Skip to main content

முன்னுரை எனும் அபத்தம்



நான் எதற்காவது அதிகமாக யாரையாவது ஏமாற்றியதுண்டென்றால் அது இந்த முன்னுரை எழுதும் விவகாரத்திலே. ஒரு கட்டத்தில் இது ஏன் என ஒரு தெளிவு ஏற்பட்டு முன்புரை கேட்பவர்களின் “முடியாது, எனக்கு நம்பிக்கை இல்லை” என சொல்லத் துவங்கி விட்டேன். அது சம்மந்தமாக ஒரு சிறு விளக்கம்:


1) இன்று தஸ்தாவஸியின் The Idiot (அசடன்) நாவலின் பெங்குயின் பதிப்பக பிரதி ஒன்றை வாங்கினேன். அதில் ஹார்வெர்ட் பேராசிரியரான மூன்றாம் வில்லியம் மில்ஸ் டாட்  என்பவரின் 12 பக்க முன்னுரை இருந்தது. அதை புரட்டிப் பார்த்ததும் கட்டாயமாக இதைப் படிக்கக் கூடாதென முடிவு செய்து நாவலுக்குள் புகுந்து விட்டேன். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே பல புத்தகங்களைப் படிக்கையில் ஏற்பட்டுள்ளது. முன்னுரை கூறுகிற விசயங்களுக்கும் நாவல், சிறுகதை, கவிதைகளுக்கும் எந்த தொடர்புமே இருக்காது. 


2) நாவலுக்கான சில முன்னுரைகள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பிரம்மாண்டமாக, மூக்கில் விரலை வைக்க செய்யும் விதமாக. ஆனால் நாவலைப் படித்தால் சப்பென்று இருக்கும். கவிதைகளைப் பொறுத்தமட்டில் குருவித் தலையில் கிரீடத்தை தூக்கி வைத்ததைப் போல இருக்கும்.


3) நாம் ஒரு சினிமாவைப் பார்க்கிறோம். அதற்கு முன் யாராவது பத்து நிமிடங்கள் முன்விளக்கம் அளிக்கிறார்களா? ஒரு ஓட்டலுக்கு சென்று பிரியாணி சாப்பிடும் முன்பு அதன் மாஸ்டர் வந்து நின்று அதன் குணநலன்களை விளக்குகிறாரா? ஒரு நண்பரை சந்தித்து உரையாடும் முன்பு அவருடைய பிரச்சாரகர் வந்து நண்பரின் ஆளுமையை விரிவாக சித்திரம் வரைந்து காட்டுகிறாரா? ஒரு ஸ்வீட் கடைக்குப் போனால் யாராவது நம் முன் வந்து சாப்பிட்டுக் காட்டுகிறார்களா? ஒரு போன் வாங்கினால் அதன் செய்விளக்க நூலைக் கூட திறந்து பார்ப்பதில்லை. வாழ்க்கையில் அத்தனை விசயங்களையும் அப்படியே ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளும் நாம் புத்தக வாசிப்பை ஏன் ஏதோ இதய அறுவை சிகிச்சை போல எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்? ஏன் இவ்வளவு முஸ்தீபுகள்? எனக்கு சத்தியமாக புரியவில்லை.


 4) மிகவும் அத்தியாவசியம் என்றால் ஒரு நாவலின் வரலாற்றுப் பின்னணியை முன்னுரையில் தரலாம் என சிலர் சொல்லுவார்கள். அதன் மொழி, தொழில்நுட்பம் ஆகியவற்றை புரிந்து கொள்ளத் தேவையான ஒரு விளக்கத்தையும் தரலாம் என்பார்கள். ஆனால் இதையெல்லாம் தேவைப்பட்டால் நாவலுக்குள்ளே கொண்டு வரலாம். அதையும் தாண்டி ஒரு நாவலின் வரலாற்றுப் பின்னணியை அறிய வேண்டுமென்றால் வாசகன் விக்கிபீடியாவில் படித்துக் கொள்ளலாம் எனும் போது முன்னுரை அவசியமில்லாமல் போகிறது. நான் ஒரு நாவலை அல்லது கட்டுரை நூலைப் படித்து பின்னர் அதன் விக்கிபீடியா பக்கத்தை மேய்வதுண்டு. அது நம் கருத்து சரிதான் என ஊர்ஜிதப்படுத்தும் அல்லது இதை ஏன் யாரும் குறிப்பிடவில்லை என கடுப்பேற்றும்.

 

 5) முன்னுரைகளை தனியாக விமர்சனங்களாகப் படிக்கும் போது நன்றாக உள்ளன. ஏனென்றால் அவை தம்மளவில் சுவாரஸ்யமாக, ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கலாம். தஸ்தாவஸ்கி பற்றி பக்தின் எழுதிய The Problem of Dostoevsky‘s Poetics, ராஜ் கௌதமனின் “புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்‌ஷஸ்” போன்று சில விமர்சனப் பிரதிகள் தம்மளவில் முக்கிய தத்துவ, சமூகவியல் எழுத்துகள். படைப்பையும் விமர்சனத்தையும் தனித்தனியாக படித்து ரசிக்கலாம், புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நான் விமர்சனத்தை ஒரு துணைப் பிரதியாக அல்ல, நிகர் பிரதியாகவே பார்க்கிறேன். உ.தா., ஹேம்லெட் நாடகம் குறித்து எழுதப்பட்டவற்றை தனியாகத் தொகுத்து ஜாலியாகப் படிக்கலாம். ஆனால் ஹேம்லெட் நாடகத்தைப் படிக்க அவை தேவையில்லை. விமர்சனம் என்பது புனைவுக்கான தர்க்கம் என சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அது தர்க்கம் எனும் பாவனையுடன் வருகிற புனைவு எனத் தோன்றுகிறது.

 

 6) விமர்சனத்தை ஒரு படைப்புக்கு மட்டுமல்ல வாசிப்புக்கான அங்கீகாரமாகவே மாற்றி விட்டோம் என்பது தான் சிக்கல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில் இலக்கியம் கற்பிக்க துவங்கிய போது இலக்கியத்தில் என்ன கற்பிக்க உள்ளது, அது பொழுதுபோக்கு அல்லவா எனும் கேள்வி எழுந்தது. உடனே (மேத்யூ அர்னல்ட், ஐ.ஏ ரிச்சர்ட்ஸ் போன்ற) பேராசிரியர்கள் “இல்லை, இலக்கியம் நல்ல விழுமியங்களை மக்களுக்கு கற்பிக்கும், அவர்களை ஆற்றுப்படுத்தும்” என்றனர். இந்த போக்கு பின்னர் உலகம் முழுக்க பரவியது. பிரித்தானிய காலனியாக இருந்த நம்மிடமும் வந்தது. இப்போது ஒரு நாவலை எடுத்துக் கொண்டு வாசிக்க அமர்ந்ததும் ஒரு முன்னுரையாளர் திரையை விலக்கித் தோன்றி இன்னின்ன சங்கதிகளையெல்லாம் இந்த நாவல் வழியாக கற்றுக் கொள்வீர்கள் எனக் கூறுகிறார். இன்னொருவர் வந்து இது உலக இலக்கியத்தில் மகத்தான இடம் பிடிக்கும் படைப்பு என்கிறார். ஆனால் இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லாத போது இது வாசிப்புக்கே இடையூறாகலாம். நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து இன்னும் விடுபட்டு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.


 7) பல் தேய்ப்பது, உண்பது, தூங்குவது, பேசுவது, வாகனம் ஓட்டுவது போன்றே வாசிப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன் நான். ஒப்பிடுகையில் பல் தேய்ப்பதை விட வாசிப்பு சிக்கலானது என்றாலும் சரியான பயிற்சியும் பழக்கமும் இருந்தால் அது பல்தேய்ப்பதைப் போன்றே எளிதாகவும் உடற்பயிற்சி, காதலிப்பது போல சவாலானதாகவும் ஒரே சமயம் இருக்கும். முன்னுரை வாசிப்பை ஒரு “மகத்தான”, “பிரம்மாண்டமான” அச்சுறுத்தும் செயலாக மாற்றி விடுகிறது. கடவுளுக்கும் பக்தனுக்கும் நடுவே வரும் பூசாரியைப் போல முன்னுரையாளர் இருக்கிறார்.


 8) முன்னுரையினால் ஒரு கூடுதல் மதிப்பு கிடைத்து விடாதா? கிடைக்காது. புத்தகத்தின் அடிப்படைப் பகுதியாக இல்லாத ஒன்று எப்படி உபரி மதிப்பை அளிக்கும்? புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் உடற்பயிற்சியின் போது கொழுப்பு கரைவதைப் போல நீங்கள் முன்னுரையை உதிர்த்து விடுவீர்கள்.  


 9) முன்னுரை இலக்கிய ஆசான்களின் கைக்கு வரும் போது அது ஒரு குருபரம்பரையை உருவாக்கும் முயற்சியாகவும் இருக்கிறது. “இவர் எனக்கு நிகராக எழுதுகிறார், என் சீடர் எனும் மதிப்பைப் பெற தகுதியானவர், இவர் நான் மதிக்கும் உலக ஆசான்களுக்கு இணையானவர் (ஆனால் எனக்கு சற்று கீழே இருப்பவர்)” எனும் கோரல்களினால் வாசிப்புக்கு எந்த நலனும் இல்லை. இது இலக்கிய உலகுக்குள் செயல்படும் படிநிலையை சற்று கலைத்து திரும்ப அடுக்கும் வேலை தான். நிறைய இளம் படைப்பாளிகள் எப்படியாவது ஆசான்களின் ஆசியைப் பெற வேண்டும், ஆனால் எப்படி நேரடியாகக் கேட்பது எனத் தெரியாமல் “முன்னுரை கொடுங்க” என வற்புறுத்துகிறார்கள். விமர்சனம், பாராட்டுரை எழுத சோம்பல்பட்டு தள்ளிப் போடுகிறவர் கூட பதிப்பக அழுத்தத்தினால் உடனடியாக எழுதிக் கொடுத்து விடுவார்.


 10) பதிப்பக எடிட்டர்களே முன்னுரை எழுதுவது அவலமானது. ஏனென்றால் அது என்னதான் நாணயமாக, புறவயமாக இருந்தாலும் ஒரு புரொமோஷன் தொனி வந்து விடுகிறது. புரொமோஷனை புத்தகத்தின் பகுதியாக்குவது தேவையில்லை. அதை வெளியே வைத்துக் கொள்ளலாம். நான் திறந்ததும் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பிக்கும் திரைமறைவில்லா புத்தகங்களையே விரும்புவேன். எழுத்தாளன், அவனுடைய பிற நூல்கள் பற்றின குறிப்புகள் இல்லாவிடில் இன்னும் நல்லது. ஒரு பூடகத்தன்மை, ஒரு மர்ம தொனி இருக்கும். 


 11) புத்தகத்தை வாசிக்க உரை அவசியமில்லை என ஏற்கனவே சொன்னேன். ஆனால் ஒரு எழுத்துமுறையின் நியாயங்களைப் பேச, அது குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்க விமர்சனம், உரை அவசியம். அதாவது வாசிக்க அல்ல, அதைப் பற்றி பேச. இது ஒரு தனி துறை. உ.தா., “தேவதேவனை முன்வைத்து” என ஜெ.மோ முன்பு ஒரு நூல் எழுதினார். தேவதேவன் நவீனத்துவ பாணிக்கு விரோதமாக ஆற்றொழுக்காக, அருவிப் பாய்ச்சலாக எழுதுபவர், அதே நேரம் செவ்வியல் தன்மையுடன் இருப்பவர், பின்நவீன கலகப் போக்குகள் இல்லாதவர். அவரை எங்கே கொண்டு போய் வைப்பது எனும் குழப்பம் உண்டு (இது வாசிக்கும் போது வரும் குழப்பம் அல்ல, அவரைப் பற்றி பேசுகையில் தோன்றும் குழப்பம்). இக்குழப்பத்தை நீக்க அந்நூல் உதவியது. அதே போல நம்முடைய கவிஞர்கள் பலருக்கும், சில புனைவாசிரியர்களுக்கும் (நகுலன், மௌனி) விமர்சன உரைகள் தேவைப்படுகின்றன. அண்மையில் என்னைத் தொடர்பு கொண்ட இளம் வாசகர்கள் பலரும் சாருவைப் பற்றி நான் எழுதிய விமர்சனக் கட்டுரை பிடித்துப் போய் என்னிடம் வந்ததாகக் கூறினர். ஏனென்றால் சாருவைப் பற்றி பேச ஒரு மொழி, தர்க்கம், சில நியாயங்கள் தேவைப்படுகின்றன. அதை ஓரளவுக்கு அக்கட்டுரை வழங்குகிறது. (ஆனால் சாருவை வாசிக்க அது தேவையில்லை.) இது போன்ற கதையாடல்களை நாம் பல முக்கிய படைப்பாளிகளுக்கு உற்பத்தி செய்ய வேண்டும். 


 12) ஏன் இப்புத்தகத்தை எழுதினேன் என சுருக்கமாக ஒரு எழுத்தாளன் தன்னுரை எழுதினாலே போதும். அதற்குள் சில பலருக்கு நன்றி சொல்லலாம். ஒரு காதலிக்கு அதில் ஒரு சங்கேதக் குறியை புதைத்து வைக்கலாம். (லஷ்மி சரவணகுமார் பாணியில்) சவடால் விடலாம். பயமுறுத்தலாம். (ஜெ.மோ பாணியில்) ஒரு புனைவை உண்மையின் சாயலுடன் எழுதலாம். நானும் இந்த குற்றங்களை செய்திருக்கிறேன். பின்னால் படிக்க லஜ்ஜையாக இருக்கும். ஒரு சேட்டை என்கிற அளவில் இதையெல்லாம் சரி போகட்டும் என விட்டு விடலாம். ஒரு கட்டுரை நூலென்றால் அதிலுள்ள முக்கிய விசயங்களை தன்னுரையில் தொகுத்துத் தரலாம். அது வாசிப்புக்கு மிகவும் உதவும். ஆனால் முன்னுரைகளை மன்னிக்கவே முடியாது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...