முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்ய புத்திரன் எனும் ராவணன்



இந்த ஆண்டு மனுஷுக்கும் சற்று சிக்கலானதாக, சவாலானதாக இருந்தது என அறிவேன். லாக் டவுனின் போது உயிர்மை அச்சு இதழை கொண்டு வர இயலவில்லை, அவருடைய அலுவலகத்தை மூடும் சூழல். இருந்தாலும் ஒற்றை ஆளாக பகுதி நேர ஊழியர்களை சிலரை வைத்துக் கொண்டு அவர் உயிர்மை இணைய இதழ், யுடியூப் சேனலை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தினார். இந்த புத்தகக் கண்காட்சியிலும் குறைந்தபட்ச முதலீடு, உள்கட்டமைப்பு, நிறைய கட்டுப்பாடுகள் இருந்தும் அவர் எப்படியோ சமாளித்து விட்டார். இந்த நெருக்கடிகள் ஒரு பக்கமிருக்க, அவர் எழுதிக் குவித்த கவிதைகள் தாம் பெரிய ஆச்சரியம். எப்போதெல்லாம் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அதிகமாகின்றனவோ அப்போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவது, அநேகமாய் துரித கவனிப்புக்கு, செய்தித் துணுக்குக்கு மட்டும் தகுதியானவை என நாம் நினைக்கிற எத்தனையோ விசயங்களை கவிதையாக்குவது, கடந்த பத்தாண்டில் எழுதியதை விட எளிமையாக மென்மையாக அதே நேரம் தீவிரமாக எழுதுவது என பலரும் பொறாமைப்படுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார். பலரும் கடுப்படிக்கும் அளவுக்கு வாசகிகளைப் பெற்றிருக்கிறார். கைவிடப்படும் போது நம்மில் பலரும் எழுத்தை விட்டு விடுவோம், குடியில் சங்கமிப்போம், மன அழுத்த மாத்திரைகளை கையில் வைத்து உருட்டிக் கொண்டிருப்போம், சமூக வலைதளங்களில் வம்பில், வீண் சர்ச்சையில் ஈடுபடுவோம். ஆனால் மனுஷ் கவிதை வெளிப்பாட்டை இறுகப் பிடித்து மேலே வந்து விட்டார் என்பது இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் ஒரு பெரும் ஊக்கமளிக்கும் சங்கதி.


பொதுவாக எழுத்தாளர்கள் எப்படி மனம் குவித்து உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள்?

சிலர் எளிய மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருந்தபடி அதிலிருந்து எழுத்துக்கான கருப்பொருளை எடுத்து அமைதியான, வசதியான வேளைகளில் மட்டும் எழுதுகிறார்கள்.   

இன்னும் சிலர் ஒரு துறவியைப் போல எழுத்து மட்டுமே இலக்கு, வேறெதையும் கவனிக்க மாட்டேன் என செயல்படுவார்கள். வீடு, குடும்பம், வேலை என இருந்தாலும் அதிலெல்லாம் பட்டும்படாமல் இருந்து விட்டு எழுத்தில் முழுத்தீவிரத்துடன் பித்துடன் இருப்பார்கள். இந்த வகைமையில் இன்னும் சிலர் செய்தித்தாள் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, சில்லறை இன்பங்களில் ஈடுபடவோ செய்யாமல் உக்கிரமாக இருப்பார்கள் அல்லது அப்படி இருக்க வேண்டும் என போதிப்பார்கள்.

மனுஷ் போன்று வெகுசிலரே எழுத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத சூழலில் வாழ்க்கை முறையில் இருப்பார்கள் - அன்றாட நிகழ்வுகள், சச்சரவுகள், செய்திகள், இலக்கிய வம்புகள், அரசியல் கருத்துக்கள், நிகழ்வுகள் என எதையும் அவர் விட்டு வைப்பதில்லை. ஒரு பக்கம் இறைந்து கிடக்கும் நாளிதழ்கள், இன்னொரு பக்கம் போனில் சமூகவலைதள உரையாடல்கள், ஐ.சி.யு மருத்துவ உபகரணம் போல அணையாத டிவி என அவர் இருக்கும் இடம் கவனச்சிதறல்களின் உச்சமாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்த பிறகு பயணங்களும் அதிகமாகி விட்டன, தினசரி டிவி விவாத அரங்கு வெட்டுகுத்துக்கள் வேறு. இதன் மத்தியில் அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளை வருடாவருடம் எழுதுவது ஒரு அதிசயம் என்றே நினைக்கிறேன். 


எழுதுவதற்கு மனத்தை அதிக சஞ்சலமின்றி வைத்திருக்க வேன்டும், உணர்ச்சிகளை ஆறப் போட வேண்டும், மெல்ல மெல்ல கொதிநிலைக்கு போக வேண்டும், அமைதியான நிலை, சலனமற்ற போதம் பழுத்து மெல்ல நெருப்பாகி ஒளிவிடும் போது அது சிறந்த எழுத்தாகும் என்றெல்லாம் தமிழில் நம்பிக்கைகள் உள்ளன. ஜெயமோகன் போன்றோர் இதை அறிவுறுத்துவார்கள். எப்படியும் குறைந்தபட்சம் எழுத்துக்கு ஒரு வாழ்க்கை ஒழுங்கு அவசியம் என சொல்லாதவர்களே இல்லை. எனக்குத் தெரிந்து மனுஷ் ஒழுங்குக்கு நேரெதிர் திசையில் பயணிப்பவர். தன் மொத்த நாளில் ஒரு சில மணிநேரங்கள், சில நேரம் பத்து பதினைந்து நிமிடங்களே கவிதைக்கென செலவழிக்கிறார். ஒரு ஆயிரம் பக்க கவிதைத் தொகுப்பை மொத்தமும் தன் செல்போனிலே எழுதியதாக ஒருமுறை சொன்னார். ஏன் அப்படி? லேப்டாப்பில் எழுதலாமே? படுக்கப் போகும் போது போனில் எழுதுவேன் என்றார். இதையெல்லாம் எப்படி சாதிக்கிறார் என்பது அடிக்கடி எனக்குள் எழும் கேள்வி. ஆனால் பாருங்கள் எழுத்துக்கு விரோதமான ஒரு வாழ்க்கைச்சூழலை அமைத்துக் கொள்ளும் போதெல்லாம் அவர் அதிகமாகவும் சிறப்பாகவும் எழுதுகிறார். அவருடைய மன அமைப்புக்கு இது தான் சரியாக வருகிறது என நினைக்கிறேன். உ.தா., அவர் இலக்கியம், சிறுபத்திரிகை சூழல் என்று மட்டுமிருந்த, அரசியல் சமூகம் பற்றி குறைவாக எழுதிய, சமூக வலைதளங்கள், டிவி விவாதங்களே இல்லாத தொண்ணூறுகளில் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். அவரது அந்த காலத்து சிலாகிக்கப்பட்ட கவிதைகளை விட பத்து பன்னிரெண்டு ஆண்டுகளில், இந்த “சீரழிவான, கவனச்சிதறல்களின் காலத்தில்” எழுதிய கவிதைகளே மேலானவை முதிர்ச்சியானவை எனும் எண்ணம் எனக்குண்டு.


மனுஷின் மன அமைப்பு சிறு சிறு அறைகளாக பகுக்கப்பட்ட, அவற்றை இணைக்கிற ஊடுபாதைகள் கொண்ட ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அவரால் இருக்க முடிகிறது. இவற்றின் அடியாழத்தில் எங்கோ கவிதைக்கான பாதாள அறை இருக்கிறது. சரியான / தேவையான நேரத்தில் அங்கு போய் இருந்து கொண்டு அவரால் தீவிரத்துடன் செயலாற்ற முடிகிறது. ஒரு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதைப் போல சுலபமாக அவரால் அந்த அறைக்குள் போக முடிகிறது என்பதே ஆச்சரியம். சமூகவலைதள அறை, காதல்களின், நட்புகளின், எளிய அலுப்பான அன்றாட உறவுகளின் அறை, அரசியல் அறை, செய்திகளின், சர்ச்சைகளின் வம்புகளின் அறை, கருத்துக்களின் அறை, அன்றாடங்களின் அறை என எங்கு நேரம் செலவிட்டாலும் தன்னை அங்கு அழித்துக் கொள்ளாமல் கவிதைக்கு மீண்டு விடுகிறார். அது அவருடைய இயல்பு. அவரை ஒரே ஒரு அறையில் பூட்டி வைத்தால் போரடித்து செத்து விடுவார். என்னால் இப்படி பத்து தலைகளுடன் இருக்க முடிவதில்லை. ஒருநாள் ஒன்றில் ஈடுபட்டால், அதில் மட்டுமே இருந்து அதிலேயே எரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நான் கவனமாக எழுத்தைத் தவிர பிற விசயங்களில் உன்மத்தமாய் ஈடுபடாமல் இருக்க முயல்வேன். மனுஷ் இதற்கு நேரெதிரான இயல்பு கொண்டவர். அவர் ஒரு ராவணன்.


மனுஷுக்கு இன்று பிறந்த நாள். என் வாழ்த்துக்களும் அன்பும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...