Skip to main content

தனிமை எனும் மதிற்சுவர் - ஆர். அபிலாஷ்



இரவு முழுக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

பைக் ஸ்டார்ட் பண்ணப்படுகிறது

ஏதோ ஒரு வீட்டில் குக்கர் விசில்

பள்ளிக்குத் தயாராகிக் கிளம்பும் குழந்தைகளின்

முட்டி வரை சரசரக்கும் பாவாடைகள்

எங்கோ ஒரு தட்டு விழுந்து வட்டமடிக்கும் சப்தம்

ஒரு காகம் கரைகிறது

ஒரு தாத்தா சத்தமாக போனில் பேசிக் கொண்டிருக்கிறார்

அவரைக் கடந்து செல்வோர் முணுமுணுக்கும் சப்தம்

காலை அவசரத்தில் ஒரு இளம் ஜோடி

ஏதோ விளையாட்டாகப் பேசி சிரித்துக் கொண்டு

காரைத் திறக்கும் சிறிய ஒலி

காலை அவசரத்தின் எரிச்சலில்

ஒருவர் தன் மனைவியிடம்

காலையுணவு வேண்டாம் என இரையும் போது

சாவகாசமாக ஒரு நாளிதழ் வாசற்படியில் விழும் ஒலி

ஒரு பெண் தாமதமாக

பூஜையை ஆரம்பிக்கும் மணி ஒலி

ஒரு பெண் சத்தமாக டிவியை

வைத்துக் கொண்டு

அதை விட சத்தமாக சிரிக்கிறார்

இஸ்திரிக்கடைக்காரர் கிரக் கிரக்

என ஓசையெழுப்பியபடி ஒவ்வொரு வீடாக

நடந்து கொண்டிருக்கிறார்

மழை சடசடவென வந்து குளிரை அதிகரிக்கிறது


எதையும் கவனிக்காத ஒரு பூனை

மஞ்சள் கண்களால் வெறிக்கிறது

எதையும் கவனிக்கும் மற்றொரு பூனை

வாலை அசைக்கிறது

தெருமுனையில் இரண்டு அழுக்கான நாய்கள்

ரோந்து போகின்றன

குப்பையைக் கிளற வரும்

ஒரு அழுக்கான மனிதரை நோக்கி 

சீறியபடி அவை பின்வாங்குகின்றன

தெருமுனையில் பெரிய வாகனங்கள்

கடந்து செல்லும் ஒலி


மின்சாரம் நிறுத்தப்படுகிறது

சில வினாடிகள்

‘என்னை அழைத்தாயா’ எனக் கேட்டபடி

நிசப்தம் கதவைத் கட்டிக்கொண்டு வருகிறது


பக்கத்து வீட்டில்

உதடுகள் முத்தத்தில் பிரிகின்ற ஒலி

கீழ்வீட்டில்

யாரோ தனியாக விசும்புகிற ஒலி

உளுத்துப் போயிருந்த ஒரு மரக்கிளை

உடைந்து நடுரோட்டில் விழும் ஒலி

ஒரு காகம் அதைச் சுற்று வந்து

கொத்திப் பார்க்கிறது

எங்கேயோ ஒரு வீட்டுக்குள்ளிருந்து

ஒரு நாயின் குரைப்பு அதை 

விரட்டுகிறது

முதன்முதலாக நான் அதன் இருப்பை

உணர்கிறேன்.


ஒரு பூனை நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது

தாவி மெத்தென இறங்க

அதன் சென்சர் இயக்கப்பட்டு

அவல ஒலி, ஆபத்துதவிக்கான அழைப்பொலி

கேட்கிறது

யாரும் வராத நிலையிலும் கார்

தன் புகாரை நிறுத்தவில்லை

நாய் இன்னும் சத்தமாக

குரைக்கிறது

அலாரம் ஒலி அந்த அதகளத்தில்

மறைந்து போகிறது.


தெருநாய்கள் பதிலுக்குக்

குரைக்கின்றன

யாரோ கல்லை விட்டெறிகிறார்கள்

யாரோ புரியாத மொழியில் திட்டுகிறார்கள்

மின்சாரம் வருகிறது

அத்தனை சப்தங்களையும், உயிர்ப்பையும்

அழைத்துக் கொண்டு வருகிறது

இந்த சின்னச்சின்ன சலசலப்புகளை

எல்லாரும் மறந்து விட்டு 

பரபரப்பில் லயிக்கிறார்கள்


நாயின் குரைப்பு

எப்போதோ நின்று போய் விட்டது

ஆனால் அது ஊளையிடுகிறது

அது ஊரில் எனக்காக காத்திருக்கும்

இதயங்களைப் போல

தனித்திருக்கிறது

அது ஊரில் ஒருநாள் காலையில்

ஒரு ஆட்டோவில் கிளம்பிப் போன நான்

ஏன் இன்னும் 

மற்றொரு ஆட்டோவில்

திரும்ப வில்லை என யோசித்தபடி

விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல

தனித்திருக்கிறது

அது ஒவ்வொரு அறையாக

என் வாசனையை முகர்ந்தபடி

வாயிலில் வந்து முகவாயை நீட்டியபடி கிடக்கும்

ஒரு நாயைப் போல

தனித்திருக்கிறது.


நான் இருமுறை அதன் 

வீட்டைக் கடந்து போகிறேன்

என்னை அது கவனிக்கிறது

என்பதை நான் உணர்ந்ததும்

அதுவும் என்னை உணர்ந்து கொள்கிறது

அது குரைக்கிறது

அச்சத்தில் கோபத்தில் எல்லாவற்றையும் மறந்த ஒரு ஆவேசத்தில்

அடுத்து அது 

ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடி

வானை நோக்கி ஊளையிடுகிறது

தன் ஊனுயிரைக் கலந்து

அது தன் மூதாதைகளிடம்

சொல்கிறது,

இத்தனை பேர் இருக்கும் இந்த ஊரில்

என்னை மட்டும் ஏன் தனித்து

விட்டுப் போகிறார்கள்?

இந்த குட்டைச்சுவர்களை எம்பிக் குதித்தால்

என் தனிமையை கடந்து விடலாம்

ஆனால் என்னால் ஏன் முடியவில்லை?


நான் சென்று

அந்த வீட்டின் உயரமான கேட்டை ஆட்டுகிறேன்

ஓடி வரும் அது

ஒரே தாவலில் குட்டைமதிலின் மீதாக

தன்னை பாதி காட்டிக்கொண்டு

மறைகிறது

அதன் குரைப்பு இடைவிடாமல் ஒலிக்கிறது


ஒரு டென்னிஸ் பந்தைப் போல

ஒரு வீரங்கனையின் குட்டைப்பாவாடையைப் போல

பார்வையாளர்களின் முகங்களைப் போல

அது எழுந்து எழுந்து விழுகிறது

விழும் போதெல்லாம் கூடுதல் மூர்க்கத்துடன்

சில அங்குலங்கள் மேலே

தன்னைக் காட்டிக்கொண்டு உயர்கிறது 


நான் சற்று விலகி நின்று

சொல்கிறேன்,

இன்னும் ஒரு சில அடிகளே

வெளியே வந்து விடு

மனிதர்களை நேசிக்கும் போதே

மனிதர்களைக் கடந்து செல்லவும்

கற்றுக் கொள்

தனிமை ஒரு குட்டைமதிற்சுவர்

அதைத் தாண்டி குதித்து

வந்து விடு!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...