முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைக்க மனம் பதறுகிறது!



இப்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஒரு வினோதமான சூழலை உண்டு பண்ணியிருக்கிறது - மக்கள் தெருவிலும் ஆஸ்பத்திரி வராந்தாக்களிலும் படுத்தபடி கெஞ்சுவது, ஆக்ஸிஜன் தரப்படாமல் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை சமூகத்தை சாபமிடுவதை, அழுது புலம்புகிற காணொலிகளை, காட்சிகளை தினம் தினம் பார்க்கிறோம் - நல்லவேளை மருத்துவர்களாக இருந்து இதையெல்லாம் நேரில் கண்டு பதில் சொல்லுகிற நிலை ஏற்படவில்லை; எனக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கும். 


இந்தியா முழுமைக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு எனும் சேதியை படித்தேன். எனில் ஏன் இந்த தட்டுப்பாடு? கடந்த ஓராண்டாக நாம் திட்டமிடாமல் அக்கறையில்லாமல் இருந்து விட்டோம். கடந்த சில மாதங்களாகவே நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும் முழுமூச்சாக மாநில தேர்தல் பிரச்சாரங்களில் - குறிப்பாக மேற்கு வங்கத்தை கைப்பற்றும் ‘போரில்’ - ஈடுபட்டிருந்தனர். இது போக, இரண்டாம் அலை பற்றி தெரிந்திருந்தும், ராகுல் காந்தி போன்றோர் முன்பே வலியுறுத்தி இருந்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் நம்மால் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜனை தயாரித்து வைத்திருந்த முடியும்.


 அடுத்த பிரச்சனை, போக்குவரத்து சம்மந்தப்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எல்லா தேவைப்படுகிற மாநிலங்களுக்கும் விரைவில் நம்மால் அனுப்பி வைக்க முடியவில்லை. இதற்கு முன்பே பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான ஆக்ஸிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு, உற்பத்தி ஆனவற்றை நிர்வகித்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிற ஒரு மைய அமைப்பை நாம் ஏற்படுத்தி இருந்தால் இந்த கொலைக்களன் நாடு முழுக்க தோன்றியிருக்காது. இப்போது கொரோனா பாதிப்பினால் அல்ல, போதுமான கட்டமைப்பு வசதிகளும், திட்டமிடலும், நிர்வாகமும் இல்லாததாலே இத்தனை ஆயிரம் பிணங்கள் நாளும் விழுகின்றன. 


நம் மைய அரசு இப்போது என்ன பண்ணுகிறது? இந்த சூழலை பயன்படுத்தி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் பின்வாசல் வழியாக மீண்டும் செயல்பட அனுமதி கொடுக்கலாம் என நீதிமன்றத்திடம் சொல்கிறது. இன்னொரு பக்கம், தடுப்பு மருந்து நிறுவனங்கள் கன்னாபின்னாவென விலையை உயர்த்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு கொள்ளைக்கும் ஒரு கட்டிங். அல்லது நேரடியான பினாமி முதலீடு இந்நிறுவனங்களில் நமது அதானி ஜனதா கட்சிக்கு இருக்கும் போல. முழுக்க முழுக்க வணிகர்களைப் போல யோசிக்கும் ஒரு அரசை நாம் இப்போது தான் பார்க்கிறோம். ஏனென்றால் நமது வரலாற்றில் முதன்முதலாக தடுப்பு மருந்துகளை தனியார் வசம் ஒரு அரசு ஒப்படைப்பதை, அவர்களிடம் கொள்ளை விலைக்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிற பொறுப்பை மாநிலங்களிடம் கைகழுவி விடுவதை பார்க்கிறோம். 1877 ஆம் ஆண்டின் தாது வருடப்பஞ்சத்தை ஆங்கிலேய அரசு இந்தியாவில் உருவாக்கியதை, பின்னர் அதை கொடூரமாகக் கையாண்டதைப் போன்றே இந்த அதானி ஜனதா கட்சியின் அரசு கொரோனாவை கையாள்வதும் இருக்கிறது. இருவருக்கும் லாபத்தை தவிர வேறெந்த அக்கறையோ பொறுப்போ இல்லை.


கோயிலுக்காகவும், இந்து மதப்பற்றின் பொருட்டும், பாகிஸ்தான் ஒழிக கோஷத்துக்காகவும் ஒரு கட்சியை மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததன் விலையை இப்போது கொடுக்கிறோம். நினைக்க மனம் பதறுகிறது!   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...