முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன செய்ய வேண்டும்?



இந்த இரண்டாம் அலையில் நாடே போதுமான மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாகும் போது பிறர் கேளிக்கையில் ஈடுபட்டு, இயல்பு வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இல்லை துக்கத்தில் மூழ்க வேண்டுமா எனக் கேட்கிறார்கள். அடுத்தவர் துயரப்படும் போது நாமும் கண்ணீர் சிந்த வேண்டுமா இல்லையா எந்த அடிப்படைக் கேள்வி. 

பிறருடைய துன்பம், இழப்பு ஒரு தவிர்க்க முடியாத விபத்தென்றால் கண்ணீர் விடலாம். ஆனால் இப்போது நிகழ்பவை நிர்வாகப் போதாமையால், தொலைநோக்குத் திட்டம் இல்லாமையால் நிகழ்த்தப்படும் மறைமுகமான படுகொலைகள், மக்களுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் செய்யும் அளப்பரிய துரோகம். இப்போது கேட்கிறேன்: ஒருவருடைய திட்டமிட்ட அக்கறையின்மையால், தடித்தனத்தால், திமிரால் மக்கள் செத்தால் நியாயமாக என்ன உணர்ச்சி வர வேண்டும்? 

என் பதில்: மக்கள் கோபப்பட்டு அரசியல்பட வேண்டும்! ஒன்று திரள வேண்டும். அடித்துப் பிடித்து போராட வேண்டும் என சொல்லவில்லை. கோபத்தை மொழியில் மாற்றி உருவேற்றி வைத்திருக்கலாம், கைமாறப் படும் நெருப்பைப் போல அதை உயிருடன் பாதுகாக்கலாம்.

கோபம் ஒரு மோசமான உணர்ச்சி அல்லவா? அதைத் தவிர்த்து நாம் நிதானமாக அமைதியாக வாழ வேண்டும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கிறார்கள்? ஒரு தனிமனிதன், மற்றமை சமூகம் மீதெழும் கோபம் தன்னையே சுடும் நெருப்பு. அது மோசமானது. ஆனால் அடுத்தவர்களுக்காக அரசின் மீது எழும் கோபம் ஒரு நல்ல உணர்ச்சி. இந்த சமூகத்தில் துன்புறுவோர் நம் உற்றோர், அந்த துன்பத்தை ஏற்படுத்தும் மற்றமை மீது கோபம் கொள்வது தன்னுணர்வை கடந்து செல்லும் ஒரு உயர்வான மனநிலை. அது நம்மை ஒன்று திரள, செயல்பட, போராட வைக்கும். 
அழுவதோ தன்னிரக்கத்தில், குற்றவுணர்வில் செயலின்மையில் தள்ளி விடும்; கேளிக்கை இன்பத் தேடலின் போதாமையை நினைவுபடுத்தி மேலும் மேலும் கேளிக்கைகளை நாடச் செய்து களைப்பாக்குமே அன்றி துன்பத்தை கடக்க உதவாது.

அத்துடன், கண்ணீர் சிந்துவதோ கேளிக்கையில் ஈடுபட்டு அதை மறப்பதோ இந்த துன்பங்களை ஒரு அந்தரங்க நிகழ்வாக்கி விடும். இதை அந்தரங்க நிகழ்வாக்கினால் நோய்த்தொற்று தான் மக்களின் சாவுக்கு காரணம், அரசுக்கும் அரசதிகாரிகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களை எட்டு கட்டமாக நடத்த அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கும் இதில் எந்த சம்மந்தமில்லை என்றாகி விடும். 

உங்கள் பதில் என்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.