Skip to main content

“ரஜினிகாந்த்” நூல் குறித்து தமிழ் பிரபா



 நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”. 

 

மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில் பேச மாட்டேன் எனினும் வாய்க்குழைவில் இந்த சாரமே மிகுந்திருக்கும். மதுவின் இனிய மயக்கத்தில் நினைவுகளை, ஏக்கங்களை, மனிதர்களை, நாவல்களை, திரைப்படங்களை, ஆளுமைகளைக் குறித்துப் புலம்புவது என் களியாட்டத்தின் ஒருபகுதி. இதில் ரஜினி மெஜாரிட்டி. இனி அடுத்த முறை ரஜினி பற்றி உரையாட வருமாயின் ஆர், அபிலாஷ் எழுதிய “ரஜினிகாந்த்” என்னும் குறுநூலையும் துணைக்கு வைத்துக் கொள்வது உசிதம் என்று எண்ணுகிறேன்.


அபிலாஷ் எழுதி சமீபத்தில் வெளிவந்த ரஜினி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான இதில், ரஜினியின் கதாப்பாத்திரம் பரவலாக கொண்டாடப்படதற்கு காரணம் அதிலுள்ள தொன்மம், அதை முன்வைத்து தத்துவப் பார்வை, ரஜினியின் உடல்மொழி அரசியல், ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார்.


உதாரணத்திற்கு சில கட்டுரைகளின் தலைப்புகளைத் தருகிறேன்.


ரஜினியும் கமலும்


ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்


அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்; ரஜினியும் பூக்கோவும். 


ரஜினியின் சிகரெட் குறியீடு – கலகத்திலிருந்து சமகாலப் பெண்கள் வரை


கமல் ரஜினி நடிப்பின் மீதான ஒப்பீடுகளை ஆங்காங்கே வாசிக்கும்போது, நான் அடிக்கடி சொல்லிவரும் “நடிப்பு குறித்த கமல் ரசிகர்களின் பார்வை என்பது பழமைவாதிகளின் திண்ணைப்பேச்சுக்கு ஒப்பானது” என்கிற கருத்தின் மீது ஊக்கமருந்தை தெளித்தது போன்றிருந்தது.


விதந்தோதுதல் என்ற வகையில் இல்லாமல், ரஜினி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு பின்னணியில் உள்ள பொதுமக்களின் உளவியல் மீதான விசாரணைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன.


ரஜினியின் கதாபாத்திரத் தன்மையை பௌத்த தத்துவத்துடன் இணைத்து முன் வைக்கும் பார்வை ஆழ்ந்த வாசிப்பின் விளைவென்றே கருதுகிறேன். 


தலைப்புக்கு வெளியே கட்டுரையாளர் ஆங்காங்கே பயணம் போனாலும் "எல்லாம் எதுக்கு நம்ம தலைவருக்காகத்தான" என்கிற பரிந்துணர்வு நூலாசிரியரின் மீது வராமலில்லை. 


நூலின் இறுதிப் பகுதியில் ரஜினியின் அரசியல் தத்தளிப்புகள் குறித்து நேர்மையான அலசலும் இடம் பெற்றிருக்கின்றன.


ரஜினி ஏன் இந்த மண்ணுக்கானவர் அல்ல! 


ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? 


என்கிற இரு தலைப்பில் அமைந்த கட்டுரைகளின் அவதானிப்புகள் முக்கியமானவை. 


நூலின் தலைப்பும் அட்டைப்படமும் புத்தகக் கண்காட்சிக்காக  அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. 


எம்.ஜி.ஆர் குறித்து எம்.எஸ் பாண்டியன் எழுதி, பூ. கோ. சரவணன் மொழிபெயர்த்த “பிம்பைச் சிறை” என்னும் நூலுக்கு இணையாக வர வேண்டிய வாய்ப்புகள் இருந்தும் அபிலாஷ் அதன் எல்லைகளை சுருக்கிக் கொண்டார் என்கிற வருத்தம் இருக்கிறது. பரவாயில்லை.  


தலைவரின் அரசியல் திட்டங்கள் , அறிக்கைகள் அது இது என சில ஆண்டுகளாக குகை மனிதன் போல வாழ்ந்து வந்த என்போன்ற ரசிகர்கள் மொட்டை மாடியில் நின்று உரக்க வாசிக்க வேண்டிய நூல் இது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...