இந்த பாஜக எதிர்ப்பலை மாயையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இடமே இல்லாத போது எப்படி எதிர்ப்பலை வர முடியும் என்பதே என் கேள்வி. தமிழக மக்கள் தம்மை இந்திய தேசியத்துக்கு எதிராக கற்பிக்க சில சூழ்நிலைகளில் மட்டும் தான் முடியும் - முன்பு இந்தி எதிர்ப்பு, பின்னர் ஜல்லிக்கட்டு, இடையே நீட் எதிர்ப்பு. ஆனால் நிரந்தரமாக அது இங்கிருந்ததில்லை, ஏனென்றால் அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மை தம்மளவில் ஒரு தேசிய இனமாக கருதுகிறார்கள். மேலும், தமிழர்கள் தமது இருப்புக்கு மத்திய அரசால் நிரந்தர ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நம்புவதில்லை. அப்படி ஒரு கசப்பு இருந்தாலும் ஆளும் மத்திய அரசை எதிர்க்கும் நோக்கில் மட்டுமே மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளதா? சரி அப்படியே வாக்களித்தாலும் பாஜகவின் நிரந்தர எதிரிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை? ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகமாய் தோல்வியடைந்தார்கள்? அவர்களை விட வெளிப்படையாக யார் பாஜகவை எதிர்க்கிறார்கள்? இது அடிப்படையில் ஒரு மாயை.
யாரோ இப்படி ஒரு எதிர்ப்பலை இருப்பதாக தில்லி பாஜகவுக்கு நம்ப வைத்து விட்டார்கள். அவர்களுடைய ஈகோவை இது தடவி விடுவதாலோ என்னவோ வில்லனாக தம்மை கற்பித்து அடுத்தடுத்த காய்களை நகர்த்த தொடங்கி விட்டார்கள். அமமுக வாக்குகள் பாஜக எதிர்ப்பு வாக்குகள் எனச் சொல்லி அதிமுக-அமமுக இணைப்பை தடுத்தார்கள். அடுத்து, சவுக்கு சங்கரில் இருந்து சீமான் வரை பாஜக-திமுக ரகசிய கூட்டணி என பேசுகிறார்கள். இதுவும் ‘பாஜக எதிர்ப்பலையை’ திமுக பயன்படுத்தக் கூடாது எனும் நோக்கில் தான். பழைய 2-ஜி வழக்கை பாஜக திரும்ப எடுக்கிறது என்பது முதல் ஸ்டாலின் வேலை வைத்திருந்த புகைப்படம் வரை இதற்கு ஆதாரமாகக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆதாரமாடா? நாளை காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை எடுத்து வைத்து பாஜகவும் காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளது என சொல்லலாமே. ராகுல் ஒரு கோயிலுக்குப் போனதைக் காட்டி ராகுல் ஆர்.எஸ்.ஸின் பிடியில் உள்ளதாய் கொதிக்கலாமே. பைத்தியங்கள் மட்டுமே இதையெல்லாம் நம்புவார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் இந்த அவசரகதி குற்றச்சாட்டுகளே இவர்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. மேலும் அரசியலில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதால் மக்களும் அதைக் கணக்கில் கொண்டே வாக்களிக்கப் போகிறார்கள். நாளை ஒருவேளை பாஜகவுடன் திமுக இணங்குவதாகத் தெரிந்தால் முற்போக்காளர்கள் மட்டுமே ஏமாற்றமடைவார்கள், ஒட்டுமொத்த ஜனங்களும் அல்ல. தமிழகத்துக்கு இது ஒரு பிரச்சனையே அல்ல. (ஏன் என வரும் பத்திக்கு அடுத்த பத்தியில் சொல்கிறேன்) வரும் போது பார்த்துக் கொள்கிறோம். இப்பவே ஏன் நரம்பு புடைக்க கதறுகிறீர்கள் நீங்கள்?
இப்போதைக்கு அதிமுகவுக்கு நான்கே பிரச்சனைகள் தாம்.
தமிழக அரசியலில் தலைவர்களை மையமிட்டுத் தான் இயக்கங்கள் தோன்றுகின்றன. அதிமுகவின் முதல் பிரச்சனை அதற்கு ஒரு உறுதியான நிலையான தலைமை இல்லாதது.
அடுத்த பிரச்சனை அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் எனும் ஆவேசத்தில், அவநம்பிக்கையில் கட்டுப்பாடின்றி ஊழல் செய்து பணத்தை அவர்கள் வெளிப்படையாகவே குவிப்பது.
மூன்றாவதாக, அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆள்வதால் இயல்பாகவே தோன்றுகிற அதிகாரக் களைப்பு, அதிகாரம் நோக்கிய அலுப்புணர்வு (anti-incumbency).
நான்காவதாக, அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக அதை உடைக்க, பலவீனப்படுத்த தொடர்ந்து முயல்வது.
மற்றபடி என்னதான் பாஜகவால் வழிநடத்தப்பட்டாலும் எடப்பாடி அரசு தன்னை முழுமையாக தமிழக விரோத அரசாக காட்சிக் கொள்ளவில்லை. வேல் யாத்திரையை அது கையாண்ட விதம் ஒரு உதாரணம். அண்மையில் கர்நாடகாவில் நடந்த மதரீதியான மோதல்கள், மாட்டுக்கறி தடை போன்றவை, உ.பியில் அரங்கேறுகிற அப்பட்டமான மதவாத சட்டங்கள், மாற்றங்கள் இங்கு நிகழ்ந்தனவா? இல்லையே. என்னதான் இது பினாமி ஆட்சியென்றாலும், ஓரளவுக்கு மேல் (நீட், புதிய கல்வித்திட்டம், சி.எ.எ, வேளாண் சட்டங்கள் போன்ற விசயங்களில்ல்) தமிழக நலனுக்காக நிற்க இந்த அரசால் முடியவில்லை என்றாலும், இது இன்றும் அதிமுக ஆட்சியே, பாஜக ஆட்சி அல்ல.
இந்த காரணங்களால் தான் இத்தேர்தலில் பாஜக vs திமுக என்றொரு எதிரிணை இல்லை என்கிறேன். எப்போதுமே இக்களம் அதிமுக vs திமுக என்றே இருக்கும். இதை எடுத்து சொல்லும் முதுகெலும்பு நம் ஊடகங்களுக்கு இல்லை என்பதே அவலம்!
