Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மின்னணு வாக்கு எந்திர முறைகேடுகள் உண்மையா?



டிவி, யுடியூப் சேனல்களில் அவ்வப்போது காண நேரிடும் காந்தராஜ் என்பவர் வர இருக்கும் தமிழக மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பை வெளியிட்டார். 70 இடங்கள் வரை பாஜக வெல்லும், நூறு இடங்கள் போல அதிமுகவுக்குக் கிடைக்கும், இது மக்களின் வாக்குகளால் கிடைக்கும் வெற்றியாக இராது, வாக்கு எந்திர மோசடியால் இதை பாஜக நிகழ்த்தும், இது மோசடி எனத் தெரியாதிருக்கும் பொருட்டே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் வெற்றிடம், அரசியல் மாற்றம் வரும், மூன்றாவது அணி வாக்குகளை உடைக்கும் என்றெல்லாம் ஊடகத்தில் விவாதங்கள் நடக்கின்றன, இந்த விவாதங்களில் பாஜகவினரை கட்டாயமாக கலந்து கொள்ள செய்து, வேல்யாத்திரை, திருமா சர்ச்சை, கறுப்பர் படை சர்ச்சை என அவர்களின் சின்னச்சின்ன நகர்வுகளையும் பெரிதுபடுத்திப் பேசி, ரஜினி, கமலின் வருகையை பூதாகரமாக்கி இங்கு ஒரு மாற்று அரசியல் அலை எழுவதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என்றார் அவர். “இப்போதே அவர்கள் எத்தனை இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானித்து விட்டார்கள்என அவர் அவ்வளவு நம்பிக்கையாக சொன்ன போது எனக்கு பாரிசாலன் சற்றே நினைவுக்கு வந்து போனார். மேலும் இவர் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பாஜக மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு பண்ணுவதாய் குற்றம் சாட்டி, பாஜகவை முறியடிக்க பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் எனக் கோருகிறார்கள். இதில் ஏதாவது உண்மை இருக்குமா என சுவாரஸ்யம் ஏற்பட மின்னணு எந்திர மோசடிகள் குறித்து நிறைய வாசித்தேன். அப்போது எனக்கு கிடைத்த சுருக்கமான சித்திரம் இது:


1) நமது வாக்கு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் - அதற்குள் ஒரு புளூடூத் கருவியை இணைத்து அதன் மூலம் சர்வரில் போய் சேரும் தகவல்களை மீளெழுத முடியும்; ஒரு போலித்திரையை உண்டு பண்ணி, இறுதி கட்டத்தில் வாக்குப்பதிவு தகவல்களை மாற்றிட முடியும்; வாக்கு எந்திரத்தின் வன்பொருளில் முக்கியமான பகுதி வெளிநாட்டில் உற்பத்தியாவதால், அங்கேயே கூட சில தில்லுமுல்லுகளைப் பண்ணி கொண்டு வர முடியும்; கடந்த சில ஆண்டுகளில் உபரியான சில லட்சம் வாக்கு எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்கி உள்ளது; சில ஆயிரம் வாக்கு எந்திரங்களை ஆணையத்திடம் இருந்து யாரோ திருடி இருக்கிறார்கள். அவை மீட்கப்படவில்லை. மின்னணு எந்திரங்கள் வாங்கப்பட்ட கணக்கும் ஆணையத்திடம் பயன்பாட்டில் உள்ளவற்றின் கணக்கும் ஒத்துப் போவதில்லை. கணக்கில் உதைக்கும் இந்த சில லட்சம் எந்திரங்களைக் கொண்டு மோசடி செய்ய முடியும் என சொல்கிறார்கள். இதற்கு வலு சேர்ப்பது போல கடந்த சில ஆண்டுகளில் தேர்தலின் போது வாக்கு எந்திரங்கள் போதுமான பாதுகாப்போ தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளோ இன்றி லாரி, வேன்களில் வைத்து கொண்டு செல்லப்படுவதாக செய்திகல் வந்துள்ளன. இவற்றை ஆளுங்கட்சியால் பயன்படுத்தி மோசடி செய்திருக்க முடியும். இப்படி பல சாத்தியங்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதை வலுவாக மறுத்து வருகிறது.


2) தேர்தல் ஆணையத்தின் கூற்று தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த எந்திரங்களுக்கு அணுக்கம் உண்டு, வேறு யார் ஊடறுத்து மோசடி செய்ய முயன்றாலும் உடனடியாக அது புலப்பட்டு விடும் என்பது. ஆனால் கடந்த ஒரு பத்தாண்டாகவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் ஒரு கரம் போலவே செய்லபடுவதாக ஒரு குற்றச்சாட்டு, பார்வை பரவலாக உள்ளது. ஆக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மோசடி செய்திருக்க, செய்ய முடியுமா


3) 2019 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றது, ஆனால் அதிக இடங்களை வென்றது. அண்மையில் நடந்த பீகார் தேர்தலிலும் இந்த போக்கை கவனித்தோம். அதே போல பாஜக வெல்லும் இடங்களில் வாக்கு வித்தியாசமானது சில ஆயிரங்கள் எனும் அளவிலேயே இருக்கின்றன. இது வாக்கு எந்திர மோசடி குறித்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. எப்படி?


4) ஒரு வாக்கு எந்திரம் ரெண்டாயிரம் சொச்ச வாக்குகளை பதிவு செய்யுமென்றால் பல லட்சம் வாக்குகளை ஒரு தொகுதியில் மோசடி செய்து மாற்றுவதற்கு நீங்கள் ஏகப்பட்ட எந்திரங்களை இடமாற்ற வேண்டும், பெரிய அளவில் ஹேக் செய்ய வேண்டும், இது சந்தேகத்தை எழுப்பும் என்பதால் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சிறிய சதவீதம் வாக்கு எந்திரங்களை ஹேக் செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகளை மாற்ற முடியும். தேர்தல் முடிவிகள் வெளியாகும் போது சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் அண்மையில் அதிகமாய் வெல்வது இதனால் கூட இருக்கலாம். குறைவான வாக்கு சராசரி, அதிக வெற்றியிடங்கள் எனும் பாஜக சூத்திரத்தின் பின்னணியும் இதுவாக இருக்கலாம். இதனாலே வரும் தமிழக தேர்தலில் காந்தராஜின் ஆருடம் துல்லியமாக பலிக்காது. ஒரு தொகுதியில் கணிசமான வாக்காளர்கள் ஒரு கட்சியை தேர்வு செய்தால் அங்கு மின்னணு எந்திர மோசடி செய்ய முடியாது. (இது 2019 உள்ளிட்ட பாஜகவின் பெரும் வெற்றிகள் முழுக்க மோசடியால் கிடைத்தவை அல்ல என்பதையும் காட்டுகிறது.) மாறாக ஓரளவுக்கு பாஜகவுக்கும் ஆதிமுகவுக்கும் வெற்றி சாத்தியமுள்ள தொகுதிகளில் மட்டும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்கு எந்திரங்களில் சிலவற்றை ஹேக் செய்து (அல்லது ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டவற்றை கொண்டு வந்து மாற்றி வைத்து) முடிவுகளை மாற்ற முடியும். இந்த நெருக்கடி ஏற்படும்படி வாக்குகளை கமல், ரஜினி, சீமான் கட்சிகள் சிதறடித்து வெற்றி தோல்வி வித்தியாசத்தை குறைந்த மார்ஜின் கொண்டதாக மாற்றுவார்கள். வாக்குகளை உடைத்து வாக்கு எந்திர மோசடிக்கு உதவுவதே அவர்களுக்குத் தரப்படும் இலக்கு.


5) இந்த மின்னணு எந்திரங்களை பெரும்பாலான உலக நாடுகள் நம்புவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். இது ஏன்? வாக்குச்சீட்டு முறையில் மோசடி செய்ய நீங்கள் பூத்துகளைக் கைப்பற்றி, கள்ள வாக்குகளை இட்டு வெல்ல வேண்டும். இது ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதைப் போல. இது அம்பலப்பட்டு விடும். ஆனால் எந்திரத்தை ஹேக் செய்வது கணினி மூலம் ஹேக் செய்து, விதிகளை வளைத்து நுணுக்கமாய் வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பதைப் போல. அது ஒரு மாய பூத் கைப்பற்றலாக இருக்கும்; அதை சுலபத்தில் கண்டறிந்து நிரூபிக்க முடியாது. நுட்பமான நாகரிகமான ஹைடெக்கான தில்லுமுல்லுக்கு மின்னணு எந்திரங்கள் உதவுகின்றன. இதனாலே வளர்ந்த நாடுகளில் இன்னமும் வாக்குச்சீட்டு முறை நிலுவையில் உள்ளது.


6) இறுதியாக, காங்கிரஸ் என்னதான் அவ்வப்போது வாக்கு எந்திர மோசடி நடக்கிறது என கூவினாலும் இதை திட்டமிட்டு உள்ளே கொண்டு வந்தது அதே காங்கிரஸ் தான் என்பதை மறந்து விடலாகாது. எனில், அவர்களும் இதை வைத்து முன்பு மோசடி செய்திருப்பார்கள். பாஜக ஒருவேளை இன்று - காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் - பல மடங்கு அதிகமாக இந்த மோசடியில் ஒரு நிபுணத்தத்துவத்தை, அதற்கு உரிய கட்டமைப்பை, தேர்தல் ஆணையத்தின் மீது மட்டுமீறிய அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம். இதைக் காண்கையில் காங்கிரஸுக்கு வயிறெரிகிறது எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவ்விசயத்தில் ஆதிக்கள்ளன் காங்கிரஸ் தான்.    

Comments

அப்போ இந்த முறை ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றாலும் இப்படி தான் என்று கருத்தில் கொள்ளலாமா அபிலாஷ்...
நீங்க பல நேரங்களில் கொடுக்கிற பல விதமான முட்டுகள் உங்கள் வறட்டு நம்பிக்கையாக இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது... ஏன்? இப்படி நீங்கள் ஆனீர் என்பது உள்ளம் கை நெல்லிக்கனி போல தெரிந்தாலும் உங்களின் சமீபத்திய வீழ்ச்சி கவலை அடைய செய்கிறது. நீங்கள் கடைசியாக எழுதிய சுமார் 50 பதிவுகள் நிச்சயம் ஜனநாயக விழுமியங்களை தாண்டி ஒரு கட்சிக்காக நீங்கள் கீழே இறங்கி சாக்கடையில் புரண்டுக்கொண்டிருப்பதை போன்ற ஒரு அருவெறுப்பு உங்கள் நீண்ட கால வாசகராக உணர முடிகிறது. கொஞ்சம் அதிர்ச்சியும், சங்கடமும் கொள்ள வைக்கிறது...
சரி. மேலே நீங்கள் சொன்ன விடயங்களை பற்றி யோசித்தால்... தேர்தல் நடைபெறும் இடங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், ஏன் அந்த எந்திரங்களை உருவாக்கும் இடத்தில் எல்லாம் ஒரே கட்சி ஆட்கள் தான் இருப்பார்கள் போல... :-)

இன்னும் கொடுமை trial pre check நடக்கும் போது அனைத்து கட்சி ஆட்களும் இருப்பது கட்டாயம்... நிறைய சொல்ல முடியும்... ஆனால் நீங்கள் எதையும் கருத்தில் கொள்ள போவதில்லை...காரணம் உங்களுக்கே தெரியும்...

வரும் தமிழக தேர்தல் முடிவுகள் நீங்கள் விரும்பிய வண்ணம் வந்தால் அது உண்மை... இல்லையேல் ...
1) என் கட்டுரையை தலைகீழாக புரிந்து கொண்டால் இப்படித்தான் கேட்கத் தோன்றும். படிக்க கண்ணிருந்தால் மட்டும் போதாது.
2) என் அண்மைக்கால கட்டுரைகளின் அரசியல் சங்கிகளுக்கு பிடிக்காதுதான். அது என் வீழ்ச்சியல்ல.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...