முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாராவின் காதலர்கள்




மனுஷ்ய புத்திரனின் நீள்கவிதைகளில் சில நேரம் அவற்றின் குறுகின எல்லைக்குள் மூச்சுத்திணறுவதை கண்டிருக்கிறேன் - கொட்டுகிற மழையில் கிடந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையை பலவந்தமாக கையைப் பற்றி அழ அழ வீட்டுக்கு இழுத்து சென்று முத்தாய்ப்பாக சில வரிகளை எழுதி முடித்து வைப்பார். அந்த நிர்பந்தங்களை கவிதை எனும் வடிவம் அவர் மீது சுமத்துவதைப் போல கவிதை நாவல் வடிவம் செய்வதில்லை. ஆனால் பிஞ்ச் செயலியில் வெளிவரும் “தாராவின் காதலர்கள்” தொடரில் அவர் முழுமையான சுதந்திரத்துடன் இரவு பகலாய் ஒரே விலங்கைப் பின் தொடரும் வேட்டைக்காரனைப் போல கவிதையின் கடைசி சொட்டு விழுந்து அது கையில் தன்னை ஒப்படைக்கும் வரை துரத்துகிறார். எந்த வடிவ பிரக்ஞை, கவலைகளும் இல்லாமல், முழுக்க ஒரு பரிசோதனைக் களமாக இத்தொடரை மாற்றுகிறார். 

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஞ்சு இலக்கியத்தில் ஒரு பெரும் உடலெழுத்து மரபு தோன்றியது - ஹெலன் சிக்ஸு (Inside), ஜெனெ (The Thief’s Journal, Our Lady of the Flowers) போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறவர்கள். இவர்கள் புனைவு மொழியில் எந்த கதை கூறும் பாசாங்கும் இல்லாமல் இந்த உடலும், மனமும் உணர்வுகளின் தடாகத்தில் தொடர்ந்து தோன்றி மறையும் அலைகளாக எப்படி இருக்கின்றன என சித்தரிக்க முயன்றார்கள். தமிழில் உள்ள வலுவான எதார்த்தவாத மரபு காரணமாக அத்தகைய புனைவுகள் இங்கு சாத்தியப்படவில்லை. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் லீனா, சுகிர்தராணி, குட்டிரேவதி ஆகியோரின் கவிதைகள் ஒரு கதவைத் திறந்தாலும், அது நமது இலக்கிய உலகில் ஒரு தனிப்போக்காக தோன்றாமல், விரைவில் தானாக மூடிக் கொண்டது. ஆனால் மனுஷின் இத்தொடரை பார்க்கையில் அவர் ஒருநாள் இதே பாணியை தன் உரைநடையிலும் முயன்று பார்க்க வேண்டும், கவிதை எனும் சிறையை உடைத்துக் கொண்டு புனைவின் பக்கம் வந்து விட வேண்டும் என ஒரு வாசகனாக ஆவல் ஏற்படுகிறது. 

அத்தியாயம் 2இல் தாரா தான் நேசிக்கும் ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் வாசனை தென்படுவதாக சொல்லும் இடம் அற்புதமானது. அதாவது தாரா ஆண்கள் தன்னை ஏமாற்றுவதாக சொல்லவில்லை, மாறாக ஆணின் உடலில் மற்றொரு பெண்ணின் வாசனையை அறிந்து அதில் திளைப்பதே தனக்கு நிறைவளிக்கிறது என குறிப்புணர்த்துகிறாள். எவ்வளவு வித்தியாசமான ஆழமான அவதானிப்பு இது. எனக்கு இதைப் படிக்க அவ்வளவு படைப்பூக்கமாக இருந்தது - இதில் இருந்து உருவி எடுத்து ஒரு கதையை எழுத முடியுமே என நினைத்தேன். தினமும் என் நாவலை எழுதும் முன் இத்தொடரை படித்தால் அவ்வளவு உற்சாகம் கிடைக்கிறது.  இதை அவர் எழுதி முடித்து நூலாக வெளிவரும் போது ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்வேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...