Skip to main content

கே.வி ஆனந்த் - மிகை வண்ணங்களின் காதலன்





கே.வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகான துலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில் பதிந்துள்ளன. அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூட அப்படித்தான். அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணி அவ்வளவு அழகாக இருக்கும்.


 பி.ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமான வண்னங்களுடன், ஒளி-நிழல் பின்னல்களுடன் காட்சிகளை உருவாக்க விரும்பினார் என்றால், அந்த காட்சிகள் கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியை உள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால், அவருடைய சீடரான கே.வி ஆனந்த் ஒரு மீ-எதார்த்த கனவுலக பாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார். 96இல் என் பதின்வயதில்காதல் தேசம்வந்த போதுஎப்படி இப்படியெல்லாம் எடுக்கிறார்கள்?” என பார்த்து பார்த்து ஏங்கியது நினைவுள்ளது. “என்னைக் காணவில்லையே நேற்றோடுபாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பது போல - எட்டித் தொடலாம் - என்பது போல இருக்கும். ஆனால் இதே மாதிரி நீல வண்ணம் கலக்கப்பட்ட கடல்நீர் குட்டையைஒரு தெய்வம் தந்த பூவேபாடலில் ரவி கே. சந்திரன்-மணிரத்னம் கூட்டணி அவ்வளவு கவித்துவமாக பாடலின் கருவுக்கு பொருத்தமாக அமைத்திருப்பார்கள். இந்த வித்தியாசம், கதையை மீறி நிற்கும் துடுக்குத்தனம் தான் கே.வி ஆனந்தின் தனித்துவம். இதுதான் அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த கொடை - pop art என சொல்கிறோமே, அல்லது anime, அனிமேஷன் படங்களில் வருகிற பாணியிலான ஒரு வண்ணத் தேர்வை அவர் எதார்த்த சினிமாவுக்கு, வணிக தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அதை அவ்வளவு சிலாக்கியமாக செய்தார்


சில திருமணங்கள் ஒரே கலவரமாக, கச்சாமுச்சாவென நடந்து முடியும், ஆனால் புகைப்படக் கலைஞர் அதனுள் அழகான கவித்துவமான தருணங்களை கண்டடைந்து ஆல்பமாக்கி அளிக்கும் போது அதைப் பார்க்கும் கணவன், மனைவிக்கு ஒரு நொடி இது நாம் அல்லவென்று லஜ்ஜையாகவும், அட நாம் தானா என பெருமையாகவும் இருக்கும். கே.வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்த குப்பை படங்களைக் கூட அப்படி உருமாற்றினார் என நினைக்கிறேன். அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த ப்ரியதர்ஷனின்தேன்மாவின் கொம்பத்துபாருங்கள் - காட்சிகள் ஏதோ காமிக்ஸ் கதையில் நிகழ்வன போலத் தோன்றும்; பளிச்சென்று, சட்டகத்தில் பாத்திரங்கள் இருந்து எழுந்து நம்மை நோக்கி வருவதைப் போல, இது நம் தேசத்திலே நடக்கிற கதை அல்ல என்பது போல. “காதல் தேசம்பார்த்து விட்டு நகரங்களில் இளம் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல, ஒரு ஏழைப்பையனின் மொட்டை மாடி அறை இவ்வளவு ஸ்டைலாக இருக்கும் போல என நான் என் கிராமத்து வீட்டில் இருந்து யோசித்து ஏமாந்திருக்கிறேன். அந்த பூக்கள் இரைந்து கிடக்கும் சாலையில் இளம்பெண்களின் கால்கள் மிதித்து அழகாக நசுக்கி வரும் காட்சி இருக்கிறதே! இன்னொரு பக்கம் இந்த வகையான கற்பனாவாதம் - தபு சங்கரை நூறாயிரம் மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட மிகை அழகியல் - பெண்களைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை அந்த காலத்தில் எனக்கு ஏற்படுத்தியது.


இந்த கற்பனாவாத ஒளியமைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆண்-பெண் உறவு குறித்து ஒரு அவநம்பிக்கையான எண்ணமே கே.வி ஆனந்துக்கு இருந்ததென கருதுகிறேன்: அவர் எழுதியகாதல் படிக்கட்டுகள்தொடர் என்று தான் நினைக்கிறேன்; அதில் தன் நண்பனின் காதலி ஒரு இரவு விருந்தின் போது அவள் போதையாகி விட்டு தன்னிடம் பாலியல் விருப்பம் தெரிவித்ததாக எழுதியிருப்பார். மானுடக் காதல் எல்லாம் அந்தந்த சூழலுடன் முடிந்து போவது தான் எனும் தொனி அதில் இருக்கும்.

 அவருடைய பெரும்பாலான படங்களில் எந்த இளம் பெண்ணுமே தேவதையாக இருக்க மாட்டாள். எதிர்மறையான ஒரு சந்தர்பத்தில் இருந்து, தவறான பின்னணியில் இருந்து தோன்றுவார்கள். ஒரு துரோகியான நண்பனின் தங்கை (“அயன்”), துரோகியின் தோழி (“மாற்றான்”) எனசூழ்நிலை மாறினால் சட்டென காதலனை தவறாக புரிந்து கொண்டு வெறுத்தொதுக்குவார்கள் (“அயன்”). காதலன்களும் அப்படியே - தான் உண்மையில் யாரென்பதை, ஏன் வில்லனுக்கு உதவுகிறான் என்பதை காதலிக்கு சொல்லாமல் ஏமாற்றுவார்கள் (“கோ”) அல்லது ஒரு படப்பிடிப்பின் போது சகநடிகையை காதலி பார்த்திருக்கும் போதே அணைந்து உளம் மயங்குவார்கள் (“கவண்”). 


ஒரு இயக்குநராக அவருடைய முதல் படம் (“கனா கண்டேன்”) வியப்பையும் நம்பிக்கையையும் தந்தது; ஆனால் அதன் பிறகு அவர் முழுமசாலா படங்களில் இறங்கி விட்டார். இதிலும் ஒரு சுவாரஸ்யம் அவர் சங்கரைப் போன்றே சிந்தித்தார் என்பது; அவர் இறுதி வரை மனதளவில் சங்கரின்மாற்றான்தான். ஒரு நடக்க வாய்ப்பில்லாத ஒற்றை வரியை (what if?) எடுத்துக் கொண்டு அதை ஒரு எதார்த்த சூழலில் பொருத்தி விடுவார். கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை ஒருவர் கண்டுபிடித்தால், அதை சாத்தியமாக்குவதில் அவருக்கு பல சவால்கள், தடைகள் வந்தால்? (“கனா கண்டேன்”) [Catch Me If You Can பாணியில்] ஒரு கடத்தல்காரன் கஸ்டம்ஸுடன் சேர்ந்து கடத்தல்காரர்களை ஒழிக்க நினைத்தால்? அரசியல் சூழலை மாற்றும் நோக்கில் தேர்தலில் ஈடுபட்டு வென்று ஆட்சி அமைக்கும் இளைஞர்களின் தலைவன் ஒரு துரோகி, தன் அதிகாரத்துக்காக யாரையும் ஏமாற்ற, ஒழிக்க தயங்காத ஒரு மனிதாபிமானமற்ற வில்லன் என பின்னர் நாயகனுக்கு தெரிய வந்தால்? (“கோ”) தான் ஒட்டிப்பிறந்த இரட்டையனாக தன் தந்தையின் பேராசையே காரணம் என ஒருவனுக்குத் தெரிய வந்தால்? (“மாற்றான்”) இப்படி அவருடைய ஒவ்வொரு படத்தையும் what if கேள்வியாக நாம் வகுத்திட முடியும். இந்தஒருவேளை இப்படி நடந்தால்?” கருத்துருவை அவரால் எதார்த்தமாக நிறுவி நியாயப்படுத்த முடிந்தால் அப்படம் சிறப்பாக அமைந்து விடும். “அயனைப்போல. சில படங்களில் அது நம்பும்படியாக இருக்காது. அவை படுத்து விடும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய வியப்பில்லாமல் அவருடைய ஒளிப்பதிவாக்கிய காட்சிகளையோ இயக்கிய படங்களையோ நாம் பார்க்க முடியாது - ஒருவேளை அப்படித்தான் அவர் தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என விரும்பி இருக்கலாம்


போய் வாருங்கள் கே.வி ஆனந்த் - நீங்கள் விடைபெறும் போது என் பதின் காலமும் கூடவே விடைபெறுவதாகத் தோன்றுகிறது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...