முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல தலை



தினமணியில் வாராவாரம் வெளிவருகிற “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரை ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்களுக்கு முன்பு அதை நான்கு நூல்களாக தொகுத்து உயிர்மையில் வெளியிட்டேன். நான் இத்தொடர் ஒரு வருடத்திற்கு மேல் போகாது என நினைத்திருந்தேன். நான் முடிந்த வரையில் எனக்குப் பிடித்த துறைகளான தத்துவம், கோட்பாடு, அரசியல், சமூகம் என பலவற்றில் இருந்தும் சொற்களை எடுத்து அறிமுகப்படுத்துவேன். சமகால நடப்புகளை மறைமுகமாய் விமர்சிக்க, பகடி செய்ய, கருத்து சொல்ல இத்தொடரை பயன்படுத்துவேன். என் அதிர்ஷ்டம் இதுவரையில் நான் யாரை பகடி செய்கிறேன் என நிறைய பேருக்கு தெரிந்ததில்லை, அதனால் எடிட்டரிடம் இருந்து குறுக்கீடுகள், அறிவுரைகள் வந்ததில்லை. இது தான் பல லட்சம் பிரதிகள் அச்சாகும் இதழ்களில் எழுதுவதன் அனுகூலம்.


ஆனால் என்ன சிக்கல் என்றால் நான் எழுதிய தொடர்களிலேயே நான் மிகக் குறைவாக ரசித்து எழுதுவது இதைத் தான். ஏனென்றால் ஆங்கில இலக்கணம், ஆங்கில சொற்றொடர்கள், சொற்களின் வரலாறு, மொழி குறித்த சுவாரஸ்யமான கதைகள் இவற்றை எழுதுவதில் எனக்கு பெரிய சவால்கள் இல்லை. வெள்ளைக்காரன் மொழியைப் பற்றி தமிழில் எழுதுகிற அபத்தம் கூட உறைக்கிறது. இது நான் எழுத வேண்டியது அல்ல எனும் எண்ணம் எப்போதும் இருந்ததுண்டு. நியாயமாக இது எந்த வாசிப்பும், எழுத்துத் திறனும் இல்லாத, ஆங்கிலத்தில் பேசினால் ஒருவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடக் கூடும் என நம்புகிற ஒரு பள்ளி ஆசிரியரோ விவேகானந்தா இன்ஸ்டிடியூட்டில் பாடம் எடுக்கும் ஒரு மாமாவோ எழுத வேண்டியது. என்னைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் ஒரு சாதாரணம் மொழி. எந்த மாக்கானும் அதைப் பேசலாம். இதை சுட்டுவதற்காகவே இத்தொடரில் ஒரு நாயின் பாத்திரத்தை உருவாக்கி அதை ஆங்கில அறிவு படைத்ததாக சித்தரித்தேன்.


 ஆனாலும் தொடர்ந்து ஏழு வருடங்களாக எழுதுவதற்கு ஒரே காரணம் தான் - வேறு விருப்புரிமைகள் இல்லை.


தினமணி தவிர எனக்குக் கிடைத்த தொடர் எழுதும் வாய்ப்பு குமுதத்தில் தான். அதுவும் கிரிக்கெட் குறித்து தான் எழுதினேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் கூட ஆங்கிலம் பற்றி எழுதுவதை விட அதிக சுவாரஸ்யமும் சவாலும் இருந்தன. ஏனோ எனக்குப் பிடித்த துறைகள் (இலக்கியம், தத்துவம், சமூகம்) சார்ந்து எழுத வாய்ப்பு இந்த 13 ஆண்டுகளில் வெகுஜன இதழ்களில் ஒரு வாய்ப்பு கூட அமைந்ததில்லை. ஒன்று நானாக பெரிதாக முயலவில்லை. பத்திரிகையாளர்கள் இடையே நட்பு வட்டத்தை இதற்காக அமைத்து கேட்டுக் கொண்டே இருக்கவில்லை. இன்னொன்று, யாரையோ எங்கேயோ தொடர்ந்து என் கருத்துக்களால் எரிச்சல்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன்.

பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

நம்மிடம் ஒரு அழகிய வாள் இருக்கிறது. அதை வைத்து வெங்காயம் நறுக்க சொன்னால் நறுக்கி விட்டுப் போகிறோம். ஒருநாள் வெட்ட வாகாக ஒரு ‘நல்ல தலை’ கிடைக்காமலா போய் விடும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...