முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவதாராள பொருளாதாரம் எப்படி நவீன சாதியமைப்பை உருவாக்குகிறது?




பாரத் பயோடெக்கும், செரம் இன்ஸ்டியூட்டும் வேறுபாட்டு விலைமுறை (differential pricing) மூலம் தடுப்பு மருந்தின் விலையை 150 ரூபாயில் இருந்து 600-1200 என சூழலுக்கு ஏற்றபடி மாற்றி மக்களை ஜேப்படிக்கிறார்கள் என்பதை ஜெயரஞ்சன் ஒரு காணொலியில் விமர்சித்திருந்தார். அதாவது அரசு சந்தையை இரு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து விட்டு, அவர்களை சந்தையின் தேவைக்கு ஏற்பட் விலை ஏற்ற அனுமதிப்பதன் விளைவு மாநில அரசுகள் ஒரு பக்கம் பணமின்றி கடனாளி ஆவது மட்டுமல்ல, மக்களுக்கு இடையில் ஒரு செயற்கையான படிநிலை, மதிப்பேற்றம், மதிப்பிறக்கம் நிகழ்வதும் தான் என அவர் சொல்லுகிறார். உதாரணமாக ஒரே தோசையை ஒருவர் தள்ளுவண்டியில் சாப்பிடுவதற்கும் ஒரு மத்திய தர ஓட்டலில் அமர்ந்தும் சாப்பிடுவதற்கும் அதையே ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து சாப்பிடுவதன் வித்தியாசம் செலவு செய்யும் திறன், தயாரிப்பு செலவு, பொருளின் மதிப்பு மட்டுமல்ல, ஒருவருடைய சமூக மதிப்பு, அந்தஸ்து, சுயமதிப்பும் தான் - நீங்கள் வாங்கி துய்க்கும் பொருளைப் பொறுத்து ஒரு நுகர்வோனாக என் மதிப்பு மாறுபட்டால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் இப்படியான வேறுபாட்டு விலைமுறைக்கு உட்படும் போது அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். இன்று இந்த கொரோனா காலத்தில் அது சாவுக்கும் உயிரோடு வாழ்வதற்கும் இடையிலானதாக மாறியிருக்கிறது. 


இந்த சந்தைத் தேவைக்கு ஏற்ற விலையேற்றக் கொடுமையை நாம் இதற்கு முன்பு கல்வி பரவலாக தனியார்மயமான போது பார்த்தோம் - அரசுப் பள்ளிகள் ஒருவித சேரிகளாகப் பார்க்கப்பட்டன; எப்பாடு பட்டேனும் பிள்ளைகளை தனியாரில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் தவித்தார்கள். இன்று என்னதான் தரமான உள்கட்டமைப்புகளுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட்டாலும் அங்கே குழந்தைகளை படிக்க வைக்க நமக்கு தயக்கமுள்ளது. காரணம் கல்வியின் தரம் அல்ல, அது அவர்களுடைய சமூக மதிப்பீட்டை பாதிக்கும் என்கிற அச்சம். இது அடுத்து நிலத்தின் மதிப்புக்கு வந்து நகரங்களில் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் தாம் வேலை பார்க்கும் இடங்களில் இருந்து வெகுதொலைவிலோ அல்லது சிறு பொந்துகள் போன்ற வீடுகளிலோ வசிக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நவீன தீண்டாமையை ஏற்படுத்தியதுடன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. நீங்கள் இன்று நகரத்தில் ஒரு கடையை எடுத்து நடத்துவதன் முக்கிய சிக்கல் வாடகை தான். அடுத்து, பொருட்களின், பெட்ரோலின் விலை ஏற்றம். நீங்கள் நகரத்தில் ஓரளவுக்கு நியாயமாக சம்பாதித்தாலும் நிம்மதியாக வாழ முடியாது எனும் சூழலை இது ஏற்படுத்தியது. 

அதாவது நவதாராளவாதத்தின் இந்த வேறுபாட்டு விலைமுறையானது ஒரு நவீன சாதியமைப்பை நம் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது. இதன் ஆதரவாளர்களோ விலை ஏற்றமானது தரத்தை அதிகப்படுத்தும், போட்டியுணர்வை கொண்டு வந்து பின்னர் விலையை குறைக்க உதவும் என முட்டுக் கொடுக்கிறார்கள். (இவர்களே இன்னொரு பக்கம் மரபின் பெயரில் சாதியை, மதவாதத்தை ஆதரிக்கிறார்கள்.) ஆனால் இது ஒரு மிகப்பெரிய பொய் என்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்.

 வெறுமனே இணையம், மொபைலை வைத்து இதை நாம் நியாயப்படுத்தக் கூடாது - அதை மட்டும் வைத்து மனிதன் வாழ முடியாது: தாராளமயமாக்கலும், மாறுபாட்டு விலைமுறையும் கல்வி, உணவு, தண்ணீர், நிலம், வீடு போன்ற விசயங்களில் எந்த கட்டுப்பாடும் இன்றி கால் பாவ நாம் அனுமதித்திருக்கக் கூடாது. அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளே இவை இருந்தாக வேண்டும் - யோசித்துப் பாருங்கள் உணவில் கோதுமை, அரிசி போன்றவை முழுக்க தனியார் வசம் போனால் கிலோவுக்கு 60-100 ரூ இல்லாமல் எளியோரால் கூட அரிசி வாங்க முடியாது. மக்களுக்கும் இல்லாமல், விவசாயிக்கும் இல்லாமல் காசு அதானிகளின் பைக்கு மட்டும் போகும். இந்த ரேஷன் அரிசி இல்லாவிட்டால் தள்ளுவண்டிக் கடைகள் நடக்காது. சிறிய டிபன் கடைகளையும் மூட வேண்டியது தான். எல்லாரும் நூறு ரூபாய்க்கு குறையாமல் ஒரு தோசை வாங்க முடியாது. மதிய சாப்பாட்டின் விலை 150 ரூபாய்க்கு சிறிய ஓட்டல்களிலே ஏறி விடும். எல்லாருமே இங்கு மூன்று வேளை உணவருந்த நாம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தினமும் செலவு செய்தாக வேண்டும் எனும் நிலை ஏற்படும்.

 பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு வெளிப்படையாக கைவிடும் நாள் தொலைவில் இல்லை. இதுவே அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அரசு குறைத்து ஒரேயடியாக அவற்றை நாடு முழுக்க மூடுவதுடனும் நடக்கும். கொரோனா காலத்தில் போல பணமில்லாதவர்கள் ரோட்டில் கிடந்து சாகவோ வட்டிக்கு பணம் வாங்கி செலவு பண்ணவோ வேண்டி வரும். அரசு பள்ளிகளை, கல்லூரிகளை இந்த அதானி ஜனதா கட்சியினர் ஒருநாள் மூடும் போது, படிக்க வேண்டியவர்கள் தனியாருக்கு செல்லுங்கள், அரசால் இப்போதுள்ள பொருளாதார நிலையில் செலவு செய்ய வழியில்லை என கைவிரிக்கும் போது, அமெரிக்காவில் இன்று நடப்பதைப் போல கல்லூரி கனவு வெறும் கற்பிதமாக மாறும்; வட்டிக்கு பணம் வாங்கி படித்து முடித்து வாழ்நாள் முழுக்க கல்விக்கடனை திரும்ப செலுத்துகிறவர்களாக நாம் மாறுவோம். உணவு, கல்வி, வசிப்பிடம் சார்ந்து மிகக் கொடுமையான ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஏற்பட்டு நாம் நவீனத்துக்கு பிந்தைய காலத்துக்கு செல்வோம். அதை நோக்கி தான் இந்த அரசு நம்மை அழைத்து செல்கிறது. ஆக்ஸிஜனுக்கு கூட வழியில்லாமல், படுக்க படுக்கையில்லாமல் தெருவில் கிடந்து மக்கள் சாகிற இந்த வரலாற்றுத் தருணம் அதையே முன்கூறுகிறது. 


இதற்குத் தீர்வு என்ன? கட்டற்ற தாராளமயமாக்கலை மூக்கணாங்கயிறு மாட்டி தொழுவத்தில் அடைப்பது. கல்வி, உணவு, மருந்து, இருப்பிடம் போன்றவற்றில் அனைவருக்கும் சம உரிமை உண்டு, இதில் வியாபாரம் கோலோச்சக் கூடாது என அரசு ஒரு முடிவெடுப்பது. ஜெயலலிதாவின் அம்மா உணவகத்தை போல பல உணவங்களை நாடு முழுக்க திறப்பது. மக்களுக்கு சோறையும், அடிப்படை வசதிகளையும் பண்ணிக் கொடுத்தால் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் எனும் பழைய வாதத்தை முறியடிப்பது - மக்கள் வேலை செய்வது சோற்றுக்காக மட்டுமல்ல, மதிப்புக்கு, மரியாதைக்கு, முன்னேற்றத்துக்கும் தான். அதை இந்த சமூகம் கொடுத்தால் அவர்கள் ஏன் வேலை செய்ய சுணங்குகிறார்கள்? 

இலவச உணவு, கல்வி மூலம் சோற்றுக்கு பஞ்சமில்லாத தமிழகம் முன்னேறி இருக்கிறதா இல்லை ஒன்றுமில்லாத உங்கள் உத்தர பிரதேசம் முன்னேறி இருக்கிறதா என்பதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள். 


அடுத்து, நீட் போன்ற தேர்வுகளின் வழி மருத்துவப் படிப்பை கடுமையான செலவுபிடித்த காரியமாக மாற்றாமல், இப்படி படித்தவர்கள் நேராக போய் தனியாரில் வேலை செய்ய அனுமதிக்காமல் இருப்பது - வெளிநாட்டில் பள்ளியும் கல்லூரிப் படிப்பும் முடித்தவர்கள் மட்டுமே இந்தியாவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவர் ஆகலாம், மிச்ச பேர் அரசுப்பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என ஒரு சட்டத்தை கொண்டு வருவது.

 அடுத்து, ராணுவ முதலீட்டை குறைத்து அரசு மருத்துவமனைகளில் , பள்ளிகளில் கூடுதலான முதலீட்டை செய்ய வேண்டும். நவதாராளவாதம் இந்த துறைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற்றப்பட வேண்டும். இன்று ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை தரமான முறையில் அரசு மருத்துவமனையில் செய்ய முடியும் என்றாலும் மத்திய வர்க்கம் தனியாரை நோக்கி படையெடுக்க காரணம் பின்னதன் விளம்பரம், பளபளப்பு. அரசு மருத்துவமனைகளுக்கான விளம்பரத்தை அதிகப்படுத்தி, ஒவ்வொரு நகரிலும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை குறைத்து, அரசு மருத்துவமனைகளை அதிகப்படுத்தி, அங்கு மக்களின் வருமானத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும். ஏழைகளுக்கு இலவசம், மேல்மத்திய வர்க்கத்துக்கு தனியார் செலுத்துவதில் பாதி என. இதைக் கொண்டு தரமான வசதியான சிகிச்சையும் குறைந்த செலவில் எளியோர் மற்றும் மத்திய வர்க்கத்துக்கு அரசே அளிக்க முடியும். 

 இதையே கல்வியிலும் செய்தாக வேண்டும். தாராளமயத்தின் திறந்தநிலைக்கு எதிராக செயல்பட்டு அதானிகளையும் பூனாவாலாக்களையும் தத்தம் துறைகளில் மொனோபோலியாக செயல்பட அனுமதிக்க முடியும் எனில் அரசுத்துறைகளை ஏன் சில குறிப்பிட்ட சந்தைகளில் மொனோபொலியாக்க, லாபம் சம்பாதிக்க வைக்க அரசால் முடியாது? அந்த லாபத்தைக் கொண்டு எளியோருக்கு ஏன் இலவச சேவை அளிக்க முடியாது? இந்த அணுகுமுறை உண்டெனில் இப்போது ஏற்பட்டுள்ள கொடூரமாக மக்கள் சிகிச்சையின்றி கைவிடப்படும் நிலை, ஆம்புலன்ஸில் இருந்து உடல்கள் சிதறி விழும் நிலை, எரிக்க இடமில்லாத நிலை ஏற்படாது. பொருளாதார ரீதியிலான சமூகப் படிநிலைகளை நம்மால் முடிவுக்கு கொண்டால் ஒழிய இந்த நாட்டில் கல்வி, மருத்துவ வசதி, குடியிருப்பு வசதி என எதிலும் நீதி நிலவாது.


முன்பு ஒரு தாழ்த்தப்பட்டவன் தான் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் அப்படி இருக்கிறான், அவனுடைய துன்பங்கள் நியாயம் தான் என்று சொன்னீர்கள். இன்று அதே தர்க்கத்தை எளியோர் சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாமல், மருத்துவனையில் கிட்ட இடமில்லாமல் தரையில் கிடந்து உயிர் விடும் போதும் பயன்படுத்துகிறீர்கள் - பாவத்தின் இடத்தில் பணம் வந்து விட்டது.


இப்போதைக்கு அதானி ஜனதா கட்சியினரிடமும் பூனாவாலாக்களிடமும் சொல்லிக் கொள்வது: பேராசையில் அடுத்த கட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்! தடுப்புமருந்துகளில் வியாபாரம் பார்க்கிறேன் என மரண வியாபாரி ஆகாதீர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...