Skip to main content

மின்னணு வாக்கு எந்திர முறைகேடுகள் உண்மையா?



டிவி, யுடியூப் சேனல்களில் அவ்வப்போது காண நேரிடும் காந்தராஜ் என்பவர் வர இருக்கும் தமிழக மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பை வெளியிட்டார். 70 இடங்கள் வரை பாஜக வெல்லும், நூறு இடங்கள் போல அதிமுகவுக்குக் கிடைக்கும், இது மக்களின் வாக்குகளால் கிடைக்கும் வெற்றியாக இராது, வாக்கு எந்திர மோசடியால் இதை பாஜக நிகழ்த்தும், இது மோசடி எனத் தெரியாதிருக்கும் பொருட்டே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் வெற்றிடம், அரசியல் மாற்றம் வரும், மூன்றாவது அணி வாக்குகளை உடைக்கும் என்றெல்லாம் ஊடகத்தில் விவாதங்கள் நடக்கின்றன, இந்த விவாதங்களில் பாஜகவினரை கட்டாயமாக கலந்து கொள்ள செய்து, வேல்யாத்திரை, திருமா சர்ச்சை, கறுப்பர் படை சர்ச்சை என அவர்களின் சின்னச்சின்ன நகர்வுகளையும் பெரிதுபடுத்திப் பேசி, ரஜினி, கமலின் வருகையை பூதாகரமாக்கி இங்கு ஒரு மாற்று அரசியல் அலை எழுவதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என்றார் அவர். “இப்போதே அவர்கள் எத்தனை இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானித்து விட்டார்கள்என அவர் அவ்வளவு நம்பிக்கையாக சொன்ன போது எனக்கு பாரிசாலன் சற்றே நினைவுக்கு வந்து போனார். மேலும் இவர் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பாஜக மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு பண்ணுவதாய் குற்றம் சாட்டி, பாஜகவை முறியடிக்க பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் எனக் கோருகிறார்கள். இதில் ஏதாவது உண்மை இருக்குமா என சுவாரஸ்யம் ஏற்பட மின்னணு எந்திர மோசடிகள் குறித்து நிறைய வாசித்தேன். அப்போது எனக்கு கிடைத்த சுருக்கமான சித்திரம் இது:


1) நமது வாக்கு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் - அதற்குள் ஒரு புளூடூத் கருவியை இணைத்து அதன் மூலம் சர்வரில் போய் சேரும் தகவல்களை மீளெழுத முடியும்; ஒரு போலித்திரையை உண்டு பண்ணி, இறுதி கட்டத்தில் வாக்குப்பதிவு தகவல்களை மாற்றிட முடியும்; வாக்கு எந்திரத்தின் வன்பொருளில் முக்கியமான பகுதி வெளிநாட்டில் உற்பத்தியாவதால், அங்கேயே கூட சில தில்லுமுல்லுகளைப் பண்ணி கொண்டு வர முடியும்; கடந்த சில ஆண்டுகளில் உபரியான சில லட்சம் வாக்கு எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்கி உள்ளது; சில ஆயிரம் வாக்கு எந்திரங்களை ஆணையத்திடம் இருந்து யாரோ திருடி இருக்கிறார்கள். அவை மீட்கப்படவில்லை. மின்னணு எந்திரங்கள் வாங்கப்பட்ட கணக்கும் ஆணையத்திடம் பயன்பாட்டில் உள்ளவற்றின் கணக்கும் ஒத்துப் போவதில்லை. கணக்கில் உதைக்கும் இந்த சில லட்சம் எந்திரங்களைக் கொண்டு மோசடி செய்ய முடியும் என சொல்கிறார்கள். இதற்கு வலு சேர்ப்பது போல கடந்த சில ஆண்டுகளில் தேர்தலின் போது வாக்கு எந்திரங்கள் போதுமான பாதுகாப்போ தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளோ இன்றி லாரி, வேன்களில் வைத்து கொண்டு செல்லப்படுவதாக செய்திகல் வந்துள்ளன. இவற்றை ஆளுங்கட்சியால் பயன்படுத்தி மோசடி செய்திருக்க முடியும். இப்படி பல சாத்தியங்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதை வலுவாக மறுத்து வருகிறது.


2) தேர்தல் ஆணையத்தின் கூற்று தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த எந்திரங்களுக்கு அணுக்கம் உண்டு, வேறு யார் ஊடறுத்து மோசடி செய்ய முயன்றாலும் உடனடியாக அது புலப்பட்டு விடும் என்பது. ஆனால் கடந்த ஒரு பத்தாண்டாகவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் ஒரு கரம் போலவே செய்லபடுவதாக ஒரு குற்றச்சாட்டு, பார்வை பரவலாக உள்ளது. ஆக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மோசடி செய்திருக்க, செய்ய முடியுமா


3) 2019 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றது, ஆனால் அதிக இடங்களை வென்றது. அண்மையில் நடந்த பீகார் தேர்தலிலும் இந்த போக்கை கவனித்தோம். அதே போல பாஜக வெல்லும் இடங்களில் வாக்கு வித்தியாசமானது சில ஆயிரங்கள் எனும் அளவிலேயே இருக்கின்றன. இது வாக்கு எந்திர மோசடி குறித்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. எப்படி?


4) ஒரு வாக்கு எந்திரம் ரெண்டாயிரம் சொச்ச வாக்குகளை பதிவு செய்யுமென்றால் பல லட்சம் வாக்குகளை ஒரு தொகுதியில் மோசடி செய்து மாற்றுவதற்கு நீங்கள் ஏகப்பட்ட எந்திரங்களை இடமாற்ற வேண்டும், பெரிய அளவில் ஹேக் செய்ய வேண்டும், இது சந்தேகத்தை எழுப்பும் என்பதால் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சிறிய சதவீதம் வாக்கு எந்திரங்களை ஹேக் செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகளை மாற்ற முடியும். தேர்தல் முடிவிகள் வெளியாகும் போது சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் அண்மையில் அதிகமாய் வெல்வது இதனால் கூட இருக்கலாம். குறைவான வாக்கு சராசரி, அதிக வெற்றியிடங்கள் எனும் பாஜக சூத்திரத்தின் பின்னணியும் இதுவாக இருக்கலாம். இதனாலே வரும் தமிழக தேர்தலில் காந்தராஜின் ஆருடம் துல்லியமாக பலிக்காது. ஒரு தொகுதியில் கணிசமான வாக்காளர்கள் ஒரு கட்சியை தேர்வு செய்தால் அங்கு மின்னணு எந்திர மோசடி செய்ய முடியாது. (இது 2019 உள்ளிட்ட பாஜகவின் பெரும் வெற்றிகள் முழுக்க மோசடியால் கிடைத்தவை அல்ல என்பதையும் காட்டுகிறது.) மாறாக ஓரளவுக்கு பாஜகவுக்கும் ஆதிமுகவுக்கும் வெற்றி சாத்தியமுள்ள தொகுதிகளில் மட்டும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்கு எந்திரங்களில் சிலவற்றை ஹேக் செய்து (அல்லது ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டவற்றை கொண்டு வந்து மாற்றி வைத்து) முடிவுகளை மாற்ற முடியும். இந்த நெருக்கடி ஏற்படும்படி வாக்குகளை கமல், ரஜினி, சீமான் கட்சிகள் சிதறடித்து வெற்றி தோல்வி வித்தியாசத்தை குறைந்த மார்ஜின் கொண்டதாக மாற்றுவார்கள். வாக்குகளை உடைத்து வாக்கு எந்திர மோசடிக்கு உதவுவதே அவர்களுக்குத் தரப்படும் இலக்கு.


5) இந்த மின்னணு எந்திரங்களை பெரும்பாலான உலக நாடுகள் நம்புவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். இது ஏன்? வாக்குச்சீட்டு முறையில் மோசடி செய்ய நீங்கள் பூத்துகளைக் கைப்பற்றி, கள்ள வாக்குகளை இட்டு வெல்ல வேண்டும். இது ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதைப் போல. இது அம்பலப்பட்டு விடும். ஆனால் எந்திரத்தை ஹேக் செய்வது கணினி மூலம் ஹேக் செய்து, விதிகளை வளைத்து நுணுக்கமாய் வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பதைப் போல. அது ஒரு மாய பூத் கைப்பற்றலாக இருக்கும்; அதை சுலபத்தில் கண்டறிந்து நிரூபிக்க முடியாது. நுட்பமான நாகரிகமான ஹைடெக்கான தில்லுமுல்லுக்கு மின்னணு எந்திரங்கள் உதவுகின்றன. இதனாலே வளர்ந்த நாடுகளில் இன்னமும் வாக்குச்சீட்டு முறை நிலுவையில் உள்ளது.


6) இறுதியாக, காங்கிரஸ் என்னதான் அவ்வப்போது வாக்கு எந்திர மோசடி நடக்கிறது என கூவினாலும் இதை திட்டமிட்டு உள்ளே கொண்டு வந்தது அதே காங்கிரஸ் தான் என்பதை மறந்து விடலாகாது. எனில், அவர்களும் இதை வைத்து முன்பு மோசடி செய்திருப்பார்கள். பாஜக ஒருவேளை இன்று - காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் - பல மடங்கு அதிகமாக இந்த மோசடியில் ஒரு நிபுணத்தத்துவத்தை, அதற்கு உரிய கட்டமைப்பை, தேர்தல் ஆணையத்தின் மீது மட்டுமீறிய அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம். இதைக் காண்கையில் காங்கிரஸுக்கு வயிறெரிகிறது எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவ்விசயத்தில் ஆதிக்கள்ளன் காங்கிரஸ் தான்.    

Comments

அப்போ இந்த முறை ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றாலும் இப்படி தான் என்று கருத்தில் கொள்ளலாமா அபிலாஷ்...
நீங்க பல நேரங்களில் கொடுக்கிற பல விதமான முட்டுகள் உங்கள் வறட்டு நம்பிக்கையாக இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது... ஏன்? இப்படி நீங்கள் ஆனீர் என்பது உள்ளம் கை நெல்லிக்கனி போல தெரிந்தாலும் உங்களின் சமீபத்திய வீழ்ச்சி கவலை அடைய செய்கிறது. நீங்கள் கடைசியாக எழுதிய சுமார் 50 பதிவுகள் நிச்சயம் ஜனநாயக விழுமியங்களை தாண்டி ஒரு கட்சிக்காக நீங்கள் கீழே இறங்கி சாக்கடையில் புரண்டுக்கொண்டிருப்பதை போன்ற ஒரு அருவெறுப்பு உங்கள் நீண்ட கால வாசகராக உணர முடிகிறது. கொஞ்சம் அதிர்ச்சியும், சங்கடமும் கொள்ள வைக்கிறது...
சரி. மேலே நீங்கள் சொன்ன விடயங்களை பற்றி யோசித்தால்... தேர்தல் நடைபெறும் இடங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், ஏன் அந்த எந்திரங்களை உருவாக்கும் இடத்தில் எல்லாம் ஒரே கட்சி ஆட்கள் தான் இருப்பார்கள் போல... :-)

இன்னும் கொடுமை trial pre check நடக்கும் போது அனைத்து கட்சி ஆட்களும் இருப்பது கட்டாயம்... நிறைய சொல்ல முடியும்... ஆனால் நீங்கள் எதையும் கருத்தில் கொள்ள போவதில்லை...காரணம் உங்களுக்கே தெரியும்...

வரும் தமிழக தேர்தல் முடிவுகள் நீங்கள் விரும்பிய வண்ணம் வந்தால் அது உண்மை... இல்லையேல் ...
1) என் கட்டுரையை தலைகீழாக புரிந்து கொண்டால் இப்படித்தான் கேட்கத் தோன்றும். படிக்க கண்ணிருந்தால் மட்டும் போதாது.
2) என் அண்மைக்கால கட்டுரைகளின் அரசியல் சங்கிகளுக்கு பிடிக்காதுதான். அது என் வீழ்ச்சியல்ல.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...