியத்தைப் பற்றியே பேசுகிறார். அவர் கோவை ஞானியைப் போல இந்து என்றால் இந்தியா எனும் மையப்படுத்தலையும் ஏற்கவில்லை. இதற்கு ஒரு காரணம் உள்ளது:
அம்பேத்கர் இங்குள்ள பூர்வகுடிகள் பௌத்தர்கள், வைதீக எதிரிகள் என Who Were the Shudras? நூலில் பேசுகிறார். வைதீக இந்துக்கள் பௌத்தத்தை முறியடித்த பின்னர் அவர்களை ஊரின் எல்லைக்கு வெளியே தங்க வைத்து, தாம் ஒரு காலத்தில் புசித்த மாட்டிறைச்சியை அவர்களை சாப்பிடச் செய்து அதைக் கொண்டே அவர்களை தீண்டத்தகாதவர்கள் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர். அப்படி வைதீக இந்துக்களே இங்கு சாதிய அமைப்பை உண்டு பண்ணினார்கள் என்கிறார். பிராமணர்களுக்கு தலித்துகளிடத்தும், தலித்துகளுக்கு பிராமணர்களிடத்தும் பல ஆயிரம் ஆண்டு பகை, அதனாலே அந்த சமூகம் மட்டுமே பிராமணர்களை தம் சடங்குகளில் பங்கேற்க அழைப்பதில்லை என்கிறார் (நிலைமை இங்கு மாறி விட்டது). இதன் விளைவாகவே கடுமையான பௌத்த வெறுப்பு சமிஸ்கிருத நாடகங்களில் காணப்படுகிறது என ஆதாரங்களைத் தருகிறார். இந்த மத வெறுப்பே இன்றுள்ள கொடுமையான சாதிய அடுக்குமுறைக்கு காரணமாகியது என்கிறார். அதாவது அம்பேத்கர் சாதியத்தை வைதீகம்-பிராமணீயம்-பௌத்த வெறுப்பு-சாதிய வெறுப்பு-தீண்டாமை என பகுத்து கொள்கிறார்.
இயல்பாகவே நமது ஞானி ஐயா வைதீக மதத்தின் மீதான இந்த தாக்குதலை ஏற்க விரும்பவில்லை. ஆகையால் அவர் அம்பேத்கரின் சொற்களைத் திரித்து, தீண்டாமை வெறி உறைந்துள்ளது இந்து உடலில் அல்ல “இந்திய உடல்” என சாமர்த்தியமாய் உருமாற்றுகிறார். இப்படிக் கூறுவதன் மூலம் அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து இந்து மதத்தை, வைதீகத்தை தப்பித்துப் போக வழி செய்கிறார்.
குறிப்பு: இந்த மென் இந்துத்துவாவைத் தான் நான் சாடுகிறேன். எனக்கு மற்றபடி தனிமனிதர்களிடத்து எந்த வெறுப்பும் இல்லை. தனிமனிதர்களை காவடி எடுக்கும் செண்டிமெண்டுகள் மீது மதிப்பும் இல்லை.
(“இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி”, writersamas.blogspot.com)

Comments