முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூனியவாதம் - அறிமுக உரைகள்




நண்பர்களே, புத்தாண்டு முதல் நாளான இன்றில் இருந்து நாகார்ஜுனரின் “மூதமத்யமகாகாரிகா” எனும் நூலை படிப்படியாக அறிமுகம் செய்து விளக்கலாம் என இருக்கிறேன் (இரவு 7 மணிக்கு). ஆரம்பத்தில் பேஸ்புக் லைவ்விலும் பின்னர் யுடியூபிலும் 15-20 நிமிடங்கள் பேசுவது திட்டம். வாரத்தில் சில நாட்கள் எனக்கு காலையும் மாலையும் ஐந்து மணிநேர வகுப்புகள் இருக்கும். அன்று மட்டும் தவிர்த்து விடுவேன். மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்களை எடுத்து மொழியாக்கம் + உரை என விளக்குகிறேன். 


இதை நான் ஏன் செய்ய வேண்டும்?

1) தமிழில் இந்த முக்கியமான நூலுக்கு அறிமுகமோ மொழியாக்கமோ இல்லை. சூன்யவாதம் குறித்து விரிவான விளக்கவுரைகள் தமிழில் இல்லை. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் (அம்பேத்கரின் தம்மம்) நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தினாலும் தனது அத்வைத ஹேங் ஓவர் காரணமாக பிழையாக விளக்குகிறார். உ.தா., நாம் முழுக்க அறிய முடியாத ஒரு பிரபஞ்சத்தின் பகுதி மட்டுமே என சூன்யவாதம் பேசுகிறது என. பிரபஞ்சமே இன்மையால் கட்டப்பட்டது எனும் போது அதை நினைத்து நாம் துக்கத்தில் மருகுகிறோம் என்பது தவறானது. இன்மையை முழுக்க அறியும் போது நாம் அகவிடுதலை பெற்று மகிழ்ச்சி பெறுவோமே ஒழிய அவர் சொல்லுகிற பறதி (angst) ஏற்படாது. இந்த குழப்பங்களை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.


2) வாரத்தில் நான்கு நாள் பேசுவதற்கே எப்படியும் குறிப்பெடுக்க, மொழியாக்க வேண்டி வரும். அது நாகார்ஜுனர் குறித்து ஒரு நூலை பின்னர் எழுத பயன்படும். 


3) நான் என் கோட்பாட்டு வகுப்புகளில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்யும் போது பௌத்தத்தை படிப்பது ஒரு மிக எளிய முறையில் பெரும் திறப்பை நமக்கு பின்நவீன சிந்தனையை அறியத் தரும் எனக் கூறுவேன். நாகார்ஜுனரை இன்னொன்றை அறிவதற்கு துணையாக பயன்படுத்துவது நியாயமல்ல என்றாலும் கூட பின்னமைப்பியல் சிந்தனைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாசிப்பு முக்கியமான பயிற்சியாக இருக்கும். நாகார்ஜுனரில் இருந்து தெரிதாவின் எழுத்து, திருக்குறள் ஆகியவற்றை வாசிப்பதும் ஒரு பெரிய திறப்பை அளிக்கும்.


4) அதே போல, நான் ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, பெரியாரைப் புரிந்து கொள்ள நாகார்ஜுனரின் சூன்யவாதம் பெருமளவு பயன்படும்.


5) சாதியமைப்புக்கு, இனவெறிக்கு, ஆணாதிக்கவாதத்துக்கு அடிகோலுவது சாராம்சவாதம் - அது வைதீக இந்து மதத்தில் மட்டுமல்ல கிறித்துவம், இஸ்லாத்திலும் உள்ளது. அதை உடைக்க கடவுளை மறுத்தால் மட்டும் போதாது, எல்லா சாராம்சங்களையும் மறுக்க முடிய வேண்டும். அதை எப்படி செய்வதெனத் தெரிய வேண்டும். வழக்கமான நமது கடவுள் மறுப்புவாதம் வறட்டுவாதமாக, மேலோட்டமான எடுத்தெறிதலாக சுருங்கி விடுகிறது. ஆனால் சூன்யவாதம் கடவுளை மட்டுமல்ல நமது இருப்பு குறித்த அத்தனை நம்பிக்கைகளின் அடுத்தளத்தையே தகர்ப்பது. அதனாலே அது ஒரு சிறந்த விடுதலை தத்துவமாக இருக்கிறது. அரசியல் சிந்தனை கொண்டவர்களுக்கு ஒரு தத்துவ, தர்க்க பலம் கிடைக்க இது உதவும்.


6) வழக்கமாய் தத்துவஞானிகள் ஒரு தத்துவத்தை மறுத்து மற்றொன்ன்றை கட்டியெழுப்புவார்கள். ஆனால் நாகார்ஜுனர் உடைப்பதோடு நிறுத்திக் கொள்வார். மறுத்து மறுவிளக்கம் தர மாட்டார், போட்டு உடைத்து விடுவார். இது முக்கியம் - ஒரு பிழையை மறுத்து அதனிடத்தில் சிமெண்டை பூசி சீர் செய்வது வழக்கமான தத்துவ உரையாடல். நாகார்ஜுனர் ஒரு ஜே.சி.பி எந்திரம். ஒவ்வொன்றையாய் அவர் எப்படி காலி செய்கிறார்  என்பதை கவனிப்பதே சுவாரஸ்யம். அதனால் அவர் மூலம் நாம் பெற்றதென்ன எனக் கேட்காமல் இருப்பது முக்கியம். அவர் மூலம் எதை “இழக்கிறோம்” என்பதே முக்கியம்.


7) இது பகுப்பாய்வு தத்துவம் என்பதால் அவதானிப்புகள், அர்த்தப்படுத்தலுக்கு பெரிய இடமிருக்காது. ஜென் தத்துவத்தைப் போல உணர்வுரீதியான ஒரு மாற்று உண்மையை இது காட்டாது. நம் அறிவைக் கொண்டு எப்படி பல முடிச்சுகளை அவிழ்ப்பது என தெரிந்து கொள்ளலாம். கற்பனை, புதிய சிந்தனை ஆகியவற்றுக்கு இதில் இடமிருக்காது. உணர்வுரீதியாக பெரிய திருப்தியை இதில் பெற முடியாது. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் தர்க்கம் கொண்டு இயங்குவதால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படலாம். அதற்குத் தயாராக இருந்தால் நம் சிந்தனை தசைகள் வலுப்படும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பௌத்தம் என்றதும் நாம் இதுவரையிலும் வெகுவாக பழகியுள்ளது ஜென் பௌத்தம், ஆனால் சூனியவாதம் அதற்கு தலைகீழானது. இதில் ஜென்னைத் தேடக் கூடாது.


8 ) நான் மகாயான மத்யமகா தத்துவத்தின், பௌத்தத்தின் வரலாற்றைப் பற்றி அதிகம் பேசப் போவதில்லை. ஏனென்றால் தத்துவமே என் இலக்கு; வரலாற்றின் பின் சென்றால் நாம் தத்துவத்தை தவற விட வாய்ப்புண்டு (இலக்கிய வரலாற்று வாசிப்பில் நிகழ்வதை போல.) 


9) இன்மை என்பதும் இல்லை என்பதும் ஒன்றல்ல. ஒரு பொருள் அசைகிறது. அதை நாகார்ஜுனர் மறுப்பதில்லை. இயல்பியலின் படி இன்று அந்த சலனத்தை, நகர்வை நாம் விளக்கலாம். ஆனால் அறிவியல் இந்த கோணத்தில் ஒன்று ஏன் அப்படி நிகழ்கிறது எனக் கேட்பதில்லை. அது எப்படி அப்படி இருக்க முடிகிறது என சூன்யவாதம் வினவுகிறது. ஒரு பந்தின் துள்ளல் எப்படி துள்ளலாக இருக்கிறது எனக் கேட்கிறது. (அறிவியல் அதை அதுவாகவே எடுத்துக் கொண்டு அலசுகிறது.) சூன்யவாதம் என்பது மறுப்புவாதம் அல்ல. இதை நினைவில் கொள்ள வேண்டும்.


10) நாகார்ஜுனரின் ஒரு சிக்கல் பின்னோக்குவாதம் (regress) - ஒவ்வொன்றையும் அதற்குப் பின்னால் என்ன, பின்னாலுக்குப் பின்னால் என்ன, பின்னாலுக்குப் பின்னாலுக்குப் பின்னால் என்ன என இந்த பாணி அலசல் போய்க் கொண்டிருக்கும். இது சில நேரம் ஒரு புகைமூட்டத்தின் மத்தியில் இருக்கிற உணர்வைத் தரும். கடுப்பேற்றும். ஆனால் நாகார்ஜுனரின் நோக்கமே நாம் சிந்தனையை ரொம்ப வலுவாகப் பற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதே. பகுப்பாய்வு சிந்தனையே சாரமானது என அவர் கூற மாட்டார். ஓரளவுக்கு நாகார்ஜுனரின் பாணியில் வினாக்களை எழுப்புகிற மேற்கத்திய தத்துவவாதி என சாக்ரடீஸைக் குறிப்பிடலாம். ஆனால் அவரே தர்க்கத்தின் ஆற்றலை நம்பினார். நாகார்ஜுனர் அந்த ஆபத்தை உணர்ந்து இறுதியில் சூனியமே சூனியமானது என்பதில் போய் முடிக்கிறார். 


11) மற்றொரு எச்சரிக்கை - நாம் அனைவருமே அத்வைத சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். விரும்பினாலும் இல்லாவிடிலும் நம் சிந்தனையில் வைதீகம் ஊறியுள்ளது. ஆனால் சூன்யவாதம் அதற்கு நேரெதிரானது. வைதீகம் இந்த உலகத்தின் பின்னால் ஒரு சாரம் உண்டு, அதுவே பிரம்மம் என்கிறது, சூனியவாதம் இந்த பிரம்மம் ஒரு கட்டமைப்பு என்கிறது. (அதனாலே பௌத்தத்தில் கடவுள் இல்லை.) நாகார்ஜுனரை வாசிக்கையில் அவர் சொல்வதற்கு இணையாக வைதீகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்க, வாதிட முனையக் கூடாது. அதற்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் அன்பு, தாய்மை, குழந்தைமை, மனிதநேயம், சாதிப்பற்று, மதப்பற்று, கடவுள் போன்ற செண்டிமெண்டுகளை கைவிடத் தயாராக இருக்க வேண்டும். அதை விட முக்கியமாக நமது இருப்பே சாரமானது என நம்புகிறோமோ அதைக் கைவிட தயாராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை உடையும் போது அது நம்மை எரிச்சல்படுத்தும். பரவாயில்லை என விட்டுவிட வேண்டும். 


12) உரைக்கு முன்பு அன்றைக்கான பாடலடிகளின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவேற்றி விடுகிறேன். அதை ஏற்கனவே வாசித்து நீங்கள் தயாராக இருக்கலாம். தேவைப்படுவோருக்கு நூலின் pdfஐ மின்னஞ்சல் பண்ணுகிறேன். 


13) நான் தத்துவ மாணவன் அல்ல. நான் தத்துவத்தில் இளைப்பாற வரும் இலக்கியவாதி. ஆக இந்த உரைகள் அந்த கண்ணோட்டத்தில் தான் அமையும். இங்கு இதைப் பற்றி பேசுவோர் இல்லை என்பதாலே அந்த வெற்றிடத்தை நிரப்புகிறேன். ஆகையால் என் குறைகளை பொறுத்துக் கொள்ளுங்கள்.


14) அவ்வப்போது இதைப் பற்றி எழுதுகிற குறிப்புகளை பிளாகில் வெளியிடுகிறேன். அதையும் படியுங்கள். இங்கு சுருக்கமாக பேசுவதை அங்கு விரிவாக விவாதிக்கிறேன் என்பதால் உங்களுக்கு உதவும். 


15) இறுதியாக நான் இதை நூற்றுக்கணக்கானோர் கவனிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அக்கறை கொண்ட, இதற்கான உழைப்பை செலுத்த தயாராக உள்ள ஒரு சிறிய குழுவை மட்டுமே எதிர்பார்க்கிறேன். நான் என்னதான் எளிமைப்படுத்தினாலும் இது சிக்கலான நூல் தான். எல்லாருக்குமானது அல்ல, இதைத் தேடுபவர்களுக்கு மட்டுமே ஆனது. (மற்றபடி வித்தியாசமான மூளை அமைப்போ கூடுதல் அறிவோ ஒன்றும் தேவையில்லை.) இதை புத்தகமாய் நான் எழுதும் போதும் 50 பேர் தான் படிப்பார்கள் எனத் தெரியும். ஆகையால் இது உங்களுக்கு ஆனது அல்ல எனத் தோன்றினால் தவிர்த்து விடுங்கள்.

கருத்துகள்

எதிராஜ் அகிலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. தொடருங்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நண்பர்களே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...