Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது



பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் (கிளப் ஹவுஸ்) இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே. திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது, சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர். இவர்கள் தமது தாத்தா, தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தார்கள் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டன. இதை எதிர்த்த பெண்டிர் விவிலியத்தில் இது ஏற்கப்படவில்லை, கடவுள் முதலில் ஒரு ஆணை படைத்தவுடன் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை படைத்தாரே அன்றி இரண்டு மூன்று பெண்களை அல்ல என அபத்தமாக பரலோகப் பிதாவை எல்லாம் பஞ்சாயத்துக்கு இழுத்தார்கள்.


இந்த அரட்டையை கவனித்த போது  ஒன்று புரிந்தது: ஆண்கள் பல-இணை காதல் உறவை இன்பத்தை பெருக்கும் ஒரு வழியாக காண்கிறார்கள். அதிலுள்ள சுதந்திரமும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள் இதை வெளிப்படையாக பேச விரும்பவில்லையா அல்லது அவர்கள் திருமண உறவை தம் பாதுகாப்புக்காக ஆதரிக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் தமக்கு சமூகத்தில் உள்ள மதிப்பு, கற்பு, சம்பிரதாயம், மதம் எனும் வட்டத்துக்குள் நின்றபடி இதைப் பார்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான், ஆனால் கற்பு சார்ந்த நெருக்கடிகள் தமக்கில்லை என்பதால் ஒரே நேரத்தில் பல துணைகள் என்பது திறந்து கிடக்கும் மிட்டாய்க்கடை போல இருக்கும் என கற்பனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் யாருமே ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து பல-இணை காதல் உறவைப் பார்க்கவில்லை. ஒரு ஆண் தன் காதலிக்கு பல காதலர்கள் இருப்பதை, தன் வீட்டில் அவளுடன் பல ஆண்கள் வசிப்பதை விரும்புவானா? தன் காதலி தனக்கு அளிக்கும் நேரத்தை அவள் பலருடன் பகிர்ந்து கொள்வதை ஒப்புக்கொள்வானா? சந்தேகமே. ஆண்களின் இந்தசுதந்திர தாகத்துக்குப்பின்னால் ஒரு பாசாங்கு உள்ளது. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.

 எது எப்படியோ, என் பார்வை என்ன?

 திருமணம் எனும் சட்டகத்தைக் கடந்து பல-இணை உறவு என்பது ஒரு அற்புதமான சாத்தியம் என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எத்தனை இணையர் இருந்தாலும் அதனால் இன்பம் பல்கிப் பெருகாது என நினைக்கிறேன். பொறாமையும் மீயுடைமை உணர்வும் (possessiveness) உடல் சார்ந்த ஆண் பெண் உறவில் இருந்தே ஆகும். ஆக, சமூகப் பண்பாட்டு கட்டமைப்புகள் தோதாக இருக்கும் போது மட்டுமே சுதந்திரமான பாலுறவு, பல-இணைகளைக் கொண்ட காதல் சாத்தியமாகும். அப்படியான சமூகங்கள் நம் பழங்குடியினர் இடையே இருந்ததாக, அதுவே ஆதி ஆண்-பெண் உறவுத் தோற்றம் என ஏங்கல்ஸ் தனதுகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. மாறாக பலதார மணத்தையே இந்த ஆண்கள் மறைமுகமாக பல-இணை உறவின் பெயரில் விழைகிறார்கள் என நினைக்கிறேன்.


அடுத்து, நிறைய பேரிடத்து மனம் இச்சை கொள்வது இயல்பே. நம் உடல் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது குறைவான மக்கள் ஒரு பகுதியில் வாழ்ந்த வனாந்திர சூழலில் ஒரு சிறிய இனக்குழுக்குள் ஒரு ஆண் தேர்வு செய்யக்கூடிய பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் சிக்கல் இராது (இதை நீங்கள் ஒரு தெருவில் அல்லது ஒன்றிரண்டு தெருக்கள் இணைந்த பகுதியில் வாழும் நாய்கள் இடையே உள்ள உறவைக் கொண்ட கணிக்கலாம். எந்த நாயும் ஆயிரம் ரெண்டாயிரம் விடுங்க நூறு இருநூறு இணைகளைக் கொண்டிருப்பதில்லை.) தொழில்நுட்ப, பயண வசதிகள் அதிகமாகிய உலகமே ஒரு கிராமமாக சுருங்கிய இன்றைய உலகில் மனிதனை இது முடிவற்ற தேடலுக்கும், தீராத நெருக்கடிக்கும் ஆளாக்கும் என நினைக்கிறேன்.


நான் காதலை உடல் வேட்கையை தணிப்பதற்கும் உறவுக்குள் அர்த்தத்தை நாடும் முயற்சியாகவுமே பார்க்கிறேன். பணம், உடல்நிலை, சமூக ஆதரவு, அதிகாரம் என பல சங்கதிகளை சார்ந்து தோன்றும் உறவு இது. ஆகையாலே இது நிரந்தரமானது அல்ல. இதை மகத்துவப்படுத்தாமல், ரொமாண்டிசைஸ் பண்ணாமல் இயல்பாக எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவரை மிதமிஞ்சி விரும்புகிறோம், அவரைக் குறித்து அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம் என்றால் மிகப்பெரிய துயரத்துக்குள் அது நம்மை விரைவில் தள்ளப் போகிறது எனப் பொருள். புக்காவஸ்கி தன் நாவல்களில் சொல்வதைப் போல பெண்ணுடல் வெறும் ஒரு உடல் தான். ஆளுமையாகவும் பெண்கள் எல்லா மனிதர்களையும் போலத் தான். எந்த பிரத்யேக முக்கியத்துமும் அளிக்காமல் ஒரு பெண்ணை நடத்தும் போதே அவளுக்கு மரியாதை அளிக்கவும், சமத்துவமாக அவளை நடத்தவும் முடியும்; நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஆண்களால் இது எப்போதும் முடிவதில்லை.


 ஆண்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் ஒரு ஊன்றுகோல் போல பெண்ணை பயன்படுத்துகிறார்கள். அதற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போது இன்னும் பதற்றமாகி தன்னை நியாயப்படுத்த, தம் ஈகோவைக் காப்பாற்ற நிறைய பொய்களை கட்டமைக்கிறார்கள். ஒரு பெண் அவனை ஏற்கும் போது அவன் நிதானமாகிறான். தன்னம்பிக்கை பெறுகிறான். அப்போதுஅட இவள் வெறும் பெண் தானேஎன அவனுக்குத் தோன்றுகிறது. உடனே அவன் திருந்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் அதன் பிறகு தான் அவன் தனது இந்த ஏமாற்றத்தை மறைக்கும் வேலைகளில் ஈடுபடுவான். அதனால் தான் காதல் பலவீனத்தின் வெளிப்பாடாக, அநீதியின், ஏற்றத்தாழ்வின் நிகழ்த்து களமாக இருக்கிறது. அதனாலே காதலின் பெயரில் ஆண்களும் பெண்களும் எலும்புத் துண்டுக்கு அலையும் நாயாக, மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் குழந்தையாக பரஸ்பரம் நடத்துகிறோம். நாம் அந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை, பொய்களைக் கூட ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். அதனாலே வலுவான ஆண்கள் காதலிப்பதில்லை என புக்காவஸ்கி சொல்கிறார். எனக்கென்னவோ சமத்துவத்தை விரும்புகிறவர்கள் காதலிக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை காதலிப்பதே இவ்வளவு பிரச்சனைகளைத் தரும் எனும் போது பலரை ஒரே நேரத்தில் காதலிப்பது (polyamory) நம்மை துன்பம் கடலில் ஆழ்த்தி விடும். இன்னும் சொல்லப் போனால் காதலின் போதாமையை உணரும் ஆண்களே மேலும் மேலும் பலவீனமாகி ஒரே நேரத்தில் பல உளவியல் ஊன்றுகோல்களை நாடுகிறார்கள். ஒரு பெண்ணை ஊன்றி நிற்க முடியாதவன் பல பெண்கள் மீது சாய்ந்து மட்டும் நின்று விடவா போகிறான்?


நன்றி: உயிர்மை.காம்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...