முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“காயல்”




கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது: 


1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும்.


பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ஓரளவுக்கு வெளிப்பட்டதுண்டு. குறிப்பாக A Short Film About Loveஇல் அந்த பதின்வயது நாயகனின் பாலியல் சிக்கல் அவனுடைய நோக்கை அவர் தொலைநோக்கியின் சிறிய சட்டகத்தின் மூலம் உணர்த்தியிருப்பார். அவன் அதே நேரம் சுலபத்தில் மனம் வெதும்பி உடைந்து விடுகிறவனாக இருக்கும் போது அவனுடைய மீட்சி ஒரு பெண் நோக்கில் சாத்தியப்படுவதை சித்தரித்திருப்பார். கீஸ்லாவஸ்கியின் பெரும்பாலான படங்களில் இந்த இரு நோக்குகளுக்கு இடையிலான போராட்டமே இருக்கும். 


இந்தியாவில் பெண் நோக்கை தன் திரைமொழியாகக் கொண்டு வந்த ஒரு அற்புதமான இயக்குநர் மீரா நாயர். குறிப்பாக அவருடைய Namesake. அனுஹாசன், சுஹாசினி, ரேவதி ஆகியோரை பெண் இயக்குநர்களாக இங்கு பொருட்படுத்தி பேச முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தில் அஞ்சலி மேனன் முக்கியமானவர், ஆனால் அவரிடமும் பெண்களின் ஆளுமை, சுதந்திரம், அந்தரங்க உலகம் ஆகியவை ஆண்நோக்கிலே சொல்லப்பட்டிருக்கும், அவர் வணிக வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு பிரதான காரணம். Bangalore Days படத்தில் துல்குர் சக்கர நாற்காலியில் இருக்கும் நித்யா மேனனை கையில் தூக்கி எடுத்துச் செல்லும் காட்சியில் தெறிக்கும் உடல்சார்ந்த “ஆண்மை செருக்கு” ஒரு உதாரணம். இந்த பின்னணியில் தான் தமயந்தியின் “காயல்” வருகிறது: அவர் முதன்முதலாக ஆண் பாத்திரங்களை பெண்களின் பார்வையில் இருந்து உணர்வுவயப்பட்டவர்களாக, திமிர்த்தனம் இல்லாத கண்ணியமானவர்களாக, நெகிழ்வானர்களாகக் காட்டுகிறார். கோபப்பட்டு வெறிப்பேச்சு பேசுகிறவர்களாக, சவால் விடுகிறவர்களாக அல்லாமல், சுலபத்தில் உடைந்து அழுகிறவர்களாக இந்த ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அபாரமான மென்மை, அழகியல் உள்ளது. முதன்முறையாக ஒரு இயக்குநர் ஆண்களின் உள் உலகை சித்தரிப்பதில் நியாயம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சாதிய வெறியும், அழுத்தமும் படைத்தவராக நாயகியின் தாயின் பாத்திரம் வருகிறது. இதுவும் ஒரு தனித்துவம் தான் - “காதல்” படத்துக்குப் பிறகு ஆதிக்கசாதிப் பெண்களை எதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படம்.


2) ஸ்வாகதா கிருஷ்ணன் எனும் பாடகிக்குள் ஒரு திறமையான துறுதுறுப்பான நடிகை இருப்பதை தமயந்தி கண்டுபிடித்து காட்டி இருக்கிறார். பியா பஜ்பயி எனும் நடிகையை நினைவிருக்கும். ஸ்வாகதா அவரை நினைவுபடுத்துகிறார். அவரை விட திறமையான சரளமான நடிகையாக இருக்கிறார். இப்படம் கவனம் பெறும் பட்சத்தில் அவர் நல்ல பெயரையும் நிறைய ரசிகர்களையும் பெறுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...